நிம்மதி தேடி!
உலகின் நிறையபேர் செல்வந்தர்களாக இருந்தாலும் அவர்கள் நிம்மதியின்றி வறியவர்களாகவே இருக்கின்றனர். அப்படிப்பட்ட செல்வந்தன் ஒருவன் தான் சந்தித்த ஞானியிடம் தன் நிம்மதியில்லா நிலையைச் சொன்னான். ஞானி அவனிடம் உன்னிடம் உள்ள நகை, பணம் அனைத்தையும் மூட்டைக் கட்டி கொண்டுவா. அதன் தோஷத்தைப் போக்கலாம் என்றார்.
ஒருநாள் தன்னிடமிருந்த விலையுயர்ந்த அணிகலன்கள், ஆடை ஆபரணங்கள் பணம் எல்லாவற்றையும் மூட்டையாக கட்டிக்கொண்டு ஞானி இருக்குமிடம் வந்து சேர்ந்தான். அதை அவர்முன் வைத்தான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஞானி திடீரென்று மூட்டையை எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தார். செல்வந்தன் பதற்றமடைந்து தொடர்ந்து ஓடினான்.
ஞானி தன்னிடமுள்ள சக்தியால் நீண்டதூரம் ஓடலானார். மூச்சிரைக்க அவனும் பின் தொடர்ந்தான். இறுதியில் புறப்பட்ட இடத்திற்கே வந்தார் ஞானி. மூட்டையை கீழே வைத்தார். பின்னால் ஓடிவந்த செல்வந்தனும் மூட்டையை கைப்பற்றி தன் சுவாசத்தை ஆசுவாசப்படுத்திக் கொண்டு நிம்மதிப் பெருமூச்சுவிட்டான்.
ஞானி சொன்னார். நீ கையில் வைத்திருக்கும் சொல்வம் முதலிலும் இப்போதும் உன்னிடம்தான் இருக்கின்றது. அப்போது இல்லாத சந்தோஷம், நிம்மதி இப்போது எப்படி வந்தது? ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள் நிம்மதி உன்னிடம்தான் இருக்கின்றது. வேறு எங்கும் இல்லை. அதை தேடி அலைய வேண்டியதில்லை. உன் செயல்கள் தான் அதை உனக்கு கொடுக்கும் என்றார். செல்வந்தருக்கு புரிந்தது போல் இருந்தது. உங்களுக்குப் புரிந்ததா!