குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
அஷ்டாஷ்ட திரு உருவங்கள் (64)
ஓம்நமசிவய!
புகர்முகக் களிற்றுப் புண்ணிய போற்றி!
அகலிடம் நிறைய அமர்ந்தோய் போற்றி!
செல்வம் அருள்க தேவா போற்றி!
நல்லன எமக்கருள் நாயக போற்றி!
ஆக்கமும் ஊக்கமும் அருள்வாய் போற்றி
காக்க எங்களை உன் கழலிணை போற்றி! போற்றியே!
இலிங்கோத்பவர்!
பேரொளியாய் ஒளிப்பிழம்பாய் விளங்கும் ஜோதியிலிருந்து அனைத்து உலகிற்கும் ஆதாரமானதும் வேதங்கள் பூஜித்து கொண்டாடும் ஜோதிலிங்கத்தே தோன்றிய வடிவம் லிங்கம்,
பிரமனும் விஷ்ணுவும் சந்தித்தனர். நான்முகனுக்கும் திருமாலுக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. அண்டங்களைப் படைப்பவர் என்பதால் பிரம்மா கர்வம் கொண்டிருந்தார். அதைச் சோதித்துப் பார்க்க எண்ணிய விஷ்ணு பிரம்மனின் வாய்வழியாக உடம்பிற்குள் போய் உலகங்களைக் கண்டு வெளியில் வந்தார். அனைத்தையும் கண்டீரா என அகங்காரத்துடன் கேட்டார் பிரம்மன். இப்போழுது அனைத்து உலகங்களையும் படைப்பவன் நான் என ஒப்புக் கொள்கின்றீர்களா எனக் கேட்டார். பிரம்மதேவரே அனைத்தையும் கண்டேன் என்று சொல்ல முடியாது. ஏனெனில் ஆதியும் அந்தமும் காணப்படவில்லையே என்றார். அப்படியானல் உங்களிடம் ஆதியும் அந்தமும் உள்ளதா எனக் கேட்டு விஷ்ணுவின் வாய்வழி உள்சென்ற பிரம்மன் விஷ்ணு வாயை மூடியதால் வெளியில் வரமுடியாமல் உடம்பைச் சுருக்கி விஷ்ணுவியின் நாபி வழி வெளியே வந்து தாமரையில் அமர்ந்தார். விஷ்ணுவின் நாபியிலிருந்து தோன்றியதால் விஷ்ணுவின் புத்திரனாக பிரம்மா கருதப்பட்டார்.
இருவரும் சிவனைக் கண்டனர். சிவனைத் தங்களுக்குச் சம்மாக ஏற்கலாமா என்று பிரம்மா விஷ்ணுவிடம் கேட்க, சிவன் நம் இருவரையும்விட பலம் பொருந்தியவர் என்று விஷ்ணு சொன்னார். வேதங்கள் உயிர்பெற்றெழுந்து திருமால், பிரம்மா இருவரையும் விட சிவனே உயர்ந்தவர் என்பதை தக்க ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியதை விஷ்ணு ஒப்புகொள்ள பிரம்மன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்போது இருவருக்குமிடையில் பேரொளிப் பிழம்பாய் சோதித்தம்பம் எழுந்தது. அத்தம்பத்தின் அடிமுடி அறிந்தவரே பெரியவர் என விண்ணிருந்து அசரீரி ஒலித்தது. நான்முகன் அன்னப்பறவை வடிவம் கொண்டு மேலே பறந்து சென்று முடியைக் கண்டு வருவது என்றும் திருமால் வராக வடிவம் கொண்டு அடியை கண்டு வருவது என்று இருவரும் ஓர் உடன் பாட்டிற்கு வந்தனர்,.
பலகாலம் இருவரும் முயற்சித்தும் பலனில்லை. மேலே சென்று கொண்டிருந்த பிரமன் மேலிருந்து கீழ்நோக்கி வந்து கொண்டிருந்த தாழம்பூவை நீ எங்கிருந்து வருகின்றாய்? எனக் கேட்க அது நான் சோதித் தம்பத்தின் உச்சியிலிருந்து பலகாலமாய் வந்து கொண்டிருக்கின்றேன் என்றது. தான் முடியைக் கண்டதற்கு தாழம்பூ சாட்சி சொல்ல வேண்டும் என நான்முகன் வேண்ட தாழம்பூ ஒப்புக் கொள்ள இருவரும் கீழே வந்தனர்.
