gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

சித்தர் யோகம்

Written by

                         ஓம்நமசிவாய!
மங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா!
பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!
                                      ******

சித்தர்கள் சித்தத்தில் சிவனை சிந்தனை செய்து சிவத்தைக் கண்டவர்கள். தாங்கள் பெற்ற சித்திகளை அனுபவத்தின் மூலமாக மனித வாழ்வு மேநிலையடைய உதவி செய்பவர்கள். பிறக்கும்போதே ஞானியாக, சித்தராக பிறந்தவர்கள்- கருவிலே திருவுடையவர்கள் பிரகலாதன், ஞானசம்பந்தர், பிறந்தபின் ஆண்டவன் அடியவராகி அருளில் ஒன்றியவர்கள்- நாயன்மார்கள், ஆழ்வார்கள். கல்பமருந்துகள், மூலிகைகள், பாஷாணங்கள் மூலம் உடலை இறுக்கி முக்தி அடைந்த காயசித்தர்கள்- போகர், கோரக்கர். உடலைத் தவம், யோகம் ஆகியவற்றாலும் ஒளஷதங்களாலும் சுத்தி செய்து முக்தியடைந்தவர்கள். சிவனிடம் உபதேசம் பெற்ற மகேஸ்வரசித்தர்கள். திருமூலரை குருவாகக் கொண்ட மூலவர்க்க சித்தர்கள், பாலமுருகனை குருவாகக் கொண்ட பாலவர்க்க சித்தர்கள், அஷ்டமா சித்திகள் பெற்ற சித்தர்கள் என பலவகைச் சித்தர்கள் இருந்தாலும் சித்தர்கள் என்றால் முதலில் பதினெண் சித்தர்கள்தான் நினைவில் தோன்றும்.

சித்தர் யோகப் பாடல்கள்
சித்தர்கள் மொத்தம் பதினெண்மர் ஆவர். இவர்கள் வாலை- பாலா எனும் சாக்த சமயக் கடவுளையே தங்களின் யோகத்திற்கு துணைசெய்யும் கடவுளாக கொண்டனர். சிவவாக்கியர், திரிகோணச் சித்தர், கடேந்திரநாதர் சித்தர், புண்ணாக்குச் சித்தர், கல்லுளிச் சித்தர், கஞ்சமலைச் சித்தர், வகுளிநாதர்(எ) மௌனச் சித்தர், ஆதிநாதர்(எ) வேதாந்தச் சித்தர், அகத்தியர், அகப்பேய் சித்தர், அழுகணிச்சித்தர், இடைக்காட்டுச்சித்தர், இராமதேவர், குதம்பைச் சித்தர், பட்டினத்தார், பத்திரகிரியார், பாம்பாட்டிச் சித்தர், வால்மீகர் ஆகியோர் தந்த பாடல்கள் சிறப்பானவை. அவற்றின் கருத்துகள் யோகம் பற்றியதாக இருப்பதால் அதை நாடும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

ஆன அஞ்சுஎழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆன அஞ்சுஎழுத்துளே ஆதியான மூவரும்
ஆன அஞ்சுஎழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆன அஞ்சுஎழுத்துளே அடங்கலாவல் உற்றதே-சிவவாக்கியர்-2
அகண்டமும், பிரபஞ்சமும், மும்மூர்த்திகளும், அ, உ, ம எனும் ஓங்கார மூல ஓசைகளும் மற்றயாவும் அஞ்சு எழுத்திலே சிவாயநம என்பதில் அடங்கியவை.
உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே-சிவவாக்கியர்-4
சுழுமுனை நாடியில் பிராணன் வாயுவின் உருவில் ஒடுங்கியுள்ளது. மனத்தை அதில் செலுத்தி கீழே அம்மையின் பாதமும் முடியில் அப்பன் பாதமும் உள்ளதாக கருதி தலைவரையில் மேலே ஏறுவதாகக் கருதினால் நாடிக்குள் அசைவு ஏற்படும். உடல் சிவக்கும். இளமை கொள்வர். பிராணசக்தி தன் போக்கில் நாடிவழியாக மெதுவாகச் சென்று கொண்டுதான் இருக்கும். யோகத்தின் மூலம் அதை வேகப்படுத்துகிறோம். இறைக்க இறைக்க நீர் ஊருவதுபோல் பிராணன் மேலே செல்லச் செல்ல மேலும் பிராணன் உடலில் வந்து புகும். இதுவே உடல் இளமை, நிறம் முதலியன தரும்.
பிரபஞ்சத்தை அண்டம் என்றும் நம் உடலைப் பிண்டம் என்றும் கூறுவர். பிரபஞ்சத்தில் உள்ள எல்லா மூலகங்களும் பஞ்சபூமுதங்களும் நம் உடலில் இருப்பதால் நம் உடலை நுண்ணிய பிரபஞ்சம் எனலாம். பிரபஞ்சமும் அதில் உள்ள யாவும் தன்னுள் இருப்பதாக உணர்வது சித்தர்கள் வழியாகும்.
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காணவல்லாரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே-சிவவாக்கியர்-6
யோகத்திற்குமுன் எனக்குள் இருந்த ஒன்றை நான் அறியவில்லை. நான் அறிந்து கொண்டவாறு யோகம் அறிந்த யாரும் அறியவில்லை. என்னிலே இருந்ததை பிறர் கூறாமலே நான் அறிந்து கொண்டேன், அவருக்குள் இருந்த பிரபஞ்சம் பரபிரம்மம் ஆகியன யோகத்தால் அறிந்து கொண்டதால் அவரைப்போல் பிறர் அறியவில்லை.
நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாறு அது எங்ஙனே-சிவவாக்கியர்-7
உன்னைத்தவிர வேறு எதையும் என்னால் நினைக்க முடியாது. நினைப்பும் மறப்பும் உள்ள எனக்குள் நின்ற மாயை இப்போது இல்லாது மாயமாய் மறைந்தது, பிரபஞ்சமும் அளவு மனமும் கருத்தும் விரிவதால் எல்லாமுமாய் விரிந்தாய் உன்னுள்ளே நான் இருப்பது சரி,. அநாதியாய் சிரியவனாகிய எனக்குள் அவன்இருப்பது எப்படிஎன்று புரியவில்லை என்றார்.
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்
எந்தை ராமராம ராமராம என்னும் நாமமே-சிவவாக்கியர்-10
அந்தி நேரம், உச்சிபொழுது, உதயம், ஆகிய காலங்களில் ஆடும் தீர்த்தமும், சந்தியா காலங்களில் செய்யும் தர்ப்பணங்களூம், தவம் ஜபம் முதலியவையும், சிந்தையில் இருக்கும் ஞானமும் தினம் சொல்லும் மந்திரம் எல்லாம் ராம ராம என்பதே. ஒன்றை ஏற்றுகொண்டு அதையே ஜபித்து வந்தால் பலன் கிட்டும். 
அஞ்சும் மூணும் எட்டதாய் அநாதியான மந்திரம்
நெஞ்சிலே நினைந்து கொண்டு நீர் உருச் செபிப்பிரேல்
பஞ்சமான பாதகங்கள் நூறுகோடி செய்யினும்
பஞ்சுபோல் பறக்கும் என்று நான்மறைகள் பண்ணுமே-சிவவாக்கியர்-16
ஐந்தெழுத்து, மூன்று எழுத்து, எட்டெழுத்து ஆகியன அநாதியான மந்திரங்களே. இதில் ஒன்றை நெஞ்சிலே நினைத்து பல நூறாக உருச் செய்து ஜெபம் செய்தால் பஞ்சபாதகங்கள் நூறு கோடி செய்தாலும் பஞ்சு பறப்பது போல் பறக்கும் என நான்கு வேதங்களும் சொல்கின்றன.
செய்ய தெங்கிலே இளநீர் சேர்த்தகாரணங்கள் போல்
ஐயன் வந்து என் உளம் புகுந்து கோயில் கொண்டனன்
ஐயன் வந்து என் உளம் புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர் முன்னம் வாய் திறப்பது இல்லையே-சிவவாக்கியர்-32
தென்னை மரத்தில் காயினுள் நீர் சேருவதுபோல் காரண காரியங்களால் கடவுள் என் மனத்தில் வந்து கோயில் கொண்டதால் அது பற்றி யாரிடமும் கூறினால் அகங்காரம் மிகும் ஆதலால் பேசாமல் மௌனமாகினேன்.
கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே-சிவவாக்கியர்-34
கோயிலும் குளமும் நம்மனத்திலேயே நாம் தோன்றியது முதல் இருப்பதால் கோயில் என்று வெளியில் தேடி அலைந்து பயன் இல்லை. யோகத்தால் கோயில் தீர்த்தம் ஆகிய வழிபாட்டுப் பயன் தரும் உணர்வுகளை உணரலாம்.
கலத்தின் வார்த்து வைத்துநீர் கடுத்த தீ முடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுகத்ததீக் குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ
மனத்தின் மாயை நீக்கியே மந்த்துள்ளே கரந்ததோ-சிவவாக்கியர்-38
குடத்தில் நீரிட்டு நெருப்பு மூட்டினால் நீர் மறைகிறது. அது குடத்தில் மறைந்ததா, நெருப்பில் மறைந்ததா, மண்ணில் மறைந்ததா, வானத்தில் மறைந்ததா, காண்போர் மனத்திலிருந்த மயையை நீக்கித் தானே மாயை ஆகிவிட்டதா. உருவமுடைய நீர் அருவமாகி வானில் மறையும். அதுபோல எல்லா உருவப்பொருளும் ஒரு காலத்தில் அருவம் ஆகும். அந்த அருவமே உருவமாக வந்துள்ளது. எனவே அருவ வெளியை தியானிக்கவும்
பிறப்பதற்கு முன் எல்லாம் இருக்குமாறது எங்ஙனே
பிறந்துமண் இறந்து போய் இருக்குமாறு அது எங்ஙனே
குறித்து நீர் சொல்லாவிடில் குறிப்பில்லாத மாந்தரே
அணுப்பன் நின்செவி இரண்டும் அஞ்செழுத்து வாளினால்-சிவவாக்கியர்-42
ஓர் உடல் பிறப்பதற்குமுன் அதனுள்ளே உயிரோ ஆத்மாவோ எங்கே இருந்தது. மண்ணில் பிறந்து இறந்தபின் அவ்வுயிரோ ஆத்மாவோ எங்கே போனது என்பது பற்றி விடை சொல்லாவிடில் அஞ்செழுத்தை ஓதியே உம் செவியிரண்டும் அறுப்பேன். அஞ்செழுத்தை ஓதினால் உயிர் முன்பும் பின்பும் போய் இருக்கும் இடமாகிய இருப்பு நிலை தெரியும். உயிர் அதற்குரிய உடலை கடவுளருளால் தேர்வு செய்யும்,
தீர்த்தம் ஆடவேணுமென்று தேடுகின்ற தீனர்கள்
தீர்த்தம் ஆடல் எவ்விடம் தெளிந்து நீர் இயம்புவீர்
தீர்த்தமாக உம்முளே தெளிந்து நீர் இருந்தபின்
தீர்த்தமாக உள்லதும் சிவாய அஞ்சு எழுத்துமே-சிவவாக்கியர்-64
சிறந்த தீர்த்தம் எங்கே உள்ளது என்று எவரும் சொல்ல இயலாது. அதை ஆடவேண்டும் எனத்தேடும் நபர்களே தெளிந்து வாருங்கள் ‘சிவாயநம’ எனும் அஞ்சு எழுத்து மந்திரத்தை ஓதுபோது அந்த யோகத்தால் நமக்குள்ளே தீர்த்த சிறப்பு வரும்.
மூலநாடி தன்னிலே முளைத்து எழுந்த சோதியை
நாலுநாழி உம்முளே நாடியே இருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரம்மம் ஆகலாம்
ஆலம்உண்ட கண்டர்ஆணை அம்மைஆணை உண்மையே-சிவவாக்கியர்-69
மூலநாடியில் பிராணனும் சோதியும் இருக்கின்றது. தினமும் 4 நாழிகை இந்த ஒளியை பிராணனுடன் மேல் நோக்கி எழச் செய்தால் இளைஞன் ஆகலாம். பரப்பிரம்மமும் ஆகலாம். இது ஆலகால விஷத்தை உண்ட சிவன் மேலும் பராசக்தி மீதும் ஆணையிட்டுக் கூறுவது ஆகும். மூலாதாரம்வரை நீண்டநாடி மற்ற நாடிகளுக்கு மூலமானது ஆகையால் ‘மூலநாடி’. பூமிக்குள் நெருப்பும் வெப்பமும் இருப்பதுபோல், அதன் தத்துவமான உடம்பில் மூலாதாரத்தில் பிராணனும் நெருப்பும் இயற்கையாகவே இருக்கின்றது. இது ‘மூலாக்கினி’ எனப்படும். இதை சித்+அக்னி=சிதக்னி-சித்தமாகிய அக்னி-சிதக்னி குண்டம் என்பர். நினைக்க நினைக்க அந்த இடத்தில் நெருப்பு இயற்கையாக வளரும். இது மூலச்சூடு ஆகும். நாழி-24 நிமிடங்கள். காலை சூரிய உதயத்திற்கு முன் 4 நாழிகை-4 x 24 = 96 -1மணி 36 நிமிடங்கள் இந்த மூலச்சூட்டை நினைத்து யோகத்தில் இருக்கவும்.
மந்திரங்கள் உண்டு நீர் மயங்குகின்ற மானிடீர்
மந்திரங்கள் ஆவதும் மனத்திலூறல் அன்றுகாண்
மந்திரங்கள் ஆவது மதர்த்தெழுந்த வாயுவை
மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே-சிவவாக்கியர்-92
மந்திரம் நினைத்து மயங்கும் மனிதர்களே மனத்தில் ஊறிவரும் வெறும் சொற்களே மந்திரம் அல்ல. நினைவில் உடலில் எழும் பிராண வாயுவின் வடிவமே மந்திரமாகும். அதை வசப்படுத்துவோர் மரணமின்றி வாழலாம்
என்னவென்று சொல்லுவேன் இலக்கணம் இலாததை
பன்னுகின்ற செந்தமிழ்ப் பதங்கடந்த பண்பு என
மின் அகத்தில் மின் ஒடுங்கி மின்னது ஆனவாறுபோல்
என் அகத்துள் ஈசனும் யானும் அல்லது இல்லையே-சிவவாக்கியர்-93
இப்படித்தான் இருக்கும் என இலக்கணம் சொல்ல முடியாத கடவுள், செந்தமிழ் சொற்களால் பண்பு கூறமுடியாத அந்தப் பொருள், மின்னலில் மின்னல் சேர்ந்து மின்னலாக ஆனது போல் என் உள்ளத்து ஆத்மாவோடு இணைந்துள்ளது. வேறு ஒன்றும் என்னிடமில்லை.
நவ்விரண்டு காலதாய் நவின்ற மவ்வயிறதாய்ச்
சிவ்விரண்டு தோளதாய்ச் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில்
செவ்வை ஒத்து நின்றதே சிவாய அஞ்செழுத்துமே-சிவவாக்கியர்-96
ந-காலிரண்டில்,ம-வயிற்றில்,சி-தோள்களில்.வா-வாயில்.ய-கண்களில், எனக் கடவுள் உருவில் அமைத்து நம் உடம்பில் இனைத்து மந்திரம் சொல்லி உணர்வது. 
கடலிலே திரியும் ஆமை கரையில் ஏறி முட்டையிட்டுக்
கடலிலே திரிந்தபோது ரூபமான வாறுபோல்
மடலுளே இருக்கும் எங்கள் மணியரங்க சோதிஅயை
உடலுளே நினைந்து நல்ல உண்மையானது உண்மையே-சிவவாக்கியர்-98
கடலில் வாழும் ஆமை கரையில் தான் இட்ட முட்டையை நினைப்பதால் அது அடைகாக்கப் பட்டு பக்குவமாகும். அதுபோல கடவுளாகிய சோதியை நினைத்துப் பழகும்போது அது நம் உடலில் உண்மையாகவே வந்து சேரும். நினைவு என்ற சக்தி தொலைதூரம் சென்று பயன் தரும், ஆமையின் நிணைவுச் சூடே முட்டைக்கு கிடைக்கின்றது.
ஒளியதான காசிமீது வந்து தங்கு வோர்க்கெல்லாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதன் ஆனவன்
தெளியும் மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராமராம ராமாமிர்த நாமமமே-சிவவாக்கியர்-107
ஒளி என்ற பெயருக்குரியதான காசியில் ஜோதிர்லிங்கமாக இருக்கும் விஸ்வநாதர் விசாலாட்சியுடன் இருந்து சொல்லிக் கொண்டிருக்கும் நாமம் இராமநாமம். அங்கு விஸ்வநாதருக்கு வில்வத்தில் இராமநாமம் எழுதி அர்ச்சனை செய்யப்படுகிறது.
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின்
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம் நமசிவாயமே உட்கலந்து நிற்குமே-சிவவாக்கியர்-109
ஓம் நமசிவாயத்தை உண்மையாக உணர்ந்து அதையே கடவுள் வடிவமாகவும் நம் வடிவமாகவும் உணர்ந்து பாவித்தால் நமசிவாயம் என்ற மந்திரம் சோதிப்பொருளாக மனத்தில் நிற்கும். 1.மெய்-உண்மை, 2.மெய்-கடவுள்வடிவம், 3.மெய்-நம்வடிவம் ஆகும்.
விண் கடந்து நின்ற சோதி மேலைவாசலைத் திறந்து
கண்களிக்க உள் உளே கலந்துபுக்கு இருந்தபின்
மண்பிறந்த மாயாமும் மயக்கமும் மறந்து போய்
எண்கலந்த ஈசனோடு இசைந்திருப்பது உண்மையே-சிவவாக்கியர்-122
யோக முயற்சியால் நமக்குள் இருந்த சோதி தலை உச்சியாகிய பிரம்மநாளம் மேல் வாசலைத்திறந்து கொண்டு போய் விண்வெளியைக் கடந்து நின்ற சோதியானது நமக்குள்ளே கண் களிக்க காணுமாறு நம்மோடு கலந்து புகுந்திருந்ததேயாகும்
மூலமான மூச்சதில் மூச்சறிந்து விட்டபின்
நாளும்நாளும் முன்னில் ஒரு நாட்டமாகி நாட்டிடில்
பாலனாகி நீடலாம் பரப்பிரம்மம் ஆகலாம்
ஆலம்உண்ட கண்டர்ஆணை அம்மைஆணை உண்மையே-சிவவாக்கியர்-123
மூலத்தில் உள்ள பிராணன் தான் ஒரு ஆத்மா மூச்சு விடுவதற்கு மூலமாக உள்ளது. அதில் நாம் மூச்சு விடுவதையும் ஒன்றாக இணைத்து அதன் மேல் கருத்தைச் செலுத்தினால் இளைஞனாவதும் பரப்பிரம்மம் ஆவதும் பயன். ‘அயம் ஆத்மா பிரம்மம்’- நம் ஆத்மாவே பிரம்மாகிய கடவுள் என்ற வேதாந்தை யோகப்பயிற்சியில் உறுதியாகும். மூலாதாரத்தில் உள்ள பிராணசக்தி நாடிகள்வழி மேலே சென்று நுரையீரலை இயக்கி மூச்சு விடும் செயலை செய்விப்பதால் அந்த அசைவிற்கு ஏற்ப மூச்சு விடுதலை பயிற்சி செய்ய வேண்டும்.
மின் எழுந்து மின்பரந்து மின் ஒடுங்கு மாறுபோல்
என்னுள்நின்ற என்னுள் ஈசன் என்னுள்ளே அடங்குமே
கண்ணுள்நின்ற கண்ணில் நேர்மைகண் அறிவிலாமையால்
என்னுள் நின்ற என்னையன்றி யான் அறிந்த தில்லையே-சிவவாக்கியர்-124
மின்னல் தோன்றி அதுவே விரிந்து மின்னலாய் ஒடுங்குவது போல் எனக்குள் நின்ற கடவுள் எனக்கு உள்ளேயே அடங்குவான். வெளிப் பொருள்களை அறியும் கண், அதற்குள் உள்ள கண்ணையும் அதில் நேர்வதையும் அறியாது போல், என்னுள் நின்றதை அறிந்தநான் என்னையே அறியவில்லை. யோகப்பயிற்சியால் அறிந்து கொண்டேன்.
நெருப்பறைத் திறந்தபின்பு
நீயும் நானும் ஈசனே-சிவவாக்கியர்-125
நமது உள்ளத்தே ஒளித்தெரியும் அறைக்கதவு திறந்து கொண்டால் நானும் நீயும் ஈசன் ஆவோம்.
அம்மையப்பன் உப்புநீர் அறிந்ததே அறிகிலீர்
அம்மையப்பன் உப்புநீர் அயன் அரி அரனுமாய்
அம்மையப்பன் உப்புநீர் ஆதியாதி ஆனபின்
அம்மையப்பன் நின்னை அன்றி யாருமில்லை ஆனதே-சிவவாக்கியர்-144
உப்பு நீரும் போல் அம்மையப்பன் இனைந்துள்ளனர். அரியும் அயனும் அரனும் இப்படியே இணைந்துள்ளனர். இப்படி யாவும் இணைந்தபின் நீயே அம்மையப்பன் ஆவாய். உப்பு ஒரு பங்கும் நீர் இரு பங்கும் சேர்ந்தால் இரண்டும் சேர்ந்து ஒன்றாகவே தோன்றும். உப்பு தன் வடிவம் இழந்து சுவையளவில் நிற்குமாதலால் இரண்டு வடிவங்கள் இல்லை. ஒன்று வடிவமாகவும் மற்றது சுவையாக அதில் கலந்தும் இருக்கும். இதேபோல் சக்தியும் சிவனும் இணைகின்றனர். மும்மூர்த்திகளும் இணைகின்றனர். அம்மையப்பர் இணைகின்றனர். நாமும் இணைந்து அம்மையப்பர் ஆகிறோம்.
கருத்தரிக்கும் முன் எல்லாம் காயம் நின்றது தேயுவில்
உருத்தரிக்கும் முன் எலாம் காயம் நின்றது தேயுவில்
அருள்தரிக்கும் முன் எலாம் ஆசை நின்றது வாயுவில்
திருக்கரத்துக் கொண்டதே சிவாயம் என்று கூருவீர்-சிவவாக்கியர்-168
கரு உற்பத்தியாவதற்கும் முன்பும் உருவம் தெரியும் முன்பும் உடம்புக்கு வேண்டிய எல்லாம் அக்னியில் இருந்தன- அருளால் உயிர் உண்டாக ஏற்படும் ஆசை வாயுவிடம் நின்றது. சிக்கலும் ஏற்படாது நீக்கியது சிவாயமே.
சுக்கிலத்தில்–ஆண்விந்து கரு உற்பத்திக்கு முன்பு உடம்பு நின்றது. சுரோணிதத்தில்- பெண்கருமுட்டை உருவம் உண்டாவதற்கு முன் உடம்பு நின்றது. இராண்டுமே அக்னியாகையால் நெருப்பில்—தேயு நின்றது. ஆணும் பெண்ணும் கூடி அருளால் ஓர் உயிர் உடம்பு தோன்றுவதற்கு முன்பு உள்ள ஆசையானது வாயுவில் நின்றது,தச வாயுக்கள் தத்தம் தொழில்கலைச் செய்யும்போது காமமாகிய ஆசையும் உண்டாகும்.
உருக்கலந்த பின்னலோ உன்னை நான் அறிந்தது
இருக்கில் என் மறைக்கில் என் நினைந்திருந்த போதெலாம்
உருக்கலந்து நின்றபோது நீயும் நானும் ஒன்றலோ
திருக்கலந்து போதலோ தளிந்ததே சிவாயமே-சிவவாக்கியர்-200
உருவத்தோடு வந்தபோதுதான் உன்னை நான் அறிந்தேன்.நீ இருந்தாலும் கண்ணை விட்டு மறைந்தாலும், உன்னை நினைக்கும் பொழுதெல்லாம் உன் உருவம் என் நெஞ்சில் கலந்து நிற்கிறது. நீயும் நானும் ஒருமாதிரி நினைவால் கடவுள் நிலை வந்தபிறகு தெளிவாக உணரலாம்.
பட்டமும் கயிறுபோல் பறக்கநின்ற சீவனைப்
பட்டறிவினாலே பார்த்து நீ படுமுடிச்சு போடடா
திட்டவும் படாதடா சீவனை விடாதடா
கட்டடா நீ சிக்கெனக் களவறிந்த கள்வனை-சிவவாக்கியர்-203
கயிற்றின் நுனியை பிடிப்பதால் பட்டம் பறப்பது போல் அருள் என்ற கயிற்றால் சீவன் என்ற பட்டத்தை இறைவன் பற்றியிருப்பதால் பிறக்கின்றது என உணர்ந்து சீவனையும் இறையருளையும் இணைத்து கட்டுவாயாக.
அல் இறந்து பகல் இறந்து அகப்பிரம்மம் இறந்துபோய்
அண்டர் அண்டமும் கடந்த அநேக அநேக ரூபமாய்ச்
சொல் இறந்த மனம் இறந்த சுக சொரூப உண்மையைச்
சொல்லியாற என்னில் வேறு துணைவர் இல்லை ஆனதே-சிவவாக்கியர்-204
இரவு பகல் கடந்து இவ்வுலகுக்கும் மேலாய் நானே பிரம்மம் என உணர்ந்து பல கோடி அண்டங்களையும் கடந்து, பல வடிவம் உடைய பொருளகள் யாவும் கடந்து, சொல்லாலும் மனத்தாலும் விளக்க முடியாத ஆனந்த வடிவமாகிய உண்மைப் பொருளைப் பற்றி விளக்கமாகச் சொல்லி மகிழ எனக்குள் என்னைத் தவிர வேறு யாரும் இல்லை. 
அக்கரம் அநாதியோ ஆத்துமா அநாதியோ
புக்கிருந்த பூதமும் புலன்களும் அநாதியோ
தக்கமிக்க நூல்களும் சதாசிவம் அநாதியோ
மிக்கவந்த யோகிகள் விரைந்துரைக்க வேணுமே-சிவவாக்கியர்-209
அட்சரம் ஆகிய எழுத்து ஓசையும், ஒளியும், உயிரை இயக்கும் ஆத்மாவும், பஞ்சபூதங்களினால் தோன்றிய ஐந்து புலன்களும், வேதம் முதலிய நூல் கருத்துக்களும், சதாசிவம் என்ற கடவுள் உண்மையும் அநாதிகளாகும். எதன் மூலமும் உருவாக்கப்படாமலும் தானாக இருப்பதும் தோன்றிய காலம் தெரியாமல் இருப்பதும் அநாதிகள் ஆகும். 
சனிப்பது ஏது சாவது ஏது தாபரத்தின் ஊடுபோய்
நினைப்பது ஏது நிற்பதுஏது நீர் நினைந்து பாருமே-சிவவாக்கியர்-214
உலகில் உற்பத்தியாகும் சக்தியும், இறந்தபின் பிரிந்து போகும் சக்தியும், பிரபஞ்சம் முழுவதும் பரந்து போகும் நினைப்பு சக்தியும், உயிர் நிற்பதாகிய வாழ்வு சக்தியும் எது என எண்ணிப் பாருங்கள். பிரியும் சக்தியால் சாவும், சேரும்போது உற்பத்தியும், நினைக்கும்போது பரவெளியில் நகர்ந்து போவதும் உயிர் நின்று வாழ்வதாகிய சக்தியும் ஒன்றே. ஒன்றின் பிரிவே என உணரவும், கடவுளின் ஒரு சக்தியே பலவிதமாக செயல் படும். தாபரம்-பரவெளி ஓசையை எங்கும் எடுத்து போவதுபோல் நினைவையும் கொண்டு செல்லும்.
உயிர் இருந்தது எவ்விடம் உடம்பு எடுப்ப தன்முனம்
உயிரதாவது ஏதடா, உடம்பதாவது ஏதடா
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா
உயிரினால் உடம்பு எடுத்த உண்மைஞானி சொல்லடா-சிவவாக்கியர்-219
உடம்புக்கு முன்பு உயிர் எங்கே இருந்தது. உயிரும் உடம்பும் எனத் தனித் தனியானதா. உயிரையும் உடம்பையும் ஒன்றுமாறு செய்வது எது, உயிரினால் உடம்பைப் பெற்ற உண்மை ஞானியே சொல்வாய், ஆத்மா தாய் வயிற்று முட்டையால் உடம்புவரையும் தந்தையின் சுக்ல விந்துவால் உயிர் வந்து ஓர் உடம்பு வளர்கிறது. உடம்பில் சூரிய ஒளி பட்டதும் வெப்பம் தெரிவதுபோல உடம்புக்குறிய சாதனங்கள் உயிர் வெளியாகி கருப்பையில் அமரும்போது தாமே அங்கு வந்து சேர்கின்றன். உயிரும் உடம்பும் பரந்து உள்ளன.
சுழித்தஓர் எழுத்தையும் சொன்முகத்து இருத்தியே
துன்ப இன்ப மும்கடந்து செல்லும் மூலநாடிகள்
அழுத்தமான அக்கரம் அங்கியுள் எழுப்பியே
ஆறுபங்கயம் கலந்து அப்புறத் தலத்துளே-சிவவாக்கியர்-220
மந்திரம் சொலவதற்கு முன் ஓம் எனும் எழுத்தை சொல்லி, மூலாதாரத்து நாடிகள் வழியாக அழுத்தமாகப் கூறப்படும் அட்சர மந்திர எழுத்துக்களை மூலாதார அக்னியுடன் சேர்ந்து எழுப்பினால் ஆதார கமலம் ஆறையும் கடந்து உச்சிக்குமேல் புறவெளியில் ஓசையும் ஒளியும் சேரும். சுழித்த ஓர் எழுத்து- ஓங்காரம்.
சக்திநீ தயவுநீ முயங்குசங்கின் ஓசைநீ
சித்திநீ சிவனும்நீ சிவாயமாம் எழுத்துநீ
முத்திநீ முதலும் நீ மூவரான தேவர் நீ
அத்திபூரம் உம்முளே அறிந்து உணர்ந்து கொள்லுமே-சிவவாக்கியர்-247
சக்தி, தயவு, சங்கின் ஓசையான ஓங்காரம், சித்தி, சிவம், சிவாயநம் என்ற மந்திரம், முத்தி, முதல் கடவுள், மும்மூர்த்திகள் அடிப்படையான பூரணம் ஆகிய யாவும் உனக்குள் அடங்கியிருக்கும்.
மூலமண்டத்திலே முச்சதுரம் ஆதிபோல்
நாலுவாசல் எம்பிரான் நடு உதித்த மந்திரம்
கோலிஎட்டு இதழுமாய்க் குளிர்ந்தலர்ந்து ஈட்டமாய்
மேலும் வேறு காண்கிலேன் விளைந்தே சிவாயமே-சிவவாக்கியர்-253
முச்சதுரம்- முக்கோணம், நாலுவாசல்- 4 இதழ் தாமரை. மூலாதாரத்தில் முக்கோணம் முதல் நாலு வாசலின் நடுவே எம்பிரான் உதிக்கின்றான். ஓம் எனும் மந்திரம் மூலாதாரத்தில் புறப்பட்டு எட்டு இதழ் விரிந்த தாமரை நடுவே சென்று சேர்கிறது. இதனால் சிவனருள் விளைந்து யோகம் முழுமையடைகிறது.
என்னகத்துள் என்னைநான் எங்கும்நாடி ஓடினேன்
என்னகத்துள் என்னைநான் அறிந்திலாதது ஆகையால்
என்னகத்துள் என்னைநான் அறிந்துமே தெரிந்தபின்
என்னகத்துள் என்னை அன்றியாதுமொன்றும் இல்லையே-சிவவாக்கியர்-261
என்னை எனக்குள் எப்படி தேடுவது. எனக்குள் என்னை நான் அறியாதபடியால் எங்கே தேடுவது என்று நினைத்தேன். எனக்குள் நான் இருப்பதை உணர்ந்தபின் எனக்குள் என்னைத்தவிர வேறு எதுவும் இல்லை அதுவே உயரியது என்று உணர்ந்தாய் விட்டது.
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்று உரைக்கும் அன்பர்கள்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்
அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி அவ்வெழுத்தை அறிந்தபின்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அவ்வுமாம் சிவாயமே-சிவவாக்கியர்-275
அஞ்சு எழுத்து, மூன்று எழுத்து, எட்டு எழுத்து ஆகியவை பரம்பொருளாக இருக்கவில்லை. அவற்றை நெஞ்சில் வைத்து அதன் பொருளை அறிந்து சொன்னால் அவை கடவுளை உணர்த்தும். அ+உ+ம் அல்லது ஐம்+க்லீம்+ஸௌ என்பது 3எழுத்து.
முச்சதுர மூலமாகி முடிவுமாகி ஏகமாய்
அச்சதுரம் ஆகியே அடங்கிஓர் எழுத்துமாய்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரிக்கும் மந்திரம் உண்மையே சிவாயமே-சிவவாக்கியர்-287
மூலாதாரத்தின் முக்கோணத்திலிருந்து தலை உச்சிவரை ஒரே ஒளிக்கற்றையாக நிறுத்தி ஓம் எழுத்தையும் ஒலித்தூணாக நிறுத்தி மந்திரம் உச்சரித்தால் அந்த தூண் ஞான தீபமாக மாறும்.
அம்பரத்துள் ஆடுகின்ற அஞ்செழுத்து நீயலோ
சிம்புளாய்ப் பரந்துநின்ற சிற்பரமும் நீயலோ
எம்பிரானும் எவ்வுயிர்க்கும் ஏகபோகம் ஆதலால்
எம்பிரானும் நானுமாய் இருந்ததே சிவாயமே-சிவவாக்கியர்-291
வான்வரை செல்லுமாறு உச்சரித்தா ஐந்தெழுத்துமே இறவனாக மிளிரும். சிம்பு வைத்து கட்டியதுபோல் பரம்பொருள் எங்கும் பரவியுள்ளது. எம்பிராண் எல்லா உயிர்க்கும் தானே தலைவனாய் இருப்பதால் நானும் எம்பிரானுமாய் இணைந்துள்ளோம். 
நீரிலே முளைத்தெழுந்த தாமரையின் ஓரிலை
நீர்னோடு கூடிநின்றும் நீரிலாத வறுமைபோல்
பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப் பராபரம்
பாரினோடு கூடிநின்ற பண்புகண்டு இருப்பீரே-சிவவாக்கியர்-313
நீரிலே தோன்றி முளைத்து வாழ்ந்து நீரிலேயே இருக்கும் தாமரையின் இதழ்மேல் ஒடும் நீர் ஒட்டாது நின்று நீரை அந்நியமாக்கி காட்டுவதபைப்போல் பாரினில் பரம்பொருளும் அந்நியம் போல் தோன்றுவது உண்மையல்ல. நினைவு முதலிய சக்திகள் அருவமாக பிரபஞ்சத்தில் பரவி நிற்பது போல பரம்பொருளும் அருவமாக எங்கும் பரவி உள்ளது.
மவுன அஞ்சு எழுத்திலே வாசிஏறி மெள்ளவே
வானளாய் நிறைந்தசோதி மண்டலம் புகுந்தபின்
அவனும் நானும் மெய்கலந்து அனுபவித்த அளவிலே
அவனும் உண்டு நானும் இல்லை யாருமில்லை ஆனதே-சிவவாக்கியர்-327
மவுனமாக அஞ்சு எழுத்து ஓதியும் பிராணாயாமும் செய்தால் தலையில் உள்ள சோதி மண்டலத்திற்குப் போய் கடவுளுடன் நானும் மெய் கலந்து அனுபவிக்கலாம். அப்போது அவர் வேறு நான் வேறு பிறர் வெறு என்று இல்லாமல் எல்லாமே ஒன்றுதானாகும்.
வடிவு பத்ம ஆசனத்து இருத்திமூல அனலையே
மாருதத் தினால் எழுப்பி வாசல் ஐந்து நாலையும்
முடிவு முத்திரைப்படுத்தி மூலவீணாத் தண்டினால்
முளரி ஆலயம் கடந்து மூலநாடி ஊடுபோய்-சிவவாக்கியர்-370
அடிதொடங்கி முடியளவும் ஆறுமாநிலம் கடந்து
அப்புறத்தில் வெளிகடந்த ஆதி எங்கள் சோதியை
உடுபதிக்கண் அமுதருந்தி உண்மைஞான உவகையுள்
உச்சிபட்டு இறங்குகின்ற யோகி நல்ல யோகியே-சிவவாக்கியர்-371
பத்ம ஆசனத்தில் அமர்ந்து ஒன்பது உடல் வாயில்களயும் மனத்தால்மூடி மூலாதாரத்தில் உள்ள நெருப்பை காற்றினால் எழுப்பிய உணர்வும் செய்கையும் ஆறு ஆதாரங்களைத் தாமரைக் கோவில்களை வீணைபோல் வளைந்து இருக்கும் முதுகுத்தண்டின் சுழுமுனைநாடிவழி கடந்து போய் தலை உச்சிக்கு மேல் உள்ள வெளியையும் கடந்து பரம்பொருளாகிய சோதியை கண்டு சந்திரமண்டலத்தில் அமுதம் உண்டு உண்மையான ஞானம் பெற்று முடியிலிருந்து கீழ் இறங்குபவர் யோகியாம். உடுபதி-நட்சத்திரங்களின் நாயகன் சந்திரன்.ஆறுமாநிலம்-ஆறு ஆதாரம்.மாருதம்-காற்று.
அக்கரம் அநாதியல்ல ஆத்துமா அநாதிஅல்ல
புக்கிருந்த பூதமும் புலன்களும் அநாதிஅல்ல
தக்கமிக்க நூல்களும் சதாசிவம் அநாதிஅல்ல
ஒக்கநின்று உடன்கலந்த உண்மைகாண் அநாதியே-சிவவாக்கியர்-399
அட்சரம் ஆகிய எழுத்து ஓசையும், ஒளியும், உயிரை இயக்கும் ஆத்மாவும், பஞ்சபூதங்களினால் தோன்றிய ஐந்து புலன்களும், வேதம் முதலிய நூல் கருத்துக்களும், சதாசிவம் என்ற கடவுள் உண்மையும் அநாதிகளாக அப்பால் இல்லை. பிறந்தபோதே நம்முடன் தோன்றி உரிய காலத்தில் நமக்கு உரிய காலத்தில் வெளிப்பட்டன. நாம் பிறக்கும் போது நம்மிடம் நமக்காக பிரபஞ்சத்திலும் இவை இருந்து கலந்தன எனவே அநாதியல்ல.
அகரம் ஆனது அம்பலம் அநாதியானது அம்பலம்
உகரம் ஆனது அம்பலம் உண்மையானது அம்பலம்
மகரம் ஆனது அம்பலம் வடிவானது அம்பலம்
சிகரம் ஆனது அம்பலம் தெளிந்ததே சிவாயமே-சிவவாக்கியர்-406
அ. உ. ம் என்னும் ஓங்காரத்தின் உறுப்பு எழுத்துக்களாயும், அநாதியானதும், உண்மையாய் இருப்பதும், புலனாகும் வடிவம் உடையதாகவும் சிவனைக் குறிக்கும் சி ஓசையுமாகவும் பிரபஞ்சமான அம்பலமாகவே உள்ளன. ஒரு மையப் புள்ளியை யோகம் மூலமாக தியானித்தால் பிரபஞ்சம் வசமாகும்.
மடை திறக்க வாரியின் மடையில் ஏருமாறுபோல் 
உடலில் மூலநாடியை உயர ஏற்றி ஊன்றியே-சிவவாக்கியர்-439
வயலின் கால்வாயில் நீரைப் பாய்ச மடையில் ஏறிமிதிப்பர். தண்ணீர் அவ்வப்போது பாயும். அது போன்றே சுழுமுனையை நினைத்து மூலக்கனலை உயர ஏற்ற வேண்டும். மேலே போவது பிராணன், வாயு, நெருப்பு மூன்றிற்கும் இயல்பு. அதனால் மூலநாடியை ஏற்றுவதற்கு வாய்ப்பாக நினைத்தால் போதுமானது.
சோதியாக உம்முளே தெளிந்து நோக்க வல்லீரேல்
சோதிவந்து உதித்திடும் துரியாதீதம் உற்றிடும்
ஆதிசக்ரந்தனில் அமர்ந்து தீர்த்தம் ஆடுவன்
பேதியாஅது கண்டுகொள் பிராணனைத் திருத்தியே-சிவவாக்கியர்-443
உமக்கு உள்ளே சோதியாக இருக்கும் இறைவனை தெளிந்து நோக்குவீராகில் அந்த சோதி உனக்குள் உதிக்கும். துரியா தீதம் என்ற பிரக்ஞை இல்லாத சமாதி நிலையும் உடன் தோன்றும். ஆதி சக்கரமாகிய மூலாதரம்வரை அமிர்தம் ஊறி வருதலே தீர்த்தம் ஆடுதலாகும். கடவுளும் நீயும் வேறு வேறு என பிரிக்காமல் பிராணாயாம நெறியை உணர்க.
உந்திமேலே நாலுமூன்றும் ஓம்நம சிவாயமே
சந்திசந்தி என்றுநீர் சாற்றுகின்ற பேயரே
முந்தவந்த தம் முளே மூலநாடி ஊடுபோய்
அந்திசந்தி அற்றிடம் அறிந்து உணர்ந்து பாருமே-சிவவாக்கியர்-466
உந்திக்கும் மேலே ஓர் ஒலிக்கு 2விரல் அளவில் 12விரல் அளவு உயரம் ‘ஓம்நமசிவாய’ என்று சொல்லிப் பழகினால் உச்சி வெளி உணர்வு பெற்று சந்தியா வந்தனத்தைவிட அதிக பயன் கிடைக்கும். சுழுமுனை நாடியின் உள்ளேபோய் அந்தி உதயம் முதலான சந்திகள் இல்லாத இடத்தின் நிலையை அறியலாம்

நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றிவந்து முணுமுணென்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ-சிவவாக்கியர்-494
கல் ஒன்றை நிறுவி அதைத் தெய்வம் என்று நினைத்து சில பூக்களை அதன்மேல் இட்டு சுற்றிவந்து மந்திரத்தை முணுமுணுப்பதால் நட்டதொரு கல் பேசாது கடவுள் நம் உள்ளே இருப்பதால். கறியைச் சமைத்த சட்டுவம் அக்கறியின் சுவையை உணராது. அது வழி படுவதற்குரிய கருவியே ஆகும்.
நானும் அல்ல நீயும் அல்ல நாதன் அல்ல ஓதுவேன்
வானில் உள்ல சோதி அல்ல சோதிநம்முள் உள்ளதே
நானும் நீயும் ஒத்தபோது நாடி காணலாகுமோ
தான தான தந்தான தாதனான தானனா-சிவவாக்கியர்-495
நானோ, நீயோ, கடவுளோ என சோதியின் காரணத்தை தேட வேண்டாம். வானில் உள்ள சோதியல்ல. நமக்குள்ளேயே உள்ள சோதியது. நீவேறு நான் வேறு என எண்ணாமல் எல்லோருள்ளும் அச்சோதி உள்ளது என ஒத்துக் கொள்ளும் போது தானாகத் தெரியும்.
நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நிற்பது ஒன்றுதான்
நல்லது என்ற போது அது நல்லதாகி நின்றபின்
நல்லது அல்ல கெட்டது என்றால் கெட்டது ஆகும் ஆதலால்
நல்லது என்று நாடிநின்று நாமம் சொல்ல வேண்டுமே-சிவவாக்கியர்-496
நல்லது கெட்டது என்று வேறு வேறாக எதுவும் இல்லை. நடுவில் ஒன்றுதான் உள்ளது. நல்லது என்று நாம் நினைப்பது நல்லதாகவும் கெட்டது என நாம் நினைப்பது கெட்டதாகவும் நிற்கும். எனவே நல்லது என்ற முடிவுடன் இறைவன் நாமத்தைச் சொல்ல வேண்டும். நினைவு எண்ணம் நம்பிக்கை எல்லாம் எப்படி இருக்கின்றனவோ அப்படியே நடக்கும் என்பதால் இறைவன் நாமத்தைச் சொல்லி நல்லதாக எண்ணுக.
கட்டையால் செய் தேவரும் கல்லினால் செய் தேவரும்
மட்டையால் செய் தேவரும் மஞ்சளால் செய் தேவரும்
சட்டையால் செய் தேவரும் சாணியால் செய் தேவரும்
வெட்டவெளியது அன்றி மற்றுவேறு தெய்வம்இல்லையே-சிவவாக்கியர்-504
கட்டை, கல், மட்டை, மஞ்சள், சட்டை, சாணி ஆகியவற்றால் வடிவு அமைக்கப்படும் எல்லாத் தெய்வங்களும் வெட்ட வெளித்தெய்வம் சக்தியேயன்றி வேறில்லை.
அகப்பேய் சித்தர்

ஆறு தத்துவமும்- அகப்பேய் ஆகமம் சொன்னதடி
மாறாத மண்டலமும்- அகப்பேய் வந்தது மூன்றடியே
பிருதிவி பொன்னிறமே- அகப்பேய் பேதமை அல்லவடி
உருவது நீரடியோ- அகப்பேய் உள்ளது வெள்ளையடி
தேயு செம்மையடி - அகப்பேய் திடனடி கண்டாயே
வாயு நீலமடி- அகப்பேய் வான்பொருள் சொல்வேனே
வானம் அஞ்சடியோ- அகப்பேய் வந்தது நீகேளாய்
உனது ஆகாதே- அகப்பேய் உள்ளது சொன்னெனே. 
நிலமாகிய மூலாதாரம்- பொன்னிறம், நீராகிய சுவாதிட்டானம்- வெள்ளைநிறம், தீயாகிய மணிபூரகம்- செம்மை நிறம், வாயுவாகிய அநாகதம் நீலநிறம், ஆகாயமாகிய விசுத்தி- புகைநிறம் என்பதாகும். பிரம்ம மண்டலம், விஷ்ணு மண்டலம், ருத்ரமண்டலம் என்ற 3 மண்டலங்களுக்கும் இரண்டு இரண்டாக ஆறு ஆதாரங்களையும் கொள்க.
இடைக்காட்டுச்சித்தர்

அண்ணாக்கை யூடே அடைத்தே அமுது உண்ணேன்
அந்தர தலத்தை அப்போதே எண்ணேன்
விண்ணளும் மொழியை மேவிப்பூசை பண்ணேன்
மெய்ஞ்ஞானம் ஒன்றுஅன்றி வேறுஒன்றை நண்ணேன்
ஓம் எனும் மந்திரத்தை ஓதினால் அமுதம் உண்டு மெய்ஞானத்தையும் பரம்பொருளையும் அடையலாம். உண்ணேன்-உண்ணுக, பண்ணேன்-பண்ணுக, எண்ணேன்-எண்ணுக,நண்ணேன்-நண்ணுக என பொருள் கொள்க.
பாம்பாட்டிச் சித்தர்

காயக்குடத்திலே நின்ற பாம்பைக் கருணைக் கடலிலே தியங்க விட்டு
நேயச் சுழுமுணை நீடுபாய்ச்சி நித்யமான வஸ்துவை நிலைக்க நாடி
மாயப்பெருவெளி தன்னில் ஏறி மாசற்ற பொருளினை வாய்க்கத்தேடி ஆயத்துறை 

கடந்து அப்பால் பாழின் ஆனந்தம் சேர்ந்தோம் என்று ஆடு பாம்பே
உடம்பகிய குடத்தின் அடியில் உள்ள குண்டலினி சக்தியாகிய பாம்பைக் கடவுளின் கருணையினால் பெற்று சுழுமுனையில் நீண்டு போக அனுப்பி நிலையான பரம் பொருளைத்தேடி உச்சிப் பெருவெளியில் ஏறி தடையாக உள்ள கிரந்தி முடிச்சு யாவற்றையும் கடந்து பாழான வெளியில் ஆனந்தம் அடைந்தோம் என ஆடு பாம்பே என்றார்.
பத்திரகிரியார்

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம். 
ஆங்காரமாகிய கோபம் முதலியவற்றை அடக்கி அன்பு மிகக் கொண்டு ஐந்து புலன்களை தலையெடுக்காமல் செய்து சமாதி நிலையடையலாம். தூங்குவது போலிருந்தாலும் தூங்காமல் இருந்து சுகம் அடைவது ஆகும். ஆங்காரம்- அகங்காரம்.
ஆதார மூலத்து அடியில் கணபதியைப்
பாதாரவிந்தம் பணிந்து நிற்பது எக்காலம்
மண்வளைந்த நாற்கீற்றில் வளைந்திருந்த வேதாவைக்
கண்வளர்த்துப் பார்த்துள்ளே கண்டிருப்பது எக்காலம்
அப்புப் பிறைநடுவே அமர்ந்திருந்த விட்ணுவை
உப்புக் குடுகையுள்ளே உணர்ந்து அறிவது எக்காலம்
வாயு அறு கோணத்தில் வாழும் மகேச்சுரனைத்
தோயும்வகை கேட்கத்தொடங்குவதும் எக்காலம்
வட்ட வழிக்குள்ளே மருவும் சதாசிவத்தை
இட்ட வழிதேடக் கிருபை செய்வது எக்காலம்
உச்சிக்கிடை நடுவே ஓங்கும் குருபதத்தை
நிச்சயித்துக் கொண்டிருந்து நேர்வதினி எக்காலம். 
மூலாதாரத்தின் அடியில் கணபதி, நாற்கமல நடுவில் பிரம்மா, சுவாதிட்டானப் பிறை நடுவே திருமால், மணிபூரகத்தில் ருத்திரன், அநாகதத்தில் மகேச்சுவரன், ஆக்ஞையில் சதாசிவம், உச்சிக்கும் புருவ நடுவுக்கும்மிடையில் குருவின் பாதம் என வழிபடவும்.
தோலேணி வைத்துஎறித் தூரநடந்து எய்க்காமல்
நூலேணி வைத்து ஏறிப் போக்குவது எக்காலம் 
உடம்பு பகுதியகிய தோலின் வெளித்தோற்றத்தை வைத்து யோகம் செய்யாமல் உள்முகமாக நூலில் செய்த ஏணிபோல் நாடிகளை நினைத்து யோகம் செய்யவும்.
உதயச் சுடர்மூன்றும் உள்வீட்டிலே கொளுத்தி
இதயத் திருநடனம் இனிக்காண்பது எக்காலம்.

