ஆபத்து!
வாழ்க்கைப் பாதையில் ஆபத்து ஒரு கட்டாய நிகழ்வு. நாம் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெறும். அதை எதிர்பார்த்து சமாளித்து நாம் நம் வாழ்க்கை பயணத்தை தொடங்க வேண்டும். ஓர் சிறிய சந்தேகம் எழுந்தால்கூட ஓர்செயலை செய்யுமுன் அது பற்றி தீர்க்கமாக யோசனை செய்து நல்முடிவு கண்டு செயலாற்ற வேண்டும். சந்தேகங்கள் நமக்கும் தோன்றலாம். பிறர் சொல்லியும் வரலாம். பிறர் என்பது நண்பர்களாகவும் இருக்கலாம், எதிரியாகவும் இருக்கலாம். யார் சொன்னார்கள் என்பது முக்கியமல்ல! அதில் உள்ள கருத்துக்களின் உண்மை, அதனால் நம் செயலாக்கத்திற்கு ஏற்படும் தடைகள், வெற்றிப்பாதையை மாற்றும் கருத்துக்களா ! உதவும் கருத்துக்களா! என சிந்திக்கவும்.
நாம் கடலில் பயணிக்கின்றோம் என்றால் கடலில் நீர்மட்டும்தான் நிறைந்துள்ளது என அர்த்தமில்லை. அந்த நீரே பனிக்கட்டியாய் மாறி நம் பயணத்திற்கு தடை ஏற்படுத்தக்கூடும். அந்த பனிகட்டிகள் மலையளவுகூட இருக்க வாய்ப்புண்டு. கண்ணுக்குத் தெரியாது. எனவே பனிக்கட்டி என்றதும் நீரில் மிதக்கக்கூடியதுதானே என்று அவசர முடிவுக்கு வந்துவிடக்கூடாது.
பனிக்கட்டிகள் இவ்வளவு பெரிய கப்பலை என்ன செய்து விடமுடியும் என நினைத்து அறிவு பூர்வமாக சிந்தனை செய்யாமல் செயல்பட்டு பயணித்தால், பயணம் ஆபத்தில் முடிந்துவிடும். நமக்கெல்லாம் தெரியும் ‘டைட்டானிக்’ என்ற அக்காலத்து நவீன பெருங்கப்பலின் நடத்துனர்கள் பனிக்கட்டி எனநினைத்து பணிப்பாறை/ மலைமீது மோதிய கப்பலின் நிலை என்ன ஆனது என்று. தவறான யூகத்தால் பல்லாயிரக் கணக்கானோர் இறப்புதான் பட்டியலிடப்பட்டது.
நிஜவாழ்விலும் சிலபிரச்சனைகள் மேலோட்டமாக பார்க்கும் போது சிறியதாக ஆபத்து இல்லாததாகத் தெரிய வாய்ப்புண்டு. அந்தச் சிறிய பிரச்சனைகளை அலட்சியப் படுத்தாமல் அவற்றின் தன்மை, ஆழம்(உட்கருத்து) அறிந்து யோசித்து செயல்பட்டால் நம் வாழ்க்கை பயணத்தில் அதுவும் ஓர் வெற்றியாக மாறும். மகிழ்வு ஏற்படுத்தும். ஆனந்தித்து வெற்றியை சந்தோஷமாக அனுபவிக்கலாம். சிந்தித்து செயல்படவில்லை என்றால் அந்த பிரச்சனை நம் வாழ்வை தடம் புரட்டிச்சென்று நம்மை துயரத்துள் ஆழ்த்தும்.
பிரச்சனைகளை கண்டு பயம் கொள்ளாமல், பொறுமையுடன் அதன் தன்மையை கண்டு யோசித்து, நம் நலம் நாடுபவர்களின் ஆலோசனையும் பெற்று செயல்படுதல் நன்று. பயணத்தில் வேகம் மட்டும் முக்கியமல்ல! வேகத்திற்கு இனையாக விவேகமும் இனைந்து செயல் பட்டால் வெற்றி நிச்சயம். கண்மூடித்தனமாக விரைந்து செயல்படும்போது, நாம் எதிர்பாரா புதிய பிரச்சனைகள் எதிர்படும்போது, நாம்செயல்படும் வேகத்தின் காரணமாக எதிர்பட்ட பிரச்சனையை சரியாக அளவிடமுடியாமல் போய்விடும். நம் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்ய முடியாததாகிவிடும்.
ஓர் நிதானத்துடன் செயல்படும்போது தோன்றும் பிரச்சனைகளை அவ்வப்போது தீர்த்துக்கொள்ள சிந்திக்க சிறிய கால அவகாசம் தோன்றும், அப்போது பிரச்சனைகளுக்கு ஏற்ப நம் செயல்களில் சிறிய திருத்தங்கள் செய்து முழுமையான வெற்றிக்கு வழிதேடலாம். எப்படிப்பட்ட பிரச்சனையாயிருந்தாலும் யோசித்து நன்று திட்டமிட்டு பயமின்றி நிதானமாக செயல்பட்டு அவ்வப்போது இடையில் ஏற்படும் சிறிய பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டு உறுதியுடன் செயல்பட்டால் கிடைக்கும் வெற்றி, செயலில் ஈடுபட்ட அனைவருக்கும் ஆனந்தத்தையும் சந்தோஷத்தையும் அளிக்கும்-குருஸ்ரீ பகோரா.