பணம்!
எல்லோரும் பணம் சம்பாதிக்க வேண்டும். சொத்து சேர்க்க வேண்டும் என்ற எண்ணங்கள் கொள்கின்றனர். தன்தேவைக்கு, தன்னை நாடியுள்ளவர்கள் தேவைக்கு என சம்பாதிக்க முயலுகின்றான். பிறகு சுகபோகங்களுக்கு என சம்பாதிக்க விழைகின்றான். செல்வம் சேர்த்தபின்பும் அதன் மேல் கொண்ட அன்பால், ஈர்ப்பால், ஆசையால் மீண்டும் மீண்டும் பணம் சேர்க்க தன் நாட்களை வீணடிக்கின்றான்.
அதனால் தன் ஆரோக்கியத்தை தொலைத்து விடுகின்றார்கள். அவ்வாறு ஒரு கால கட்டத்தில் இழந்த ஆரோக்கியத்தை மீட்க பணம் செலவு செய்கின்றனர். பகல், இரவு, நேரம், காலம் பார்க்காமல் சம்பாதித்ததால்தான் தங்கள் ஆரோக்கியம் கெட்டுவிட்டது என நினைக்காமல், இவ்வளவு பணம் நம்மிடம் இருப்பதால்தான் செலவு செய்யமுடிகின்றது என நம்புகின்றான். உணவு, உடை, இருப்பிடம் இதற்குமேல் வீண் ஆடம்பரத்திற்காக பணம் தேடியதால்தான் ஆரோக்கியம் கெட்டதென்று யாரும் நினைப்பதில்லை.
ஆரோக்கியம் மட்டுமல்ல பலநேரங்கள், பல ஆண்டுகள், நீங்கள் அடையவேண்டிய சிறு சிறு சந்தோஷங்களை நீங்கள் இழந்ததோடல்லாமல், உங்களால் மற்றவர்கள் அடையக்கூடிய சந்தோஷங்கள், மற்றவர்கள் உங்களுக்கு தரக்கூடிய சந்தோஷங்களையும் இழந்துவிடுகின்றீர்கள். இந்த பொன்னான சந்தோஷ வாய்ப்புகளை பொதுவாக இழந்துவிட்டு பணம் சேர்த்து என்ன பயன்.
பணம், உருண்டோடும் பணம். இதை தேடுபவர் வாழ்வும் உருண்டுதான் ஒடிவிடும். ஓர் நிலையில் இருந்து இந்த உலகின் இன்ப துன்பங்களை புரிந்து சரியாக அனுபவிக்காமல் பணம் தேடுதல் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டவர் மற்ற எதையும் கவனத்தில் கொள்ளமாட்டார். பணம், பொருள் சேர்க்க எந்த முறையும் கடைபிடிப்பார்.
தவறு எனத் தெரிந்தாலும், மற்றவர்களுக்கு துன்பம் தரும் என்றாலும் அவரின் கவனம் அந்த பணத்தை எப்படியும் அடைவது என்பதேயாகும். அளவற்ற ஆசைகொண்டு பணம்தேடும், எவ்வகையிலும் சம்பாதிக்க முயலும் எல்லோரும் ஓர்வகையில் பிச்சைக்காரர்களே! அவன் பிச்சையெடுக்க யாசிக்கின்றான். இவன் பொருள் சேர்க்க யாசிக்கின்றான். அது ஓர் இகழ்ச்சி என்றால் இதுவும் ஓர் இகழ்ச்சிதான்!
பொருள்சேரச் சேர ஒருவன் தன் நிலை மறக்கின்றான். தன் குடும்பம், நல்லது, கெட்டது அனைத்தும் மறந்து செயல்படுபவன், உலகில் தான் பிறந்த பயன், வாழ்வின் பாதையில் கிடைக்கும் சந்தோஷங்களை முழுமையாக, ஏன் ஓரளவுகூட அனுபவிக்க வாய்ப்பில்லை. ஆசைகளின் இருப்பிடமான பணத்தின் மேல் பணம் சேர்க்கும் எண்ணங்களுடையவனும் பிச்சைக்காரர்களே!