உதயச்சுடர்- சந்திரன், சூரியன், அக்னி ஆகிய ஒளியாக இடா, பிங்களா, சுழுமுனை நாடிகளில் உணர்வு ஏற்றுவதே உள்வீட்டில் ஒளி ஏற்றுவது என்றார்.
பட்டினத்தார்

மூக்குமுனையை முழித்திருந்து பாராமல்
ஆக்கைகெட்டு நானும் அறிவழிந்தேன் பூரணமே. 
கேசரி யோகம் என்னும் மூக்கு முனையைப் பர்த்து மரணத்தை வெல்ல யோகம்செய்க.
முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென் இலங்கையிலே
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானும் இட்டதீ மூள்கவே. 
சிவன் முன் நெற்றிக்கண்ணால் முப்புரத்தை எரித்தார். அனுமன் பின்னால் வைத்த தீ தென் இலங்கையில் எரிந்தது. தாயார் தந்த தீ நீ பிறக்கும்போதே மூலாதாரத்தில் உள்ளது. இம்மூன்றும் இயற்கைத் தீ. நான் அன்னைக்கு இட்ட தீ செயற்கையானது.
குதம்பைச் சித்தர்

வெட்ட வெளிதன்னை மெய் என்று இருப்போர்க்குப்
பட்டயம் ஏதுக்கடி குதம்பாய் பட்டயம் ஏதுக்கடி
தலைக்குமேல் உள்ள வெறும் வெளியை மெய்யான பொருள் என நம்பி இருப்போர்க்கு பிறர் கூறும் அடியாள வார்த்தைகள் தேவையில்லை.
ஆதார மன் அடிமுடி கண்டோர்க்கு
வாதாட்டம் ஏதுக்கடி குதம்பாய் வாதாட்டம் ஏதுக்கடி
அடியாகிய மூலாதாரம் முதல் முடியாகிய ஆயிரம் இதழ்த் தாமரை வரை ஒளித்தூணாக இருப்பதைக் கண்டவர்கள் வாதாடத்தேவையில்லை.
தந்திரமான தலம்தனில் நிற்போர்க்கு
மந்திரம் ஏதுக்கடி குதம்பாய் மந்திரம் ஏதுக்கடி
வழிபடும் முறை,பக்தியோகம்,ஜெபம்,தவம் ஆகியன தந்திரம் எனப்படும், இதைச் சரியாக செய்தலே மந்திர யோகம் செய்வதாகும். 
உச்சியில் சென்று உயர்வெளி கண்டோர்க்கு
இச்சிப்பு இங்கு ஏதுக்கடி குதம்பாய் இச்சிப்பு இங்கு ஏதுக்கடி 
உச்சியில் ஏறி உயர்வெளியைப் பார்த்தபின் அவர்கள் இவ்வுலகில் விரும்பக்கூடியது ஏதும் இல்லை.
அந்தரம் தன்னில் அசைந்தாடும் முத்தர்க்குத்
தந்திரம் ஏதுக்கடி குதம்பாய் தந்திரம் ஏதுக்கடி
உச்சிக்குமேல் உள்ள வெளியில் அசைவதைக் கண்டு சமாதியிலிருக்கும் ஜீவன் மூத்தர்களுக்கு சடங்கு சம்பிரதாய தந்திரங்கள் தேவையில்லை.
முக்கோணம் தன்னில் முளைத்த மெய்ஞ்ஞானிக்குச் 
சட்கோணம் ஏதுக்கடி குதம்பாய் சட்கோணம் ஏதுக்கடி
மூலாதார முக்கோணத்திலோ மணிபூரக முக்கோணத்திலோ தொடங்கி மேல் நோக்கி யோகம் செய்வோர் அறு கோணமாகிய மார்பு நடுவில் தொடங்க வேண்டியது இல்லை.
வேகம் அடங்கி விளங்கும் மெய்ஞ்ஞானிக்குச் 
யோகம்தான் ஏதுக்கடி குதம்பாய் யோகம்தான் ஏதுக்கடி 
மனத்தின் வேகம் அடங்குவதே யோகம் அது அடங்கிய பின் வேறு யோகம் வேண்டாம்.

மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால்ஏதுக்கடி குதம்பாய் தேங்காய்ப்பால்ஏதுக்கடி
மாங்காய்போல் தோற்றம் தரும் இதயத் தானத்திலே உள்ள உள் உணர்வை மாங்காய்ப்பால் என்றார். மலை-தலை. தேம்-தேன். தேன் போல் இனிக்கும் காய்கனியும் பாலும் அவர்களுக்கு தேவையில்லை.
அழுகணிச்சித்தர்

அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை அம்பாக்கி
மந்திரத்தேர் ஏறியல்லோ மான் வேட்டை ஆடுவதற்கு
சந்திரரும் சூரியரும் தாம் போந்த காவணத்தே
வந்து விளையாடியல்லோ என்கண்ணம்மா
மன மகிழ்ந்து பார்ப்பது ஒன்றோ.
புருவத்தை வில்லாக்கி, ஐந்து எழுத்து மந்திரத்தை அம்பாக்கி அது போகும் வேகம் தேராகி அகங்காரமாகிய மான் வேட்டையாட சந்திர சூரிய நாடிகள் உடம்பில் உதவி புரியும்.
கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
உண்ணாக்கு மேலேறி உன் புதுமை மெத்த உண்டு
கண் மூக்கு என்ற முன்பக்க எல்லையும் காதோரம் முதல் மேல் வரை இடம் வலமாகவும், தலைக்குப் பின்பக்கமாகவும் நினைவைச் செலுத்தி மையத்தில் உள்நாக்குத் துளைவழியாக உணர்வைச் செலுத்தி ஒளியை உணர்ந்தால் புதுமைகள் வெளிப்படும்.
மாணிக்கத்து உளொளிபோல்-ஆத்தாடி
மருவி இருந்தாண்டி 
அந்த சுழுமுனையை நோக்கும்போது உள் ஒளியானது மாணிக்கம் போலிருக்கும்.
உச்சிக்கு நேரே உண்ணாக்கு மேல்நிதம் நிதம் வைத்த விளக்கும் எரியுதடி
அச்சுள்ளவிளக்கு வாலையடி அவியாமல்எரியுது வாலைப்பெண்ணே
உள்நாக்கு முதல் உச்சிவரை எப்போதும் ஒளி தோன்றுவதை வாலைப் பெண் அருளால் எரியும் விளக்கு அது என்றும் அவியாது எரியும்.
அகத்தியர் ஞானம்

கோணாமல் சுழுமுனையில் மனத்தை வைத்து 
குருபாதம் இருநான்கில் நாலைச் சேர்த்து
நாணாமல் ஒரு நினைவாய்க் காக்கும்போது
நாலும் எட்டும் ஒன்றாகும் நாட்டி ஊதே. 
பிராணாயாமத்தின் மூலம் சுழுமுனையில் மூலாக்னி மேலே ஏறும். எட்டிதழ் தாமரை ஆக்ஞை மேல் குருபாதம் உள்ளது. அதுவும் நாழிதழாகிய மூலாதாராமும் ஒன்றாகுமாறு இணைக்கும் சுழுமுனை நாடியில் மனம் வைத்து பிராணாயாமம் செய்தால் யோக சித்தியாகும்.
விண்ணின் விண்ணுக்குள் அண்ணாக்கு அப்பா
மதிரவியும் பூரணமும் கண்வாய் மூக்கும்
மகத்தான செவியோடு பரிசம் எட்டும்
பதிய இடம் சுழுமுனை என்று அதற்குப் பேராம்
பகருவார் சோர்க்கமும் கைலாசம் என்றே
புரியட்டகம் என்பதே மனித உடலின் அடிப்படையாகும். அவை ஐந்து புலன்களுக்கும் உரிய தன்மாத்திரைகளும், சூரிய சந்திரர் கடவுள் அல்லது ஆத்மா ஆகியவை புரியட்டகம் என்னும் எட்டாம். அவை சுழுமுனை நாடியில் பதிந்து உண்ணாக்கை ஒட்டி போகிறது. அது இந்திரயோனி என்பர், இதை சொர்க்கம் கைலாசம் செல்லும் வழி என்பர்.
வால்மீகர் ஞானம்

நாக்குவாய் செவிமூக்கு மத்திக்கு அப்பால்
நடுவீதி குய்யம்முதல் உச்சி தொட்டுத்
தாக்குவாய் அங்கென்றே அதிலே முட்டுத்
தாயாரைப் பூசித்து வேதம் ஓது
வாக்குவாய் அசையாமல் மவுனம் கொண்டு
வாசிவரும் இடத்தில் மனம் வைத்துக் காத்து
நீக்குவாய் வாசியோடு மனம் தான் புக்கு
நினைவதனில் அடங்கிவரும் வரிசை காணே. 
நடுவீதி- மூக்கு, செவிகளின் இருதுருவம் சந்திக்கும் நேர்கோடு. குய்யம்- மூலாதாரம் இருக்கும் உடலின் கீழ்ப்பகுதி. வாசிவரும் இடம்- பிராணன் மூலாதாரத்தில் இருந்து சுவாசத்தை இயக்குவதை உணர்தல். வாய், மூக்கு, செவி இவைகளுக்கு நடுவே உண்ணாக்குமேல் ஒளிபடரும் வழியே மனம் செலுத்தி மூலம் முதல் உச்சந்தலைவரை உணர்வை மூட்டுமாறு பராசக்தியை வணங்கி வேத மந்திரம் ஓதுவாயாக. வாயிலிருந்து நாக்கு வெளிப்பட்டமலும் அசையாமலும் மௌனமாக வாசியாகிய பிரணாயாமம் தொடங்கும் இடத்தில் கருத்தைச் செலுத்தும்போது நம் நினைவு மெல்ல மெல்ல அடங்கிவரும்.நடுவீதியாகிய சுழுமுனை நாடியில் மூலாதாரம் முதல் வாயுவை நிறுத்துக. தாய்த் தெய்வத்தைப் பூசித்து மவுனம் கொள்க
இராமதேவர்

