குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
நிகழ்வுகள் சிந்தனைக்கு
ஓம் சிவாயநமக!
பிள்ளையாரின்குட்டுடனேபிழைநீக்கஉக்கியிட்டு
எள்ளளவும்சலியாதஎம்மனத்தையும்உமக்காக்கித்
தெள்ளியனாய்த்தெளிவதற்குத்தேன்தமிழில்போற்றுகின்றேன்
உள்ளதைஉள்ளபடிஉகந்தளிப்பாய்கணபதியே!
0=0=0=0=0=0
நிகழ்வுகள் சிந்தனைக்கு
எல்லோர் வாழ்விலும் தினசரி ஏதாவது ஓர் நிகழ்வு ஏற்படும். சொந்த வாழ்விலே அல்லது மற்றவர் வாழ்விலே நிகழும் நிகழ்வுகள் பல மனதை நெருடும். சில தொடும். சிந்திக்க வைக்கும். நடந்த நிகழ்வுகளைத்தவிர படித்தலில் கேட்டலில் பார்த்தலில் பல நிகழ்வுகள் சிந்தனையைத் தூண்டி விடுவதாக அமையும். அவ்வாறான நிகழ்வுகள் பண்டைக் காலம் தொட்டு நடந்து கொண்டுதானிருக்கின்றது.அதுபற்றிப் படித்துக் கேட்டுப் புரிந்து சிந்தித்து நற்பயன்களை பலர் அடைந்த வண்ணம் அவற்றை இன்றைய வாழ்வில் பயன்படுத்தி இன்றுவரை பலனடைந்தவர்களாகவே உள்ளார்கள். எனவே அதுபோன்றே முன்னாளிலும் இன்னாளிலும் நடந்த பல நிகழ்வுகள் தொகுத்து சீர்படுத்தி இன்றைய மனித சமுதாயத்தின் சிந்தனை பெற்று வாழ்வில் பயன்கொண்டு முன்னேற்றமடைய கொடுக்கப்பட்டுள்ளது.
விரும்பியதைப் படித்து தேவையானது என நீங்கள் நினைப்பதை வாழ்வில் உபயோகம் கொண்டு பயன் அடையுங்கள் என அன்புடன்---குருஸ்ரீ பகோரா.
அஷ்டாஷ்ட திரு உருவங்கள் (64)
சிஷ்யபாவ மூர்த்தி / முருகனிடம் பிரணவப் பொருள்கேட்ட வடிவம்!
Written by குருஸ்ரீ பகோராஓம்நமசிவய!
ஏகதந்தர் பகல் முழுதுங் காக்க! இரவினும் சந்தி
இரண்டன் மாட்டும் ஒகையின் விக்கினகிருது காக்க!
இராக்கதர் பூதம் உறு வேதாளம் மோகினி பேய்
இவையாதி உயிர்த்திறத்தால் வருந்துயரும்
முடிவிலாத வேகமுறு பிணிபலவும் விலக்கு
பாசாங்குசர்தாம் விரைந்து காக்க!
சிஷ்யபாவ மூர்த்தி / முருகனிடம் பிரணவப் பொருள்கேட்ட வடிவம்!
சிவபெருமானைக் காண கயிலை வந்த பிரம்மன் வழியிலிருந்த முருகனைக் கண்டும் காணததுபோல் செல்ல அந்த ஆணவப் போக்கினை போக்க முருகன் பிரம்மனை தன்னிடம் அழைத்தார். அருகில் வந்ததும் நீ யார்! நீ செய்யும் தொழில் யாது! எனக்கேட்க நான் பிரம்மன் படைப்புத் தொழிலைச் செய்கின்றேன் என்றான் பிரம்மன். நீ எவ்வாறு படைப்புத் தொழிலைச் செய்கின்றாய்! வேதங்கள் எல்லாம் தெரியுமா! என்றதற்கு பிரம்மன் வேதாகமங்களில் சிறிதறிவேன் என்றான். அப்படியெனில் ரிக் வேதம் ஓதுக! என்றார் முருகன். ஓம் என்று தொடங்கி வேதத்தை ஓதத் தொடங்கினான். அப்போது முருகன் நீ ஓதிய ஓம் என்பதற்கு என்ன பொருள் என மடக்கிக் கேட்க பிரமன் விழித்தான். வேதத்தின் முதல் சொல்லுக்கே பொருள் தெரியாத நீ எப்படி படைத்தல் தொழிலைச் செய்வாய் எனச் சினந்து பிரமனை சிறையில் அடைத்தார் முருகன்.
பிரமனை சிறையில் அடைத்ததால் படைப்புத் தொழில் பாதிக்காமல் இருக்க முருகனே படைப்புத் தொழிலை செய்தார். இதை அறிந்த திருமால் பிரம்மனை சிறையிலிருந்து விடுவிக்க தேவர் முனிவர்களுடன் கயிலை சென்று சிவபெருமானை வணங்கி, மகாதேவா தங்களின் புதல்வன் முருகன் பிரணவப் பொருளைக் பிரம்மனிடம் வினவி அவர் கூறாமையால் அவரைச் சிறையிலிட்டுள்ளார். தாங்கள் அருள் கூர்ந்து பிரம்மனை விடுவிக்க வேண்டும் என முறையிட்டார்.
சிவபெருமான் நந்தியெம்பெருமானை நோக்கி எமது கட்டளையைக் கூறி பிரம்மனை விடுவித்துவா என்றார். ஆறுமுகன் வேதாவை விடுவதற்கில்லை. இங்கிருந்தால் உன்னையும் சிறையிலிடுவேன் என்றார். இதைக் கேட்ட சிவன் சிரித்து அனைவரும் புடைசூழ முருகன் இருக்குமிடம் வந்து பிரம்மனை சிறை விடுவிக்கச் சொன்னார். ஆணைப்படி பிரம்மன் விடுவிக்கப்பட்டார். அப்போது பிரவணத்திற்குப் பொருள் தெரியாததால் பிரம்மனை நீ சிறையிலிட்டாய் . உனக்கு அதன் பொருள் தெரியுமா என்றார் சிவன்.
அதற்கு முருகப் பெருமான் எனக்குத் தெரியும். கேட்கும் முறைப்படி கேட்டால் அதனைக் கூறவும் தயாராய் உள்ளேன் என்றார். கந்த பெருமானை மேலிடத்தில் அமர்த்தி தான் கீழிருந்து சீடன் பாவனையில் இருக்க முருகப் பெருமான் குருபோல இருந்து ஓம் என்ற பிரணவத்தின் பொருளைக் கூறி சிவகுருநாதன் எனும் பெயரினைப் பெற்றார்.
சிவனைக் கானவந்த பிரமனை ஓம் எனும் பிரணவத்தின் பொருள்கேட்டு உறைக்கவில்லை என்று சிறையிலடைத்த பின் அவரை விடுவிக்க வந்த சிவனுக்கு குருவாக இருந்து ஓம் என்ற பிரணவத்தின் பொருளைக் கூற சிஷ்ய பாவனையில் இருந்து சிவன் கேட்ட வடிவம் சிஷ்யபாவ மூர்த்தி / முருகனிடம் பிரணவப் பொருள்கேட்ட வடிவம்!
#####
ஓம்நமசிவய!
விக்கினவர்த்தனர் மேற்கென்னுந் திக்கதனிற் காக்க!
வாயுவிற் கசகன்னர் காக்க!
திகழ்வு தீசி தக்க நிதிபன் காக்க!
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க!
இரத்தபிக்ஷாப் பிரதான மூர்த்தி!
