ஓம்நமசிவய!
அரன் முதன்மகனே போற்றி ஆனைமா முகனே போற்றி
ஆதாரப் பொருளே போற்றி ஆனந்த வடிவே போற்றி
ஆருயிர்த் துணையே போற்றி ஆறணி சடையாய் போற்றி
ஆக்கமே தருவாய் போற்றி ஆரண முதலே போற்றி
சிவலிங்க வழிபாடு செய்பவர்கள் அறிய வேண்டியது!
சிவலிங்கத்தில் ஆவுடை சக்தியையும், லிங்கம் உண்மைச் சொரூபமாகிய பரவெளியையும் குறிக்கும் பரவெளி 36 தத்துவங்களையும் கடந்தது. பரவெளியில் தான் சிவன் நடராஜராக நடனம் புரிந்து ஐந்தொழில்களை இயக்கி எல்லா சராசரங்களையும் இயக்குகின்றார். இந்த பரவெளி நடராஜ நடனத்தத்துவமே சிதம்பரத்தின் இரகசிய தரிசனம். பரவெளி என்பது ஆகாயம் அது ஆனந்தம். அப்பரவெளியில் ஆடும் கூத்து ஆனந்தக்கூத்து. அனைத்துப் பொருள்களும் ஆகாயத்திலிருந்தே தோன்றி லயமாகின்றது.
லிங்கம் ஆவுடையாரை ஊடுருவி இருப்பது பரவெளியாகிய சிவம் என்ற நாதம். சக்தி அதாவது விந்துவை ஊடுருவி வியாபித்து ஒன்று மற்றொன்றை பிரியாமல் சேர்ந்திருக்கின்றது என்பதை உணர்த்தும்.
ஆவுடை லிங்கத்தின் கீழ் அடங்கி யிருப்பது சக்தி சிவத்திற்குள் அடங்கித் தொழில் செய்வதைக் குறிக்கும்.
ஆவுடையாரின் மேல் பாகத்தில் வெளியே நீண்டிருக்கும் கோமுகி உயிர்களுக்கு செய்யும் தண்ணொளியாகிய இரக்கம் / கிருபை யைக் குறிக்கும். ஆலய வழிபாடு செய்யும் அடியார்கள் கோமுகி வழியாகப் பாயும் அபிஷேக தீர்த்தங்களில் இறைவனின் திருவருள் சுரப்பதாக மதித்து கையால் ஏந்தி தலையில் விட்டு சிவனருள் பெற்றதாக மகிழ்கின்றனர்.
ரிஷபம்-விடை-காளை மாடு என்பது சாஸ்திரங்களின்படி தர்ம தேவதையைக் குறிக்கும். சிவலிங்கத்தின் முன்பாக காணப்படும் நந்தி என்பதற்கு ஆனந்திப்பது என்று பொருள். வெண்மையான மாடாதலால் சாத்வீகத்தையும் பரம் பொருளாகிய இறைவனிடம் கொண்டு சேர்க்கும் சாத்வீக குணங்களாகிய சமம், விசாரம்/ஆலோசனை, சந்தோஷம், சாதுசங்கம்/சத்வகுணம் ஆகிய குணங்களை உணர்த்துவதாகும்.
நந்தியின் அனுமதி பெற்றுதான் சிவதரிசனம் பெற வேண்டும் என்பது மேற்கூறிய சமம், விசாரம்/ஆலோசனை, சந்தோஷம், சாதுசங்கம்/சத்வகுணம் ஆகிய நான்கு ஆத்ம குணங்களைக் கொண்டிருக்காவிடில் ஒரு ஆத்மா உடலுடையவன் கடவுளை சச்சிதானந்த அறிகுறி ரூபமாக உணர்தல் முடியாது என்ற வேதம் கூறும் இரகசியத்தைக் சொல்வதாகும்.
நந்திக்கும் லிங்கத்திற்கும் இடையே செல்லக்கூடாது என்பது ஆத்மா சச்சிதானந்த அனுபவத்திலிருந்து வெளிப்பட்டு பிரபஞ்ச விவகாரத்திற்குள் வரும்போது மேற்கூறிய ஆத்ம குணங்கள் வழியாக அனுபவம் சேரும்போது அந்த வழிக்கு எதிரான குணங்களைக் கொள்ளாமல் அந்த ஆத்ம குணங்களிலேயே நிற்க வேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.
சிவநேயர்கள் இந்த லிங்க தத்துவத்தை உணர்ந்து வழிபட்டால் சிறப்பான நன்மை பெறக்கூடும்.
சிவன் கோவில்களில் வரவு செலவுகள் சண்டேசுவரர் பெயரில் எழுதுவது பண்டைய வழக்கம். இது அறங்களைச் செய்யும் போது நான் செய்தேன் என்னும் தன் சிறப்பு இன்றி இறைவனது திருவருளே அறத்தைச் செய்வித்தது என எண்ணிச் செய்தல் வேண்டும் என்பதை வலியுறுத்தும் தத்துவம்.