ஆதி என்ற மணி விளக்கை அறிய வேணும்
அகண்ட பரி பூரணத்தை காண வேணும்
சோதி என்ற துய்யவெளி மார்க்கம் எல்லாம்
சுகம்பெறவே மனோன்மணியாள் ஆத்தாள் தன்னை
நீதிஎன்ற பரஞ்சோதி ஆயி பாதம்
நிர்குணத்தின் நின்ற நிலை யாரும் காணார்
வேதி என்ற வேதாந்தத்து உள்ளே நின்று 
விளங்கவரு பூசையிது வீண் போகாதே.
பிறந்தபோதே உடலில் தோன்றியிருக்கும் மணிவிளக்கு ஒளியை அறிய வேண்டும். அது பிரபஞ்சம் முழுவதும் விரிந்த பரிபூரணத்தை காண்பதாகும். வெளியில் தோன்றும் சக்தி மனோன்மணியாகிய சக்தி. படிப்படியாக உணரத்தக்க பரஞ்சோதியின் பராசக்தி பாதமாகும். நிர்க்குணமுடைய பரம்பொருள் நிற்கும் நிலை இது. வேதாந்தம் தெரிந்தவர் இதைக் காண்பர். அதுவே பூசை செய்வது ஆகும்.
தானென்று மூலமுடன் சித்தி பண்ணு
தனதான நூற்றெட்டுக்குள்ளே சித்தி
ஆனென்ற அண்டர்பதி எட்டும் ஆடும்
அறுபத்து நால்மூலி எல்லாம் ஆடும்
கோனென்ற கோடிவித்துக் கணக்கில் ஆடும்
குண்மாக ரேவதிநாள் செய்ய நன்று
வானென்ற அட்டமில் செய்ய நன்று
வளர்பிறயில் செய்தானே யோகியாமே.
ஆத்மா மூலாதாரத்தில் இருப்பதாகப் பாவித்து யோகம் செய்க. அது முதல் 108 விரல் முடிய உபாசாந்தம் வரை யோகம் செய்தால் யோக சித்தி பெறலாம். எட்டு திசை அண்டப்பதி இதற்குள் அடக்கம். காயகல்ப மூலிகை 64 இன் பலன் இதுவே. கோடி சித்துக்கள் கொண்ட தலைமை பெறலாம். ரேவதி நாளில் செய்க.அல்லது வளர்பிறை அட்டமியில் தொடங்கி செய்க.
திரிகோணச் சித்தர்:- 
சிவனே பரமகுரு தேசிகனே பாதம்
அவனே அனுதினமும் ஆகும்-நவநீத
பொன்பூத்த நீலப்புயல்வண்ணனும்பொறிவாய்
மின்பூத்த நான்முகனா வேதாவும்-தென்பூத்த
செக்கச்சடையானும் தேசுபெற வேயுருவாய்
ஒக்கத் தனிவந்து உதித்தபிரான்-தர்க்கமிடும்
வேதமும் சாத்திரமும் வேண்டும் பலசமயம்
பேதமும் காணாப் பெருஞ்சமயம்-நாதத்தில்
ஓசை அடங்க ஒளியும் பரமனையில்
ஆசை அடங்க அனுபவிப்போன் பூசைபுரி
தொண்டர் இதயச் சுனைமடலில் வேரூன்றி 
விண்ட நறைக்கமல மெல்லடியான் எண்திக்கும்
தினமும் பரமகுரு தேசிகனாகவும் சிவனாகவும் இருக்கும் அவன் பாதம் பணிக. நவநீதம்- வெண்ணெய் தின்ற வாய் உடைய நீல நிறமான திருமாலும், பிரம்மனாகிய நான்முகனும், சிவந்த சடை கொண்ட உருத்திரனும் ஆகிய மும்மூர்த்திகள் கூடிச் சென்று உதித்தவனாகிய குரு, தர்க்க சாத்திரம், வேதாந்தம், பல சமயங்கள் ஆகிய வற்றால் பேதம் காணாத பெரும் சமயமாய், நாதத்தின் ஓசை உடலில் அடங்கும் இடம் கண்டு, அது கடவுள் இருக்குமிடம் என உணர்ந்து அங்கு யோகம் செய்து ஆசையை விட்டு அனுபவிப்பவன். தொண்டர்கள் இதமாகிய சுனையில் வேரூன்றி மலர்ந்த வாசம் மிகுந்த தாமரைத் திருவடி கொண்டவன்.
சாதியான் தோன்றும் சமரச மாயிருந்து
பேதியான் வஞ்சம் இலாப் பேதைமையான்-ஆதி
முதலாய் நடுவாய் முடிவாய் முடிந்து
சிதலாய் வெளியொளியாஞ் சென்மம்-சதகோடி
சத்தியும் மந்திரமும் தானாக்ப் பாவித்து
முத்தி கொடுக்கும் முழு முதல்வன்-சுத்திய
செஞ்சடையான் யோகநிலை தேர்ந்து தனைக்குறியார்
நெஞ்சடையான் பிஞ்சுநிலாச் சடையான்-நஞ்சார்ந்த
கண்டத்தான் தேடரிய காட்சியான் பல்கோடி
அண்டத்தான் சோதி அருவுருவான்-முண்டகச்செம்
போதம் கடலும் பொருப்பும் விருப்பாகிச்
சூதுபுரி மூன்று தொழிலுடையோன்-ஓதும்
எங்குமுள்ள சாதிகளுக்குள் சமரசம் காத்து வேற்றுமையை நீக்கி வஞ்சமிலாது அறியாதுள்ளான். ஆதியாகவும் முதல் நடு முடியாகவும் எங்கும் பரவி வெளியில் பரவும் ஒளியாகியவன், சதகோடி சக்தியும் மந்திரமும் தான் என்றே பாவித்து முத்தியை வழங்கும் முழுமுதல்வன், சுற்றியசடைக்கோலம் கொண்டவன், யோக நிலையில் தெளிவடையாது தன்னை நினைக்காதவர் நெஞ்சை சேராதவன், பிற நிலவைச் சடையில் வைத்தவன். நஞ்சுண்ட கண்டன், தேடமுடியாத காட்சியுடையவன், பலகோடி அண்டங்கள் உடையவன், சோதியாகிய அரு உருவமானவன். தாமரைப் பாதத்தில் ஞானம் தருபவன், கல், மலைகளில் விரும்பி இருப்பவன், ஆக்கல் காத்தல், அழித்தல் ஆகிய தொழில்கள் செய்பவன்.
சரியை கிரியை தவ்யோக ஞானம்
தெரிய அமைத்த சிவ சித்தன்-துரியத்தில்
தோத்தி அணுவாய்த் திகழும் சுடரொளியாய்த்
தேத்தியுரு வாகவந்து சென்மிப்போன்-சாத்தரிய
முக்குணமும் ஐம்பொறியும் மும்மலமும் உண்டாகி 
எக்குணமும் தானாய் இருந்தருள்வோன்-அக்கரமாம்
அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோர் அட்சரமாய்ப்
பிஞ்செழுத்தாய் எங்கும் பிராணவமாய்க்-கொஞ்சப்
பொருளாய் மருளாய்ப் புரையாய் உரையாய்
அருளாய்த் தனியிருந்த ஆனந்தன்-இருளாத
காட்சியான் கண்டவர்க்குக் காணாத பேர்க்கு உருவும்
சூட்சியாய் நின்ற தொழிலாளி-ஆட்சி
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று நான்கு படிகளில் பயிற்சியடைந்தவர் தெரியுமாறு உள்ள சிவனாகிய சித்தன். தூங்காமல் தூங்கலாகிய யோக நிலை துரியத்தில் தோன்றி அணுவாகவும் திகழும் சுடர் ஒளி ஆகவும் தெளிவாக உருவமும் கொண்டு தோன்றுபவன். சொல்லுவதற்கு இயலத மூன்று குணங்களும் (சத்துவம், ராஜஸம், தாமசம்). ஐந்து பொறிகளும், மூன்று மலங்களும் (சஞ்சிதம், ஆகாமியம், கன்மம்) உள்ள உயிர்களுக்கு எல்லக் குணமும் உடையவனாகத் தோன்றுபவன். சிவாயநம எனும் ஐந்து எழுத்தாய், ஓம் நமோநாராயணாய எனும் எட்டு எழுத்தாய் ஐபத்தொரு எழுத்தாய். பிஞ்செழுத்தாகிய ஓரெழுத்து பீஜங்களாய் பிரணவமாகிய ஓம் எழுத்தாய் உள்ளவன். சிறுபொருளாய், அறியமுடியததாய், உவமையாய், உரைபொருளாய், அருளாய், தனியாக இருக்கும் ஆனந்த மயமானவன். காட்சி வடிவில் தவத்தினர்க்குக் காணப்படுபவன். காணமுடியாதவர்க்காக உருவ மேனியில் வணங்கப்படுபவன். இப்படி சூட்சியாய் இருக்கும் தொழிலும் உடையவன்.
இடைபிங் கலைசுழியினை எட்டாமல் மூலக்
கடையில் நடக்கும் கழலுடையோன்-விடையேறும்
பாசன் குடிலைப் பராசக்தி வீட்டிலுறை
ஏகன் பிறப்பிறப்பு ஒன்று இல்லாதான்-யோகன்
சிறியன் பெரியன் சிவன் கருப்பன்
குறியன் நெடியன் எனக் கூறாதான்-பொறிகலந்த
பாசத்தான் பாசக் கட்டை அறுத்தவர்க்கு
மாசத்தான் சோதிமணி மண்டலத்தான்-நேசத்தான்
பொய்யர்க்குப் பொய்யன் பொருந்தி உளந்தோறும்
மெய்யர்க்கு மெய்யாய் வெளிநின்றோன்-ஐயன்
உருவும் அருவும் ஒளியும் வெளியும்
கருவும் கடந்தன மாயன்-குருவாகித்
இடா பிங்களா இரண்டு நாடிகளிலும் சுழுமுனையிலும் எட்டாதபடி மூலாதாரத்தில் திருவடி கொண்டவன். காளை வாகனத்தில் ஏறும் குடிலை-நாதம் இருக்கும் பராசக்தி வீட்டில் தனியானவனாய் பிறப்பும் இறப்பும் இன்றி இருப்பவன். குறுகிய வடிவமும் விசுவாசமாகிய பெரிய வடிவமும் சிவப்பு கருப்பு நிறவடிவமும் குட்டை நெட்டை உயரம் என்ற பல வற்றில் தனக்குரியது எது எனக் கூற இயலாதவன், பக்தியாகிய பாசம் உடையவன், உலகினர் பாசக்கட்டை அவிழ்த்து மாசின்றி செய்பவன், சோதியான மாணிக்க மண்டலம் உடையவன். பொய்யர்க்கு பொய்யாக இருந்து உள்ளங்கள் யாவற்றிலும் மெய்யுடையார்க்கு மெய்யாய் இருந்து வெளியில் நிற்பவன். உரு அரு ஓலி வெளி ஆதாரமாகிய கரு எல்லாம் கடந்து கனமாய் உள்ள மாயமானவன்.
தோத்திப் பழவடியார் சூழ்வினையை நீக்கியுரு
மாத்தித் தனதுவசம் ஆக்கியே-சாத்தரிய
மானிடச் சட்டை வடிவெடுத்த மாயோகி
யானிடப முந்தும் அருள் ஆனந்தன்-தேனடர்ந்த
செங்கமலத் தோற்கு அரிய தேவன் அடியவர்கள்
அங்கமலத் தேயுறையும் ஆனந்தன்-எங்கள்குரு
நேசிக்கும் அன்பர்துயர் நீக்கி நிலைபெறவே
யாசிக்கும் எங்கள் குரு ஆனந்தன்-பூசிக்கும்
பொன்மலைக்கும் வெள்ளிப் பொருப்புக்கும் பொற்புடைய
கன்மலைக்குந் தானே கடவுளாய்-பன்மலைக்கும்
எட்டாச் சிகரம் எழுத்துக் கொழுந்தோட
மட்டமான ஓங்கார வன்மலையான்-கட்டாகத்
பழைய அடியார்களின் வினைகளை நீக்கி அவர்கள் துன்ப உருவை மாற்றித் தன்வசம் ஆக்குபவன், மானிட உடம்பாகிய குரு வடிவு தாங்கிய பெரும் யோகியாவான். அவனை நினைக்கும்போது முன்னதாக நந்தி அருள் கிடைக்கும். அவன் ஆனந்தம் தரும் குருவாவான். பிரமன் முதலிய தேவர்களுக்கு அரியவன், அடியவர் உள்ளத் தாமரையில் வாழும் இன்ப வடிவினன். அன்பு கொள்வார் துயரத்தை நீக்கி நிலையாகச் செய்யும் எங்கள் குருவாகிய ஆனந்தன். பொன் மலையாகவும் வெள்ளிமலையாகவும் காட்சி தரும் கைலை மலை முதலிய பலமலைகளிலும் வாழும் கடவுள். மலைகளில் எட்ட முடியாத நாதம் எழுந்து தொடரும்படியான ஓங்காரமாகிய வலிய மலையான்.
தேடும் அடியார்கள் சின்னம் துகளறவே
ஆடுஞ் சிவகருணை ஆற்றினான்-நாடுதவம்
பண்ணும் அடியார் பழவினைபோய்ப் பாதமலர்
நண்ணும் மொழியிற் பேரின்பம் நாட்டினான்-எண்ணும்நிறை
கற்புடையான் என்னக் கலங்காத நெஞ்சுகொண்ட
பொற்புடைய காயா புரிநகரான்-அற்பவிசை
வண்டு தொடாமல் மது ஒழுகி வாய்ந்தாறைக்
கொண்டு மணத்த குணமலையான்-துண்டத்
தரமே கரமாய் ஒருநாளும் ஓயாச்
சரமே முழங்கும் தவத்தோன்-கரமெடுக்கும்
தொண்டர் பலபகைச் சூறைகொள வேணும் எனக்
கொண்டதவ வேடக் கொடியினான்-சண்டமிகும்
தேடிடும் அடியார்கள் மனத்தில் கருதிய வடிவுகள் நீங்கிடத்தானே நடனமாடிக் கருணை புரிபவன். தவம் செய்வோரின் பழைய வினைகள் போய் அவன் பாதமலரில் இன்பம் அடையுமாறு செய்வான். நினைப்பதால் கிடைப்பது எனத் தவறாத நிலையை உடையவன், கலக்கம் தோன்றாத நெஞ்சுடையான், பொலிவுடைய காயாம்பூ போலும் நிறமுடைய நகரில் உள்ளவன். வண்டுகள் மொய்க்காததால் தானே தேன் வெளிப்பட்டு ஆறு தாமரைகளையும் மலர்ந்து மணம் வீசச் செய்பவன். தான் எங்கும் விட்டுவிட்டுத் தோன்றுவதால் என்றும் ஓயாது சஞ்சரிக்கும் தவமானவன். தொண்டர்கள் தம் பகையை நீக்குமாறு வேண்ட தவ வேடத்தையே கொடியாகக் கொண்டவன்.
சமையப் பகை துடைத்துச் சாதிமுறை எல்லாம்
குமைய மிதித்துக் குளப்பி-அமையாத
ஆணவத்தை வேரோடு அறுத்து விழுத்தாட்டி
நாணமுற்ற பாகம் நறுக்கியே-காணத்
தொடர்ந்த கிளைநிகழச் சூரைபட வீசி
அடர்ந்தமக வாகைக்கு அடங்காப்-படர்ந்ததெரு
வீதியும் அம்பலமும் மிக்கதொரு சாதிகட்குப்
பூதிப் பொடி அணிந்து பொய்மிதித்துக்-காதிச்
சினக்குறும்பை வாரிச் சிதறித் திரட்டி
மனக்குறும்பைப் பற்றி வளைத்து-உனக்கென்
ஓது குறும்பை உழக்கி எமராசன்
தூதனைப் பாய்ந்து துரத்தியே-தாது செறி
பல சமயங்களின் பகைமையை நீக்கிச் சாதி முறைகளை எல்லாம் மிதித்துச் சமம் செய்து, ஆணவத்தை வேரோடு அறுத்து விழுதுபடாது பாகங்களைத் துண்டித்தவன். தொடர்ந்த இடமெல்லாம் ஆணவத்தின் கிளைகளை வெளிப்பட வீசி வாகை பெற வைப்பான். வீதிகளிலும் அம்பலத்திலும் நிறைந்த பல சாதியர்க்கும் விபூதி அணிந்து பொய்ய நீக்கியவன். கொடிய குணமாகிய சினத்தின் பற்றை அறுத்து மனத்தின் கெட்ட செய்கைகளை முழுதும் வளைத்து நீக்கி, எல்லாக் குணக் கேடுகளையும் நீக்கி எமனின் தூதனை உயிர் கவராமல் துரத்தியவன்.
அஞ்ஞான மோகம் அறுக்கும் அனுபோக
மெய்ஞ்ஞான மோனமத வேளாத்தான்- பைநாகம்
நெட்டுடலை மாறி நெருக்கிப் பரிபடுத்திக் 
கட்டும் இசைக்கும் கடிவாளந்-தொட்டுத்
திசைவாயு என்னுஞ் சின்னூல் அகப்பட்டுக்
குசையால் இறுக்கிக் குணப்படுத்தி-அசையா
மனம் என்னுங் கல்லணையை வைத்திறுக்கி வாய்ந்த 
சினமென்னும் அங்கவடி சேர்த்துக்-கனமான
நாகபந்தஞ்சாரி நடைதுலுக்குத் தூவான
மாகமுற விட்டுள்ளடக்கிய-சோகப்
புரியட்ட காயப் பொருப்பைத் தகர்த்துச்
சரியட்ட ஐம்பொறியைத்தாண்டித்-துரியத்தில்
அறியாமையாகிய மோகத்தை அறுக்கும் அனுபோகத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் மவுனத்தையும் மேற்கொண்டு மன்மதனை வென்றவன். உடலை நெருக்கிப் பரிபக்குவம் செய்து வைக்கும் நாதத்திற்குக் கடிவாளமாய் இருப்பவன். உடலின் எல்லாப் பக்கங்களிலும் பரவும் வாயுவைச் சிறிய சொல்லால் பிடித்து அகப்படுத்திச் சுருதியோட்டும் இசையால் இறுக்கி குணம் செய்பவன். மனம் எனும் கல்லணையைக் கட்டுப்படுத்திக் கோபம் என்பதைத் தன் திருவடியில் மிதித்துள்ளவன். நாகபந்தத்தைச் சாரியாக தன் மார்பில் வரச் செய்துள்ளவன். புரியட்டமாகிய எட்டு பொருள்களால் ஆன உடம்பை கட்டுப்படுத்தியவன்.
ஓடிவிந்து நாதமெனும் உட்கோட்டை யும்கூத்து 
வாடியிடும்நாடி வரம்பு அழித்து-ஆடியிடும்
தொண்டுபரி அன்பர் தொடர் நரகில் வீழாமல்
மண்டுசினம் கொண்டெழுந்த வாசியான்கண்டுதொழும்
தன்னாணை தானே தனக்காணை யாவதன்றிப்
பின்னாணை இல்லாத பெற்றியான்-எந்நாளும்
மாறாத கீர்த்திமது மாலையான் வாய்திறந்து
சீறாத மோனச் சிவயோகி-நேராக
ஆண்டகுரு சிற்றம் பலவன் அடி அருளும்
வேண்டி வளர்த்த இருபதத்தான்-பூண்டசிவ
வேடந்தான் ஓங்கி விளங்கும் செழுங்கமல 
பீடந்தான் ஞானப் பிரகாசன்-ஆடில்
உடம்பினுள் நாதம், விந்து-களையும் அவை கூத்தாடும் நாடிகளின் எல்லையையும் அழித்து, தொண்டர்கள் தொடரும் நரகில் சேராமல் அவர்கள் கோபத்தை தன் சினத்தால் மறித்த பிராணாயாமத்தான். அவன் ஆணையே அவனுக்குண்டு, வேறு ஆணையோ விதியோ இல்லாத தன்மையன். மாறாத புகழ் உடையவன், தேனமுத மாலையான், வாய் திறந்து யாரையும் சினக்காத மோனமுடைய சிவ யோகி. நேரில் ஆண்டு கொண்ட குரு, சிற்றம்பலம் உடையவன், அருள் தரும் திருவடியான். சிவ வேடம் கொண்டவன், தாமரையிலிருக்கும் பிரமனின் பீடத்தை கொண்டவன், தெளிவான ஞானம் உடையவன்.
பரியான் உரியான் பசியான் பொசியான்
பெரியான் அரியான்பேர் இல்லான்-துரியா
தீதம் கடந்து திகழ் அம்பரம் கடந்து
போதம் கடந்து நின்ற பொற்பதத்தான்-சீதம்
கருணை ஆனந்தமுனி கண்டுதொழ வந்த 
வருணன் ஆனந்த மழைமேகம்-அருணப்
பிரகாசம் கொண்டுநின்ற பேரொளிபோல் மாயைப்
பிரகாசம் மாற்றும் பெருமையான்-இறவாத
மெய்ப்பொருளைக் காட்டி விரும்பும் அடியாரைக்
கைப்பொருளாய்க் கொண்ட கருணையான்-தூய்க்கும்
உடல்பொருள் ஆவி யுதகத்தாற் கொண்டு
சடவினையை மாற்றும் சமனன்-இடைபிங்
பரிந்து வருதலோ உரியவனாகக் காட்டுவதோ பசிப்பதோ உண்பதோ இல்லாத அவன் பெரியவனோ அரியவனோ ஆகமாட்டான். ஒரு பெயரும் இலாதவன். துரியாதீதம் கடந்து திகழும் பரம் பொருளையும் கடந்து ஞானத்தையும் கடந்து நிற்கும் பொன் அடிகள் உடையவன். கருணையும் ஆனந்தமும் கொண்ட முனிவன், யாவரும் கண்டு தொழ வந்த வருணன், ஆனந்த மழை பொழியும் மேகம். அருணனின் பிரகாசத்தைக் கொண்டு நிற்கும் பேரொளிபோல் மாயையை மாற்றும் பெருமை உடையவன். என்றும் அழியாத மெய்ப் பொருளைக் காட்டித் தன்னை விரும்பும் அடியவர்களைத் தன்கைப் பொருளாகக் கொண்ட கருணையுடையவன். உடல் பொருள் ஆவி யாவும் தன் கலையால் கொண்டு சடமாகிய இந்த வினையை மாற்றிச் சமம் செய்பவன்.
கலைசுழினைக்கு எட்டாத காட்சியான் காமம்
கொலைகளவு தீர்த்த குடோரி-அலையாமல்
ஆட்கொண்ட சித்தம் பலவன் அடிக்கமலத்து
ஆட்கொண்ட தொண்டர் தனக்கு அடியேன் ஆட்கொண்ட
தூர்த்தன் இவன் என்பர் சொல்லத் துயருஎழுந்து
பார்த்தவிடம் எல்லாம் பகையாகி-வேர்த்துக்
கலங்கி விதிர்விதிர்த்துக் கண்ணீர் ஒழுக
மலங்கிக் குருநாட்டில் வந்தேன்-துலங்குமெனக்
காயா புரிநகரைக் கண்ணுற்றேன் அவ்வூரில்
போய் ஆதரித்துப் பொருந்தினேன்-மாயாத
மாது சிவானந்த வல்லி எனப் பேரிட்டாள்
ஓதுதிரி கோணவல்லி யூர்தான்-ஆதரவாய்
கலைகொண்ட சுழுமுனைக்கும் எட்டாத காட்சியினன், காமம், கொலை, களவு தீர்த்த குடோரி- மருந்து. என்னை ஆட்கொண்ட சிற்றம்பலவனின் திருவடியில் ஆட்கொள்ளப்பட்ட தொண்டர்களுக்கு அடியவன். காமம் கொண்டவன் எனப் பலர் பேசத் துயரம் அடைந்து பார்க்குமிடம் எங்கும் பகையாகி, வியர்த்து கலக்கமடைந்து நடுங்கிக் கண்ணீர் வழிந்தோடக் கலக்க முற்று குரு நாட்டிற்கு வந்தேன். விளக்கமுறும் காயாபுரி நகரைக் கண்டேன், இங்கு ஆதிக்கம் பெற்று பொருந்தினேன். சிவானந்தவல்லி என்ற பெயர் பெற்றவளால் வெளிப்பட்டேன். பலர் புகழும் திரிகோணவல்லி எனும் ஊர் மக்களால் ஆதரிக்கப்பட்டேன்.
கொஞ்சிவளர்த்த குடிலை மகள்தனையே
மிஞ்சுசிலம் பத்தொழிற்கு விட்டாளே-ரஞ்சிதமாய்
கால்மாறியாடக் காலாதி கரணவித 
மேல்மாறிச் சுத்தி விளையாட-நூல்மாறிக்
கைலாகு பாயக் கலந்து பலசமய
மெய்வாகு தாவி அதன் மேல்மிதிக்கப்-பையப்
பரதத் தொழிலும் பலகோடி வேத 
கரதத் தொழிலும் தொகுத்து-விரதவுறை 
தென்னூல் வடநூலைத் தேர்ந்து பலகோடி
முந்நூலுந் தானே மொழிந்திட்டாள்-இந்நிலத்தில்
ஆடப் பதுமைதனை ஆட்டிவிக்க அப்பதுமை
பாடத் தொழிலும் பலகற்றாள்-நாடறிந்த
குடிலை- ஓம் எனும் பிராணவ மந்திரம் தனை நாதத்தொழிலுக்கு அவள் அனுப்பினாள். கால் மாறி-இடது வலது என பிராணயாமம் செய்ததனால் கரணங்களில் உள்ள கலைகள் மேல் உடம்பில் சுற்றி விளையாடின. பழகுவதற்கு எளிதானதில் கலந்து பல சமய மெய்களும் தாவிக் கடந்து அவற்றை நீக்கி, நடனமும் பல கோடி வேத மந்திரத் தொழிலும் தொகுத்து விரித்து, தொன்மையான வடநூலைத் தேர்வு செய்து முன்னொர் செய்த நூல் நூலாகத் தானே வெளிப்படுத்தினான். பொம்மையை ஆடுமாறு ஆட்டுவிக்க அது பாடும் தொழிலும் பலவாகக் கற்றது.
வம்பி திரிகோணவல்லி வடகிரியைக்
கெம்பூரம் எல்லாங் கிரகித்தேன்-அம்புவியில்
மின்னே எரிந்தெழுந்த மேகம்போல் மெய்குளிர்ந்து
தன்னை அறிந்து தளதளத்தாள்-பொன்னனையாள்
பக்குவத்தை நோக்கிமுகம் பார்த்துப் பரிமளிக்க
முக்குணமும் கற்ற முது கிழவி-தொக்கு அறுத்து
மின்னே அமுதம் விளைந்த மனக்கமலப்
பொன்னே உருதியுள்ள புத்திகேள்-பன்னரிய
வேத புராணர் வெறும்பிலிக்காய் உன்கமலப்
பாதம் பணிவர்முகம் பாராதே-நாதத்
துரியமணி வாசலிலே தோன்றிமுகம் சற்றே
தெரியநின்று பின்னை உள்ளேசென்று-அரிதாகச்
திரிகோண வல்லியானவள் வடக்கு மலையைப்போல் கம்பீரமாய் இருந்ததைக் கிரகித்தேன். உலகில் மின்னல் தோன்றிய மேகம் போல் மெய் குளிர்ந்து தன்னை அறிந்து தளதளத்தான். பொன்னை ஒத்த அவள் பக்குவத்தைப் பார்த்து முகத்தின் வழியே புகட்டினாள். அவள் முக்குணமும் கொண்ட வாலைக்கிழவி. மின்னல் போன்றவளே அமுதம் விளைந்த மனமாகிய தாமரையில் உள்ள திருமகளே உருதி கொண்ட என கருத்தைக் கேள். வேதம் புராண்ம் மட்டும் பயின்றவர்கள் பொய்யாக உன் திருவடிகளைப் பணிவர், அவர்களுக்கு அருள் செய்யாதே. துரிய நிலையின் தொடக்கத்தில் எதிர்ப்பட்டு சிறிதே முகம் தெரியுமாறு நின்று பிறகு உள்ளே யோகப் பயிற்சிக்காக செல்க.
சாற்றுஞ் சரியைச் சளுக்கர் உனைத்தழுவப்
போற்றுவார் அங்கவர்பின் போகாதே-ஏற்றும்
அவலக் கிரியை அசடர் உனைமேவக்
கவலைப் படுவார் கடத்திச்-சிவயோக
ஆதியர்கள் வந்துன் மலரடியைத் தெண்டனிட்டால்
பேதியாது உள்ளழைத்துப் பேசிக்கொள்-ஆதி
தவஞான மோனத் தனக்காரர் வந்தால்
அவமானம் பண்ணாது அழைத்துச்-சிவபொருளைத்
தேடாத மூடரிடம் சிக்காதே சிந்தையிலே
நாடாத வஞ்சரிடம் நத்தாதே-கோடாத
சாத்திரத் தூர்த்தர்தமைச் சாராதே தர்க்கமிடும்
கோத்திரப் பஞ்சியரைக் கூடாதே-சூத்திரப்
சரியை மட்டும் பழகியவர்கள் உன்னைப் பற்றிப் புகழ்வார்கள். அவர் பின் செல்லாதே. கிரியைப் பயின்றவர்கள் உன்னை அடையக் கவலைப்படுவர். போகாதே, சிவயோகம் பயின்றவர்கள் உன் மலரடியைத் தொழுதால் அவர்களை அந்நியமாக்காமல் உள்ளே அழைத்துப் பேசிக்கொள். தவஞானப் பயிற்சி கொண்டவர்கள் வந்தால் அவமானம் செய்யாமல் அவர்களை ஏற்றுக் கொள். சிவமாகிய பொருளைத் தேடாத மூடரிடம் சிக்காதே. சிந்தையில் இதை நாடாத வஞ்சரிடம் பரிவு கொள்ளாதே. சாத்திரம் மட்டும் படித்து வாதிடுவாரோடு சேராதே. தர்க்கம் செய்யும் குலகோத்திர பேதம் உடையவருடன் கூடாதே.
பொய்வீணர் ஆசை பொருந்தாதே புத்தகப் பேய்
மெய்வீணர் ஆசை விரும்பாதே-கையோகக்
காமத்துக்கு ஆன கலாதிவேள் நூல் கற்ற 
வாமத்தார் பால் மனது வையாதே-நாமமிட்டுப்
பஞ்சரிக்கும் பாசிப் பதப்பிலுக்கர் வந்தக்கால் 
நெஞ்செரியத் தள்ளிவிடு நில்லாமல்
சித்தக் கருவியிடம் செல்லாதே சீலமதக்
கொத்தவன் தன்னாசை குறியாதே-பற்றற்ற
மோனக் குறுப்பரசர் மோகித்தால் நீ அவருக்கு
ஆனபடியே அழைத்து விடு-ஞானப் 
பொருள்தேடும் வல்லாரைப் போற்றிப் பொருத்தி
அருளோடு நீ சென்றிடு.
பொய் வீணர்கள் ஆசையை ஏற்காதே. புத்தகப் பேய் ஆகிய மெய் வீணரின் ஆசையை விரும்பாதே. காமத்துக்கு ஆளாகி மன்மதன் நூல் கற்ற வாமாச்சரர் பக்கம் மனம் வைக்காதே. வெறும் சொற்களுக்கு மட்டும் ஆதரவு தந்துவிடும் மனிதர் வந்தால் அவர்களுக்கும் இடம் தராதே. சித்தமாகிய கருவியிடம் செல்லாதே. மதவாதிகளின் ஆசைக்கு அடிபணியாதே. மவுனம் பயின்றவர்கள் விரும்பினால் அவர்களை உன்பக்கம் அழைத்திடுக. ஞானப் பொருளைத் தேடுவோரை நீயே அவர்களோடு சேர்ந்து அருளுடன் கொள்க.
கடேந்திர நாதர் (எ) விளையாட்டுச் சித்தர்:-
ஆதிசிவ மானகுரு விளையாட்டை-யான்
அறிந்துரைக்க வல்லவனோ விளையாட்டை
சோதிமய மானசக்தி யென்னாத்தாள்-சுய
சொரூபத்து அடங்கி நின்ற விளையாட்டை
பார்தனி லுள்ளவர்க்கு விளையாட்டாய்-ஞானம்
பற்றும்வழி யின்னதெனச் சொன்னதினால்
சீர்பெறுஞ் சித்தர்களு மென்னை விளையாட்டுச்
சித்தனென்றே அழைத்தார்க ளிவ்வுலகில்.
இகபர மிரண்டுக்குஞ் சரியாகும்-இதை
இன்பமுடன் சொல்லுகிறேன் தெம்புடனே
சகலமும் விளையாட்டாய் பிரமமுனி-முன்பு
சாற்றினார் எந்தனுக்கு ஈது உண்மையுடன்
நானென்று சொல்வதும் விளையாட்டே-இந்த
நானிலத்து இருப்பதுவும் விளையாட்டே
தானென்று அறிவதும் விளையாட்டே-பெற்ற
தாயென்று உரைப்பதுவும் 
ஆதிசிவமாகிய குருவின் விளையாட்டை என்னால் அறிந்து சொல்லமுடியாது. சோதிமயமான சக்தியாம் என் தாயின் சொரூபத்தில் அடங்கி நின்ற விளையாட்டை. உலகில் உல்லவர்க்கு விளையாட்டாகப் புரிய வைக்கவும் ஞானம் பெறும் வழியைச் சொல்ல முயன்றதால் எல்லோரும் என்னை விளையாட்டுச் சித்தர் என்பர். இகம் பரம் என்ற இரண்டு வாழ்வுக்கும் சரியானதை முன்பு பிரமமுனி எனக்குக் கூறியதை மகிழ்ச்சியுடன் சொல்கிறேன். நான் சொல்வதும் உலகில் இருப்பதும் தன்னை அறிவதும் தாயை உணர்வதும் எல்லாம் விளையாட்டே.
தாய்தந்தை கூடுவதும் விளையாட்டே-பூவில் 
தநயனாய் வந்ததுவும் விளையாட்டே.
மாயையாய் வளர்ந்ததும் விளையாட்டே-பத்து
வயது தெரிந்ததுவும் விளையாட்டே
பெற்றபிள்ளை என்றதுவும் விளையாட்டே-தந்தை
பேரிட் டழைத்ததுவும் விளையாட்டே
மற்றதை யுணர்வதும் விளையாட்டே-இந்த
வையகத்து இருப்பதுவும் விளையாட்டே.
பெண்டுபிள்ளை யென்பதுவும் விளையாட்டே-எங்கும்
பேரோங்க வாழ்வதும் விளையாட்டே
கண்டு பொருள் தேடுவதும் விளையாட்டே- பணம்
காசுவட்டி போடுவதும் விளையாட்டே.
தாயும் தந்தையும் கூடி மகிழ்வதும் வயிற்றில் மகனாக வந்ததும் பிறகு வளர்ந்ததும் பத்து வயதில் பலவும் தெரிந்ததவும் எல்லாம் விளையாட்டே. தன்மகன் என அறிவதும் மகனுக்குத் தந்தை பெயரிட்டு அழைப்பதும் மற்றச் செய்திகள் உணர்வதும் இவ்வுலகில் வாழ்வதும் எல்லாம் விளையாட்டே. மனைவி மக்களோடு எங்கும் புகழ் பெற வாழ்வதும் பொருள் தேடுவதும் காசு வட்டியாக வளர்வதும் எல்லாம் விளையாட்டே. மாடி வீடு மனைகள் வீடு, வாசல் என்மனைவி, மக்கள் என்பதும் தேடிய பொருளூம் உலகில் திரிவதும் எல்லாம் விளையாட்டே.
ஆடுமாடு தேடுவதும் விளையாட்டே-சதுர்வேத
ஆகமநூ லாய்வதுவும் விளையாட்டே
கூடுவிட்டுப் போகுமுயிர் விளையாட்டே-உற்றார்
கூடி மகிழப் பேசுவதும் விளையாட்டே.
பிணமாயிருப்பதுவும் விளையாட்டே-அதைப்
பெற்றோர்கண் டழுவதும் விளையாட்டே
குணமாய்க் கழுவியதும் விளையாட்டே-ஈமங்
கொண்டுபோய்ச் சுட்டதுவும் விளையாட்டே
செத்தோர்க்கு அழுவதுவும் விளையாட்டே-சுடலை
சேரும்வரை அழுவதும் விளையாட்டே
மெத்தஞானம் பேசுவதுவும் விளையாட்டே-குளித்து
வீடுவந்து மறப்பதும் விளையாட்டே.
வீணாள் கழிவதும் விளையாட்டே-சுடலை
சேரும்வரை அழுவதும் விளையாட்டே
மெத்தஞானம் பேசுவதும் விளையாட்டே- குளித்து
வீடுவந்து மறப்பதுவும் விளையாட்டே.
ஆடு மாடுகள் பெறுவதும் நான்கு வேதங்களையும் ஆகமங்களையும் ஆய்வதும் உடலை விட்டு உயிர் போவதும் உற்றவர்கள் கூடி மகிழப் பேசுவதும் எல்லாம் விளையாட்டே. பிணமாய் இருப்பதும் அது கண்டு பெற்றோர் அழுவதும் அதைக் குளிப்பாட்டி ஈமத்தில் சென்று அடக்கம் செய்வதும் விளையாட்டே. செத்தவர்க்காக அழுவதும், சுடுகாடு போகும்வரை அழுவதும் ஞானம் பற்றிப் பேசுவதும் அடக்கம் செய்து குளித்து வீடு வந்ததும் அவரையும் தமக்கும் இது நிகழும் என்பதையும் மறப்பதும் விளையாட்டே. வீணாக வாழ்நாள் கழிவதும், சுடலை சேரும்வரை துக்கமடைவதும் மிகவும் ஞானம் பற்றிப் பேசுவதும் குளித்து வீடு வந்ததும் நிலையாத வாழ்வை மறப்பதுவும் எல்லாம் விளையாட்டே.
கனவுநினைவு என்பதுவும் விளையாட்டே-இக்
காசினியோர் உழல்வதும் விளையாட்டே.
நினைவாய்ச்செய் வஞ்சகமும் விளையாட்டே-மிக்க
நிதிநிலம் பெண்ணென்பதும் விளையாட்டே.
பெண்ணாசை யென்பதுவும் விளையாட்டே-அவர்
பின்னால் திரிவதும் விளையாட்டே.
மண்ணாசை யென்பதுவும் விளையாட்டே-நல்ல
வயல்தோட்டம் புஞ்சையெல்லாம் விளையாட்டே.
சீராக வாழ்வதுவும் விளையாட்டே-செம்பொன்
சேகரித்து வைப்பதுவும் விளையாட்டே
நேராய்ப்பொய் சொல்லுவதும் விளையாட்டே-நெஞ்சில்
நினைக்காமற் செய்வதும் விளையாட்டே
பந்துசனம் என்பதெல்லாம் விளையாட்டே-லோகப்
பற்றுடனே வாழ்வதும் விளையாட்டே
சொந்த நிதி தேடுவதும் விளையாட்டே-இதைச்
சொப்பனம் போலெண்ணாததும் விளையாட்டே
கனவு நனவு என்பதுவும் உலகினர் துன்பப்படுவதும் நினைத்துச் செய்யும் வஞ்சகமும் பணம் நிலம் பெண் என்பதுவும் விளையாட்டே. காமமும் பெண்கள் பின் திரிவதும் மன்னாசை என்பதும், வயல் தோட்டம் புஞ்சை என்பனவும் எல்லாம் விளையாட்டே. சீராக வாழ்வதும், பொன் சேர்ப்பதும், பொய் புகல்வதும், நினைக்காமல் ஒரு செயலைச் செய்வதும் விளையாட்டே. உறவினரென்பதும், உலகப் பற்றுடன் வாழ்வதும் சொந்தச் செல்வம் சேர்ப்பதும் இவற்றை ஒரு கனவாக எண்ணாததும் எல்லாம் விளையாட்டே.
யோகம்வந்து மகிழ்வதும் விளையாட்டே-அதன்
உண்மைதெரி யாததுவும் விளையாட்டே
சாகசஞ் செய்வதுவும் விளையாட்டே-ஒருவர்
தஞ்சமென்று நினைப்பதுவும் விளையாட்டே
கோடிபணந் தேடுவதும் விளையாட்டே-அதைக்
குழிவெட்டிப் புதைப்பதுவும் விளையாட்டே
தேடியலைவதும் விளையாட்டே-மனந்
தேறுதலாய் திரிவதும் விளையாட்டே
கற்பனையுங் கபடமும் விளையாட்டே-அதைக்
காணாமல் மறைப்பதுவும் விளையாட்டே
சற்பங்கள் ஆட்டுவதும் விளையாட்டே-ஒரே
சாதனையாய்ப் பேசுவதும் விளையாட்டே
நம்பினோருக்கு ஆசைசொல்லல் விளையாட்டே-பின்பு
நட்டாற்றில் போக விடுதல் விளையாட்டே
கும்பிக்கு இரைதேடுதல் விளையாட்டே-கடன் 
கொடுத்தாரைக் கெடுத்தலும் விளையாட்டே.
யோகம் பயின்று மகிழ்வதும் அதன் உண்மைகள் தெரியாதிருப்பதும் அரிய செயல் செய்வதும் ஒருவரைத் தஞ்சமடைவதும் எல்லாம் விளையாட்டே. கோடிக்கணக்கில் பணத்தைப் புதைப்பதும் பிறகு அதைத் தேடியலைவதும் மனம் தெளிந்து திரிவதும் எல்லாம் விளையாட்டே. கற்பனையும் கபடமாக இருப்பதும் காணாது ஒன்றை மறைப்பதும் பாம்பைப் பிடிதாட்டுதலும், சாதனையாய் பேசுவதும் எல்லாம் விளையாட்டே. நம்பியவர்க்கு ஆசைவரப் பேசுதல் பிறகு நட்டாற்றில் விடுதல் வயிற்றுக்கு உணவு தேடல் கடன் கொடுத்தவரைக் கெடுத்தல் ஆகிய யாவும் விளையாட்டே.
இச்சையால் மயங்குவதும் விளையாட்டே-அதை
இய்ல்பாய் மதிப்பதுவும் விளையாட்டே
பிச்சையெடுத்து உண்பதுவும் விளையாட்டே-பொல்லாப் 
பேய்போ லலைவதும் விளையாட்டே
முத்தி யறியாததும் விளையாட்டே-மேலாம்
மோட்சங் கருதாததும் விளையாட்டே
புத்திகொள் ளாததுவும் விளையாட்டே-மனம்
பாழிற் செலுத்தினதும் விளையாட்டே.
கேடுவருவதுவும் விளையாட்டே-எதற்கும்
கெம்பீரம் பேசுவதும் விளையாட்டே
பாடு வருவதும் விளையாட்டே-மனப்
பற்றுதலாய் நிற்காததும் விளையாட்டே
ஆசையால் மயங்குவதும் அதைத் தம் இயல்பாக நினைப்பதும் பிச்சை எடுத்து உண்பதும் பேய் போல் அலைவதும் எல்லாம் விளையாட்டே. முத்தியை அறியாதிருப்பதும் மோட்சத்தை நினையாதிருப்பதும் பத்தி கொள்ளாததும் மனத்தைப் பாழான வழிகளில் செலுத்தியதும் எல்லாம் விளையாட்டே. கெடுதி வருவதும் எதற்கும் கலங்காது பேசுவதும் துன்பம் வருவதும் மனம் பற்றாமல் நிற்பதும் எல்லாம் விளையாட்டே. பந்த பாசத்தையும் ஊழ்வினையையும் போக்காததும் பெண்ணைப் பதுமையாய் ஆசையுடன் அழைப்பதும் நேசம் தேடுவதும் நிமிஷ நேரம் காணாது மறைவதும் எல்லாம் விளையாட்டே.
நித்திரையிற் சொக்குவதும் விளையாட்டே-அதில்
நினைவுதடு மாறுவதும் விளையாட்டே
சித்தியடையாததும் விளையாட்டே-ஞானம்
சிந்தியா திருப்பதும் விளையாட்டே
சொற்பனமுண்டாவதுவும் விளையாட்டே-மனம் 
சொக்கா திருப்பதுவும் விளையாட்டே
விற்பனங்கண்டறிவதும் விளையாட்டே-வந்த
விதமறி யாததுவும் விளையாட்டே
பகலிரவு என்பதுவும் விளையாட்டே-இகப்
பயனடைந்திருத்தலும் விளையாட்டே
சுகவாழ்விற் சிக்குவதும் விளையாட்டே-யோக
சாதன மறியாததும் விளையாட்டே
புத்திமானென்பதும் விளையாட்டே-இப்
பூதலத்தோர் ஏத்துவதும் விளையாட்டே
வெற்றியடைவதுவும் விளையாட்டே- நான்
வீரனென்று சொல்லுவதும் விளையாட்டே
நித்திரையில் மயங்குவதும் அப்போது நினைவு தடுமாறுவதும் சித்தி பெறாததும் சிந்திக்காமல் இருப்பதும் எல்லாம் விளையாட்டே. கனவு வருவதும், மனம் விரும்பாதிருப்பதும் திறங்கள் கண்டறிவதுவும், வந்த விதத்தை அறியாதிருப்பதுவும் விளையாட்டே. பகலும் இரவும் இவ்வுலக பயனை அடைந்திருப்பதுவும் உலக வாழ்வில் சிக்குவதும் யோகசாதனம் அறியாதிருப்பதும் எல்லாம் விளையாட்டே. அறிவுடையனாய் இருப்பதும் உலகினர் புகழ்வதும், வெற்றி பெறுவதும், தன்னை வீரன் என சொல்லிக் கொள்வதும் எல்லாம் விளையாட்டே.
தவநிலை தோணாததும் விளையாட்டே-ஞானத்
தத்துவந் தெரியாததும் விளையாட்டே
பவமது போக்காததும் விளையாட்டே-ஏக
பரவெளி காணாததும் விளையாட்டே
யோகந் தெரியாததும் விளையாட்டே-அதன்
உண்மைதனைக் காணாததும் விளையாட்டே
பாகம் அறியாததும் விளையாட்டே-இகப்
பற்றறுக்காது இருப்பதுவும் விளையாட்டே
பெரியோரைக் காணாததும் விளையாட்டே-கண்டு
பேரின்பஞ் சாராததும் விளையாட்டே
தெரியாது இருந்ததுவும் விளையாட்டே-சிவ
தேகநிலை பாராததும் விளையாட்டே
அஞ்ஞானம் உட் கொண்டதுவும் விளையாட்டே-பேர்
அறிவால் தெரியாததும் விளையாட்டே
மெய்ஞ்ஞானங் காணாததும் விளையாட்டே-இந்த 
மேதினியே போதுமெனல் விளையாட்டே
தவநிலையை அறிய முடியாததும் ஞானத்தத்துவம் தோன்றாததுவும் பிறப்பை மாற்றாததும் பரவெளியைக் காணாததும் விளையாட்டே. யோகத்தை தெரியாதிருப்பதும் அதன் உண்மையைக் காணாமல் இருப்பதும் தமக்குச் சொந்தமானது எது என்று அறியாததும் இவ்வுலகப்பற்றை நீக்காதிருப்பதும் விளையாட்டே. பெரியோரைச் சேராததும் அதனால் பேரின்பம் அடையாததும், எதுவும் தெரியாமலிருப்பதுவும், சிவனின் தேகத்தன்னைப் பாராதிருப்பதும் விளையாட்டே. அறியாமையை வளர்த்ததும் பேரறிவால் பயனை அடைவது தெரியாதிருத்தலும் மெய்ஞ்ஞானம் காணாமல் இருப்பதும் இவ்வுலகமே போதுமெனத் தெரிவதும் விளையாட்டே.
ஆதியான் மூலத்தில் அமர்ந்திருந்த சோதிதான்
வாதியானோன் கண்டறிய வாய்க்குமிது மந்திரம்
சுக்குச்சுக்கு வெள்ளைக்கல் சுண்ணாம்பு வெள்ளைக்கல்
காசுக்கு இரண்டுகல் கருணைக்கிழங்கடா கருணைக்கிழங்கடா.
குடுகுடு ஆனைக்கல் கோமானுக்கும் ஆனைக்கல்
தேசதேச வாசக்கல் தெக்கு நல்ல சீமைக்கல்
பக்குவம் ஆகாமுன் பார்தெடுத்துக் கொண்டபின்
சுக்குச்சுண்னாம்புக்கல் சோதிக்கல் சோதிக்கல்.
ஆதியாகிய மூலாதாரத்தில்; சோதியாக அமர்ந்திருந்ததை கண்டு அறியவைக்கும் மந்திரம். சுக்கு வெள்ளைக்கல் சுண்ணாம்புக்கல் இவை மந்திரமல்ல. மூலாதாரத்தை உணர்ந்தால் இவைகூட மந்திரமாகும். கடவுள் கருணையால் அடியில் உள்ளதை அறிக (கருணைக் கிழங்கு). சுண்ணாம்பு பக்குவம் ஆகாதபோது எடுத்தாலும் அது சோதிக்கல் ஆவது மூலாதாரத்தை அறியும் சிறப்பை அறிவிக்கும்.
வாகடதோகட மதுரக்கல் வைப்புச் சுண்ணாம்புக்கல்
பாகுடன் செய்தால் பசுமைக்கல் பசுமைக்கல்
மேலாஞ்சாதி பாரடா வெட்டவெளியைத் தேரடா
நாலாஞ்சாதி ஆகாது நமக்குப் பருப்பு வேகாது
தாய்போலு மாகுமே தங்கைபோலுமாகுமே
சேய்போலிமாகுமே திரும்பப் பெண்டீராகுமே
வாலையான சிறுபெண்ணாம் வயதுவந்த தோர்பெண்ணாம்
பாலைமங்கை தானடா பருவம்வந்த வழலைதான்
மதுரமான கல்லைப் பாசத்துடன் செய்தால் பசுமைக் கல்லாகும். இப்படி மூலம் உணர்ந்து பக்குவம் கண்டால் சித்தியாகும். மேல் பகுதியைப்பார். வெட்டவெளியை ஆய்ந்திடு. சாதி வேறுபாடு கருதினால் சித்தியடைய முடியாது. பெண்டிர் தாய் போன்றும் தங்கை போன்றும் குழந்தை போன்றும் நினைக்கத் தக்கவர். வாலை என்ற சிறு பெண் வயதுக்கு வந்த கன்னிப்பெண். மங்கைப் பருவம் உள்ளவளாம். பருவம் கண்டவளாம், வாழலை-பாதரசம்.
வழலை வாங்கிக் கொள்ளடா மருந்துசூடன் போடடா
குழவியர்க்கு உணர்வதாகக் கொடுத்ததை நீ வங்கடா
வாங்கின் மூலத்தையே மருந்துபோட்டு வைப்பையே
தூங்கிடாமற் சேநீர்கொண்டு சுருக்கினில் உப்பு ஆக்கடா
நீறுநீரெடுத்துமே இரண்டையும் ஒன்று ஆக்கியே
சீறுடனே காய்ச்சியே செய்ததொரு உப்படா
கோவனூர் தன்னிலே கொழுந்துபோல் முளைத்ததை
ஏகாலிகள் போகுமுன் எடுத்துவந்து காய்ச்சடா.
வழலையுடன் சூடத்தை மருந்தாகச் சேர். சிறு பிள்ளைக்கும் உணர்த்து. மூலம்- கிழங்கு. சேநீர் போடுதல்- பக்குவமாக்கும் முறை. மூலாதாரத்தை அறிந்து மந்திரம் சொல்லிப் பற்று நீங்கித் தியானிப்பதே சேநீர் சேர்ப்பதாகும். இதனால் யோகம் சித்துக்கும். நீறிய நீர்- ஆவியாக்கியது. அதையும் நீரையும் இனைத்து மீண்டும் காய்ச்சி அதில் உள்ள உப்பை எடுத்தல் போன்று யோக முயற்சியையும் செய்க. கோவனூரில் கொழுந்தாக முளைத்த மூலிகையைச் சலவை செய்வோர் எடுத்துப்போகுமுன் கொண்டுவந்து காய்ச்சி புடம் போடுவதுபோல் யோக முயற்சியையும் செய்க.
காய்ச்சியும் பெருத்துநீ கஞ்சிஉப்பு சேர்த்து நீ
மாட்சிமையாய் மல்லிகை மலர்ந்தது போல் ஆமடா
ஆதியுப்பும் அந்தவுப்பும் இந்துவுப் பெடுத்து நீ
சோதியுப்பும் ஆச்சடா சுருக்கமிது தானடா
கண்டறிந்து கொள்ளடா கணக்கறிந்து விள்ளடா
கொண்டறிந்து தள்ளட குருவறிந்து கொள்ளடா
சூதங்கட்ட லாகுமே சொர்ண உப்பு மாகுமே
வாதம் வாத மென்றறிந்த வாதியே நீ பாரடா.
விட்ட குறையானவன் மேதினியில் வந்தவன்
தொட்டகுறைக் காரனுக்குத் தோற்றுமே மெய்ஞ்ஞானமே.
காய்ச்சியபின் உப்பும் சேர்த்துவிட்டால் மல்லிகை போல் வெளுக்கும். ஆதி உப்பும்- மூலாதாரம், அந்த உப்பும்-தலைமேல் உள்ளது, எடுத்து இந்து உப்பும்-மார்பு நடுப்பகுதி எடுத்து முப்பூ செய்க, இனைத்தால் சோதி தெரியும். உனக்குள் எல்லாம் கண்டு கொள் கணக்காய் எல்லாம் அறிந்து கொள். தேவையற்றதை வெளியே தள்ளுக. குருவை அறிந்து கொள்க. சூதம்-பாதரசத்தை காணலாம். தங்கம் போல் உப்பாகும். இரசவாதம் என அலைபவனே வந்து பாரும். விட்டகுறையால் உலகில் பிறந்தான். தொட்ட குறையால் (குருவின் பரிசம்) மெய்ஞ்ஞானம் வெளிப்பட்டது.
ஏகாந்தம் பழம்பழம் எழுத்தில்லாதவன் தலைச்சுமை
பெண்டில்லாதவன் பெருவழி பிள்ளையில்லாதவன் கைவீச்சு.
காய்த்தவாழை பூப்பூக்கும் காயாதவாழை தானுமில்லை
பாய்ச்சின பயறு தலையெடுக்கும் பாய்ச்சாத பயறு தானுமில்லை.
இறைத்தகிணறு தானூறும் இறையாக்கிணறு தானுமில்லை
விதைவிதைத்தால் முளைதேறும் விதையாநிலதி லொன்றுமில்லை
அழுதபிள்ளை பால்குடிக்கும் அழுகாபிள்ளைக்கு ஏதுமில்லை
உழுதநிலந்தான் பயிரேறும் உழுகாதநிலத்திலொன்றுமில்லை
ஆசையுளானுக்கு ரோசமில்லை ஆசையிலானுக்கு ஒன்றுமில்லை.
தனித்திருப்பதால் உருவாகும் பலனிது. மந்திர எழுத்தறியாதவன் தலையில் உள்ள சக்திகள் சுமையாகவே இருக்கும். பெண்ணாகிய வாலையைத் தொழாதவன் பெருவழி செல்வது பிள்ளை இல்லாதவன் கைவீசி நடந்தது போல் குறையாம். காய்க்கும் வாழைக்குத்தான் பூவுண்டு, காய்க்காத வாழைக்குப் பூவில்லை. நீர்பாய்ச்சினால் தெளித்த பயிறு முளைக்கும். இல்லாவிட்டால் இல்லாது போகும். இறைத்த கிணறு ஊறும். இறைக்காத கிணற்றில் நீர் ஊறாது. விதைத்த நிலத்திலேதான் முளை தோன்றும். விளைக்காத இடத்தில் முளை இல்லை. அழுத பிள்ளைக்குப் பால் கொடுப்பாள் தாய். அழாத பிள்ளைக்கு அது இல்லை. உழுத நிலத்தில்தான் பயிர் சிறக்கும். உழாத நிலத்தில் அது இல்லை. ஆசைப் பட்டவன் ரோசத்தைக் கொள்ளமாட்டான். ஆசையற்றவனுக்கோ ஒன்றுமில்லை.
புண்ணாக்குச் சித்தர்:-
தேவிமனோன்மணியாள் திருப்பாதம் காண என்று
தாவித் திறந்தேனே-ஞானம்மா சரணம் சரணம் என்றே.
அஞ்ஞானமும் கடந்து அறிவை மிகச்செலுத்தி
மெய்ஞ்ஞானம் கண்டு கொண்டால்-ஞானம்மா விலையில்லா ரத்தினமடி.
முட்டையினுள்ளே முழுக்குஞ்சு இருப்பதுபோல்
சட்டையாம் தேகத்துள்ளே-ஞானம்மா தான் உயிரும் நிற்பதடி
விட்டகுறை வாராமல் மெய்ஞ்ஞானம் தேராமல்
தொட்டகுறை ஆனதினால்-ஞானம்மா தோன்றுமெய்ஞ் ஞானமடி.
தம்முளம் அறியாமல் பரத்தைத் தெரியாமல்
சம்சாரம் மெய்யென்று-ஞானம்மா சாகரத்திலே உழல்வார்.
மனோன்மணியின் திருப்பாதம் அடைய வேண்டும் என்று சரணம் செய்வதால் உன் பாதங்க்ளையே விடாது பற்றிக்கொண்டு உய்வு பெற்றேன் ஞானம்மா. அறியாமையை நீக்கி அறிவைப் பயன்படுத்தி உண்மையறிவைக் கண்டு கொள்ளலாம். அது விலைமதிக்க முடியாத இரத்தினமாகும். முட்டையினுள் முழுவதுமாகிய குஞ்சு இருப்பது போல் சட்டை போன்ற இவ்வுடலுக்குள் உயிரும் உள்ளது. விட்டகுறை தொட்ட குறைகளால் தடைப்படாமல் மெய்யறிவைத் தேடினால் அது உறுதியாகக் கிடைக்கும். தமது மனத்தை அறியாமல் உள்ளிருக்கும் பரத்தை தெரியாமல் சம்சார வாழ்வே நிலையென்று நினைப்பவர் அந்தக் கடலிலேயே விழுவர், துன்புறுவர்.
இட்டார்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம்
துட்டர்க்கு உபதேசம்-ஞானம்மா சொன்னால் வரும்மோசம்.
முத்திபெறுவதற்கும் முதலாய் நினைத்தவர்க்கும் 
நித்திரையும்விட்டு-ஞானம்மா நினைவோடு இருக்கனுமே.
நினைவைக் கனவாக நீயெண்ணியே பார்க்கில்
சினமாய்வரும் எமனும்-ஞானம்மா தெண்டனிட்டுப் போவானே
யோக விளக்கொளியால் உண்மை தெரியாமல் மோகம் எனும் குழியில்- 
ஞானம்மா மூழ்கியே போவார்கள். சாத்திரம் கற்றறியாத சாமியார் தானாகி
ஆத்திதேட நினைத்து-ஞானம்மா அலைவார் வெகுகோடி
யோகத்தைத் தெரிய விரும்புவோர்க்கு உபதேசம் என்றைக்கும் சொல்லி விடலாம். ஆனால் பிறர்க்குத் துன்பம் தருவோருக்கு உபதேசம் செய்தால் மோசம் வரும். முத்தி பெறுவதற்குத் தம்மையே முதல்வனாக நினைத்து நித்திரையை விட்டு நினைத்தபடியே இருக்கவேண்டும். நினைவில் நடப்பதையும் கனவுபோல் கருதினால் சினத்தோடு வரும் எமன் உன்னை வணங்கி நிற்பான். யோக விளக்கத்தின் ஒளியால் உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் மோகம் என்னும் குழியில் பலர் மூழ்கிவிடுவர். சாத்திரமும் அறியாது சாமியார் வேடத்தில் திரிந்து தமக்குச் சொத்து சேர்க்க நினைத்து அலைவர் பலர்.
பூச்சும் வெறும் பேச்சும் பூசையும் கைவீச்ச்சும்
ஏச்சுக்கு இடந்தானே-ஞானம்மா ஏதொன்றும் இல்லையடி.
கலத்தை அலங்கரித்துப் பெண்கள் தலை விரித்து
கணக்கைத் தெரியாமல்-ஞானம்மா கலங்கி அழுதாரடி.
மேளங்கள் போடுவதும் வெகுபேர்கள் கூடுவதும்
நாளை எண்ணாமலல்லோ-ஞானம்மா நலிந்தே அழுவாரடி
கோவணமும் இரவல் கொண்டதூலம் இரவல்
தேவமாதா இரவல்-ஞானம்மா தெரியாதே அலைவாரே
செத்தவரை மயானம் சேர்க்கும்வரையில் ஞானம் 
உத்தமர்போலப்பேசி-ஞானம்மா உலகில் திரிவாரடி. 
வெளிவேடமாகிய பூச்சும், உண்மை கண்டவர் போல் பேசுவதும், பூசை செய்வதும், கைவீசும் அகங்காரமும் பிறர் ஏசுவதற்கு இடமாகுமல்லது வேறு பயன் இல்லை. நகைகளால் அலங்காரம் செய்து இருந்த பெண்கள் மரண காலம் தெரியாதவர். அது வந்தபின் தலை விரித்து அழுதனர். மேளமும் தாளமும் முழக்குவதும் பலரும் கூடுவதும் எல்லாம் மரண நாளை எண்ணாமல் செய்வதாம். அது வந்ததும் நலிவடைந்து அழுவார்கள், உடையும் அலங்காரமும் தேவரைப் புகழ்வதும் ஆகிய எல்லாம் சிலகாலமே. இது தெரியாமல் அலைகின்றனர். செத்த வீட்டில் அடக்கம் செய்யும் வரை நிலையில்லா வாழ்வைப் பற்றியும் விதியைப் பற்றியும் ஞானம் வந்த உத்தமர் போல் பேசுவர். பிறகு முன்புபோல் எல்லாம் மறந்து திரிவர்.
காட்டில் இருந்தாலுங் கனக்கதவஞ் செய்தாலும்
காட்டில் குருவில்லாமல்-ஞானம்மா கண்டறிதல் ஆகாதே.
நல்ல வெளிச்சமது ஞான வெளிச்சமது
இல்லா வெளிச்சமது-ஞானம்மா ஈன வெளிச்சமடி
சம்சாரம் என்றும் சாகரமாம் என்றும்
இம்சை யடைவோர்கள்-ஞானம்மா இருந்துபயன் ஆவதென்ன.
காத்தடைத்து வந்ததிது கசமாலப் பாண்டமிது
ஊத்தச் சடலமிது-ஞானம்மா உப்பிலாப் பொய்க்கூடு.
அஞ்சுபேர்கூடி அரசாளவே தேடி
சஞ்சாரஞ் செய்ய-ஞானம்மா தானமைத்த பொய்க்கூடே.
காட்டில் வாழ்ந்தாலும் அங்கு போய் நிறைய தவம் செய்தாலும் குரு இல்லாமல் மெய் நெறியைத் தாமாகக் கண்டறிய முடியாது. நல்லதும் ஞானமானதும் வேறிடத்து இல்லாததும் ஆகிய வெளிச்சத்தை இறைவனே அருள் செய்வான். சமசாரத்தில் வாழும்போது அதைச் சாகரம்- சமுத்திரம் என்றே துன்பம் அடைவர். அதில் இச்சை கொண்டோர் அதனால் பயன் அடைவதில்லை. காற்று அடைத்த பொருள், கசமாலமாகிய பாண்டம், நாற்றம் உடையது, உப்பில்லாத பொய்க்கூடு இந்த உடல் என அறிய வேண்டும். ஐந்து புலன்கள் தேடி வந்து அரசாளவும் சஞ்சாரம் செய்யவும் தானே அமைத்த பொய்க்கூடே இந்த உடல்.
கல்லுளிச் சித்தர்:-
பிர்ம சொரூபத்தை நாடு-உள் கர்ம வினைஓட வழிதனைத் தேடு
எட்டி பழுத்தாலும் என்ன-காசு ஈயாத லோபிகள் வாழ்ந்தாலும் என்ன,
கட்டி வராகனிருந்து என்ன-அதைக் காவல்கள் போட்டு நீ காத்திருந்து என்ன,
நீரிலாக் கிணறு இருந்தென்ன-மனம் நேராய் நடவாத பிள்ளையிருந்து என்ன,
ஊரிலா ஆறிருந்து என்ன-நமக்கு உதவி இல்லாத மனிதர் உறவிருந்து என்ன,
தவமது செய்தாலும் என்ன-நீ சமத்தன் என்றேபேரெடுத்தாலும் என்ன,
சிவபூசை செய்தாலும்என்ன-அரன் சேவடியை மறவாமல்இருந்தாலும் என்ன,
பிரம்மத்தின் வடிவத்தை நாடுக. செய்த கர்மங்களாகிய வினைகளை ஓடச்செய்யும் உள் ஒளியே பிரம்ம சொரூபம். நச்சாகிய எட்டி பழுத்து பயனில்லை. ஈயாத உலோபிகள் வாழ்ந்தும் பயனில்லை, வராகன் அளவு கட்டிப் பொன் இருந்தும் பயன் இல்லை, காவல் போட்டுக் காத்தும் பயன் இல்லை. நீரில்லாத கிணறும், நடக்கத் தெரியாத பிள்ளையும், ஊர் வழியாக ஓடாத ஆறும், உதவாத மனிதர் உறவும் பயனற்றவை. தவம் செய்தாலும், திறமைசாலி என்ற பெயர் பெற்றிருந்தாலும், சிவ பூசை செய்தாலும், திருவடியை மறவாமல் இருந்தும் பயனில்லை.
காசிபோய் வந்தாலும் என்ன-பெரிய கனக தண்டிகையேறித் திரிந்தாலும் என்ன,
வாசியைத் தெரிந்தாலும் என்ன-நாலும் மகராசன் என்றுபேர் பெற்றாலும் என்ன,
புராணம் படித்தாலும் என்ன-இந்தப் பூலோகம் தன்னில் மறைந்திருந்து என்ன,
திராசு நிலையாய் இருந்து என்ன-தினம் சிவசிவா என்றே செபித்தாலும் என்ன,
வித்தைகள் பலபடித்து என்ன-நீ மென்மேலுஞ்சாத்திரம் கற்றாலும் என்ன,
சித்துகள் தரிந்தாலும் என்ன-நாளும் சிறப்பாக வார்த்தை உரைத்தாலும் என்ன.
பெண்டாட்டி பிள்ளை இருந்து என்ன-முதிர்ந்த பெரியோர்கள் பாதத்தை பூசித்தும் என்ன,
துண்டாகப் போயிருந்தென்ன-நீ துலையாத கற்கோட்டை கட்டியிருந்தும் என்ன,
காசிக்குப் போய் வந்தாலும், பொன் பல்லக்கில் ஏறிவந்தாலும். பிராணயாமம் தெரிந்தாலும், மகராசன் என்ற பெயர் வந்தாலும் பயன் உண்டோ. புராணம் படித்தாலும். பூவுலகில் மறைந்தே வாழ்ந்தாலும். தராசு போல் நடுநிலையில் இருந்தாலும், சிவசிவா என்று ஜெபித்தாலும் என்ன. பலவித மந்திரங்கள் பயின்றாலும் மேலும் பல சாத்திரங்கள் கற்றாலும் சித்துகள் தெரிந்தாலும் சிறந்த வார்த்தைகள் சொன்னாலும் என்ன, மனைவி மக்கள் இருந்தாலும் பெரியோரைப் பாதபூசை செய்தாலும் தனித்து இருந்தாலும் அழியாத கல் கோட்டை கட்டியிருந்தாலும் என்ன.
மாடிமேல் வீடிருந்து என்ன-இந்த வையகத்தோர்மெய்க்க வாழ்ந்தாலும் என்ன,
கூடிக்குலாவி இருந்ததென்ன-கையெடுத்துக் கும்பிட்டுக் கூத்தாடித் திரிந்தாலும் என்ன,
தாய்தந்தை துணையிருந்து என்ன-உற்றசனங்களும் உபகாரமாய் இருந்தென்ன,
நாய்போல் அலைந்தாலும் என்ன-வரும் நமனுக்குத் தப்பிஒழிந்தாலும் என்ன
சரியை கடந்திடவும் வேணும்-இந்தச் சகத்தினுடமாயை ஒழித்திடவும் வேணும்
கிரியையைப் பார்த்தறிய வேணும்-மனவாக்குக்கு எட்டாத சொரூபத்தைத் தெரிந்திட வேணும்
மாடிமேல் வீடிருந்தாலும். உலகினர் புகழ வாழ்ந்திருந்தாலும், பலருடனும் கூடி மகிழ்ந்திருந்தாலும் கும்பிட்டுக் கூத்தாடித்திரிந்தாலும் பயன் இல்லை. தாய் தந்தை துணை இருந்தும், பிறர் உதவியாக இருந்தும் நாய் போல் பலவிதமாக உழைத்தாலும் இயமனுக்கு தப்பி ஒழிந்தாலும் பயன் இல்லை. சரியை எனும் வழியைக் கடந்திட வேணும். சகமாகிய மாயையை ஒழித்திட வெண்டும், கிரியை எனும் வழியைப் பார்த்து அறிய வேண்டும். கிடைக்காத பிரம்ம சொரூபம் தெரிய வேண்டும். 
யோகந்தெரிந்திடவேணும்-உனக்கு உண்டிமுதல் ஆனதைச் சுருக்கிடவேணும்
பாகமது தெரியவேவேணும்-குரு பாதன் அதை மறவாமல் இருந்திடவேணும்
கொலைகளவு நீக்கிவிடவேணும்-உலகில் கொடியோன் எனும்பேரைப் போக்கிடவேணும்
புலைகளைத் தொலைத்துவிடவேணும்-இன்று பொல்லாத மாயையை விலக்கிவிட வேணும்,
சோதியைக் கண்டு அறியவேணும்- வேதச் சுடரெனும் தீபத்தைப் பார்த்தறிய வேணும்
ஆதிப்பிர் மந்தெரிய வேணும்-அதை அன்புடன் சாத்திரத் தால் தெரிய வேணும் யோகமாகிய வழியைத் தெரிய வேண்டும்.                                    