சிவபெருமானை இகழ்ந்த பிரமனது நடுத்தலையைக் நகநுனியால் கிள்ளி எடுத்தார் பைரவர். பிரம்மனைப் போல மற்றவர்களும் ஆணவம் கொள்ளக்கூடாது என்பதால் அனைவரிடமும் இரத்தம் ஏற்கும்படிச் சிவபெருமான் ஆணையிட்டார். அதன்படி இறைவனால் அனுக்கிரகிக்கப்பட்ட காலவேகன், கனன்முகன், சோமகன், ஆலகாலன், அதிபலன் ஆகிய கணத்தலைவர்களுடன் சிறந்த தவசிகள் வசிக்கும் வனங்களை அடைந்து தன் சூலப்படையால் அவர்களைக் குத்தி இரத்தத்தைக் காபாலத்தில் ஏற்றார். அவ்வாறு இரத்தம் கொடுத்தோரில் உயிர் துறந்தோரை உடனே எழுப்பி அவர்களது அகந்தையை அழித்து அருள் புரிந்தார்.
உலகம் முழுவதும் சுற்றி பின் மாயவன் இருக்கும் வைகுந்தம் வந்தார். திருமாலின் சாயலிலே தண்டு, கோதண்டம், சங்கு, சக்கரம், கொண்டு இருக்கும் திருமாலின் முதற் காவலன் விஷ்வக்சேனன் பைரவரின் பெருமையை அறியாமல் தடுக்க பைரவர் அவனைச் சூலத்தில் குத்தி தன் தோள்மீது சாய்த்தார். பூமகள், நிலமகள் இருபுறமிருக்க ஆதிசேஷன் பாம்புப் படுக்கையில் இருந்த திருமால் முன் சென்றார் பைரவர். படுக்கையிலிருந்து எழுந்து பைரவரை வணங்கிய திருமால் எம்பெருமான் இங்கு எழுந்தருளியிருப்பது யாது காரணம் எனக் கேட்க பலிக்கு வந்தோம் உமது இரத்தத்தை உடனே தருக எனச் சொல்ல திருமால் தானே முன்வந்து தமது நெற்றியில் உள்ள நரம்பை பிளந்து பெருகிய இரத்தை கபாலத்தில் சொரியும்படி விட்டார்.
இரத்தம் அதிகமாக வெளியேறியதால் திருமால் மயக்கமானார். திருமகளும் நிலமகளும் கலங்கி பைரவரை வணங்கினர். பைரவர் திருமாலை மயக்கத்திலிருந்து எழுப்பினார். திருமால் கேட்டுக் கொண்டதன் பேரில் விஷ்வக்சேனனை தன் சூலத்திலிருந்து விடுவித்தார். பின் தேவர்கள், முனிவர்கள் அகந்தை களைந்து அண்டங்கள் தோறும் சென்றார்.
சர்வ சங்கார காலமாகிய யுகங்கள் தோறும் வேதமே நாயாக அதன் மீது உலாவருவார். ஆணவம்தான் நம்முடைய எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கும். ஆணவம் காரணமாகவே நாம் மற்றவர்களை அவமதிக்கின்ரோம். தெய்வத்தை நிந்தை செய்கின்றோம். சகோதர மக்களுக்குத் தீமைகள் செய்கின்றோம். அதனால்தான் கர்ம வினை எனும் சங்கிலியால் கட்டப்படுகின்றோம். இதனை நீக்கவே சிவபெருமான் பைரவர் வடிவம் கொண்டு எல்ல இடங்களிலும் இரத்தப் பலி கொண்டார் என்பதாகும்.
தேவர்களின் அகந்தையை அழிக்க இரத்தப் பிச்சை எற்கத் தோன்றிய வடிவம் இரத்த பிட்சாப் பிரதான மூர்த்தி. நிகழ்வு நிகழ்ந்த தலம்: காசி.
#####
ஓம்நமசிவய!
கிழக்கினிற் புத்தீசர் காக்க!
அக்கினியிற் சித்தீசர் காக்க!
உமாபுத்திரர் தென் திசை காக்க!
மிக்க நிருதியிற் கணேசுரர் காக்க!
பிரார்த்தனா மூர்த்தி!
தாருகாவனத்து முனிவர்கள் தாமே தவஞானிகள், தாம் செய்யும் நற்கருமங்களே பலனைத் தரும் என்றும் அவரின் பத்தினியர் தாமே கற்பில் சிறந்தவர்கள், தங்களின் கற்பின் ஆற்றலால் எதையும் சாதிக்க முடியும் என்று அகந்தை கொண்டிருந்தனர். இவர்களின் ஆணவத்தை அழிக்க எண்ணிய பெருமான் பிச்சை உகக்கும் பெம்மனாகவும், திருமால் மோகினியாகவும் உருவெடுத்து தாருகாவனம் வந்தனர். தாருகாவனத்து முனிவர்கள் மோகினியைக் கண்டதும் காமம் மேலிட, ஒழுக்கத்தையும் தவத்தையும் விடுத்து மோகினியிடம் சல்லாப வார்த்தைகளைப் பேசி மயங்கினர்.
ஒரு ஆடவன் அழகாக இருக்கின்றான் என ஒரு பெண் நினைத்தாலே அப்பெண் தன் கற்பினை இழந்ததற்குச் சமம் என்ற சூழலில் ஆடையின்றி பேரெழில் கொண்ட திருமேனியுடன் வந்த பெருமானின் அழகில் மயங்கி தத்தம் இல்லங்கள் விட்டு அவர் பின்னே சென்றனர். ஊர் எல்லையைக் கடந்ததும் அங்கே தன் கணவர்கள் மோகினியின் அழகில் மயங்கி இருப்பதைக் கண்டனர்.
தங்களது தவமும் யாகமும் ஒழுக்கமும் தமது மனைவியரின் கற்பு நெறியும் கெடக் காரணமாய் இருந்த திகம்பரன் மீது கோபங்கொண்டு அவனை அழிக்க அபிசார வேள்வி செய்து அதில் தோன்றிய நெருப்பு, புலி, மான், மழு, பாம்பு ஆகியவற்றையும் முயலகனையும் திகம்பரன்மீது ஏவபாம்புகள் அணிகலன்களாயின. புலியின் தோல் ஆடையானது. முயலகனை கால் கீழ் அழுத்தி நடனம் புரிந்தார். முனிவர்களுக்கு ஞானம் அளித்து கயிலை அடைந்தார்.
உமாதேவி தாம் சக்தியாய் இருக்கையில் இறைவன் மாலாகிய மோகினியை உடன் அழைத்துச் சென்றும், தான் உடன் இல்லாத சமயத்தில் தாருகாவனத்தில் நடனம் செய்தது கண்டும் ஊடல் கொண்டார். அதைப் போக்க நினைத்த பெருமான், உமையே எனது ஒரு சக்தியே நீயாகவும், திருமாலாகவும், காளியாகவும், துர்கையாகவும் இருக்கின்றது என்பதை நீ அறிவாய். மனைவியாக இருக்கும்போது நீயாகவும், ஆணுருவாகையில் திருமாலாகவும், கோபம் அடையும்போது காளியாகவும், போர் முனையில் துர்க்கையாகவும் விளங்குகின்றீர்கள். இதற்காக கோபமும் ஊடலும் கொள்ள வேண்டாம் என்றார். உமையின் ஊடலைத் தணித்த வடிவம். பிரார்த்தனா மூர்த்தி,
உடனே உமை அத்திருநடனத்தை தரிசிக்க விரும்பினார். அப்போது சிவன் ஆடிய தாண்டவமே கௌரி தாண்டவம் எனப்படும்.
உமையின் ஊடலைத் தணித்த வடிவம். தன்னை விடுத்து மோகினி உருகொண்ட கண்ணனுடன் தருகாவனம் சென்றது கண்டு ஊடல் கொண்ட சக்தியை துதித்து போற்றிய வடிவம், உண்மையை உணர்ந்து இறைவி இறைவனை பிரார்த்தனை செய்த வடிவம் இரண்டும் கலந்த வடிவம் பிரார்த்தனா மூர்த்தி.
