மைனாவின் நன்றி!
ஒரு காட்டில் மானைத்துரத்திய வேடன் விஷம் தோய்ந்த அம்பினை எய்த மான் தன் வேகத்தால் தப்பிக்க அம்பு அருகில் இருந்த மரத்தில் பாய்ந்தது. விஷம் தோய்ந்திருந்ததனால் மரம் நாளடைவில் பட்டுப் போக ஆரம்பித்தது.
அந்த மரத்தில் ஒரு மைனா பல காலமாக வசித்து வந்தது. அதன் முன்னோர்களும் அங்கு வசித்து இருந்துள்ளனர். தாங்கள் பரம்பரையாக தங்கியிருந்த மரத்தின் நிலையைக் கண்டு மைனா மிகவும் வருந்தியது. வேறு இடம் தேடிச் சென்று வாழ அதற்குப் பிடிக்க வில்லை. பறவையாக இருந்தாலும் அதன் பழகிய விசுவாசம் மாற்றத்தை ஏற்க வில்லை.
வான்வழி சென்ற தேவேந்திரன், மரம் சுகப்பட்டபோது தானும் சுகப்பட்டு, மரம் துயரப்படும்போது தானும் துயரப்படும் மைனாவின் நேயம் மிகவும் பிடித்திருக்க அதனிடம் வினவினான். நீ ஏன் வேறு இடம் செல்லக்கூடாது என்று. நல்ல குணநலன்கள் கொண்ட இந்த மரம்தான் எனது பிறப்பிடம். எனக்கு சுவையான கனிகள் கொடுத்து, எதிரிகளிடமிருந்து என்னைப் பாதுகாத்து இதன் நிழலில் இருந்துவந்த நான் அதற்கு கெட்ட நிலை வந்ததும் ஓடி ஒளிந்து கொள்வது தர்மம் இல்லை என நான் நினைகின்றபடியால் இங்கே இருக்கின்றேன் என்றது.
தேவேந்திரன் உணர்வு பூர்ணமாக சிலிர்த்து மைனாவே உனக்கு வேண்டியது என்ன? என்றபோது இந்த மரம் பழையபடி செழித்து வளர வேண்டும் என்றது. அப்படியே தேவேந்திரன் அருள்புரிய மரம் செழிப்படைந்தது. தன் பெற்றோர்கள் தான் தனக்குப்பின் தன் வாரிசுகள் என எல்லோருக்கும் புகலிடமான மரம் பூத்துக் குலுங்க கண்ட மைனாவின் ஆனந்தம் அளவிட முடியாததாயிற்று.
உங்களை வளர்த்தவர்களை, உங்களுக்கு உதவி செய்தவர்களை மறவாமல் நீங்கள் இருக்கின்றீர்களா? சற்றே சிந்தனை வயப்படுங்கள்.