ஒரு சிலர் ஒரு கடவுளைத்தான் கும்பிடுவர். சிலர் சில கடவுள்களைக் கும்பிடுவர். சிலர் கடவுள் என்ற எல்லோரையும் வணங்குவர். இவர்களுள் முருக பக்தன் ஒருவன். அவன் தீவிர பக்தன். அவன் முருகனைத் தவிர வேறு யாரையும் தெய்வமாக நினைப்பதில்லை. வழிபடுவதும் இல்லை.
அவன் ஒருநாள் ஒரு ஞானியை சந்தித்தான். அவர் அவன் பேச்சிலிருந்து அவன் மனதிலிருப்பதை புரிந்து கொண்டார். அவன் மனதில் இருந்த கடவுள்கள் பற்றிய வேற்றுமைகளை அகற்ற நினைத்தார்.
அவனிடம், ‘நீ யாரை தினமும் வணங்குகின்றாய்’ என்றவரை நோக்கி, ‘என் இஷ்டதெய்வமான முருகனை மட்டும் நான் வணங்குகிறேன்’ என்றான்.
சரி, உன் இஷ்ட தெய்வமான முருகனின் வெவ்வேறு வடிவங்கள்தான், சிவன், பைரவர், கிருஷ்ணர், ராமர், பிரம்மா என்பது உனக்குத் தெரியதா ! முருகனை விட்டு மற்ற தெய்வங்களை கும்பிடு என்று நான் சொல்லவில்லை. உன் இஷ்ட தெய்வமே மற்ற தெய்வங்களாகவும் இருப்பதை புரிந்துகொள். இறை சக்தி ஒன்றுதான். அது பல ரூபங்களில் நம்மால் வணங்கப்படுகிறது. உன் மனதில் வேறுபாட்டை களைந்தால் நீ உயர்வடைவாய் என்றார்.
இது அவனுக்குப் புரியவில்லை! அப்போது ஞானி சொன்னார், ஒரு பெண் திருமணம் முடிந்து கணவன் வீடு செல்கின்றாள். அங்கு அவளுக்கு மாமனார், மாமியார், மைத்துனர், மைத்துனி என்று இன்னும் பல உறவுகள் இருக்கும். அந்த பெண் அனைவரிடமும் அன்புடன் இருக்க வேண்டும். அப்போதுதான் அவளின் இல்லறம் சிறக்கும். ஆனால் கணவனிடம் தன் அந்தரங்கத்தை பகிர்ந்து கொள்கின்றாள். கணவன் மூலமாகத்தான் எல்லோரும் அவளுக்கு உறவு. அது அவளுக்கு இஷ்டமான ஒன்று.
அதைப்போலவே நீயும் உன் இஷ்டதெய்வத்தை வழிபடு. மற்ற தெய்வங்களையும் மதித்து வழிபடு. அதில் தவறில்லை. வேறுபாடு பார்க்காதே! இஷ்ட தெய்வத்துடன் தொடர்பு கொள்வது மூலமாக மற்ற தெய்வங்களையும் தொடர்பு கொள்ள வேண்டும். அது நன்மை பயக்கும்.
வெறுப்பையும் வேற்றுமையும் அகற்றி மனத்தெளிவுடன் தெய்வ வழிபாட்டில் ஈடுபாடுகொள் என்றார்.