#####
ஓம்நமசிவய!
இருபதம் ஏக தந்தர் காக்க! வாழ்கரம்
க்ஷிப்பிரப் பிரசாதனர் காக்க! முன்கையை
வணங்குவார் நோய் ஆழ்தரச்செய் ஆசாபுரகர் காக்க!
கேழ்கிளறும் நகங்கள் விநாயகர் காக்க!
வராக சம்ஹாரமூர்த்தி!
இரனியாக்கன் என்ற அசுரன் நான்முகனை நோக்கித் தவம் செய்து பல வலிமை மிக்க வரங்களை வேண்டி பெற்றதனால் ஆணவம் கொண்டு உலகத்தை பாய்போல் சுருட்டிக் கடலில் மறைத்தான். தேவர்கள் திருமாலிடம் முறையிட அவர் வராக வடிவமெடுத்து கடலினுள் புகுந்தார். வராக வடிவம் மலயைவிட இரட்டிப்பு உயரத்துடன் அதன் கால்களுக்கு இடைப்பட்ட தூரம் 1000காத தூரம் கொண்டு அது விடும் மூச்சுக் காற்று உலகை உலுக்குவதாகவும் வடவாமுகாக்கினி போன்ற பார்வையுடன் இருந்தது. வடவாமுகாக்கினி என்பது கடலினுள் இருக்கும் பெரிய நெருப்புப் பகுதி. கடலின் நீர் அதிகமாகாமலும் குறையாமலும் இருக்கச் செய்வது இந்த நெருப்புதான் என்கின்றது நமது புராணங்கள்.
வராகம் கடலைக் கலக்கி இரணியனைக் கண்டு அவனை கொம்பினால் குத்தி அவனிடமிருந்த பாய்போல சுருண்டிருந்த உலகை தன் கொம்பினால் கொண்டுவந்து ஆயிரம் தலையுடைய ஆதிசேஷன் தலைமீது விரித்தார்.
இந்த வெற்றியினால் வராகம் அகந்தைக் கொண்டது. மலைகளை இடித்து கடலைக் கலக்கி உயிர்களுக்குத் துன்பம் தர தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். பெருமான் வேடுவனாக வடிவமெடுத்து தமது கரத்தில் உள்ள முத்தலை வேலினால் வராகத்தின் நெற்றியில் குத்தி நிலத்தில் அழுத்தினார். அதன் கொம்புகளில் ஒன்றைப் பறித்தார். அதனால் வராகத்தின் அகந்தை அகன்றது. தேவர்களின் வேண்டுதலின் பேரில் அக்கொம்பை தன் உடலில் அணிகலனாக அணிந்தார். அகந்தை அகன்ற திருமால் சிவனைத் துதித்து வைகுந்தம் சென்றார்.
இரணியாக்கன் தன் வலிமையால் பூமியை பாய்போல்ச் சுருட்டி கடலினுள் ஒளித்து வைக்க திருமால் வராக அவதாரம் எடுத்து அவனை அழித்து பூமியை மீட்டும் ஆவேசம் தனியாமல் இருக்க வேடுவனாக வராகத்தை அடக்கிய வடிவம் வராக சம்ஹார மூர்த்தி.
#####
ஓம்நமசிவய!
தக்க குய்யந்தன்னை வக்கிரதுண்டர் காக்க!
சகனத்தை அல்லல் உக்க கணபன் காக்க!
ஊருவை மங்களமூர்த்தி உவந்து காக்க!
தாழ்முழந்தாள் மகாபுத்தி காக்க!
மச்ச சம்ஹாரமூர்த்தி!
சோமுகாசுரன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து வரம் பெற்றதனால் அகந்தைக் கொண்டு பிரம்மன் முன் தோன்ற, அசுரனைக் கண்ட பிரம்மன் அஞ்சி நிற்க உன் வலிமை இவ்வளவுதானா எனக்கேட்டு அவர் கையிலிருந்த நான்மறைகள் நான்கினையும் பறித்துக்கொண்டு கடலிற் சென்று மறைந்தான்.
என்ன செய்வது என அறியாமல் பிரமன், திருமாலிடம் முறையிட, கோபங்கொண்ட திருமால் மீன் வடிவமெடுத்து கடலினுள் புகுந்து சோமுகாசுரனைக் கண்டு அவனுடன் சண்டையிட்டு அவனுடைய ரத்தத்தைக் குடித்து நான் மறைகளையும் மீட்டார். பிரம்மனிடம் அவைகளை ஒப்படைத்தார். ஆனால் அதன் பின்னரும் ஆவேசம் அடங்காமல் ஏழு கடலையும் ஒன்றுகூட்டி கலக்கினார். இதனால் உலக உயிர்கள் துன்பமடைந்தன. தேவர்கள் இதனை சிவபெருமானிடம் கூற மீன்பிடி வலைஞராக உருவெடுத்து ஏழு கடலையும் மறைக்கத் தக்கவாறு வலை வீச அந்த மீன் அகப்பட்டது. அதன் விழிகளைப் பறித்து அதன் வலிமையைக் குன்றச் செய்தார். தேவர்கள் விருப்பப்படி அந்த மீனின் கண்களை திருமேணியில் கையில் மோதிரமாக அணிந்தார். கண்ணிழந்த மீன் வடிவம் பெற்ற திருமால் தன் உணர்வு அடைந்து வைகுந்தம் சேர்ந்தார்.
பிரம்மனிடமிருந்து நான்மறைகள் நான்கையும் கவர்ந்த சோமுகாசுரனை அழிக்க மச்ச அவதாரம் கொண்ட திருமால் அசுரனை அழித்த பின்னும் ஆவேசம் அடங்காமல் இருக்க மீன்பிடிக்கும் வலைஞராக உருவெடுத்து மச்சத்தைப் பிடித்து அதன் வலிமைதனைக் குன்றச் செய்த வடிவம் மச்சாரி/ மச்ச சம்ஹார மூர்த்தி.
#####
ஓம்நமசிவய!
அகட்டினைத் துலங்கு ஏரம்பர் காக்க!
பக்கம் இரண்டையும் தராதரர் காக்க!
பிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினகரன் காக்க!
விளங்கிலிங்கம் வியாளபூடணர்தாம் காக்க!
கூர்ம சம்ஹாரமூர்த்தி!
சாவா மூவா நிலைபெற அமுதம் உண்ணவேண்டித் தேவர்களும், அசுரர்களும் மந்தார மலையை மத்தாகவும் வாசுகி பம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைய, மந்தாரமலை நிலை பிறழாமலிருக்க திருமால் ஆமை வடிவம் கொண்டு அதைத் தாங்கிப் பிடித்தார். வாசுகி துயரம் தாங்காமல் நஞ்சை கக்க தேவ அசுரர்களைக் காக்க திருமால் முயல நஞ்சின் வேகத்தால் அவரது நிறம் கருமை நிறமானது. எம்பெருமான் சுந்தரர் மூலம் ஆலகாலத்தை எடுத்து தானே உண்டார், மீண்டும் கடைய பாற்கடலிலிருந்து மூதேவி தோன்ற அவளை வருணனுக்கு அளித்தனர். தண்டம் கமலத்துடன் தன்வந்திரி என்ற மருத்துவன் தோன்றினான். பின்னர் அறுபது கோடி மகளிர் தோன்ற அவர்கள் தேவலோகத்திற்கு அணுப்பப் பட்டனர். பின்னர் மது தோன்ற தேவர்கள் பருக அசுரர்கள் அதனைப் புறக்கணித்தனர். பின் தொடர்ந்து வந்த உச்சைச்சிரவம் என்ற குதிரையை இந்திரனுக்கும், கசுத்துவமணியை திருமாலுக்கும், பஞ்சதருக்கள், காமதேணு, சிந்தாமணி ஆகியவை இந்திரனுக்கும், சந்திரன் உலகிற்கு ஒளியூட்டவும், திருமகளை திருமாலுக்கும் அளித்தனர். இறுதியில் அமிர்தம் வந்தது. திருமால் மோகினி வடிவம் கொண்டு தேவர்களுக்கு மட்டும் வழங்க ஒரு அசுரன் மட்டும் அமிர்தம் அருந்த அதைக் கண்ட சூரிய சந்திரர்கள் திருமாலிடம் சொல்ல அவர் அந்த அசுரனின் தலையை வெட்ட அமிர்தம் அருந்தியதால் சாகாமல் உயிர் வாழ்ந்து சிவார்ச்சனை செய்து இராகு, கேது கோள்களாக மாறினர்.