சிவாலய தெய்வங்களில் தென்முகக் கடவுள், ஆடல் வல்லான், சண்டேசுவரர் ஆகியோர் தெற்கு நோக்கி காட்சியளிப்பார்கள். சண்டேசுவரர் எப்போதும் தியானத்தில் இருப்பார். சிவவழிபாட்டின்போது சிவனுக்கு அணிவித்து பெறும் பூமாலை, பரிவட்டம் முதலிய பொருட்களை சண்டேசர் சந்நிதியில் சேர்த்து சிவதரிசனப் பலனைத் தரவேண்டும் என பிராத்தனை செய்து அங்கு விபூதி பெற்று அணிய வேண்டும் என்பதே முறை. இடையறாத தியானத்தில் இருக்கும் சண்டேசருக்கு நமது வருகையை தெரிவிக்கவே அவரது சந்நிதியில் நின்று மெள்ளத் தட்டுதல் வேண்டும். அவரது சன்னதியை முழுமையாக வலம் வராமல் வலப்புறமாக சென்று தரிசித்து வந்த வழியே அரைவட்டமாக திரும்ப வேண்டும். சிவ புண்னிய பலனை பக்தர்களுக்கு அளிக்கும் அதிகாரம் கொண்டவர் சண்டேசுவரர். முதலில் விநாயகரையும் இறுதியில் சண்டேசுவரரையும் வழிபடுதல் வேண்டும் அப்போதுதான் சிவ வழிபாடு முழுமை பெறும். பஞ்சமூர்த்திகள் புறப்பாடு என்பது- விநாயகர், முருகன், சிவன், அம்பிகை, சண்டேசுவரர் என்பதாகும். சண்டேசர் மானிடராய் பிறந்து இந்நிலைக்கு உயர்ந்தவர்.
உகந்த நாட்கள்-
சிவராத்திரி, மகாசிவராத்திரி, ஆருத்ர தரிசனம், திங்கட்கிழமை, பௌர்ணமி, பிரதோஷ தினங்கள் சிறப்பு, எந்நாளும் வழிபடலாம்.
உகந்த மலர்கள்-
தும்பை, செம்பருத்தி, முல்லை, மருது, மல்லி, வில்வம், சங்கு சிறப்பு. தாழம்பூ தவிர மற்ற பூக்களை உபயோகிக்கலாம்
மகாகும்பமேளா-
பொதுவாக சூரியன் மேஷராசிக்கும், குருபகவான்-பிரஹஸ்பதி கும்பராசியிலும் பிரவேசிக்கும் போது கும்பமேளா நடைபெறும். பிரஹஸ்பதி, சூரியன் இரண்டும் சிம்ம ராசியில் பிரவேசிக்கும் நாள் மாகா கும்பமேளா நாளாகும். பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது வெளிப்பட்ட அமிர்தம் அசுரர்களிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக பெருமாள் எடுத்துக்கொண்டு ஓடினார். 12நாட்கள் (நமக்கு 1நாள் ஒருவருடம்) அசுரர்கள் துரத்தினர். அப்படிச் செல்லும்போது சில துளிகள் கீழே சிந்தின. அவை விழுந்த நான்கு இடம் அலகாபாத்-பிரயாகை (திரிவேணிசங்கமம்), நாசிக் (கோதாவரி), உஜ்ஜயினி (ஷிப்ரா நதி), ஹரித்துவார் (கங்கை). அமுதம் விழுந்த நீர் நிலைகளில் அன்றைய தினம் அமுதம் பொங்குவதாக ஐதீகம். 6 வருடத்திற்கு ஒருமுறை அலஹாபத்தில் நடப்பது அர்த்த கும்பமேளா எனப்படும். 12 வருடங்களுக்கு ஒருமுறை நடப்பது பூர்ண கும்பமேளா. மகா கும்பமேளா என்பது 12 பூர்ண கும்பமேளாக்களுக்கு ஒருமுறை வருவது. இது அலகாபாத்தில் மட்டுமே நடக்கும். அன்றைய தினம் சிவன் குருவாக இருந்து பிரமனுக்கும் தேவர்களுக்கும் உபதேசம் செய்கிறார்.
மகாமகம்-
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசிமாத மகநட்சத்திர நாளில் குருபகவான் சிம்மராசிக்கு வருவார். அன்று புண்ணிய நதிகள் கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி ஆகிய அனைத்தும் தங்களின் பாவங்களைப் போக்க கும்பகோணம் மகாமகக் குளத்தில் வந்து நீராடுவர். அன்று அங்கு நீராடல் சிறப்பு. 144 வருடத்திற்கு ஒரு முறை மாமாங்கமாகும்.
மாசிமகம்-
மாசிமாத பௌர்ணமி மகம் நட்சத்திரத்தில் அமையும். மாசிமாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம். சிம்மராசிக்கு உரிய மகநட்சத்திரத்தில் சந்திரன் இருப்பது விசேடம். இறைவனை கடலில் நீராட்டுவது வழக்கம். அடியவர்களும் நீராடி புண்ணியம் சேர்த்தலாகும். அன்றுதான் அம்பிகை அவதரித்த நாளாகும்.
&&&&&