உணவு முதலியவற்றைச் சுருக்க வேண்டும். எது பக்குவம் எனத்தெரிய வேண்டும். குருவின் பாதத்தை மறவாமலிருக்க வேண்டும். கொலை களவு பாபங்களை நீக்கவேண்டும். கொடியவன் எனும் பேரைப் போக்க வேண்டும். புலால் உணவைத் தவிர்க்க வேண்டும். உடலுக்குள் உள்ள சோதியைக் கண்டு அறிய வேண்டும். சுடராகிய அத்தீபத்தைப் பார்த்து அறிய வேண்டும். ஆதியாகிய பிரம்மத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அன்பாகிய சாத்திரத்தால் அதை அறிய வேண்டும்.
ஞானநிலை தெரியவேவேணும்-இதில் நால்வேத உண்மை தெரிந்திட வேணும்
மோனநிலை தெரியவேவேணும்-யோக முடிவான வத்துவை முன்தெரிய வேணும்
அட்டகருமம் தெரியவேணும்-அதற்கு ஆதாரமான ஆலை தெரியவேணும்
திட்டமாய் வாசிநிலைவேணும்-இதைத் தெரிந்துகொண்டால் சித்தன் ஆகவே வேணும்.
பந்தக் கடந்தவனே சித்தன்-பாரில் பஞ்சமா பாதத்தை விட்டோனே பத்தன்
இந்தவிதந் தெரிந்தவனே சித்தன்-அதில் என்நிலைமை கண்டவனே சீவ முத்தன்
ஞானத்தின் நிலை தெரிய வேண்டும் நான்கு வேதங்களின் உண்மை தெரிய வேண்டும். மவுன நிலையை உணர வேண்டும். முடிவான கடவுள் பொருளை முன்னதாகத் தெரிய வேண்டும். எட்டுவித கருமங்களும் தெரிய வேண்டும். அதற்கு ஆதாரமான பெரிய வடிவம் தெரிய வேண்டும். வாசியின் திட்டமான நிலைகள் தெரிந்து கொண்டவன் சித்தன் ஆவான். பந்த பாசம் கடந்தவன், பஞ்சமாபாதகம் (பொய், காளவு, கொலை, சூது, காமம்) விட்டவன். பக்தன் இவற்றோடு எல்லா நிலையும் கண்டு தெளிந்தவனே சித்தன்
பிர்ம சொரூபத்தைநாடு-உன் கர்மவினையோட வழிதனைத் தேடு
மர்மம் தெரிவிக்கும் வீடு-கண்டு தர்ம நெறிமுறை தன்னில் நீ கூடு
ஆதிபரம் பொருளைப் போற்றி-எந்தன் ஆத்தாளின் பாதத்தை மனதினிலேற்றி
சோதிச் சுடரொளியை நோக்கி-எங்கள் தூய குருபதமதைச் சிரமீது ஆக்கி
முக்தர்கள் தன்னை துதித்து-மேலாம் மோனத்தின் நிலையை மனத்தினில் ஏற்றி
சுத்த நிராமயங் கண்டு-வேதச் சுடரெனும் பொருளை உன்னிதயத் துட்கொண்டு  