இந்நிலையில் ஆமை உருக்கொண்ட மாயை கடல் ஏழையும் ஒன்றாக்கி அதன் வெள்ளம் உலகை அழிக்கும்படியாக கலக்கி உயிரினங்களை துன்புறுத்தலாயிற்று. இந்திரன் பிரம்மன் இருவரும் கயிலை சென்று சிவபெருமானிடம் பாற்கடலில் அமுதம் கடைய ஆமை வடிவம் கொண்ட திருமால் இன்னும் ஆவேசம் அடங்காமையால் உயிர்கள் துன்புருவதைத் தெரிவிக்க, சிவபெருமான் தன் கையிலிருந்த சூலப்படையால் ஆமையின் வயிற்றில் குத்தி அதன் இறைச்சியை குடைந்து எடுத்ததன் காரணமாக ஆமையின் வலிமை குன்றியது. அந்த ஆமை ஓட்டினை தேவர்கள் விருப்பப்படி தன் மார்பில் அணிந்து கொண்டார். சுய உணர்வு கொண்ட திருமால் சிவனைப் பணிந்து வைகுந்தம் சென்றார்.
அமுதம் கடைந்த பின் கூர்ம அவதாரத்தால் உலகிற்கு நேர்ந்த துன்பத்தினை போக்க கூர்மத்தின் அகந்தையை அடக்கிய வடிவம் கூர்ம சம்ஹாரமூர்த்தி
#####
பிரமசிரச்சேத மூர்த்தி / பிரமசிரக்கண்டீசர்!
Written by குருஸ்ரீ பகோராஓம்நமசிவய!
வாமமுறும் இருதோளும் வயங்கு கந்தபூர்வசர்
தாம் மகிழ்ந்து காக்க! ஏமமுறு மணிமுலை
விக்கின விநாசர் காக்க! இதயந் தன்னைத்
தோமகலுங் கணநாதர் காக்க!
பிரமசிரச்சேத மூர்த்தி / பிரமசிரக்கண்டீசர்!
பொன்மலை-மேருமலையின் சிகரத்தில் பிரம்மனும் திருமாலும் இருக்க தேவர்களும் முனிவர்களும் மும்மூர்த்திகளில் எல்லா உயிர்களிடத்தும் உறையும் முழுமுதற் கடவுள் யார் என்ற கேள்வியை எழுப்ப, ஆணவ முதிர்ச்சியின் காரணமாக நானே பரப்பிரம்மம் என பிரம்ம தேவன் கூறினான். மறுத்த திருமால் நானே உன்னை பெற்றவன் அதனால் நானே பரப்பிரம்மம் என்றார். வாதம் தொடந்து நடைபெற முனிவர்களும் தேவர்களும் அங்கிருந்து அகன்றனர்.
அப்போது வேதமும், பிரணவமும் வெவ்வேறு உருக்கொண்டு வந்து நீங்கள் இருவரும் வீணாக ஏன் வாதம் புரிகின்றீர்கள். சர்வ உலகங்களுக்கும் சிவபெருமானே பரம்பொருள் என்று கூறியதையும் அவர்கள் ஏற்கவில்லை. அவர்கள் சண்டையை நிறுத்த சிவன் ஜோதியுருவாய் காட்சி தந்ததை எதோ சுடர் என இருவரும் அலட்சியம் செய்தனர். ஜோதி நடுவே சிவபெருமான் உமையுடன் காட்சி கொடுக்க கண்ட திருமால் மெய்ஞானச் சுடர் சிவபெருமானே என அறிந்து வணங்கினார்.
மலரோனுக்கு தெளிவு பிறக்கவில்லை. ஆணவ மலம் அகலவில்லை. தன் நடுச்சிரத்தால் பெருமானை இகழ்ந்து பேச சிவபெருமான் சினமின்றி அமைதியாக பிரம்மனின் இறுமாப்பு அழியவும் மற்றவர்கள் தெளிவு பெறவும் வழி என்ன என்று சிந்திக்க அங்கே பைரவக்கடவுள் தோன்றினார். பிரமனின் ஐந்து தலைகளில் இகழ்ந்து பேசிய நடுச்சிரத்தை நகநுனியால் துண்டித்தார். அத்தலையை தன் கைகளில் ஏந்தியபடி பிரமனுக்கு உயிர்பிச்சை அளித்தார். தேவர் முனிவர் வாழும் இடங்களில் சென்று இரத்தப் பிச்சை ஏற்றார். இரத்தப் போக்கால் மயங்கி இருந்தோரை எழுப்பி ஆணவம் நீங்கி வாழ ஆசிர்வதித்தார்.
சிவபெருமான் அருள் பெற்ற பைரவர் மலரடி வணங்கி திருமால் வைகுந்தம் அடைந்தார். உறக்கத்திலிருந்து எழுந்தவன்போல் பிரம்மன் எழுந்து பைரவரை வணங்கி தன் அபராதம் பொருத்தருள வேண்டினான். நான்முகன் என நானிலத்தில் வாழ்வாய் என பைரவர் கூறிச் சென்றார்.
பைரவர்- அச்சுறுத்தும் போர்க்குரல் உடையவர் என்ற பொருளுடையது. வெண்ணிறத்தவர், நாற்கரத்தவர், வலக்கரங்களில் வச்சிரமும், கைக்கோடாரியும், இடக்கரங்களில் பிரம்ம கபாலமும் சூலமும் கொண்டு சுருட்டி உயர்த்திய தலை முடியுடன், புலித்தோலாடை, தோடு, மகரக்குழையுடன் இருப்பர்.
தானே பரப்பிரம்மம் என அகந்தைகொண்ட பிரம்மனின் நடுத்தலையை நக நுனியால் துண்டித்த பைரவக்கடவுளின் வடிவம் பிரம்ம சிரச்சேத மூர்த்தி. நிகழ்வு நடந்த தலம்: திருக்கண்டியூர். காட்சி: காஞ்சி கயிலாசநாதர் கோவில்
#####
ஓம்நமசிவய!
தவிர்தலுறாது இளங்கொடிபோல் வளர்மணி
நாசியைக் சித்திதார்த்தர் காக்க! காமருபூ
முகந்தன்னைக் குணேசர் நனி காக்க!
களம் கணேசர் காக்க!
கருடாந்திக மூர்த்தி!
திருமகளைத் தன் மார்பிலேகொண்ட திருமால், தண்டம், சுதரிசனம், சார்ங்கம், கதை, சங்கு ஆகிய ஐம்படைகளுடன் தன் ஊர்தியான கருடன் மேலேறி கயிலை அடைந்தார். நந்தி தேவரை பணிந்து அனுமதி பெற்று உள்ளே சென்று காளகண்டமும், சூரிய, சந்திர அக்னியாகிய முக்கண்களும், மான், மழு, அபயம், வரதம் கொண்டு விளங்கும் நான்கு தோள்களும், கங்கையும், கொன்றையும் திங்களும் அணிந்த செஞ்சடையும் பார்வதிதேவி பாகமுமாக சிவபெருமான் அமர்ந்திருப்பதை கண்டு தரிசனம் செய்து ஆனந்தத்தில் ஆழ்ந்திருந்தார்.
