அந்த பகுதிக்கு ஓர் ஞானி வந்தார். அவரைக் காண அந்த ஊர்மக்கள் திரண்டனர். அந்த ஊரின் செல்வந்தர் எதையும் சிறப்பாக தன்னால் செய்ய முடியும் என்ற எண்ணம் உடையவன். ஆரவார குணமிகுந்த அவனுக்கு பக்தியும் உண்டு. அவன் அந்த ஞானி யைக்காண விரும்பினான். அவருக்கு அந்த ஊரில் யாரும் கொடுக்காத அளவிற்கு விலையுயர்ந்த ஆடைகளும், பணமும் கொடுக்க விரும்பினான். அப்போது அவரின் மனைவி பணத்துடன் கொஞ்சம் மலர்களையும் வாங்கி கொண்டு போகச் சொன்னார்.
ஞானியைப் பார்த்ததும் பெருமையுடன் தான் கொண்டுவந்த ஆடைகளையும், பணத்தையும் அவர்முன் நீட்டினான். ஞானி உரத்த குரலில் கீழே போடு என்றார். ஆடைகளையும் பணத்தையும் கீழே வீசினான். மனைவி சொல் நினைவிற்குவர மலர்களை எடுத்துக்கொடுத்தான். அப்போதும் ஞானி கீழே போடு என்று கூறினார். அந்த செல்வந்தருக்கு லேசான பயம் வந்தது. ஞானிக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ என நினைத்தான். அப்போது மீண்டும் கீழேபோடு என்று உரத்தகுரலில் யோகி சொல்ல, செல்வந்தருக்கு எதை கீழே போடுவது என்பது புரியவில்லை, விழித்தார். அருகில் இருந்த ஞானியின் சீடர், அவர் உங்களிடமிருந்த ஆடைகளையும், பணத்தையும் கீழே போடச் சொல்லவில்லை. ‘உங்கள் ஆணவத்தை கீழேபோடு’ என்பதுதான் அவர் சொன்னதின் அர்த்தம் என்றார்.
புரிந்த செல்வந்தருக்கு புதிய வானம் தெரிந்தது. ஞானியின் பாதத்தை வணங்கினார். ஞானி சொன்னார் உன் கர்வத்தை, ஆணவத்தை இங்கேயே என்னிடம் விட்டுச்செல், அதை திரும்பவும் எடுத்துச் சென்று துன்பத்திற்கு ஆளாகாதே. வாழ்வில் வளம் பெறுவாய் என்றார்.