பிரம்ம வடிவாகிய உள் ஒலியை நாடு. அதனால் உன் கர்ம வினை ஓடும் வழியைத்தேடு. எளிதில் தெரியாது இருப்பது வீடு. அதைக் கண்டு தர்ம நெறியில் வாழ்ந்தால் இறைவனைச் சேரலாம். ஆதியாகிய பரம் பொருளை போற்றி வாலையாகிய தாயின் பாதத்தை மனத்தில் பதிய வைத்து ஒளியாகிய சோதியைக் கருதி தூய குரு பாதத்தை தலை மீது ஏற்றி முத்தி அடைந்தவர்களை வணங்கி மவுன நிலைக்கொண்டு சுத்தமான அருவத்தை உணர்ந்து சுடர் வேதப் பொருளை இதயத்தில் நினைக்க.
ஞான நிலை அறிய வேண்டி-இந்த ஞாலத்தில் ஆபாச வழிதனைத் தாண்டி
மோன நிலையினில் சேர்த்து-ஆதி முச்சுடர் ஆகிய தீபத்தைப் பார்த்து
நித்தியா னந்தமெனத் தேர்ந்து-சதா நிர்மலமானதோர் பரவெளி சார்ந்து
பத்தியாய் வாழ்ந்திட வேணும்-ஆசா பாசத்தை நீக்கில் மெய்ஞ் ஞானமது தோணும்
தன்னையே தானறிந்தோன் சித்தன்-வாசி தனித்திருந்தே பழக்கம் உற்றோனே முத்தன்
உன்னை உன்னாலறிவோன் சத்தன்-ஞான யோகநிலை தன்னையும் அறிந்தோனே முத்தன்
ஞான நிலையையும் அறிவதற்காக ஆபாச உலகில் மவுனம் சேர்த்து மூன்று சுடராகிய தீபத்தை நெற்றியில் பார்த்து அழியாத ஆனந்தம் எது என்று தேர்ந்து கொண்டு மாசில்லாத பரவெளியை மனத்தில் பதித்து பக்தியோடு வாழவேண்டும் அப்போது மெய்ஞ்ஞானம் தோன்றும். தன்னையே தான் அறிந்தவன் சித்தன், பிராணாயமத்தை தனித்திருந்து பழகியவன் முத்திக்கு உரியவன். உன்னை உன் அறிவால் உணர்பவன் சத்தன். ஞானயோகம் அடைந்தவன் முக்தி அடைவான்.
பவுரணை நாள தனிலேதான்-வாசிப் பழக்கமது செய்ய ஆரம்பிக்க வேதான்
நவநாதர் செய்முறைகள் இதுதான்-கண்டு நாட்டத்தைக் கொண்டு வழிபார்ப்பர் இதுதான்.
வாசிப் பழக்கத்தை நாட்டு-தீட்சை மார்க்கப் படியே வழிகண்டு தீட்டு
பாசிப் பயறு அன்னம் ஊட்டு-தினம் பத்தியமாகவே காலத்தை ஓட்டு
பெண்போகத்து ஆசை வையாதே-நல்ல பிராண சொரூபத்தை நழுவ விடாதே
மண்பொன்மேல் இச்சை கொள்ளாதே-பொல்லா மாயையில் அகப்பட்டு நீயுழலாதே.
பவுர்ணமி நாளில் யோகம் பயில தொடங்கு, நவநாதர்கள் செய்த முறை இதுவே. அவர்கள் தம் கண்களாலேயே வழிகாண்பர். வாசியாகிய பிறணாயாமப் பழக்கத்தைத் தொடர்க. தீட்சையில் அறிந்த வழியே செல்க. பாசிப் பயறு கலந்த அன்னம் புசித்து வருக. தினம் பத்தியமாய் நடக்க. பெண் இன்பத்தில் ஆசை கொள்ளாதே. பிராணாவத்தின் உள் ஒளியை விடாதே. மண், பொன் மீது ஆசை கொள்ளாதே. மாயையில் அகப்பட்டு துன்பப்படாதே.
அட்டாங்க யோகமது செய்வாய்-அதி ஆனந்த நிலைகண்டு மோனத்தில் உய்வாய்
கட்டாக ஓர்நிலையில் நில்லு-அந்தக் கரணம் அடக்கியே மேலேறிச் செல்லு.
நந்திதன் கொலுவை விடாதே-அந்த நாட்டத்தை விட்டுநீ அலைந்து கெடாதே
அந்தணன் பீடத்தில் நீயே-நின்று ஆத்தாளைக் கண்டு பணிந்திடு வாயே
தானாக மேலே ஓர்வீடு-கதவு தான்சாத்தி இருக்கின்ற வழி திறந்து ஓடு
மேனாட்டுக் கப்பலை ஓட்டு-பாயை விரித்து நீ மேல் தூக்கிச் சுக்கானைப் பூட்டு
ஆதாரம் அறையும் பார்த்து-உன்றன் அறிவினுக்கு எட்டிய நங்கூரங் கோர்த்து
மாதா தெரிசனை அறிந்து-அந்த வழியிலே திட்டியின் வாசல் திறந்து.
எட்டுவகை யோகங்களையும் செய்க. இன்பநிலை கண்டு மவுனம் செய்து உய்க, ஒரே எண்ணத்தில் மனத்தை அடக்கி மேல் உடம்பில் யோகம் செலுத்து. சிவ குருவின் சபையை நினைக்காமல் அலையாதே. மூலாதாரத்தில் நின்று வாலைப் பெண்ணையும் வணங்குக. மேல்வீடாகிய சகஸ்ராரத்தின் கதவைத் திறந்து உள்ளே செல்க. மேனாட்டுக் கப்பலைத் தலைக்குமேல் அந்தரத்தில் செலுத்தும் யோகம் எனும் பாயை அகல விரித்துச் சுக்கானாகிய மணிப் பூரகத்தை நிறுத்து. ஆறு ஆதாரங்களைப் பார்த்து உன் அறிவால் அவற்றை நிலை நிறுத்தி வாலை என்ற தாயை தரிசித்து அவளைக் காணும் வழியில் திட்டிவாசலை (சுழுமுனை நாடியின் வாயில்) திறந்து கொள்.