வெகுநேரமாய் திருமால் திரும்பி வராமையால் கருடன் தானும் உள்ளே செல்ல முற்பட்டான். நந்தி தடுக்க, என்னைத் தடுக்க நீயார்! நீயே பிச்சை எடுப்பவனின் வாகனமாய் இருக்கின்றாய், உன்னை நான் உயிரொழிப்பேன் எனக்கூறியதைக் கேட்ட நந்தி தேவர் பெருஞ்சினமுற்று தம் மூச்சுக் காற்றை உள்வாங்கி வெளியே செலுத்த அதனால் விரட்டப்பட்ட கருடன் பல காதங்கள் கடந்து விழுந்தான். உள்வாங்கும் மூச்சால் மீண்டும் கீழே விழுந்து துன்பமுற்றான். நந்தி தேவர் மூச்சினை உள்வாங்கி வெளியேவிட ஒவ்வொரு மூச்சினாலும் தொடர்ந்து துன்பப் பட்டான் கருடன். தான் இதிலிருந்து தப்ப திருமாலை அழைத்தான் கருடன்.
கருடன் நிலையறிந்த திருமால் சிவபெருமானிடம் கருடனுக்கு அருள் புரிய வேண்டினார். சிவன் திருமால் மூலம் கருடனை விடுவிக்கச் சொல்லியும் நந்தி தேவர் இறைவனை இகழ்ந்த இவனை மன்னிக்கமாட்டேன் எனக்கூறிவிட திருமால் மீண்டும் சிவனிடம் முறையிட சிவபெருமான் நந்தி தேவரை அழைத்து கருடனை விட்டுவிட ஆணையிட்டார். கருடன் நந்தி தேவர் பிடியிலிருந்து தப்பி தன் அகந்தை அழிய திருமாலுடன் திருபாற்கடல் சேர்ந்தான்.
சிவனைக் காணச் சென்ற திருமால் திரும்பி வராமையால் தானும் உள்ளெ புகமுற்பட நந்தி தடுக்க கருடன் சிவநிந்தனை செய்யததால் நந்தி தேவர் சீற்றத்திற்கு ஆளாகித் துன்புற உதவிக்கு திருமாலை அழைக்க திருமால் சிவனிடம் சொல்ல கருடனுக்கு அருள் புரிந்த சிவ வடிவம். கருடனுக்கு அருளிய மூர்த்தி.கருடாந்திக மூர்த்தி!
#####
ஓம்நமசிவய!
நவில்சிபுகம் கிரிசை சுதர் காக்க!
நனி வாக்கை விநாயகர்தாம் காக்க!
அவிர்நகை துன்முகர் காக்க!
அள் எழிற் செஞ்செவி பாச பாணி காக்க!
கௌரிலீலா சமன்விதமூர்த்தி!
சிவபெருமான் திருக்கயிலையில் இருந்தபோது உமை, இறைவா தங்களின் உண்மை நிலையை அறிய விரும்புகின்றேன். தாங்கள் உருவமற்றவர் என்றும் உருவங்கள் நிறைந்தவர் என்றும் கூறுவதன் விளக்கம் யாது என்றார்.
பிரம்மமாக இருக்கும்போது எனக்கு உருவம் கிடையாது. உலகத்து உயிர்களுக்கு அருள் புரியவேண்டும்போது உருவங்களை ஏற்கின்றேன். அவைகள் எல்லாம் நம் அருள் வடிவங்கள் என்று சிவன் கூறியதும், அருள் வடிவங்கள் என்றால் அவை என்னுடைய வடிவங்கள் என்றுதானே பொருள் என உமை விளையாட்டாக கூற, சிவன் என் எதிரில் உன்னைப் பற்றி நீ பெருமையாகப் பேசினாய். யாமே எல்லா இடத்திலும் இருந்து செயலாற்றினோம். அவ்வாறு செயலாற்றல் இல்லாமற்போனால் உலகம் முழுவதும் அறிவினை இழந்து செயலற்றுப் போகும் அதை இப்போது நேரடியாக காண்பாயாக எனக் கூறி திருமால், பிரம்மன் ஆகியோரின் உள்ளத்தில் பொருந்தியுள்ள அறிவினை அகற்றினார்.
தம் உள்ளத்தின் அறிவு அகன்றதும் திருமால், பிரம்மன் இருவரும் ஒன்றும் செய்ய முடியாமல் முடங்கினர். அதே சமயம் அனைத்து ஆன்மாக்களும் செயலிழந்த நிலையை அடைந்ததை தேவி கண்டாள். உண்மை நிலையைப் புரிந்த உமை இறைவா இவர்களை முன்புபோல் இயங்கச் செய்வீர்களாக என வேண்டினார். பெருமான் அவர்கள் மீண்டும் செயலாக்கம் கொள்ள அருள் புரிந்தார்.. தேவர்கள் எல்லாம் ஐயனே சிறிது காலம் நாங்கள் எந்தச் செயலினையும் செய்யாமல் இருந்ததற்கு எங்களை மன்னித்து அருளுக என்றனர். இந்தச் செயலிழப்பு உங்கள் தவறல்ல, அதற்கு உமையே காரணம். எனவே அவர் பூ உலகில் பிறந்து மீளவேண்டும் என அருளினார்.
தட்சன் தனக்கு உமையே மகளாகப் பிறக்கவேண்டும் என தவமிருந்ததனாலும், பெருமான் தட்சன் மகளாக உமை தற்போது பூ உலகில் பிறக்க அருளினார். மாசிமாத மக நட்சத்திரத்தன்று குழந்தையைக் கண்டெடுத்து தாட்சாயிணி எனப்பெயரிட்டு வளர்த்தனர். தாட்சாயிணி 12 ஆண்டுகாலம் கன்னி மாடத்தில் சிவனை நினைந்து தவமேற்கொள்ள பெருமான் வேதியர் வேடமிட்டு வந்து பெண்ணே! உன்பாலொரு வேட்கையில் வந்தோம், கொடுப்பதாகக் கூறு என்றார். அது முடியுமானால் தருதும் என்றார் தாட்சாயிணி. உண்ணை மணமுடிக்கும் எண்ணத்தில் யான் வந்துள்ளேன் அதற்கு இசைவு தறுவாய் என்றார். சினம் கொண்ட தாட்சாயிணி சிவனை மணக்கத் தவமிருக்கும் என்னிடம் இவ்வாறு கூறினாய் என அவரை விட்டினார்.
உடன் சிவன் தன் உருவைக்காட்ட அனைவரும் மகிழ்ந்தனர். தட்சனும் வேதியராய் வந்தது சிவன் என அறிந்து தன் மகளை மணம் முடித்துக் கொடுத்தான். மணம் முடிந்தவுடன் பெருமான் மறைந்து விட்டார். ஒரு நாள் பகல் பொழுதில் காளை வாகனராய் வந்து தேவியை கயிலைக்கு அழித்துச் சென்றார்.
சிவன் திருமணம் முடிந்ததும் மறைந்தற்கும் தன்னிடம் ஒன்றும் சொல்லாமல் தன்னை மதியாது தட்சாயணியைக் கயிலை மலைக்கு கூட்டிச் சென்றதற்கும் கோபங்கொண்டு அன்று முதல் சிவனை மதிக்காமல் இருந்து வந்தான் தட்சன்.
கௌரியாகிய உமா தேவியருடன் திருவிளையாடல் புரியும் நிலையே இது. உமையுடன் கேளிக்கைகள் திருவிளையாடல் புரியும் நிலையில் இருக்கும் வடிவம் கௌரி லீலா சமன்வித மூர்த்தி.
#####
ஓம்நமசிவய!