‘உருண்டோடும் பணம்’,.. ‘பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே’ என கவிஞர்கள் கூறியதுபோல உங்களிடம் உள்ள பணம் எவ்வளவு காலத்திற்கு உங்களிடம் அல்லது உங்கள் வாரிசுகளிடம் நிலைத்து இருக்கும். சிந்தியுங்கள்! இன்று இது உங்களுடையது, நாளை இது இன்னொருவருடையது, அடுத்தநாள் வேறொருவருடையது, என உருண்டோடும் பணம் எத்தனை நாள் யார் யார்வசம் இருக்கும் என நினைத்துப் பாருங்கள்.
ஓர் ஞானி அந்த ஊருக்கு வந்தபோது பணிவிடைகள் செய்து அவரின் நன் மதிப்பைப் பெற்றான். சில நாட்கள் கழித்து அவன் வறுமையை நினைத்து அந்தஞானி இனி தினமும் உனக்கு ஒரு பொன்காசு வீதம் 100 நாட்களுக்கு கிடைக்கும் என்றார். மகிழ்வுற்றவன் காசு கிடைக்கக் கிடைக்க அதைப் பத்திரப்படுத்தி 100 காசுகள் சேர்ந்ததும் ஒரு கோணிப்பையில் கட்டி வீட்டு தோட்டத்தில் புதைத்தான். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை அதை எடுத்துப் பார்த்து 100 காசுகளையும் எண்ணி மகிழ்ந்து திரும்பவும் புதைத்துவிடுவான்.
மாதங்கள் சென்றன. ஒருநாள் அப்படி அவன் தோண்டியபோது அந்த 100 காசுகள் கொண்ட பையைக் காணவில்லை. நிம்மதியிழந்தான். புலம்பினான். சிலநாட்களில் ஞானி அந்த ஊருக்கு திரும்பவும் வந்தார். அவரிடம் சென்று புலம்பினான். நடந்தவைகளைக் கேட்டவர் அவனுக்கு ஒரு பை வரவழைத்துக் கொடுத்தார். அது இவனின் காணாமற்போன் பையாகவே இருக்க ஆர்வமுடன் கையை உள்ளேவிட்டு துளாவினான். கையில் கூழாங்கற்கள்தான் கிடைத்தது. காசைக் காணோம். எரிச்சலடைந்தவன் ஞானியை கோபத்துடன் பார்த்து சப்தமிட்டான்.
அப்போது ஞானி சொன்னார், பணம் கிடைத்தால் செலவழித்து அதனால் ஆனந்தம் அடையவேண்டும், பொருள்களை ஈட்ட வேண்டும், நீயோ புதைத்து வைத்திருக்கின்றாய், அதனால் யாருக்கு என்ன லாபம். புதைத்து வைத்து எண்ணிப் பார்ப்பதற்கு இந்த கற்களே போதும் என்றார். தன் தவறை உணர்ந்தவன் வருந்தி ஞானியிடம் மன்னிப்புக் கோரினான். ஞானி இனியாவது பணத்தினால் பயன்களைப் பெற முயற்சி செய் எனக்கூறி மீண்டும் 100 காசுகளை அருளினார்.
இந்த நிலையில்லா பணத்திற்காக வாழ்வில் நீங்கள் அனுபவிக்க வேண்டிய ஆயிரக்கணக்காண சின்ன சின்ன நிகழ்வுகளை, உங்களுக்கு என்றும் ஆனந்தம் தரும் நிகழ்வுகளை, சந்தோஷங்களை இழந்திருப்பீர்கள். இழந்திருக்கின்றீர்கள். நீங்கள் சம்பாதித்த பணம் அந்தந்த காலத்தில் நீங்கள் இழந்த சந்தோஷங்களை மீண்டும் வாங்கித் தர முடியுமா? முடியாது! கடந்தது கடந்ததுதான்! வாழ்வில் நீங்கள் இழந்தது இழந்ததுதான்!
