உலகுக்கு அழகு!
இந்த உலகுக்கு எது அழகு! உலகில் எல்லாம் மலர்ந்து அதனதன் தன்மைகளை எந்த விருப்பும் வெறுப்பும் அற்று தன் கடமையாக செய்யும் செயலின் விதவிதமான வடிவங்களே! எதை நோக்கிலும் அழகு! எங்கும் எதிலும் அழகு! அழகோ அழகு! இந்த அழகை எல்லாம் ரசிக்க ரசிகத்தன்மை மட்டும் போதாது. அமைதியான மன நிலை வேண்டும். ஆர்வம் வேண்டும்! இயற்கையின் தன்மைகளை புரிந்து கொள்ளல் வேண்டும்! அப்போதுதான் அந்த சிலிர்ப்பான ரசனை நம்முள் தோன்றும். அதை நாம் உணர்வு பூர்வமாக உணர வேண்டும்! அந்த நிமிடங்களில் தான், இயற்கை நமக்கும் ஏனைய உயிர்களுக்கும் அதனிடத்தே கொண்டுள்ள பாடங்களை, நம்மால் கற்க முடியும்.
ஆன்மாக்களே! உங்களுக்கு ரசிக்கத் தெரியும். நீங்கள் அதற்காக பிறந்தவர்கள். எனவே இவ்வுலகின் ஒவ்வொன்றையும் ரசித்து மகிழுங்கள். சந்தோஷம் அடையுங்கள். ஒரு மலர் பூத்திருக்கின்றது. அதன் வண்ண அழகை, நறுமணத்தை ஒருவன் ரசிக்கின்றான். நுகர்ந்து அனுபவிக்கின்றான். பின் அதைப் பறித்து தன் வயமாக்கப் பார்க்கின்றான்.
ஒர் மலர் மலர்ந்து, இந்த உலகின் அழகை, அது எடுத்த பிறவியின் இடம் இவற்றை ஆவலாக கண்டு மகிழ்வு கொள்கின்றது. அதைச் சுற்றியுள்ள இடத்தை தன் வண்ணத்தால் மலரவைத்து ஆனந்தமயமான சூழலை உருவாக்குகின்றது. இது நமக்கு அதன் பாடம். நாமும் பிறவியில் மலர்ந்து நம்மை சுற்றியுள்ள அனைத்துக்கும் பெருமை சேர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
ஆனால் மலர்ந்த மலரை பறித்து அதன் தன்மைதனை இழந்து வாடி வதங்க வைக்கும் நம் செயல் நன்றன்று. மலர் தன் பிறவிப் பயன், கடமையாக தன் அழகாலும் நறுமணத்தாலும் தன் பிறப்பிடத்தையும் அல்லது தான் சேருமிடத்தையும் அழகும் நறுமணமும் கமழவைத்து, தானும் உலகின் அழகில் பங்கெடுத்து, வசந்தத்தில் வாழ்ந்து பலமணி நேரங்கள் தன் செயலை செய்கின்றது.
மலர்கள் கோர்த்து மாலைகள் ஆக்கி நற்காரியங்களுக்கு பயன் படுத்துதல் சிறப்பு. அவைகளின் பிறப்பின் பயனை நாம் உயர்த்துகின்றோம். அருள் புரியும் இறைக்கு சமர்ப்பிக்கின்றோம். இந்த செயல்கள் சிறப்பு என்ற நிலை கொள்கின்றது. ஆனால் அந்த மலரின் பிறவிக்கடமையை தடுத்து அது அழகும், மணமும் தரும் காலத்தைக் குறைத்து, நம் மலர் பறிக்கும் ஆசையால் இயற்கையின் சூழலுக்கு ஊறு விளைவிக்கின்றோம்.
நம் மனதிற்கு அழகு காட்டி ஆனந்தம் அளித்து மனம் பரப்பி வசந்த உணர்வுகளை மீட்டு நம்மை சந்தோஷத்தில் ஆழ்த்தும் அந்த இயற்கையின் அழிவுக்கு நாம் காரணமாக இருக்காமல், பார்த்தும், ரசித்தும், நுகர்ந்தும் அனுபவிக்கும் நினைவுகள் மட்டும் கொண்டிருக்க வேண்டும். எனவேதான் ‘மலர்களைப் பறிக்காதீர்கள்’ என்ற பலகை அறிவிப்பை பொது இடங்களில் காண்கின்றோம்.
நம் எல்லோருக்கும் ரசிக்கும் திறமையும், நுகரும் திறமையும் உண்டு. ஒருவரின் மலர் பறிக்கும் ஆசை, அந்த அழகை ரசிக்கும் பலரின் சந்தோஷங்களை வீனடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும். பொதுவாக இயற்கையின் வனப்பை அழிக்காமல் அதன் அழகை ரசித்து உணர்ந்து சந்தோஷம் அடையும் நினைவுகளை எப்போதும் கொண்டால் அது மனித குலத்தின் சந்தோஷத்திற்கு வாய்ப்பாகும்-குருஸ்ரீ பகோரா.