புருவந் தம்மைத் தளர்வில் மகோதரர் காக்க!
தடவிழிகள் பாலசந்திரனார் காக்க!
கவின்வளர் அதரம் கசமுகர் காக்க!
தாலங் கணக்கீரிடர் காக்க!
கௌரிவரப்பிரத மூர்த்தி!
தவமிருந்த மந்திரமலையின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் சிலகாலம் அம்மலையில் வாசம் செய்து வந்தார். அக்காலத்தே அசுரன் ஒருவன் பிரம்மனை நோக்கி உமையின் உடலினின்று தோன்றும் பெண்ணினால் அன்றி வேறு ஒருவராலும் எனக்கு மரணம் ஏற்படக்கூடாது என வேண்டி அருள் பெற்றான். வரம் பெற்ற அகந்தையில் அனைவரையும் துன்புறுத்திய அசுரன் தேவர்களைத் துன்புறுத்த அவர்கள் பிரம்மனிடம் முறையிட, பிரம்மன் சிவபெருமானிடம் அசுரனை ஒழிக்க வேண்டினான்.
சிவபெருமான் உமையை நோக்கி காளி வருக என்றார். உடனே கரிய நிறம் கொண்டவளாக தேவி வந்து, இறைவா இந்நிறத்தில் என்னை அழைத்தது ஏனோ என்றார். விருப்பமில்லா மனைவி மகளிரில் பதருக்குச் சமம், என் நிறத்தை மாற்றி என்னை கௌரியாக மாற்ற விழிகளில் நீர் சிந்தி சிவனிடம் வேண்ட, பெண்ணே! அனைத்து உயிர்களையும் காத்தலே நமது கடமை! ஆதலால் ஒரு காரியம் கருதியே கரிய நிறமுள்ளவளாக அழைத்துள்ளோம். கலங்க வேண்டாம், பின்னாளில் இதனை அறிவாய் என மலர்ந்தருளினார்.
கரிய நிறத்துடன் இமயமலைச் சாரலில் லிங்கமைத்து பூசித்து வரும்போது பிரமன் தேவர்களுடன் வந்து தேவி தமது திருமேனியிலிருந்து ஒரு பெண்ணை தோற்றுவித்து எங்களைத் துன்புறுத்தும் அசுரனை அழிக்க வேண்டும் என்றார்.
கரிய காளி தன் கரிய நிறத்தை விலக்க அது துர்க்கையானது. பிரம்மன் அளித்த சிம்ம ஊர்தியில் ஏறிச் சென்று அசுரனை வதம் செய்தார். மந்தார மலையை அடைந்து சிவபெருமானை வணங்கி தனது கருமை நிறத்தால் எய்திய காளி என்ற பெயர் நீங்கவும், பொன்னிறத்துடன் கௌரி என்ற பெயர் நிலைக்கும்படியும் வேண்டிப் பெற்றார். இந்தக் கோலவடிவமே கௌரிவரப்பிரத மூர்த்தி.
தேவர்களுக்கு துன்பம் இழைத்த அரக்கனை அழிக்க காளி வருக என்ற சிவன் கருமை நிறம் நீக்கி துர்க்கா தேவியாகி அரக்கனை அழித்து மீண்டும் சிவனை அடைந்து பொன்னிறமான கௌரியாக அருள் புரிந்த வடிவம். கௌரிவரப்பிரத மூர்த்தி.
#####
More...
ஓம்நமசிவய!
வளர் சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க!
வாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்தர
தேகம் மதோத்கடர்தாம் அமர்ந்து காக்க!
விளரற நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க!
திரிபாத திரிமூர்த்தி!
பேருழிக் காலம் தோன்றும்போது பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரும் ஆயுள் முடிந்து சிவனிடம் அடங்குவர். பலகோடி பிரமாக்கள், உருத்திரர், திருமால் ஆகியோர் தோற்றுவிக்கப்பட்டு அந்தந்த பணியிலிருப்பர் என்பது மூல தத்துவமாகும். இந்த மூவரும் பேரூழிக்காலத்தில் ஒடுங்குதல்கள் என்பது நித்தியம், நைமித்தியம், பிராகிருதம், ஆத்தியந்தகம் என நான்கு வகைப்படும்.
நித்தியம் என்பது உயிரினங்கள் அவர்களுக்கு குறிக்கப்பட்ட ஆயுளின் இறுதியில் பெருமானிடம் ஒடுங்குவதாகும். இது வெளிப்படையானது.
நைமித்தியம் என்பது பிரம்மாவின் பகல் கூடிய உலகம் சஞ்சலத்தால் மறைவது. இது பிரளயத்தின் முடிவில் சூரியன் நூறு தேவ வருடம் மட்டும் சுவர்க்க, மத்ய, பாதாள லோகம் அனைத்திலும் அழர்கதிர் பரப்பி, கடலால் சூழப்பட்ட பூமியும், அதைச் சூழ்ந்துள்ள பெரும் புறக்கடலும், வறண்டு பொரிந்து போகும்படி அக்கினி தேவனுடன் பொறிகளைச் சிந்திக் கொல்லும் தொழிலைச் செய்யும் யமனைப்போல் காலத்தோடு கலந்து பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், சனலோகம், மகாலோகம், தபோலோகம், சத்தியலோகம், அதலம், விதலம், சுதலம், நிதலம், தராதலம், இராசாதலம், மகாதலம், பாதாளலோகம் முடிவு வரை உள்ள அண்ட சராசரம் அனைத்தையும் எரிப்பார். பின்னர் நூறு வருடம் மேகக் கூட்டங்கள் குழுமி நீர் சொரிந்து மின்னைலை வெட்டி, இடி இடித்து சூரியனின் ஒளி முதலியவற்றை தம்மிடத்தில் ஒடுக்கி பெருமழை சொரியும். இத்தகைய நைமிக பிரளய காலத்தில் பிரமன் யோக நித்திரை செய்வார், இந்த பிரளயத்துடன் கூடிய கற்பத்தை வராக கற்பம் என்பர்.
பிராகிருதம் என்பது பிரம்ம தேவனது ஆயுள் காலம் முடிந்து உலகம் அனைத்தும் பிரகிருதியில் ஒடுங்குவது.
பரமாணு இரண்டு கொண்டது அணு.
அணு மூன்று கொண்டது திரிசரேணு
திரிசரேணு மூன்று கொண்டது துடி
துடி மூன்று கொண்டது வேதை
வேதை மூன்று கொண்டது இலவம்
இலவம் மூன்று கொண்டது நிமிடம்
நிமிடம் மூன்று கொண்டது கணம்
கணம் ஐந்து கொண்டது காட்டை
காட்டை பதினைந்து கொண்டது இலகு
இலகு பதினைந்து கொண்டது கன்னல் / கடிகை
கன்னல் / கடிகை இரண்டு கொண்டது முகூர்த்தம
முகூர்த்தம் பதினைந்து கொண்டது பொழுது
பொழுது இரண்டு கொண்டது நாள்
நாள் பதினைந்து கொண்டது பட்சம்
பட்சம் இரண்டு கொண்டது திங்கள்
திங்கள் இரண்டு கொண்டது பருவம்
பருவம் மூன்று கொண்டது அயனம்
அயனம் இரண்டு கொண்டது ஆண்டு
ஆண்டு நூறு கொண்டது மனிதனின் ஆயுள் காலம்.
மனித ஆயுள் முப்பது கொண்டது தென்புறத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நாள்
மாதம்/திங்கள் பன்னிரண்டு கொண்டது தேவர்களுக்கு ஒரு நாள்
அத்தகைய நாட்கள் கூடிய ஆண்டுகள் பன்னீராயிரம் கழிந்தால் அது தேவர்களுக்கு ஊழிக்காலம்.