பணம் சம்பாதிக்க எல்லோரும் ஏதாவது எளிதான வழி இருக்குமா என தேடுகின்றனர். மனமும், எண்ணங்களும் பணம் சேர வழிகாட்டுமேதவிர பணம் தானாக உங்களை வந்தடையாது. உங்கள் அவசியமான தேவைக்கு, உங்கள் உழைப்பின் மூலம் கிடைக்க செய்யும். உழைப்பின் மூலம் வரும் பணமே நிலைக்கும்.
பணம் சம்பாதிக்க வேண்டியதுதான். சோம்பேறியாய் இருந்து பிறர் உழைப்பில், சேர்த்த பணத்தில் சுகவாசியாக இருத்தல் கூடாது. சிறப்பான வாழ்விற்கு சிக்கனமே மேலானது. அது தேவைகளை சுருக்கிவிடும். இது அனைவருக்கும் பொதுவானது. உங்கள் வாரிசுகளுக்கு வழிகாட்ட இது போதும் என்ற நினைவு கொள்ளுங்கள். அது வரை சேர்த்தது போதும் என்று நினைவுகளுக்கு வரைமுறை கொள்ளுங்கள். எவ்வளவு சேர்த்தாலும், இன்னும் கொஞ்சம் என்ற நினைவுடன், போதும் என்ற நினைவு வராவிடின் அதில் அர்த்தமில்லை!
வெறும் பிரமையிலும் மயக்கத்திலும் எல்லோரும் உழல்கின்றோம். கற்பகோடி காலம் வாழப்போவதாக நினைக்கின்றோம். பலதலமுறைக்கு சொத்து சேர்க்கின்றோம். அடுத்தவர் சொத்தை அபகரித்தவர்கள், முறையான வழியிலன்றி தீய வழியில் சம்பாதித்தவர்கள் எத்தனை நாட்கள் சந்தோஷமுடன் இருக்கின்றனர் என்பதை நினையுங்கள். இந்த பூமியில் நிரந்தரமாகத் தங்க வந்தவர்கள் போல் அளவுக்கு மீறி எப்படியெல்லாம் சேர்த்தவர்கள் போன இடம் மண்ணுக்குள்ளே! வாழ்வின் பயணத்தில் இருக்கும் மனிதா! உடலின் ஆன்மாவே! இதை நீ உணர்ந்துகொள்!
நம் முன்னோர்கள் மூன்றாவது தலைமுறையில் மாற்றம் ஏற்படும் எனக்கூறியுள்ளனர். சரியாக யோசனையுடன் சிந்தித்தால் அவர்கள் கூற்று எந்த அளவிற்கு உண்மையானது என நாம் கடந்து வந்த பயணத்தில், பல நிகழ்வுகள் நமக்கு அவற்றை தெள்ளத்தெளிவென புரியவைக்கும். பாவங்கள் புரிந்து, அளவற்ற செல்வம் சேர்த்து, நோயின் கொடுமைக்காகவும், இழந்த சந்தோஷங்களுக்காக கோயில்களுக்காகவும், நல்ல காரியங்கள் என நீங்கள் நினைப்பதற்கும் செலவிடுதலால் என்ன பயன்? நம்மிடம் உள்ள பணத்தை நமக்கு என செலவு செய்யும் போது மகிழ்வு ஏற்படலாம். அதை மற்றவர்களுக்கு செய்யும்போது மன நிறைவுடன் கூடிய நிம்மதி கிடைக்கும்.
உங்களின் விருப்பமில்லா பிறப்பில், முடிவு தெரியா வாழ்வில், பயணத்தில் கிடைத்த மணியான நேரங்களை வீணடித்து, தேடி வந்த சந்தோஷங்களை இழந்து, வாழ்வின் பயனை அனுபவிக்காமல் முடிவு என்று? எப்போது? என தடுமாறும் உடலே! உடலின் உயிரே! உண்மைகளை உணருங்கள். சந்தோஷமாய் வாழ வழிவகுத்துக் கொள்ளுங்கள். உங்கள் சந்தோஷம் உங்கள் வாழ்க்கைக்கு, உங்கள் செயல்களில் கண்டு ஆனந்தியுங்கள்.
