மண்ணேஆதாரம்! மண்ணின் மைந்தர்கள்!
பூ உலகில் மண் இருப்பதால் இது மண்ணுலகம். மண்ணுலகில் எல்லா உயிர்களும் மண்ணால் ஆனவையே என்கின்றது வேதம். இதை உணர்த்த நம் முன்னோர்கள் உயிரின் ஆன்மா உடலைவிட்டு வெளியேறியதும் காற்றில் அப்படியே அழுகி மற்ற ஜீவராசிகளுக்கு உணவாகிவிடும் சூழலில் உடல்களை மண்ணில் புதைத்து மண்ணோடு சேர்த்தார்கள். அதனால் தான் “அரசனும், ஆண்டியும் மண்ணோடு மண்ணாவான் ஓர்நாள்” என்றார்கள்.
காலப்போக்கில் சில மாற்றங்களுக்குட்பட்டு சிதைமூட்டி எரித்தார்கள். எரித்து சாம்பலை நீரோட்டத்தில் கரைத்து அதையும் மண்ணோடு சேர்த்தார்கள். இது நம் உடல் மண்ணோடு சேர்ந்த கலவை என உணர்த்தவே! நாம் உட்கொள்ளும் உணவுகளும் இந்தமண்ணில் உற்பத்தியாகி நாம்வாழும் பொருட்டு வாழ்நாள் முழுவதும் நம் உடலின் பகுதியாகின்றது.
ஆனால் மண்ணின் நிறம் வேறு. மணம் வேறு. நம் உணவு, உடை, இயக்கம் எல்லாம் இந்த மண்ணை, பூமியைச் சார்ந்ததே! இது சார்ந்த புராணவரலாறு நிகழ்வு ஒன்று. “கிருஷ்ண அவதாரத்தில், அவர் குழந்தையாக இருந்தபோது மண்ணை அள்ளி உண்டதை பார்த்த தாய் யசோதை, கண்ணனை வாயைத் திறக்கச் சொல்லி, அங்கே அவள் கண்டது என்ன? வாயில் மண்ணா? இல்லை! மண்ணுலகம் முழுவதும் தெரியக்கண்டாள். உலக உயிர்கள் அனைத்தும், மரம், செடி, கொடி, மலைகள், நதிகள் எல்லாம் கண்டாள்.
மண்ணைக் காணகேட்டவளுக்கு மண்ணுலகத்தைக் காண்பித்து மண்ணே எல்லாவற்றிற்கும் ஆதாரம் எனத் தெரியவைத்து உள்ளார்.” பாலும், பழமும் விழுங்கிய வாய், ஆன்மா உயிர் நீங்கியபின் மண்ணையும் விழுங்கும்! மறக்கலாமா!
இந்த உடல் மண்ணின் தன்மைகொண்டது. ஓர்நாள் கண்டிப்பாக முழுவதுமாக மண்ணாகும். இடையே உயிர்வாழும் நாட்களில் உணர்ச்சிக்காக பேதங்கள் ஏற்பட்டு உடல் அடையும் துயரங்களும், துன்பங்களும் அதிகம் அதிகம். எல்லாம் மண் என்பதைப் புரிந்து கொண்டால் உடலின்- மண்ணின் உணர்ச்சிகளை விட்டுக் கொடுக்கப் பழகிக் கொண்டால் சரியாய்விடும்.
எது? யாருக்கு? எப்படி? என்றெல்லாம் நினையாமல் அவரவர் விருப்பங்களைப் பூர்த்தி செய்து சந்தோஷமாக வாழவிழையும் தருணத்தில், எல்லோரும் மண்ணுக்குச் சொந்தமானவர்கள், உடம்பினர்- “மண்ணின் மைந்தர்கள்” என்பதைப்புரிந்து விட்டுக் கொடுத்து அந்தந்த உயிர்கள்- ஆன்மா- உடல் சந்தோஷப்படுவதற்கு வழி கொடுத்து, அதனால் தானும் சந்தோஷமடைந்து அனைவரும் ஓர்நாள் நம் பயணம் முடித்து இவ்வுடலை மண்ணுக்குத் தரலாம் சந்தோஷ ஆனந்தத்துடன்! மண்ணோடு மண்ணாவதற்கு!
நாம் பிரபஞ்சத்திலிருந்து அனைத்தையும் பெற்று வாழ்கின்றோம். கார்பன், கழிவு எனத்திருப்பித் தருகின்றோம். கொடுக்கல் வாங்கலில் தடை ஏற்பட்டால் அது மரணநிலை. எந்த பூமி உங்களுக்கு உண்பதற்கு எல்லாம் வாரிவழங்கிக் கொண்டிருக்கின்றதோ அப்பூமி ஓர்நாள் நீங்கள் சாய்ந்தவுடன்- உடலிலிருந்து ஆன்மா பிரிந்தவுடன்- தனக்கு உணவாக்கிக் கொள்ளப்போகின்றது. நம் உடல் பிரபஞ்ச அக்னியில் சமர்ப்பணமாகிறது. இந்த இயற்கை நியதி மாற்றமுடியாத ஒன்று. மனித ஆன்மா மட்டுமே இதை உணரும்-குருஸ்ரீ பகோரா.