நான்குவகை ஊழிக்காலம் ஆயிரம் சென்றால் அது பிரமனுக்கு ஒரு பகல். இந்த காலத்தே சுவாயம்பு, சுவாரோசிஷன். உத்தமன், தாமசன், இரைவதன், சாக்குசன், வைவச்சுதன், சூரியசாவர்ணி, தட்சாவர்ணி, பிரமசாவர்ணி, தருமசாவர்ணி, உருத்திரசாவர்ணி, ரௌச்சியன், பௌத்தியன் என்ற பதினான்கு மனுக்களும் அரி, விபசித்து, சுசாந்தி, சிவிவிபு, மனோசவன், புரந்தரன், மாவலி, அற்புதன், சாந்தி, விருடன், இருதராமன், திவற்பதி, சுசி என்னும் இந்திரர்களும் நீங்குவர். அப்போது பிரம்மன் படைப்புத் தொழில் நீங்கி துஞ்சுவான். இது பிராகிருதப் பிரளயம் எனப்படும்.
இத்தகைய பிரமன் ஒரு கோடி பேர் இறந்தால் அது திருமாலுக்கு ஒரு பகல். திருமாலின் கால அளவு கழிந்ததும் திருமாலும் மறைவார். பிரமன், திருமால், உருத்திரர் ஆகியோர் அந்தந்த கால நிலைகளின்படி தொழில் புரிந்து சர்வேசுவரனிடம் இலயமடைவர். அப்போது சிவன் தன்நெற்றிக்கண்ணால் பிரமாண்டங்களை எரிப்பார். அவ்வாறு எரித்த அங்கங்களை தன்னிடத்தில் ஒடுக்கிக் கொள்வார்.
ஆத்தியந்தகம் என்பது உயிரினங்கள் அனைத்தும் தங்களுடைய விரிந்த அறிவினால் முக்தி அடைவது.
இவ்வாறு நான்கு வகைகளில் ஒடுக்கம் செயலாக்கம் பெறுகின்றது.
இறைவனோடு ஒடுங்கும் காலத்தில் பிரமன், திருமால் ஆகியோரின் ஒற்றைக் கால்களும் இறைவனின் ஒற்றைக்காலும் சேர்ந்து மூன்று கால்களும் இருப்பதால் திரிபாத திரிமூர்த்தி. பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரும் ஒடுங்கும் நேரத்தில் சிவபெருமான் கொண்ட வடிவம்- திரிபாத திரிமூர்த்தி வடிவம். மேலும் உலகை மீண்டும் படைக்க திருவுள்ளம் கொண்ட பெருமான் தம் இதயத்திலிருந்து ருத்திரனையும் தம் வலப் பக்கமிருந்து பிரமனையும் இடப் பக்கமிருந்து திருமாலையும் தோற்றுவிக்கும் நிலையில் உள்ள வடிவமும் திரிபாத திரிமூர்த்தி வடிவமாகும்.காட்சி: திருவொற்றியூர், திருவானைக்கா, தப்புளாம் புலியூர் (திருவாரூர்)
#####
ஓம்நமசிவய!
அழகிய ஆனைக்கன்றே ஜயஜய
இளமத யாணை முகத்தாய் ஜயஜய
இரகுபதி விக்கின விநாயகா ஜயஜய
அனந்தலோடாதியில் அடிதொழ அருளே!
ஏகபாத திரிமூர்த்தி!
முதலும் முடிவும் இல்லாத சிவபெருமான் உலகமக்களின் நலன் கருதி சுத்த மாயையின் நிழலில் அசுத்த மாயையின் இடத்தில் பல உருவங்களை எடுத்துள்ளான். எப்படி மேடைகளில் கூத்தாடும் கலைஞர் அவ்வப்போது உடைமாறி உருவ மாற்றத்தைச் செய்கின்றானோ அவ்வண்ணமே உயிர்கள் நலன் கருதி இறைவனும் பல உருவங்கள் எடுக்கின்றான். உருவங்கள் வேறாக இருந்தாலும் உணர்வுகள் பல இருந்தாலும் அனைத்தையும் இயக்கும் மூலன் ஒருவனே.
ஆணவம், கன்மம் மாயை என்ற மூன்று மலங்களைக் கொண்ட ஆன்மாக்கள், இரு மலங்கள் மட்டும் கொண்ட ஆன்மாக்கள், ஒரு மலம் மட்டும் கொண்ட ஆன்மாக்கள் என்ற விதவிதமான ஆன்மாக்களுக்கும் உடம்பு செயல் புரிவதற்கு உரிய ஐம்புலன்கள், சுக துக்க அனுபவங்களுக்கு உதவி புரியபவராக இருப்பார். மூன்று வித குணபோதங்கள் நிறைந்த மனித ஆன்மாக்களை உருவாக்கி உலகம் இயங்க காரணமானவர் சிவபெருமான்.
உயிர்களுக்கு அருள் புரிவதற்காகவே பிரமன், திருமால், ருத்திரன் ஆகியோரை தோற்றுவித்து படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய தொழில்களை செய்து வருபவர் சிவபெருமான். சிவபெருமானின் இதயத்திலிருந்து தோன்றுபவர் உருத்திரன், இடப்பக்கம் தோன்றுபவர் திருமால், பிரமன் வலப்பக்கம் தோன்றுவர்.
தட்சிண வாம நெற்றியிலிருந்தும் நேத்திரங்களிலிருந்தும் சூரிய, சந்திரன்களையும், மூக்கிலிருந்து வாயுவையும், கழுத்திலிருந்து கணேசரையும், இதயத்தின் ஒருபாகத்திலிருந்து ஸ்கந்தரையும், தொந்தியிலிருந்து யமன், இந்திரன், வருணன், குபேரன் ஆகியோரையும் பிரத்யங்கத்திலிருந்து ஐம்பது கோடி தேவர்களையும், உரோம கூபங்களிலிருந்து பல கோடி முனிவர்களையும் தேவர்களையும் தோற்றுவிக்கின்றார். கற்பகங்கள் தோறும் சிவபெருமான் அநேக கோடி பிரமாக்களையும் திருமால் உருத்திரர்களையும் உருவாக்கி ஊழிக்காலத்தில் அனைவரும் தம்மிடமே ஒடுங்கும் படியாகவும் செய்கின்றார். தனக்கு பிறப்பு இறப்பு இல்லாதவராய் மும்மூர்த்திகளுக்கும் பிறப்பிடமாய் இருந்து அனைவரையும் தாங்கும் ஒரே மூர்த்தியாக ஒற்றைக் காலுடன் நிறபவர் ஏகபாத திரிமூர்த்தி வடிவம்.
ஒற்றைத் திருவடிவுடைய மும்மூர்த்தி வடிவம். பிறப்பு இறப்பு என்றில்லாமல் மும்மூர்த்திகளுக்கும் பிறப்பிடமாய் அம்மூவரையும் தாங்கும் ஒரே மூர்த்தியாக ஒற்றைக்காலுடன் நிற்கும் வடிவம்- ஏகபாத திரிமூர்த்தி
#####
அசுவாரூட மூர்த்தி- குதிரையேறுச் செல்வர்!
Written by குருஸ்ரீ பகோராஓம்நமசிவய!
இயங்கிய ஞானக் குன்றே ஜயஜய
அரவக் கிண்கிணி ஆர்ப்பாய் ஜயஜய
இலகக் கொம்பொன்றேந்தினோய் ஜயஜய
வஞ்சனை பலவும் தீர்ப்பாய் ஜயஜய
அசுவாரூட மூர்த்தி- குதிரையேறுச் செல்வர்!