ஆறுதவ்வீட்டையும் கண்டு-அங்கே அவரவர் வாசஞ்செய் அருமையை விண்டு
தேறுவதைநீ வெளிவிடாதே-நல்ல திருவான மேல்வாசல் கண்டு பின்னிடாதே
பாதைவழி ஏறியே செல்லு-மயிர்ப் பாலத்தின் வழியேபோய்ப் பட்சமாய் நில்லு
தாதை இருப்பிடம் பாரு-யாரும் சஞ்சாரம் இல்லாத தனித்திடஞ்சேரு
மூலாதாரத்தையும் பார்த்து-நல்ல முச்சந்தி வீதியின் வாசியைச் சேர்த்து
நாலா விதங்களும் தெரிந்து-அங்கே நவகோணச் சக்கரத்து உண்மை அறிந்து
சங்குத் தொனிகேட்கில் ஆகும்-அந்தச்சத்தமுங் கேட்கப்பயம் விலகிப் போகும்
எங்கும் நிராமயமாய்த் தோணும்-மேலும் இயல்பாக நாதத் தொனியங்கே காணும்
ஆறு ஆதாரங்களையும் கண்டு அங்கங்கே இருக்கும் கடவுளரையும் அவர்களின் அரிய சக்தியையும் காண்க. கண்டதை வெளியில் சொல்லாதே. மேல் துவாரமாகிய உச்சந்தலை துவாரம் வரைப் போகாமல் தடைசெய்யாதே. உரிய பாதையில் செல்க. பருவமத்தியில் செல்க. சிவன் இருப்பிடம் அறிக. யாரும் இல்லா தனியிடத்தில் சேர்க, மூலாதாரத்தையும் முச்சந்தியையும் தெரிந்து ஒன்பது கோண சக்கரத்தின்(ஸ்ரீ சக்கரம்) உண்மை அறிக. சங்கு ஒலி கேட்டால் அச்சம் விலகி எங்கும் அருவம் உருவம் போல் தோன்றும். அங்கே நாதத்தின் இனியதொனி கேட்கும்.
சதுரகிரி உச்சிமீது ஏறி-அதைத் தானங்கே பார்த்து பிரமானந்தம் மீறி
இது கயிலாச கிரியென்று-போற்றி இனிமையாய் வழிதெரிந்து அவ்விடம் சென்று.
கருநெல்லிக் காட்டுக்குள் சென்றே-உட் கருவான தாமரைத் தடாகத்துள் நின்றே
பெருவாரித் தீர்த்தங்கள் ஆடி-வாய் பேசாமல் ஊமைபோல் மோனத்தை நாடி
கருஞ்சாரை வெண்சாரை யோட-அதைக் கண்டு ஒடுங்கி வழிதனைத் தேடப்
பெரும்பாலும் அருவி செறிந்து-வரப் பிறங்கும் பிரமானந்த மிதுவென்று அறிந்து
மூலக் கணேசனைக் கண்டு-அவர் முன்னின்று போற்றியே தெரிசித்துக் கொண்டு 
கோலத்துடன் அங்கு இருந்தும்- செல்லக் குண்மாகும் ஆனந்தப் பரவெளி பொருந்தும்.
சதுரகிரியாகிய உச்சந்தலையில் சுழுமுனை வழியாக ஏறுவதே பிரம்மானந்தமாகும். அதுவே கைலாசகிரியாகும். அங்குப் போகும் வழியை அறிந்து இனிதுடன் செல்க. கற்பகாலம் வாழச் செய்து ஆயுள் நீடிக்கும் கரு நெல்லிக்காடாகிய சகஸ்ராரத்தில் உள்ள ஆயிரம் தாமரை குளத்தில் யோக சித்தியால் ஊறும் அமுதினை பருகிடு. கடுஞ்சாரை வெண்சாரை எனும் நாடிகளை அறிந்து அதை சார்ந்து அமுதூறும் பகுதியே பிரமானந்தம் ஆகும். மூலாதாரத்தில் கணேசனைப் பார்த்து வணங்கி நின்றால் நற்குண நிலமாகிய ஆனந்த பரவெளியை அடையலாம்.
சோதி சொரூபத்தைப் பார்த்து-அதிற் சொக்கியே நின்றிடத் தேகமும் வேர்த்து
ஆதி மகாலிங்கங் கண்டு-அதில் ஐம்புலன் ஒடுங்கியே ஆனந்தங் கொண்டு
சுந்தர தெரிசனம்செய்து-சிற் சொரூப நிலையதனில் நின்று நான் உய்ந்து
அந்தரத் தோர்களைப் போற்றி-இது ஆச்சரியம் என்றேதான் வாசியை ஏற்றி
கண்டுகொண்டேன்சிற் பரத்தை-ஞானக்கண் கொண்டு பார்த்தறிந்தேன் அட்சரத்தை
விண்டுயான் சொல்ல முடியாது-இந்த மேதினியோர்க்குலெகு விற்கிடையாது
மனமானது அடங்கியே போச்சு-இந்த மாயையை விட்டுக் கரையேறல் ஆச்சு
சினமெனுங் கோபம் அறுத்தாச்சு-யோகம் சித்தியதாகவே முத்தியும் ஆச்சு.
சோதியாகிய வடிவத்தைப் பார்த்து அதில் சொக்கி நின்றிடுக. அப்போது உடல் வியர்க்கும். நடு நாடியில் ஒளி ஏறுவதே மகாலிங்கம். அதைக்கண்டு ஐந்து புலன்களையும் ஒடுக்கி ஆனந்தம் காண். சிவ சொரூபத்தைச் தரிசித்து தானே அதுவாக இருக்கிறேன் என உணர்ந்து அந்தரத்தில் உள்ள உத்திகளை வணங்கி வியப்புடன் பிராணாயாமத்தை ஏற்றுக. சித்தத்தில் உதிக்கும் பரத்தையை கண்டு கொண்டேன். ஞானக்கண் பெற்று அதன் எழுத்தை அறிந்தேன். உலகின் சாதாரணமானவர்களுக்கு கிடைக்காத அதை வெளியில் சொல்ல முடியாது. மனம் அடங்கி விட்டது, மாயையை விட்டுக் கரையேறினேன். சினத்தை அறுத்துவிட்டேன். யோகமும் சித்தியடைந்து முத்தி கிடைக்கும்.
ஆசையை ஒருநாளும் வேண்டேன்-மேல் ஆறு தலத்திலும் கண்டதைப் பூண்டேன்
ஓசை ஒளிக்குளே நின்றேன்-அதை உற்றுற்றுப் பார்த்துபின் அங்கங்குச் சென்றேன்
ஆயிரத்து எட்டிதழும் கண்டேன்-கண்டு அந்தந்த நிலையையும் மனத்தினிற் கொண்டேன்
தாயின் சொரூபத்துள் ஆச்சு-இன்னும் சகல புவனங்களும் பிண்டத்தில் ஆச்சு
அஞ்ஞானம் என்பதும் போச்சு-பரமானந்த மென்பது அதி நிசப்பேச்சு
மெய்ஞ்ஞானம் என்பது பொய்யோ-இந்த மேதினி யோர்கள் அறியார்கள் ஐயோ.
இல்லறம் உள்ளதும் நாமே-அதி ஏற்கையாயிருந்தோர்க்குச் சாதனமாமே
நல்லறம் தேடியலையாதே-மேலாம் நாதாந்த வெட்டவெளி யாயிருக்குமப்போதே
ஆசையை ஒருநாளும் விரும்பமாட்டேன். ஆறு ஆதாரங்களில் கண்டதை அணிந்தேன். ஓசையால் வரும் ஒளியில் ஒன்றி அங்கெங்கும் சென்றேன். ஆயிரத்து எட்டிதழ் தாமரையும் தலையில் பார்த்து மனதில் பதித்தேன். தாயின் வடிவத்தில் கலந்து எல்லா உலகங்களுக்கும் இந்த உடம்போடு சென்றேன். அரியாமை அகன்றது. பரமானந்தம் உண்மையில் வந்தது. மெய்ஞ்ஞானத்தை பொய் எனக்கருதும் ஏனையோர்க்கு இது தெரியாது. இல்லறத்தில் இருந்தாலும் இவ்வழியை கொண்டோர்க்கு சாதனம் ஆகும். நாதாந்த வெட்டவெளி யிருக்கும்போது வேறு அறம் வேண்டாம்.
மோன நிலைக்கண்டு தேறு-பர முத்திக்கு வித்தான் கருத்தில் நின்றேறு
ஞான நிலையதுவும் கிட்டும்-பூவில் நாடி இருக்கலாம் வெகுகால மட்டும்
சுழுமுனை திறக்கும் வழி பாரு-அந்தச் சூட்சாதி சூட்சத்தைக் கண்டதின் சீரு
வழியுடன் சுந்தரர் நூறே-சொல்லும் மார்க்கத்தின் வழியாகச் சென்று நீதேறே.
மச்சரும் எண்ணூறிற் சதமாய்க்-கொஞ்சம் வாய்விண்டு சொல்லினர் தெரியவே பதமாய்
இச்சை ஒழித்துநீ பாரு-அதனால் இகபர இரண்டையும் காணவெகு சீரு
தீட்சையின் மார்க்கமும் தெரிய-குருதேசிகன் இருநூறில் வழிதுறை அரிய
மாட்சிமையாக உரைத்தார்-அதை வாங்கித் திருமூலர் குகைக்குள் மறைத்தார்.
மவுன நிலையை யோகமாக்கி முத்தி பெறுவதே முடிவு என கருத்து கொள்க. ஞான நிலை கிடைத்து பலகாலம் அதில் நீடிக்கலாம். சுழுமுனை நாடியைத் திறக்கும் சூக்கும வழியை அறிந்து அதனுடன் இணைக. சுந்தரர் கூறிய வழிசென்று அடைவாய். மச்ச நாதரும் தாம் பாடிய எண்ணூற்றில் இதுவே சதம் என வெளிப்பட்டார். ஆசையை விட்டுப் பார்த்தால் இம்மை மறுமையைக் காணலாம். தீட்சையில் சொல்லிய வழியில் தேசிகனார் (கடவுள்) இரு நூறு பாடல்களில் சொல்லியதை திருமூலர் பெற்று யோகக்குகையில் சென்றார்
சட்டமுனி கற்பவிதி நூறு-அதனைக் தான்பார்த்து நல்ல வழியினில் தேறு
வெட்டவெளியாகவே தோணும்-ரோமர் விரித்துச் சொன்னாரரந்த ஐஞ்ஞூறிற் காணும்
செய்பாக மானதுவும் முன்னே-கருவைத் தெரிந்துகுரு முறையாகச் செய்வாய்

நீ பின்னே கைபாகத்துடன் செய்தால் ஞானம்-கிட்டுங் கடைத்தேறல் ஆம் இந்தத் திடத்துடன்

மோனம் பத்திய பாகங்கள் ஆக-முறையாய்ப் பங்குடன் தானுண்பாய் நரைதிரை போக 
முத்திவழியைத் திறந்து-பார்த்து மோசங்கள் வாராமற் செய்வாய் சிறந்து.
சட்டைமுனி கற்பவிதி நூறும் பார்த்து நல்வழியில் வெட்டவெளியாகத் தோணுவதை ரோமர் ஐநூறு பாடல்களில் விரிவாகச் சொல்லியுள்ளார். முன்னே செய்து பழகியதை குரு மூலம் பின்னே செய்கிறாய். இதை அப்படியே செய்தால் ஞானம் கிடைக்கும். கடைத்தேறலாம் இதுவே திடமான மோனம். பத்திய பாகங்களில் கூறிய பழைய முறைப்படி உண்ணுவதால் நரை திரை போகும். முத்திக்குரிய வழியைத் திறந்து பார்த்து மோசம் வாராது செய்க.

பூலோக ஆசையைத் தள்ளு-ஞானம் போதிக்குங் குருகண்டு அடுத்துநீ கொள்ளு
சாலோக பதவியது கிட்டும்-வேறே சம்பத்து வேண்டுமோ இதுவந்த மட்டும்
யோக முறைகை விடாதே-விட்டுவிட்டு ஒன்றுந்தெரியாமல் நீயும் கெடாதே
பாகம தாகவே செய்வாய்-பய பத்தியா எப்போதுஞ் சரத்தினில் உய்வாய்.
ஞான வழிகண்டு கூடு-வரும் நலமான முத்தி வழிதனைத் தேடு
மோன நிலையிலே நில்லு-குரு முத்திக்கு இடமான வழியிலே செல்லு,
பூலோகத்திலுள்ள ஆசைகளைத் தள்ளுக. ஞான குருவைக் கண்டு உபதேசம் பெருக. இதனால் சாலோக (சிவலோக) பதவி கிட்டும். யோகமுறைகளை கைவிடாதே. விட்டால் நீயும் கெடுவாய். பரிபாகத்துடன் பயபக்தியுடன் சஞ்சாரத்தில் உய்வாயாக. ஞான வழியைக் கண்டு மோனவழியிலே நின்றிடுக. நல்ல முத்தி வழியைத் தேடி முத்திக்குரியவற்றில் செல்க.
வாழ்நளை வீணீல்விடாதே-கெட்டமாய வலை அகப் பட்டுழலாதே
பாழ்போகில் எதுவும் வாராத்தே-பரி பக்குவம் ஆகிடில் நீ பின்னிடாதே
மாயவலையில் அகப்பட்டு வாழ்நாளை வீணாக்காதே. பாழான வழியில் சென்றால் எதுவும் வாராதே. பரிபக்குவமானால் நீ எதிலும் பின் தங்கமாட்டாய்.
துக்கத்தில் ஆசையை வையாதே-இது சுகமெனக் காண்பித்து மயக்குமப்போதே
ஊக்கத்துடன் இருப்பாயே-தூங்கி உலகோர் சிரிக்க உடம் பெடுக்காதே.
தூக்கத்தில் சுகம் கண்டு அதை விரும்பாமல் ஊக்கத்துடன் இருப்பாய். உலகினர் சிரிக்கும்படி மறு பிறவி எடுக்காதே.
மீறித் திரிவதும் வீணே-பரியாச மேசெயும் வார்த்தைக்கு இடமது காணே
தேறித் தெளிவது பாரம்- உன்றன் சித்தம் அடக்கித் திரிவது சாரம்.
இதை மீறித் திரிந்து தொடர்புக்குரிய வார்த்தைக்கு இடம் கொடுத்து வீணாகாதே.
ஆணவத்தால் வரும் கேடு-அதை அறியாமல் நடப்பது சுணைகெட்ட மாடு
தாணுவின் பாதத்தை நாடு-என்றும் தன் தேகம் போகாமல் சற்பங்கள் தேடு.
ஆணவத்தால் கேடுவரும் என்பதை உணர்வு கெட்ட மாடு போன்றவர் அறியார்கள். சிவனின் பாதத்தை நாடுக. தேகம் அழியாது கற்பகாலம் வர வாழ்வதைத் தேடுக.
ஆசை மயக்கில் செல்லாதே-நீ அன்புடன் தெரிந்ததை வெளியில் சொல்லாதே
பாசத்து அகப்படாது நீயே-ஞான பரிபூரணாந்த பதம் அடைவாயே.
ஆசையில் மயங்கிப் போகாதே. அன்பால் உணர்ந்ததை வெளியிடாதே. பாசத்தில் சிக்காதே. ஞான பரிபூரணனின் ஆனந்தமாகிய பாதத்தை அடைக.
பார்த்துத் தெரிந்துகொள் என்றே-எனக்குப் பட்சமாய்ப் போகரும் சொல்லினார் என்றே
ஆத்தும சுத்தியாய் நானே-அவரை அன்புடன் போற்றிப் பணிந்து கொண்டேனே.
பார்த்தே எல்லாம் தெரிக என்று பரிவாகப் போகரும் சொன்னதை ஆத்ம சுத்தியுடன் பணிந்து ஏற்றுக் கொண்டேன்.
குருநாதன் என்னை மதித்து-பேர் கொடுத்தாரே கல்லுளி என்றே விதித்து
திருநாமம் பெற்றபின் நானே-அவரை தெரிசித்து யோகத்தின் சித்தி பெற்றேனே.
குருநாதரும் போகரும் என்னை மதித்துக் கல்லுளி என்று பெயர் கொடுத்த பின்னும் நான் அவரைத் தரிசித்து சித்தியடைந்தேன்.
கல்லுளிச் சித்தன் என்றேதான்-வாயால் கனிந்துமே கூப்பிட்டார் சித்தர்களேதான்
சொல்லியபடியென்னைத் தானே-எவரும் சுட்டி அழித்திடில் நேரில் வருவேனே.
சித்தர்களே, என் குருநாதர் என்னைக் கல்லுளிச் சித்தன் என்றே வாயால் கனிவோடு கூப்பிட்டார். அப்பெயரால் என்னைச் சுட்டி அழைத்தால் நான் நேரில் தோன்றுவேன்.
என்னாலும் அறுபதோடு ஆறு-நானும் இயம்பினேன் சக்கரத்து இயல்பதின் கூறு
முன்னாலும் பின்னாலும் ஆய்ந்தே-நீ முக்கியம் இன்னதென மனதுக்குள் வாய்ந்தே.
என்னுடன் அறுபத்தாறு சீடர்கள். இதில் நானும் சக்கரத்தின் இயல்பைக் கூறினேன்.
முன்னும் பின்னும் ஆராய்ந்து சொல்லிய இதை மனதில் வைப்பாயாக.
சாத்திரம் எத்தனையோ கோடி-சித்தர் தான் சொன்ன வாத வயித்தியம் கோடி
சூத்திரம் பத்தொன்பதாக-யானும் சொல்லிய நூல்தனை வழிதுறையாக
சாத்திரங்கள் பலகோடி. சித்தர்கள் கூறிய இரசவாதம் மருத்துவம் ஆகியன ஆராய்ந்து பத்தொன்பது சூத்திரங்களாக நான் கூறிய நூலை வழியாக பின்பற்றுக.
பார்த்துத் தெளிந்தவனே சித்தன்-பரி பக்குவமாக அறிந்தோனே பத்தன்
நேர்த்தியாய் என்நூல் கற்றோனே-அவன் நீடுழிகாலம் வரை யோகம் பெற்றேனே.
பலவும் பார்த்து தெளிந்தவன் சித்தன். பக்குவத்தை அறிந்து உயர்வு அடைந்தனே பக்தன். நேர்த்தியாய் என் நூலைக் கற்பவன் நீடூழிக் காலம்வரை யோகம் பெற்றவன் ஆவான்.
கஞ்சமலைச் சித்தர்.
பரிபூரணானந்த போதம்-சிவ பரப்பிர்மமான சதாசிவ பாதம்
உரிதாம் பரம் பொருளை உள்ளு-மாயம் உற்ற பிரபஞ்ச மயக்கத்தைத் தள்ளு
அரிதான சிவநாமம் விள்ளு-சிவன் அடியார்கள் பணிவிடை அன்பாகக் கொள்ளு
துச்சமுசார விசாரம்-அற்பச் சுகமது துக்கம தாம்வெகு கோரம்
நிச்சய மானவி சாரம்-ஞான நிர்மல வேதாந்த சாரமே சாரம்.
முழுமையும் பூரணமும் ஆனந்தமாகிய அறிவு சிவமாகிய பரப்பிரம்மம் ஆகிய சதானந்தத்தின் பாதமாகும், பரம்பொருளையே நினைத்து மாயத்தாலாகிய பிரபஞ்சத்தை நீக்கு. சிவ நாமத்தையே சொல்லுக. சிவனடியார்களுக்குப் பணி செய்வதை அன்பாய் செய். நிலையில்லாதவற்றை விசாரித்து நிற்பது மிகச் சிறிய சுகம். அது துக்கமாக மாறி வெகு கோரமாய் ஆகும். நிலையான பொருள் பற்றி விசாரித்தால் ஞானமும் நிர்மலமும் தரும். வேதாந்தத்தின் சாரமே உயர்வுக்கு வழியாகும்.
கற்பனையாகிய ஞாலம்-அந்தக் கரணங்களாலே விளந்த விசாலம்
சொற்பன மாம் இந்த்ரசாலம்-அன்று தோன்றி விட்டாலது சூட்சானுகூலம்.
அற்பமதானப் பிரபஞ்சம்-அது அனுசரித் தாலே உனக்கிது கொஞ்சம்
நிற்பது அருள்மேவி நெஞ்சம்-அன்று நிகரில்லை நிகரில்லை மெய்ஞ்ஞானம் பொஞ்சம்
ஆங்காரத் தால்வந்த கேடு-முதல் ஆசையைக் கட்டோடே அப்பாலே போடு
தாங்காமல் ஆனந்தவீடு-அன்று தாக்கும் மனோலயம் தானாகக்கூடு.
இந்த உலகம் கற்பனையானது. மனம் முதலிய அந்தக் காரணங்களால் விரிவான உலகை உணரலாம். நிகழ்காலம் முதலிய கனவு காண்பதாகிய இந்திரசாலமே. அதில் அறிவு தோன்றினால் அது சூக்குமமாகிய துணையாகும் பிரபஞ்சமே அற்பமானது என்பதை அதை எண்ணி உணர்வதால் அது சிறிது தெளியும். நெஞ்சமோ கடவுள் அருளுக்காகவே காத்துள்ளது. அதனால் மெய்ஞ்ஞானம் நிகரற்றதாக விளங்கும். ஆங்காரத்தால் வந்தது கெடுதி. ஆகவே முதலில் ஆசையை விடுக. அப்போது ஆனந்த வீடு உன் மனதில் பொருந்தும்.
தத்துவக் குப்பைகள் ஏது-சித்தி சாத்திர மான சடங்குகள் ஏது
பத்தி யுடன் மறவாது-குரு பாதத்தைக் கண்டாற் தெரியும் அப்போது.
தூராதி தூரங்கள் இல்லை-அத்தைத் தொட்டுப் பிடிக்க என்றால் வெகு தொல்லை
காரண தேசிகன் சொல்லை-நம்பிக் கருத்தில் நிறுத்தியும் காணலாம் எல்லை
ஆணவத்தால் வந்த காயம்-அதில் ஐவரிருந்து தொழில்செய்யும் ஞாயம்
காணவமாம் போகும் மாயம்-நன்றாய்க் கைகண்ட சூத்திரம் சொன்னேனுபாயம்.
தத்துவமாகிய குவியல்கள் எது. சித்திக்கான சாத்திரம் சடங்கு எது. பத்தியுடன் குரு பாதத்தை மறவாமல் தொழுது வந்தால் எல்லாம் விளங்கும். தூர தூரமாகத் தெரிவதெல்லாம் உண்மையில்லை. அதை தொட்டுப் பிடிப்பது என்றால் தொல்லை. அறிவு தரும் குருவின் சொல்லை நம்பிக் கருத்தில் வைத்தால் அத்தூரங்கள் ஓர் எல்லையில் அகப்படும். ஆணவம் மறுபிறப்பையும் இந்த உடலையும் தந்தது. ஐந்து புலன்கள் எல்லாவற்றையும் நடத்துகிறது. அறிவால் காண நேர்ந்தால் மாயம் கழியும். நல்ல சூத்திரத்தால் உபாயம் சொன்னேன்.
மூடர் உறவு பிடியாதே-நாரி மோக விகாரத் தால் நீ மடியாதே
ஆடம்பரம்படியாதே-ஞான அமுதம் இருக்க விஷம் குடியாதே.
தான் என்று வாது கூறாதே-பேசி தர்க்கங்கள் இட்டுச்சள் என்று சீறாதே
ஊனென்ற பாசம் மாறாதே-போனால் உன்னானை உன்மனஞ் செத்துந் தீராதே
வந்த பொருளைத் தள்ளாதே-நீயும் வாராததற்கு வீணாசை கொள்ளாதே
சிந்தை வசமாய்த் துள்ளாதே-சும்மா சித்திரம் போலிருந்து ஒன்றும் விள்ளாதே.
தேக பாச பவபந்தம்-அப்பொருள் சிற்றின்ப மானது சிச்சீர்க் கந்தம்
பாகமது ஆனவே தாந்தம்-பொருள் பாவித்துப் பார்க்கில் உனக்கிது சொந்தம்.
அறிவிலாதார் உறவைக் கொள்ளாதே. மங்கையர் மோகத்தால் மடியாதே. ஆடம்பரமாக இருக்காதே. ஞானமாகிய அமுது இருக்க நஞ்சைக் குடிக்காதே. தான் என்று அகந்தையாய் வாதம் செய்யாதே. தர்க்கம் பேசிச் சண்டையால் சீறாதே. உடம்பின் பாசத்தை மறுக்காதே. உடம்பு போனால் உன் மேல் ஆணை உன் மனமும் செத்து விடும் எதுவும் தீர்வாகாது. தானாக வந்த பொருளைத் தள்ளி விடாதே. கிடைக்காத ஒன்றுக்கு வீண் ஆசை கொள்ளாதே. சிந்தை வசமானதாகத் துள்ளாதே. சித்திரம் போல் இருந்து மவுனம் செய்க. தேகத்துக்குரிய தொடர்புகள் பாவமான தொடர்புதருவது சிற்றின்பமாகும். அது மிகச் சிறிய வாசனையால் வந்தது. பாகம் செய்யப் பெற்ற வேதாந்தத்தைப் பொருளாகப் பாவித்து உணர்ந்தால் உன் சொந்தம் உனக்கு விளங்கும்.
வஞ்சியர் ஆசை ஆகாதே-அந்த மயக்கமானாற் கொஞ்சமட்டிற் போகாதே
அஞ்சியமன்கைச் சாகாதே-கெட்ட ஆசா பாசமாம் நெருப்பில் வேகாதே.
கல்வி மயக்கங் கடந்து-எல்லாம் கற்றோம் என்று எண்ணுங் கசட்டைத் தொலைத்து
சொல்வெப்பினாலே கிடந்து-இரு சூட்சாதி சூட்சத்தில் ஆசை படர்ந்து.
ஓடித் திரியும் கருத்து-அதை ஓடாமல் கூட்டிப் பிடித்துத் திருத்து
நாடிக் கொண்டு அம்பைப் பொருத்து-அந்த நாதந்த வெட்ட வெளிக்குள் இருத்து.
சாண்வயிற்றால் அலையாதே-நிதம் சஞ்சலப்பட்டுக் கொண்டே மலையாதே
ஆணவத்தால் உலையாதே-உனக்கு ஆனந்த முத்தி அது நிலையாதே.
பெண்கள் மீதான் ஆசை வழியில் போகாதே. அந்த மயக்கம் எளிதில் மாறாது. எமன் கையில் அஞ்சிச்சாக நேரும். ஆசாபாசங்கள் நெருப்பிலும் வேகாது. கல்வியாகிய மயக்கத்தையும் எல்லாம் கற்று விட்டோம் என்ற கர்வத்தையும் தொலைத்து நாதமாகிய வெப்பத்தில் இடா பிங்களா எனும் சூக்குமத்தில் ஆசை கொள்க. எங்கும் திரியும் கருத்தை ஓடாமல் கட்டி வைத்து அம்புபோல் நாதந்த வெளியில் மனத்தைச் செலுத்து. சாண் வயிற்றுப் பசிக்காக அலையாதே. எதற்காகவும் மனம் வருந்தாதே. ஆணவம் கொள்ளாதே. இதனால் உனக்கு முத்தி நிலைக்காது.
அபிமானியாகிய சீவன்-அவன் அஞ்ஞானத்தாலே அழிவுண்டு போவான்
தபம் நினைந்தால் போதம் சார்வான்-நிலை சார்ந்துகொண்டால் சத்திரூபமும் ஆவான்
நற்குரு சொன்னதே சொல்லு-தம்பம் நட்ட மென்றால் வன்னி நிலைமையிலே நில்லு
தற்சமயங்களை விள்ளு-உண்டு தன்மய மாகவே தானே நீ கொள்ளு
துன்ப இன்பங்களைத் தொட்டு-அந்தத் தொந்தங்கள் எல்லந்துருசு அறச் சுட்டு
பின்பு பாசத்தைக் கைவிட்டு-ஒன்று பேசாமல் அந்தப் பெருமையை விட்டு.
பேச்சினால் என்னென்ன தோணும்-சும்மா பேசப் பேசப் பிழைஅல்லோ
வாச்சுதலால் அம்பு பூணும்-நல்ல மாசற்ற விசாரணை வேணும்.
எதிலாவது பற்று மிகக் கொண்ட சீவன் அறியாமையால் அழியும். தவத்தை நினைத்தால் அறிவு வந்து சேரும். நல்ல நிலையை ஏற்றால் சத்தி வடிவமும் உண்டாகும். நல்ல குரு சொன்னதே சொல்லாகும் தீத்தம்பத்தை உடலுக்குள் நாட்ட குண்டலினி நிலையை விட்டுப் பிரியாது வேண்டும். நிலையான சமயத்தில் இருந்து கடவுள் மயமாகி நில். இன்ப துன்பங்கள் இரண்டையுமே சுட்டு நீக்கு. பிறகு பாசத்தை கைவிட்டு மவுனத்தில் தன் பெருமையை விட்டு நீக்கு. பேசிக் கொண்டே இருப்பதால் பிழைகள் தாம் உண்டாகும் மாசற்ற ஞானத்தைப் பற்றிய ஆராய்ச்சி வேண்டும்.
அநித்தியமானது தேகம்-அதில் ஆசையும் ஒன்றால் அடங்காது மோகம்
தனித்திருந்தால் அந்தபோகம்-ஒன்று தானாகி நிற்பதுவே சிவ யோகம்.
விரும்பாசைக்கு இடங்கள் கொடாதே-காய வேதனைக்குள்ளேநீ கட்டுப்படாதே
திரும்பச் செனனம் எடாதே-குரு தேசிகர் பாதத்தில் அன்பு விடாதே
கோடான கோடி தவங்கள்-அந்தக் கோவிலைச் சுற்றிச் செபிக்குஞ் செபங்கள்
பாடான தல்லோ பவங்கள்-இது பண்னுமுன் நண்ணும் துன்ப அவலங்கள்
அந்தக் கரணவிலாசம்-அதை யாராலும் தள்ளக் கூடாது பிரயாசம்
தொந்தித்து நிற்பதே பாசம்-அதிற் தோன்றாமற் தோன்றுஞ் சுயம் பிரகாசம்
நாமசொரூபமே சித்தி-அதை நாடித் தெளிந்து கொண்டால் அல்லோ முத்தி
நேமசொரூபமே வித்து-எங்கும் நிச்சய மாகும் நிரந்தர வத்து.
இந்த உடல் நிலையானது அல்ல. அதில் ஆசை வந்தால் மோகம் அதிகமாகும். தனித்து மவுனமிருந்தால் இன்பம். பரம்பொருளுடன் ஒன்றி நிற்பது சிவயோகம். ஆசைக்கு இடம் தராதே. உடல் வேதனைக்குள் சிக்காதே. மறுபிறவி எடுக்காதே. குருவின் பாத அன்பை விடாதே. கோடித் தவங்கள், கோவிலைச் சுற்றி ஜெபிக்கும் ஜெபங்கள் ஆகியவை பரிகாரமாகாது. அவலங்களே மிஞ்சும். அந்தக் கரணங்களை விரித்தால் யாரும் தடுக்க முடியாது. தொடர்பு விடாது பாசம். அதனுள் சுயமான ஆன்ம ஒளியும் மறைந்திருக்கும். நாமத்தை இறை வடிவமாகக் காண்பது சித்திக்கு வழி. அதைநாடித் தெளிவு கொண்டால் முத்தி வரும். நியமங்களே விதையாகும். கடவுள் எங்கும் நிலையாய் உறுதியாய் நிலைத்திருப்பதை உணர்க.
வகுளிநாதர் (எ) மௌனச் சித்தர்
ஆதிபெருஞ்சோதிதனை அனுதினமும் நாடி 
ஐயர்பதந்தேடிக்கொண்டு அருள்பெறவே பாடிச்
சோதியனும் மனோன்மணியாள் அருளதனைப் பெற்றுச் 
சுகருடைய பாதமதை மனந்தனிலே உற்று.
ஆங்காரம் தனையடக்கி அருள்நிலையை நோக்கி
அரியபுவனங்களெல்லாம் அறிய மனதாக்கி
பாங்காகப் பெரியோர்கள் பாதமது பணிவோம்
பத்தியொடு யோகநிட்டை நித்தியமும் புரிவோம்
பேய்க்குணத்தைச் சுட்டல்லவோ பிரமநிலை கண்டோம்
பிரமபதி தான் கடந்து சுழுமுனையுள் கொண்டோம்
நாய்போல அலையாமல் நாமிருந்தோம் தவசில்
நல்லதொரு ஆங்காரம் அடக்கிமிகப் பவுசாய்
வஞ்சகமாம் வாழ்வைநம்பிச் சஞ்சலங்கள் அடையோம்
மகத்தான மகரிடிகள் பதங்காணச் சடையோம்
பஞ்சமா பாதகரை ஒருநாளும் பாரோம்
பாவினை பற்றறுத்தோர் சிநேகிதங்கள் மறவோம்,
ஆவியாகிய பெரிய சோதியை நாள்தோறும் நாடி குருவின் பாதத்தை தேடி அருள்பெறவே துதித்து சோதியாகிய மனோன்மணியின் அருளைப் பெறச் சுகமுனிவராகிய குருவை மனத்திலே நிறுத்தி, அகங்காரத்தை அடக்கி, அருள் நிலையை வளர்த்துச் செல்வதற்கு அரிய உலகங்களில் செல்ல மனம் கொண்டு பெரியோர் பாதத்தைப் பணிவோம். பக்தி கொண்டு யோகத்தைத் தினமும் செய்வோம். பேய்க்குணங்களை நீக்கினால் பிரம்ம நிலை கண்டு பிரம்ம பதியாகிய மூலாதாரத்தைக் கடந்து சுழுமுனையுள் மனம் கொண்டோம். நாய்போல் எங்கும் திரியாமல் தவத்தில் இருந்து அகங்காரத்தை அடக்கி இருந்தோம். வஞ்சமாகிய வாழ்வை நம்பி துன்பம் அடையாமல், மகிமை கொண்ட ரிஷிகளின் திருவடி காணச் சோர்வின்றி முயல்வோம், பஞ்சமாபாதகம் செய்வோரை ஒருநாளும் சேரமாட்டோம். பாவ வினைக்ளின் பற்றுகளை அறுத்தவர் நட்பை மறக்க மாட்டோம்.

