கூலி! ஓர் தங்க காசு! ஏமாற்ற நினைத்தால் ஏமாறுவாய்!
வியாபார நோக்கில் பணம் கையுடன் எடுத்து செல்ல வேண்டிய நிலையில் ஞானி ஒருவரின் ஆலோசனையைக் கேட்க, ஒருவனைத் துணைக்கு அமர்த்தி அதற்குண்டான கூலியை புறப்படுமுன் கொடுத்துவிட்டால் உன் பணம் எந்த சேதாரமும் இன்றி வியாபாரத்திற்கு உதவியாக இருக்கும் என்றார். அதன்படி துணைக்கு முரடனாகத் தோற்றம் கொண்ட ஒருவனை அமர்த்தினார். அவனின் வெகுளித் தன்மையைப் பயன்படுத்தி அவனுக்கு ஒரு தங்ககாசு தருவதாக பேசிமுடித்தார். ஊருக்குச் செல்லும் நாள் அன்று துணைக்கு வருபவனுக்கு தங்க காசு கொடுக்க எடுத்தவர் அவனின் வெகுளித்தனத்தைக் கருத்தில் கொண்டு அவனிடம் ஒரு செம்பு காசைக் கொடுத்தார். அவன் கண்டு பிடித்து கேட்டால் அவனுக்கு தங்க காசு கொடுத்துவிடலாம் இல்லை என்றால் அது மிச்சம் என்று கணக்குப் பேட்டார்.
இருவரும் பயணம் செய்தனர் ஒரு நாள் கழிந்தது. இரவு வந்தது. இருவரும் ஒரிடதில் தங்கினார்கள். துணைக்கு வந்தவன் வெளித் திண்ணையில் ஓய்வாக இருந்தான். அப்போது அங்கு வந்தமுரடன் துணைக்கு வந்தவனிடம் பேச்சுக் கொடுத்து ,பார்ப்பதற்கு முரடனாக இருந்தாலும் அவன் ஓர் அப்பாவி எனத் தெரிந்து கொண்டு அவனிடம் காசு வைத்திருக்கின்றாயா என மிரட்ட தன்னிடம் இருந்த ஒரு செப்புக் காசை தர, என்ன! இந்த ஒரு செப்புக் காசுதான உன்னிடம் இருக்கின்றது என கேட்க, அது செப்புக் காசு இல்லையே, தங்க காசு என்றுதான் அவர் கொடுத்தார் என உள்ளே இருந்த வியாபாரியைக் காட்டினான்.
வியாபாரியை அடித்து உதைத்து அவனிடமிருந்த அத்தனை பொற்காசுகளையும் பிடிங்கிக் கொண்டு செல்லும்போது துணைக்கு வந்தவன்மேல் பரிதாப்பட்டு ஒர் தங்ககாசுசைத் தந்துவிட்டுப் போனான்.
யார் என்ன முயற்சித்தாலும் ஒருவருக்குக் கிடைக்க இருப்பதைத் தடுக்க முடியாது! நம்மை விட்டுப் போவதை தக்க வைக்கவும் முடியாது.