ஒருவரிடத்தில் சேர்ந்த செல்வம் பந்தில் இருக்கும் காற்றைப் போன்றதே. அது இருக்குமிடத்தில் துன்ப உதைகள் கிடைக்கும். புல்லாங்குழலில் நுழைந்து செல்லும் காற்றைப்போல எல்லோருக்கும் இனிமையை ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும்.
நாம் பல அறிஞர்களிடம், அறிவாளிகளுடன் பேசிப் பழகும்போது அவர்களது திறமையான அறிவின் செயல்கள், தாக்கங்களால் நம் அறிவும் பெருக வாய்ப்புகள் ஏராளாம். ஆனால் பணம் கொண்ட ஒருவனிடம் நீங்கள் எவ்வளவு சேர்ந்திருந்தாலும் நீங்கள் பணத்தை அடைய முடியாது.
அறிவால் பணத்தை நீங்கள் சம்பாதிக்கலாம். பணம் சேர்ப்பதிலும் துன்பம். சேர்த்ததைக் காப்பதிலும் துன்பம். அது மறையும் போதும் துன்பம். பணம் என்பது எப்போது ஏதோ ஒரு வழியில் துன்பத்தைத் தருவதுதான் என உணருங்கள். வாழ்க்கை பணம் சம்பந்தப்பட்டது அல்ல. மனம் சம்பந்தப்பட்டது.
பணத்தால் பல தொழிகளில் முதலீடு செய்யலாம். ஆனால் பணத்தையே முதலீடாக வைத்து தொழில்செய்து பணத்திற்குப் பணம் சம்பாதிப்பவர்கள் நிறைய பெருகி வருகின்றனர். அவர்களின் செயல்களில் இரக்கம், மனிதநேயம் கொஞ்சமும் இருக்காது. அவர்கள் ஒருவருக்குக் கொடுத்த பணத்தை திரும்பப்பெற நினைவு கொள்வதில்லை. வட்டி சரியாக வந்தால் போதும். அசலைப் பற்றிக் கவலையில்லை. அந்த அசலும் குறையக்கூடாது. ஏனெனில் அசல் குறைந்தால் வட்டி குறைந்துவிடுமே.
“பொய்மை, இரட்டுற மொழிதல், நயவஞ்சகம், நடிப்பு இவற்றால் பொருளீட்டி பிழைக்கும் பிழைப்பு, நாய்கள் பிழைப்பு என்று கூறியுள்ளார் பாரதியார், எனவே இந்த பிழைகளில்லா பிழைப்பு நடத்த நினைவு கொள்ளுங்கள். பிழைப்பதுவேறு. வாழ்வதுவேறு. இவ்வுலகில் எல்லோரும் வாழ்ந்து காட்டவேண்டும். நான், எனக்கு, என்னுடையது என்று இறுதிவரை எண்ணங்களை கொண்டு வாழ்தல் மனித வாழ்க்கையன்று, அது உலகில் பிழைப்பு நடத்துதலாகும். வாழ்தலாகாது.
‘பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை, வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்’ என வள்ளுவம் கூறுவதைப்போல், பொருள், பணம் சேர்க்கும்போது பழிக்கு அஞ்சிச் சேர்த்துச் செலவு செய்யும்போது எல்லோருக்கும் பகிர்ந்து அளிப்பதை மேற்கொண்டவனின் வாழ்வு ஒழுக்கமுடையதாக இருக்கும்.
பணத்தால் வந்ததை எல்லாம் கொடுத்துவிடு என்றால் பணத்தின் மூலம் அடைந்தவைகள் என்று நினைவு கொள்ளக்கூடாது! பணம் வரும்போது அதனுடன் அகந்தை, ஆணவம், கோபம், தற்பெருமை என நமக்குள் வந்த தீய குணங்களை விட்டுவிடு என்று அர்த்தம். அப்போது அருள் பெருவாய்! அமைதி காண்பாய்! ஆனந்தம் அடைவாய்!-குருஸ்ரீ பகோரா.