திருப்பெருந்துறையை விட்டு மதுரை திரும்பிய மணிக்கவாசகர் தன் இல்லம் சென்றார். உறவினர்கள் அவர் நிலை அறிந்து அவருக்கு அறிவுரை கூறினர். அரசன் ஆனைப்படி செய்யாததால் உங்கள் பெருமைக்கு இழுக்கு ஏற்படும் என்றனர். என்ன நேர்ந்தாலும் கவலையில்லை, நான் எம்பெருமானை மறவேன் என்றார். மன்னன் குதிரைகள் ஏன் வரவில்லை என்றார். இன்னும் மூன்று நாட்களில் வரும் என்றார்.
அவ்வாறு மூன்று நாட்களில் குதிரைகள் வராததால் மன்னன் மாணிக்கவாசகரை சிறையிலிட்டு துன்புறுத்த, மாணிக்கவாசகர் இறைவனைத் துதிக்க, இறைவன் நந்தி முதலான கணங்களை அழைத்துக் காட்டில் திரியும் நரிகளைப் பரிகளாக்கி நீங்கள் அவற்றை நடத்தும் சேவர்களாக உரு மாறுங்கள் என்றார். சிவபெருமான் தானே குதிரைகளை ஓட்டுபவனாக மதுரைக்குச் சென்றார். குதிரைகள் வந்தும் மன்னன் மாணிக்கவாசகரை விடுவித்தான். குதிரை வல்லுநர்கள் அந்தக் குதிரைகளின் திடம் மற்றும் சுழியை ஆரய்ந்து மன்னா, நாம் கொடுத்த விலையைவிட பன்மடங்கு மதிப்புக் கொண்ட உயர்சாதிக் குதிரைகள் இவை என்றனர். குதிரைகள் லாயத்தில் கட்டப்பட்டது. சிவனார் தன் பரிவாரங்களுடன் மறைந்தார்.
இரவில் புதிய குதிரைகள் கனைப்பதற்குப் பதிலாக ஊளையிட்டுப் பழைய குதிரைகளை கடித்துக் குதறி காட்டுக்குள் ஓடி மறைந்தது. மீண்டும் மாணிக்கவாசகர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் வைகை ஆற்றில் நீர் நிலைக் குன்றி மக்கள் துன்பமடைந்தனர். மக்கள் துன்பம் தீர மாணிக்கவாசகர் இறைவனைப் பிரார்த்தித்தார். இறைவன் அருளால் வைகையில் வெள்ளம் கரைபுறண்டு ஓடியது. ஆற்றின் கரைகளை பலப்படுத்த வீட்டிற்கு ஒருவர் கட்டாயம் வர வேண்டும் என மன்னன் கட்டளையிட்டான். அப்போது பிட்டு விற்கும் மூதாட்டி தனி ஆளாக இருந்ததால் தனக்குப் பதிலாக பணியாற்ற ஆளின்றி வருந்தி சிவபெருமானை வேண்டினாள். அந்த மூதாட்டியின் வேண்டு கோளுக்கிணங்கி சிவன் கூலியாளாக வந்து கூலியாகப் பிட்டு தரச்சொல்லி சாப்பிட்டு வைகை சென்றவர் வேலையைச் செய்யாமல் படுத்து உறங்கினார். கோபம் கொண்ட மன்னன் பிரம்பால் அவன் முகில் அடிக்க அந்த அடி உலகிலுள்ள எல்லா உயிர்கள் மீதும் பட பாண்டியன் ஆச்சரியப்பட்டான்.
அப்போது விண்ணிலிருந்து வாதவூராரை விடுவிக்க என்ற ஒலி கேட்க மன்னன் அவரை விடுவித்து மன்னிப்பு கேட்டான். அரசன் கொடுத்த பொருட்களை சிவப்பணிக்கே செலவிட்டார் மாணிக்கவாசகர்.
திருவாதாவூரார் துன்பம் அடையக்கூடாது என்பதற்காக நரிகளைப் பரிகளாக்கி தானே குதிரைத் தலைவனாக மதுரை மன்னனிடம் சென்று புரவிகளை ஒப்படைத்த வடிவம் அசுவாரூட மூர்த்தி.
#####
ஓம்நமசிவய!
இணங்கிய பிள்ளைகள் தலைவா ஜயஜய
தத்துவ மறைதெரி வித்தகா ஜயஜய
நன்னெறி விக்கின விநாயக ஜயஜய
பள்ளியிலுறைதரும் பிள்ளாய் ஜயஜய
மன்றுளாடும் மணியே ஜயஜய
குருமூர்த்தி!
பாண்டிய நாட்டின் திருவாதவூரில் வாழ்ந்த திருவாதவூரார் இளம் வயதில் வேதம், ஆகமம் ஆகியவைகளில் தேர்வு பெற்றமையால் மன்னன் அரிமர்த்தன பாண்டியன் அவரை அழைத்து தென்னவன் பிரமராயன் என்ற பட்டத்தைக் கொடுத்து அமைச்சராக்கினான். அமைச்சர் தொழிலை சிறப்பாகச் செய்தாலும் தனது சிவபக்தியினால் தினமும் திருவடி தொழுவதில் கவனம் செலுத்தி வந்தார், மன்னன் ஆணைப்படி கீழ் துறைமுகத்தில் குதிரைகள் வாங்க பெரும் பொருளோடு சென்றார் அமைச்சர்.
பரிபக்குவமுற்ற ஆன்மாக்களுக்குத் திருவருள் புரியும் எம்பெருமான் மனிட வடிவம் கொண்டு திருப்பெருந்துறையில் நந்தி, முனிகணங்கள் மாணாக்கராய் சூழ்ந்திருக்க குருந்த மரத்தடியில் குரு வடிவம் தாங்கி எழுந்தருளினார். திருவாதாவூரார் திருப்பெருந்துறை அடைந்த போது தன்னையும் அறியாமல் அன்பு உணர்ச்சி பெருக்கெடுப்பதை உணர்ந்தார்.
பேரருள் கூடும்போது ஒருவனின் வாழ்க்கை கண நேரத்தில் மாறி விடும். எந்தப் பணிக்கு தகுதியுடையவரோ அப்பணிக்குத் தக்கவாறு அவரது வாழ்க்கை மாற்றி அமைக்கப்படுகிறது. இறைவன்மேல் அன்பு கொண்ட திருவாதாவூரார் அவ்விடம் வந்ததும் குருவடிவம் கொண்டு காத்திருந்த சிவபெருமானின் அன்பு ஈர்த்ததை உணர்ந்தார். என்னுள் கலந்த சிவபெருமான் இவ்விடத்தில் இருக்கின்றாரோ என எண்ணினார். கண்டார் குருவை. திருவாதாவூராருக்கு ஞான உபதேசம் செய்து தீட்சை அளித்தார் சிவபெருமான். அதுமுதல் மாணிக்கவாசகர் எனப்பட்டார்.
ஆடித்திங்களில் புரவிகள் வரும் என காவலர்களை அனுப்பிவைத்துவிட்டு தான் வந்த வேலையை மறந்து திருப்பெருந்துறையில் தங்கி தன்னிடம் இருந்த பொருளை இறைப்பணிக்கும் அடியவர் நலனுக்கும் செலவிட்டு இறைவன் நினைவில் இருந்தார். ஆடியில் புரவிகள் வராததால் மன்னன் அனுப்பிய ஓலைக்கு பெருமான் அசரீரியாக கூறியவாறு ஆவணியில் வரும் என ஓலை விடுத்து, பின் கனவில் சிவன் தோன்றி ‘குதிரைகள் பின்வரும், நீ முன் செல்க’ எனப் பணிந்தமையால் மதுரையை அடைந்து அரசரிடம் ஆவணியில் குதிரைகள் வரும் எனச் சொல்லி இறைவன் வருகையை எதிர்பார்த்திருந்தர்.
பரிபக்குவம் அடையாத மாணிக்கவாசகருக்கு குருவாய்த் தோன்றி ஞான உபதேசம் செய்த வடிவம் குருவடிவம்.
#####
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.