காசிராஜன் மகள்கள் அம்பை, அம்பிகை, அம்பாலிகை மூவரின் சுயம்வரத்திற்கு வருகை தந்த பீஷ்மரை, அங்கிருந்த வாலிபர்கள் ஏளனப்படுத்தியதால் இளவரசர்கள் அனைவரையும் வென்று மூன்று பெண்களையும் அஸ்தினாபுரத்திற்கு கூட்டி வந்தார். அஸ்தினாபுர அரசன் விசித்ர வீர்யனுக்கு மூவரையும் மணமுடிக்க ஏற்பாடு செய்தார்.
பீஷ்மரைப் பார்க்க வந்த அம்பை, அவரிடம் தோற்ற சால்வ மன்னனை மணக்க விரும்புவதாகக் கூறி, அவரின் அனுமதியுடன் சால்வ மன்னனைச் சந்தித்தாள். பீஷ்மரால் தூக்கிச் செல்லப்பட்டு அஸ்தினாபுர அரண்மணையில் இதுகாறும் இருந்த அவளை மணக்க சால்வ மன்னன் விரும்பாததால் மீண்டும் அஸ்தினாபுரம் வந்தாள்.
வேறுவழியில்லாமல் விசித்ரவீர்ய மன்னனை மணக்கமுடிவு செய்தபோது, எப்போது அவள் சால்வமன்னனை மனதால் விரும்பிவிட்டாளோ அதன்பின் அவளை நான் என் மனைவியாக ஏற்றுக்கொள்ளமுடியாது என விசித்ர வீர்யன் உறுதியாக கூறிவிட்டான்.
மீண்டும் சால்வ மன்னனிடம் சென்று நான் மனதால் உங்களை காதலித்த குற்றத்திற்காக அஸ்தினாபுர மன்னன் என்னை மணக்க மறுத்துவிட்டார். என்றாள். நான் உன்னை மணந்து கொள்ள மறுத்ததும் நீ விசித்ர வீர்யனை மணக்க விரும்பிதானே அஸ்தினாபுரம் சென்றாய். அதனால் உன்னை மனைவியாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றான்.
அம்பை இப்போது பீஷ்மரிடம் வந்தாள். என் விருப்பமின்றி என்னை கடத்திவந்து எனக்கு அவமானம் ஏற்படுத்தி என்னை யாரும் மணக்க முடியாநிலை ஏற்படுத்திய தாங்கள் தான் என்னை மணம் செய்து கொள்ள வேண்டும் என்றாள். பீஷ்மர் தன் தந்தையிடம் செய்த பிரம்சாரிய சத்யத்தை அவளுக்குகூறி மறுத்தார்.
அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டு இந்த நிலைக்கு காரணமான பீஷ்மரை கொன்று பழிதீர்க்க தவம் செய்தாள். முருகன் அவள்முன் தோன்றி ஓர் மாலையை கொடுத்து அதை அணிந்து கொள்பவர் பீஷ்மரை கொல்வார் என்றார். எல்லா இளவரசர்களும் பீஷ்மருக்குப் பயந்து மாலையை ஏற்க முன்வராததால் மீண்டும் தவம் செய்து, அடுத்த பிறவியில் தாமே பீஷ்மரைக் கொல்ல சிவனிடம் அருள் பெற்றாள்.
துருபதனின் மகளாக சிகண்டினி பிறந்து திருநங்கையாக ‘சிகண்டி’ ஆகி பாரதப் போரில் பீஷ்மரைக் கொன்றாள். உணர்ச்சி கோபம் கொண்டு புரியாமல் அம்பைக்கு செய்த பாவம்! விதி வலியது!