ஆயிரம்பேர் சித்தருடன் அனுதினமும் பாடி
ஆனந்த திருநடனம் ஆடுவோமே கூடி
தாயிஉமை மனோன்மணியாள் எனக்குச் சொன்ன சித்தைத்
தானறிந்து நடந்து கொள்வோம் பெரியோரை அடுத்தே
நிலையைக்கண்டு கொள்வதற்கு நினைந்து உருகிவாடி
நிர்மலமாம் ஐயன்பதம் தினந்தினமும் தேடி
கலை அறிந்து வாசியையும் கட்டுடனே பிடித்தோம்
கனல் எழுப்பி மூலமதைச் சுகமுடனே படித்தோம்.

ஊணுறக்கம் நீக்கியல்லோ யோகநிட்டை புரிந்தோம்
உற்றாரைப் பற்றறுத்து மலைக் குகையில் இருந்தோம்
காணுதற்கும் எட்டாது பரவெளியைக் கண்டோம்
கற்பமது சாப்பிட்டு உடல் வளர்த்துக் கொண்டோம்
தந்தையார் கற்றமொடு தளர்ந்து உறவாடோம்
தவநிலையைப் பெற்றுணராச் செய்கையைத் தேடோம்
விந்தையுடன் ஞான்மதை மேன்பாடாய்த் தெரிந்தோம்
மேலான பரவெளியின் அருளதனை அறிந்தோம்.
ஆயிரம் பேர்களான சித்தர்களைத் தினமும் பாடி ஆனந்த நடனம் ஆடுவோம், யாவரும் சேர்ந்து பெரியோரைச் சேர்ந்து தாயான உமையம்மையான மனோன்மணியாள் சொன்ன சித்தை நயமாக அறிந்து அப்படியே நடப்போம். ஐயன் நிலையை அறிந்து கொள்ளத் தினமும் நினைந்து உருகவேண்டும். நிர்மலமான குருவின் பாதத்தை தினமும் தேடவேண்டும். சந்திரகலை சூரியகலையறிந்து பிராணாயாமம் செய்து குண்டலினிக் கனலை எழுப்பி மூலாதாரத்தை உணரவும். உணவும் உறக்கமும் விட்டு யோக நிட்டையில் இருந்தோம் உற்றாரை விட்டுப் பற்றுகளை நீக்கி மலை குகைகளில் தவமிருந்தோம். காணமுடியாத பரவெளியையும் காண்போம் கற்பமருந்து சாப்பிட்டு உடல் வளர்ந்தோம். தாய் தந்தையரோடும் சுற்றத்தாரோடும் தளர்ச்சியடைந்து உறவு கொள்ள மாட்டோம். தவநிலைக்குப் புறம்பாகச் செயல்படோம். ஞானத்தை மேம்பாடய்த் தெரிந்தோம். பரவெளியின் கருணையை அறீவோம்.
நாசிநுனி வழியதனில் நாட்டமதைத் தெரிந்தோம்
நல்லதொரு மூலவட்டம் சுழியை அறிந்தோம்
வாசியேற்ற வகையறிந்து ஆசைகளை அறுப்போம்
வையகத்தின் செய்கைதன்னை வழுவாமல் மறுப்போம்
சக்திசக்ர பீடமேறிச் சுத்தவெளியைக் கண்டோம்
சகலமும்பரவெளி என்று எண்ணி மனமதனில் கொண்டோம்
சித்திபெற்ற முத்தர்களை எத்தினமும் அறிவோம்
சீவகலை இன்னதென்று நாட்டமுடன் தெரிவோம்
தொண்ணுத்தாறு தத்துவத்து உரைத்தனகள் கொண்டோம்
துய்யபர வெளிதனிலே அய்யர்பாதம் கண்டோம்
விண்ணுலகு இன்னதென்று அறிந்து கொண்டேன்யானே
மேலான பரவெளியின் ஒளியைக் கண்டுதானே
நானென்ற ஆணவத்தை நயந்தறுத்து விடுத்தேன்
நன்மைபெற்றுக் குகைதனிலே வாழ்ந்திருக்க அடுத்தேன்
தானென்ற கருவமதைத் தணித்துவிட்டு வந்தோம்
தவமேதான் கதிஎன்று சரவழியில் உகந்தோம்.
மூக்கு நுனி வழியாகப் புருவமத்தியை அடைந்தோம். மூலாதாரத் தாமரையில் உள்ள சுழியை அறிந்தோம். பிராணாயாமம் செய்யும் முறையறிந்து ஆசைகளை நீக்கிடுவோம். உலகில் செய்யத்தக்கதை தவறாமல் செய்வோம். சக்தியின் சக்கரத்தை வழிபட்டுச் சுத்தவெளியைக் கண்டோம். எல்லாம் பரவெளியில் அடக்கம். சித்தி பெற்ற முக்தர்களை தினமும் அறிவோம். சீவகலையை கண்வழியே அறிவோம். தொண்ணூற்றாறு ததுவங்களையும் அடக்கினோம். தூய்மையான பரவெளியில் தலைவரின் திருவடியைக் கண்டோம். வானுலகத்தை பரவெளியின் ஒளியால் அறிந்தோம். நான் எனும் செருக்கை அறுத்தேன். குகைக்குள்ளே நன்மை பெற்று வாழ்ந்தேன். தான் என்னும் கர்வத்தயும் குறைத்துவிட்டு தவமே உரிய வழி என சஞ்சார வழியில் மகிழ்ந்தோம்.
ஆதிநாதர் (எ) வேதாந்தச் சித்தர்
ஆதிமத்யாந்தமதைக்-கிளியே அன்பாய் அறிவதற்குச்
சோதிசுடரொளியைக்-கிளியே தோத்திரம் செய்து கொள்ளே
வாசாம கோசரத்தின்-கிளியே மார்க்கம் அறிந்து கொண்டு
நேசா அனுபவத்தில்-கிளியே நின்று தெளிவாயே
அசல மூலம்திற்-கிளியே அந்தம் அறிவாயோ
விசனம் அற்றவிடம்-கிளியே மேவித் தெளிந்து கொள்ளே
சுத்தபிர மத்திலேகில்-கிளியே தோன்றிய சத்தி தன்னில்
வித்தாரம் உண்டான-கிளியே விபரம் அறிந்து கொள்ளே.
சத்தாதி வாக்காதி-கிளியே தனுகரணங்கட்கு எல்லாம் 
வித்தான மூலமதைக்-கிளியே மேவித் தெளிந்து கொள்ளே
சத்தியில் உண்டான-கிளியே சதாசிவம் ஆனதென்று
நித்தியம் நீஅறிந்து-கிளியே நின்று தெளிவாயே
அச்சிவமானதிலே-கிளியே அண்டபிண்டங்களெல்லாம்
உச்சிதமாய் உதித்தே-கிளியே உண்மை அறிந்துகொள்ளே
நாலுவகையோனி-கிளியே ஏழுவகைத் தோற்றத்
தாலும் மகரசரம்-கிளியே தத்துவம் உற்றதடி.
ஆதி நடு முடிவு ஆகியவற்றை அன்பாய் அறிவதற்குச் சோதி சுடராய் உளொளி இருப்பதை தோத்திரம் செய்து கொள் கிளியே. பேசும் முயற்சிக்கு வாக்கு எழும் இடம் சார்ந்த வழி மூலாதாரம் அறிந்து கொண்டு நேசம் கொண்டு அணுபவிப்பாயாக கிளியே. மலையின் அடியாகிய மூலத்தில் உட்பகுதி அறிவாயோ. அதுவே துன்பம் இல்லாத இடம். அதை மேவித் தெளிவாய் கிளியே. சுத்தபிரம்மத்தில் ஏகினால் அதில் தோன்றிய சத்தியையும் அதில் உண்டன ஞானத்தையும் பற்றிய விவரம் அறிந்துகொள் கிளியே. சத் குணம் வாக்கு ஆகியவற்றுக்குத் தொடக்கமாகவும் உடல் கருவிகளுக்கு இருப்பிடமாகவும் உள்ள மூலாதாரத்தில் உணர்வைச் செலுத்தி தெளிந்து கொள் கிளியே. சத்தியில் மலர்ந்த சதாசிவத்தை நாள்தோரும் நீ ஆறிந்து தெளிவாயாக கிளியே. எல்லா அண்டங்களும் அவற்றில் உண்டான பொருள்களும் சிவத்தில் உதித்தன என்ற உண்மையை அறிந்து கொள்வாய் கிளியே. பிறப்பு வகையான முட்டை, யோனி, விதை, வியர்வை ஆகிய நான்கும், ஏழுவகையான பிறந்து இறந்து மீண்டும் பிறக்கும் பிறவிகளும், நாக்கால் ஒலி எழுப்பும் தத்துவம் பெற்றன கிளியே.
அகாரம் உகாரம் ரெண்டும்-கிளியே யகாரம் உருவாச்சு
சிகாரம் வந்தவிதம்-கிளியே தேறித்தெளிவாயே.
சத்துச்சித்தானந்தன்-கிளியே தத்துவஞ் சொல்லுகிறேன்
நித்தியானந்தமதைக்-கிளியே வித்தாரம் செய்யுகிறேன்
சாமி அருள்வேணும்-கிளியே சாதனை நால் வேணும்
வாமிதயைவேணும்-கிளியே வத்தவனாக வேணும்
அஞ்சுபஞ்சகோசம்-கிளியே ஆராய்ந்து பார்க்க வேணும்
நெஞ்சந்தெளிய வேணும்-கிளியே நீயேநான் ஆகவேணும்
ஆசாபாசங்களையே-கிளியே லேசமும் எண்ணாதே
வாசனை மூன்றினாலே-கிளியே மோசமும் போகாதே.
மானாபி மானம் அற்று-கிளியே தானென்று அகமும் அற்று
நானப்பிர பஞ்சமற்று-கிளியே நாதமயத்தைப்பற்ற
பத்தரை மாற்றுத்தங்கம்-கிளியே சுத்த வெளியாகும்
எத்திசை பார்த்தாலும்-கிளியே தத்துவமாயிருக்கும்
மூலாதாரமுண்டு-கிளியே முக்கோண வட்டமுண்டு
வாலை கணேசனுண்டு-கிளியே வல்லபை சத்தியுண்டு
அகரம் உகரம் இரண்டுமே யகரமாகிய புருவ மத்தியை உண்டாக்கின. சிகரம்- நடுமார்பு. இது ஆகாசமாவதை தெளிந்து காண் கிளியே. சத்+சித்+ஆனந்தம் மூன்றுமே சதாசிவத் தத்துவமான நாள்தோறுமான ஆனந்தத்தின் விவரம் கேள் கிளியே. வாமி- இடப்பக்கத்தில் இருக்கும் பராசக்தி. இறையருள் வேண்டும். சாதிக்க வேண்டிய நான்கு இதழ் தாமரை தொடர்பு வேண்டும். பராசக்தியின் அருள் வேண்டும். ஐந்துவிதக் கோசத்தை ஆரய்ந்து தான் பார்த்தறிய வேண்டும் கிளியே. நெஞ்சமாகிய நினைவு உள்ள இடத்தைத் தெளிந்து கொண்டு நீயே நானாக வேண்டும். ஆசாபாசமான பற்றுகளை ஒரு சிறிதும் எண்ணாதே. மண், பெண். பொன் ஆகிய மூன்று வித வாசனையால் மோசம் போகாதே. மானமும் விருப்பமும் தான் என்னும் செருக்கு இல்லாது நானே பிரபஞ்சம் என்பதும் இன்றி நாதத்தை பற்றுக கிளியே. தூயதான பத்தரை மாற்றுத் தங்க நிறத்தில் சுத்த வெளி தோன்றும் எல்லா திசைகளிலும் தத்துவம் வெளிப்படும். மூலாதாரமும் அதன் நடுவே முக்கோண வட்டமும் வாலை பெண்ணும் கணபதியும் வல்லபையான் சத்தியும் உண்டு கிளியே.
சுவாதிட்டானமுண்டு-கிளியே சுத்த பிரமாவுமுண்டு
உவாதினி வாதிக்கெல்லாம்-கிளியே உற்றவர் கண்டு கொள்ளே
மேலே மணிப்பூரகம்-கிளியே விட்டுணுக்கு உற்றவிடம்
கலா தீதத்துக்கும்-கிளியே கருத்தர் அவர்தாமே.
பாரு மனாகிதத்தில்-கிளியே பார்வதி நாதர் அங்கே
சேரும் தலம் இதுவென்று-கிளியே தெரிசித்துக் கொள்வாயே
கண்டம் விசுத்தியல்லோ-கிளியே கஞ்சம் பதினாறு
அண்ட பிண்டங்களெல்லாம்-கிளியே ஆஞ்ஞை மகேசனுக்கு
இரண்டு கண்நடுவே-கிளியே இருக்கும் மயேசுரனை
திரண்ட சிந்தையினால்-கிளியே தேறித் தெளிந்து கொள்ளே.
ஆயிரத்து எட்டிதழில்-கிளியே அமர்ந்த சதாசிவத்தை
நேய மதாகவேதான்-கிளியே நிதம் பணிந்து ஏற்றிக்கொள்ளே
ஈதோர் குணமாச்சு-கிளியே இரண்டாம் குணந்தனையும்
மூதோர் மொழியெனவே-கிளியே முற்றிலும் எண்ணுவையே
சாதனம் நாலுவகை-கிளியே சற்று நிதானமாய்
போதம் மிகுதியினால்-கிளியே புத்தி என்றே உணர்வாய்
சுவாதிட்டானமும், பிரம்மாவும், பிறைச் சந்திரனும் இருக்குமிடம் அறிக கிளியே. இதற்குமேல் உந்திச் சுழியில் மணிப்பூரகம் இருக்கும். எல்லாக் கலைகளும் மிகுந்த அந்த இடம் திருமால் இருக்குமிடம். கருதுவதற்கு உரியவரும் அவரே கிளியே. பார்வதி கணவராகிய சிவம், மனம் தங்குமிடமாகிய மார்பு நடுவில் அநாதகத்தில் இருப்பார். இவர்கள் சேரும் இடம் அறிவாய் கிளியே. தொண்டைக் குழியில் இருப்பது விசுத்தி பதுனாறு இதழ்த்தாமரை உடையது. அண்டங்கள் பிண்டங்கள் அனைத்துக்கும் ஆணை யிடுபவன் மகேசனின் இடமது கிளியே. இருகண் நடுவான புருவ மத்தியில் மயேசுரன் இருப்பதைத் தெளிந்துகொள். தலைக்குள் ஆயிரத்து எட்டிதழ்த் தாமரையில் அமர்ந்த சதாசிவத்தை நேசமாய் நித்தமும் பனிவாய் கிளியே. இவைகள் ராஜஸ தாமச குணங்களுக்குரியது அறிவாய் கிளியே. இறைவனைக் காணச் சாதனம் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு வகையையும் நிதானித்து புத்தியில் உணர்க கிளியே,
சமாதி ஆறுகுணம்-கிளியே சாமா வகையம் அலவே
உமாமகேசனுக்கே-கிளியே உற்றது என்றே தெளிவாய்
உற்ற சமந்தானும்-கிளியே ஒன்றவைக் கும்பினும்
மற்றுள் தமகுணத்தைக்-கிளியே மாற்றல் அரிது அலவே
விடல் சகித் தல்தனைக்-கிளியே மேன்மைய தாகக் கொண்டு
தொடர் சமாதானம்-கிளியே தொந்தன் நமக்காமே.
சிரத்தை எப்பொருட்டும்-கிளியே தீவிரம் ஆகுமதே
பரத்தைத் தானடையக்-கிளியே பற்றொன்றும் இல்லை கண்டாய்
பத்தியை விட்டுவிட்டுக்-கிளியே பாவனையைக் கடந்து
அத்துவிதானத்தைக்-கிளியே அனுபவித்து உய்வாயே.
பெண்ணாசை பொன்னாசை-கிளியே புமியி மீதாசை
மண்ணாசை எண்ணாதே-கிளியே வாசிஎன்னால் அறியே.
தேகம் தேகிரெண்டு-கிளியே தேகம்பொய் தேகிமெய்யே
மோகாந்தம் விட்டாக்கால்-கிளியே முத்தியடைவாயே
பாவ அபானம் அற்று-கிளியே பரத்தினுடன் பொருத்திச்
சுவானுபவந் தனிலே-கிளியே சொக்கி நீவாழ்வாயே.
சமாதி என்பது ஆறு வகையாகும். (தத்துவலய சமாதி, சவிகற்ப சமாதி, நிர்விகற்ப சமாதி, சஞ்சார சமாதி, ஆருட சமாதி, மவுன சமாதி) உணர்வதற்கு அரியன. உமாமகேஸ்வரனுக்கே உரியது கிளியே. சமம் என்பது இறைவனுடன் ஒன்ற வைக்கும் தாமஸ குணத்தை மாற்றுவதுமாம். விடுதல், சகித்தல் என்ற நடவடிக்கைகளால் மேன்மை பெற்றுத் தொடர்ந்து சமமாக இருக்கும் கிளியே. எப்பொருள் இடத்திலும் சிரத்தை கொள்வதே தீவிரம். பரம் பொருளைச் சென்று அடையப் பற்றுகள் இல்லாதிருக்க வேண்டும். பத்தியை விடுத்துப் பாவனை செய்வதையும் கடந்து, அத்துவிதமாய் (கடவுளும் நாமும் இரண்டு இல்லாதபடி ஒன்றுதல் அத்து விதமாகும்)- ஏகமாய் இருப்பதை அனுபவிப்பாயாக. பொன், பெண், மண் ஆசைகளும் உலகாளும் ஆசையும் விட்டு விட்டுப் பிராணாயாமத்தால் என்னை அறிக கிளியே. உடல் என்பதும், உடலுக்குள் இருப்பது உயிர் ஆத்மா என்பதும் உண்டு. இவற்றில் உடல் அழிவது. ஆன்மா அழியாதது ஆகும். மோகத்தை முழுவதுமாக விட்டதும் முக்தியடையலாம். பாவித்தலும், அனுபவியாமையும் இல்லாமல் பரம்பொருளில் பொருந்திச் சுய அனுபவத்திலே ஒன்றி வாழ்வாயே.
*******

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879488
All
26879488
Your IP: 23.20.220.59
2024-03-19 09:52

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg