இனிமையான பாடம்!
மழையில் நனையும்போது சந்தோஷமடையும் நாம், மழை எவ்வளவு சந்தோஷங்களை உள்ளடக்கி பூமியை நனைக்கின்றது என்பதை பெற்றோரின் அரவனைப்பில் புரிந்து கொள்ளல் வேண்டும். மழை அடக்கி வைத்திருக்கும் ஆனந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு நீர்த்திவலைகள். அதில் ஒரு பகுதியை கண்டு நாம் அடையும் ஆனந்தமே அளவிட முடியாதது.
சந்தோஷங்களை உள்ளடக்கிய மழைத் துளிகளை பூமி எவ்வளவு ஆனந்தத்துடன் ஏற்றுக் கொள்கின்றது. அதன் வெளிப்பாடே மரம், செடி, கொடிகள், இன்னும் பல ஜீவராசிகள். ஆனால் அந்த சந்தோஷத்தை மரம், செடி, கொடிகள் பூத்து பூவாய் மலர்ந்திருந்து வெளிப்படுத்துகின்றபோது மனித ஆன்மாவும், மனமும் பூத்து குலுங்குகின்றது. அதன் அழகில், வண்ண நிறங்களில் சந்தோஷம் கண்டு மயங்கும் நாம் அந்த மரம், செடி, கொடிகள் எல்லாம் எவ்வளவு சந்தோஷத்துடன் பூக்களை மலரவைக்கின்றது என்பதைப் பற்றி சிந்திப்பது இல்லை. புரிந்து கொள்வதும் இல்லை. எந்தவித பரபரப்பின்றி நம்மைச்சுற்றி நடக்கும் இயற்கையான அற்புத நிகழ்வுகளை கவனியுங்கள். புரிந்து ஆனந்தப்படுங்கள்.
இயற்கையில் பல பாடங்கள் நம் வாழ்விற்கு சொல்லப் பட்டுள்ளது. இயற்கையின் தீவிர உறுப்பினர்களாகிய தாவரங்களும், உயிரினங்களும் தானும் சந்தோஷமாயிருந்து மற்றவைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு தம் கடமையாற்றுகின்றன. இதைப்போன்றே நம் முன்னோர்கள் வழிவழியாக சந்தோஷங்களில் தோய்ந்திருந்திருப்பதால்தான் மனித குலம் வழி வழியாக தோன்றுகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவர்மீது ஒருவருக்கு பரஸ்பர ஆர்வமில்லை என்றால் அடுத்த தலைமுறை இருக்கவே இருக்காது. இது போதை தரும் இயற்கையின் தீராத விளையாட்டு.
ஆனால் எல்லோரும் எப்போதும் சந்தோஷமாயிருக்க வேண்டும் என்ற ஒர் உன்னத கருத்து மறக்க விடப்படுகின்றது. உண்மையான அன்பு இன்றி கணவனாக- மனைவியாக வெறும் உறவு முறைகளுக்காக மட்டும் வாழ்வது மிகவும் சித்தரவதையான துன்பம் இருவருக்கும். இணைந்து வாழ்வதில் சுகம் உண்டு. மதிப்பு, அன்பு, ஆசை காரணமாக சேர்ந்திருப்பது சரி. சமூக நிர்பந்தத்திற்காக சேர்ந்து வாழுவது கொடுமை. உறவுகள் புரிந்து கொள்வதற்கு மட்டுமில்லை. ஒன்றோடு ஒன்றாக இனைந்து அன்பு கொள்வதற்குத்தான்.
ஓர்நாளில் சில மணிகள் மட்டுமே, அவசியமாண நேரங்களில் மட்டும் நீங்கள் ஆணாகவும்/ பெண்ணாகவும் நினைத்தால் போதும். எப்போதும் அந்த எண்ணங்களோடு இருக்க வேண்டியதில்லை. மற்ற நேரங்களில் ஆணும் பெண்ணும் சமம், எல்லாம் உயிர்களே என்ற உணர்வுடன் செயல்படுங்கள். அன்பு நிறைந்த வாழ்க்கையை அடையாளம் காண்பீர்.
முன்னோர்கள் வழித்தோன்றலாக நாமும் தோன்றி அன்பு கொண்டு சந்தோஷத்தை நாடவேண்டும். நம் முன்னோர்கள், பெற்றோர்கள் அடைந்த ஆனந்தம் நாமும் அடையவேண்டும். மலர்கள் போல், மழையைப்போல் தானும் சந்தோஷம் அடைந்து தன்னுடன் சேர்பவர்களையும் சந்தோஷப் படுத்துதல்தான் நியதி. குழந்தையாக இருந்தபோது ஒவ்வொருவரும் தன்னை சுற்றியிருந்தவர்களைச் சந்தோஷப் படுத்தியது போல் எப்போதும் முயற்சிக்க வேண்டும்.
பசிப்பிணிமருந்து: தமிழ் மீது பற்றுகொண்ட ஆனந்தரங்கம் பிள்ளையைப் பார்க்க மதுரகவிராயர் சென்றபோது அவர் வயல் வெளியில் சிந்திக்கிடக்கும் நெல்மணிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். கவிராயரை சிறிது இருக்கச்செல்லி தன் செயலை தொடர்ந்து செய்தார்.
பொறுமையிழந்த கவி, தன் பரபரப்பை உணர்த்தவே, ஏன் பறக்கின்றீர்கள்? என்ற பிள்ளையின் வார்த்தைகள் கவியின் மனதை தைக்க அவர், 'கொக்கு பறக்கும்! புறா பறக்கும்! குயில் பறக்கும்! நக்குப் பொறுக்கிகளும் பறப்பர்! நான் ஏன் பறப்பேன் நராதிபனே! திக்கு விசயம் செலுத்தி, உயர் செங்கோல் நடத்தும் செய்துங்கன் பக்கல் இருக்க, ஒரு நாளும் பறவேன்! பறவேன்! பறவேன்! எனப் பாடினார்.
பாடலின் சுவையை ரசித்த பிள்ளை அவரை தன் வீட்டிற்கு அழைத்து சென்று அவர் முன் தலைவாழை இலை போட, பசியுடனிருந்த கவி சாப்பிட தயாரானார். ஆனால் வெள்ளித் தட்டில் பொற்காசுகளை கொண்டுவந்து இலையில் போட்டார் பிள்ளை. தங்கம் உயர்வுதான். ஆனால் அப்போது பசியை போக்குமா!
விழித்த புலவரிடம், வயல் வெளியில் உதிர்ந்த நெல்மணிகளை நான் பொறுக்கிய போது அற்பமாக பார்த்தீர்கள்! அது நெல் அல்ல! பசிப்பிணி மருந்து என்றார். கவிராயர், வள்ளலே! பசியின் கொடுமை தாங்காமல் அவசரப்படுத்திவிட்டேன் என்றார். ஆனந்தரங்கம் பிள்ளை கவிராயருடன் உணவருந்தி அந்த பொற்காசுகளை அவருக்கு தந்து சந்தோஷத்துடன் வழி அனுப்பினார்.
சோதனைகள், தடைகள் வரலாம். அவைகளைத் தாண்டி வெற்றி கண்டு சந்தோஷிக்க முயல வேண்டும். சந்தோஷத்திற்காக எதையும் செய்யலாம்! எப்படியும் நடந்து கொள்ளலாம் என்று நினைவு கூடாது. சரியான முறையான செயல்களால் ஏற்படும் சந்தோஷத்தை அடைய முயல வேண்டும்.
நமக்கு என்ன செய்கிறோம் என புரியாத மழலைப் பருவத்தில் நம் செயல்கள் அனைவருக்கும் மகிழ்வைக் கொடுக்கும். உறவும் சுற்றமும் ஆனந்தமடையும். அதே பருவம் கடந்து சிந்திக்கும் திறனும் செயல்படும் திறனும் அடைந்தபின் நாம் செய்யும் தவறுகளை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.
எனவே நம்மைச் சுற்றியுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாக, சந்தோஷப்படும் வடிவில் செயல் அமையவேண்டும். அந்த வழி செயல்பாடுகளை நாம் தெரிந்து, செயல்பட்டு, நாமும் சந்தோஷித்து, நம்மைச் சார்ந்தவர்களும், சுற்றியுள்ளவர்களும் சந்தோஷிக்கும் வகையில் முனைப்புடன் செயலாற்றவேண்டும்.
மலர்கள் எங்கு மலர்ந்தாலும் இருக்கும், வளர்ந்த, பிறந்த சூழலினின்று வேறுபட்டு தன் பிறவிக்குண்டான மனத்தையும் அழகையும் அனைவருக்கும் தறுதல் போன்று, நாமும் எந்த சூழ்நிலையாக இருந்தாலும், நம்மை தோன்றுவித்த பெற்றோர்கள், முன்னோர்கள் வழி பெருமைகளை வெளிப்படுத்தி நாமும் சந்தோஷம் கண்டு, அனைவரிடமும் காணவேண்டும்.
வாழ்வில் என்னென்ன சோதனைகள், குழப்பங்கள் வந்தடைந்தாலும் மலர் போன்று தெளிந்து மணம் பரப்ப கற்றுக் கொள்ள வேண்டும். மனம் மணந்தால் முகம் மலரும். அந்த மலர்ந்த முகம், நமக்கு முன்னேற்றப் பாதையில் மிகவும் உதவியளித்து வாழ்வில் வெற்றிதந்து சந்தோஷமாக பயணம் செய்ய உதவும்-குருஸ்ரீ பகோரா.