தன் முயற்சியில் தோல்வியுற்று நிலத்தை அடைந்த திருமாலிடம் நான்முகன் சோதித்தம்பத்தின் முடியைத் தான் கண்டதாகக் கூற தாழம்பூ அதற்கு சான்று அளித்தது. முத்தொழில் புரியும் மூவரில் ஒருவனாக நான்முகன் இருப்பினும் பொய் சொன்னமையால் அவனுக்கு உலகில் எங்கும் தனியாக கோவில் இல்லாமல் போனது.. பொய்ச்சான்று பகர்ந்ததால் தாழம்பூவும் சிவ பூசையிலிருந்து நீக்கப்பட்டது.
நான்முகன் அறிவு வடிவானவன். திருமால் செல்வத்தின் நாயகன். அறிவினாலும் செல்வத்தினாலும் இறைவனைக் காணமுடியாது என்பதை உணர்த்தும் தத்துமே இந்த நிகழ்வு.
இந்த நிகழ்வு நடந்த தலம் திருவண்ணாமலை இறைவன் இங்கு தீயாக சோதிப் பிளம்பாக வெளிப்பட்டமையால் திருவண்ணாமலை ஐம்பூதத்தலங்களுள் அக்னி(தீ)த் தலமாக வணங்கப்பெறுகின்றது. காட்சி: பொதுவாக எல்லா சிவத்தலங்களிலும் கருவறைக்குப் பின்னாலுள்ள தேவக்கோட்டத்தில் காணலாம்.
#####
ஓம்நமசிவய!
அங்குச தாரா போற்றி!
அரவ நாணோய் போற்றி!
அர்க்க விநாயக போற்றி!
அன்பு கணபதி போற்றி!
சுகாசனர்-நல்லிருக்கை நாதர்!
சர்வேசுவரி தட்சனின் மகளாகத் தோன்றி தட்சனின் விருப்பிற்ணங்க தவம் செய்து சிவனை மணந்தாள். அதன்பின் தட்சன் சிவநிந்தை செய்ததால் அவனால் வளர்க்கப்பட்ட தன் உடலை நீக்கி அவனின் மகள் என்பதாள் பெற்ற தாட்சாயணி என்ற பெயரையும் மாற்ற சிவனிடம் வேண்டுகோள் வைக்க அவர் அருள் புரிந்து இமயவான் மன்னனுக்கு மகளாகத் தோன்றி உமை என்னும் பெயருடன் வளர்ந்து தவம்செய்து மீண்டும் சிவனை கைபற்றினாள். ஒருநாள் தனக்கு மந்திர தீட்சை அளித்து சிவாகமங்களை உபதேசிக்க வேண்டினார். பின்னர் சிவனின் இடப்புறம் அமர்ந்து பிரணவ மந்திரத்தின் பொருள், தோற்றம், பெயர்க் காரணம், அதன் தேவன், வழிபடும் முறை போன்றவைகளை கூற வேண்டினாள். உமாவின் விருப்பத்திற்கு இணங்கி சிவாகமங்களை உபதேசித்தல்.
பிரணவப் பொருளே சிவனின் சொரூபம். எல்லா விதைகளுக்கும் விதை போன்றது. மிக சூட்சமம் ஆனது. உலகின் எல்லா ரூபங்களிலும் காணப்படும் அதுவே பரப்பிரம்மம் ஆகும். ஏகாட்சரம் என்றும் ஆதி மந்திரம் என்றும் சொல்லலாம்.
‘அ’ கர, ’உ’ கார, ’ம’ காரங்களாகிய மூன்றும் சேர்ந்து உச்சரிக்கப்படுவது பிரணவம். அதிலிருந்து வேதங்கள் தோன்றின. ‘அ’காரம் ரஜோகுணத்துடன் நான்முகனாக உற்பத்தியைச் செய்யும். ‘உ’காரம் சத்துவ குணத்துடன் விஷ்ணு ரூபமாகி உலகத்தைக் காக்கும். ‘ம’காரம் தமோ குணத்துடன் ருத்திரனாகிய புருஷ்னாக உலகத்தை சங்கரிக்கும். பிந்து (விந்து) மகேசுவர சொரூபமாக திரோபாவத்தை-மறைத்தலைச் செய்யும். நாதம் சதாசிவ ரூபமாக எல்லாவற்றையும் அருளும். சதாசிவ மூர்த்தியாக விளங்கும் மந்திரம், யந்திரம், தேவதை, பிரபஞ்சம், குரு, சீடன் எனும் ஆறுவகைச் சாதனங்களால் சிவனை அறிந்து ஐக்கியமாக வேண்டும் அதற்காண மந்திரம், தியானம் ஆகியவற்றை உமைக்கு விளக்கினார் சிவன். இதய கமலத்தில் ஆதார சக்தி முதல் அந்தராகாசத்தில் ‘ஓம்’ எனும் ஏகாட்சர சொரூபியாக பிரம்மத்தையே தியானிப்பவர்கள் சிவ ஞானத்தை உணர்ந்து சிவகதியடைவர். குருவைத் தியானித்து வணங்கி அவர்மூலம் உபதேசம் பெற்று தூய்மையாக பிரணவத்தை உச்சரித்து பஞ்சாட்சரம் செபித்து முறைப்படி பஞ்சாவரண பூசை செய்ய வேண்டும் என உபதேசித்தார். சிவன் உபதேசித்த வேதசிவாகமப் பொருளை தன் அருள் முகத்தால் பிற ஆன்மாக்களுக்கு அம்பிகை உணர்த்தினாள்.
சிவன் இவ்வடிவில் ஆறு திருக்கரங்களுடன் மான், பாம்பு, செபமாலை, தண்டம், சின்முத்திரை, அபயமுத்திரை அருளுகின்றார். காட்சி: திருவெண்காடு, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம்.
&&&&&
ஹரிஹரர்-கேசவார்த்தமூர்த்தி-மாலொருபாகர்!
Written by குருஸ்ரீ பகோராஓம்நமசிவய!
ஆகு வாகனா போற்றி!
ஆனை மாமுகனே போற்றி!
இளம் பிறை அணிந்தோய் போற்றி!
ஈசன் மைந்தனே போற்றி!
ஹரிஹரர்-கேசவார்த்தமூர்த்தி-மாலொருபாகர்!
திருமால் சிவனை நோக்கித் தவம் செய்து அனைவரையும் மயக்கும் சக்தியைப் பெற்றார். அப்போது எமக்கு இடப்பால் விளங்கும் அருட்சக்தியுமானாய் என்று சிவன் அருளினார். வலப்பாதி சிவன் இடபாதி மால் வடிவம் என ஒருபால் சிவனும், ஒருபால் மாலும் இணைந்து காட்சி தரும் வடிவம்.
ஒரு முகமும் நான்கு கரங்களும் கொண்ட வடிவில் முகத்தின் வலப்பாகம் சிவனாகவும் இடப்பாகம் திருமாலாகவும், சிவமுகத்தில் உக்கிரமாக அரை நெற்றிக்கண் உடையதாக இருக்கும். வலது கரங்களில் மழுவும் காத்தற் குறிப்பும் காணப்படும். இடப்பக்க திருமால் முகம் அமைதியாக இருக்கும் இடது கரங்களில் சங்கு சக்ரம் அல்லது கதையும் கடக குறிப்பும் விளங்கும். வலது முன்காலில் பாம்பு போன்ற ஒரு தண்டையும், இடது முன்காலில் நவரத்தினங்கள் இழைத்த தண்டையுடன் சிவபாகம் வெண்ணிறமாகவும், திருமால் பாகம் பச்சை அல்லது நீலப்பழுப்பு வண்ணத்துடன் இருக்கும். இரு கால்களும் வளைவின்றி இருக்கும். இடப்பக்கம் கருடனும் வலப்பக்கம் நந்தியும் இருக்கும்.
சிவனும் திருமாலும் ஓரு உருவின் இரு கூருகளே. சக்தி உலகத்தைப் புரக்கும்- ஈதல் / காத்தல் செயலை செய்யும்போது தனது மாயா வல்லமையால் ஆடவ வடிவம் ஏற்று மாயன் என்னும் விஷ்ணுவாக விளங்குவாள். சங்கர நாராயணரை இடவலமாகப் பார்க்கும்போது ஹரிஅரன் எனலாம். காட்சி: சங்கரன்கோவில், ஹரிஹர் (தாவண்கெரே மாவட்டத்தில்). குடைவரைக்கோவில்- நாமக்கல், குன்றக்குடி, பிள்ளையார்பட்டி ஆகிய தலங்களில். தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய கோவில் தேவகோட்டத்தில்.
&&&&&
ஓம்நமசிவய!
உச்சிப் பிள்ளையே போற்றி!
உடுண்டி விநாயகா போற்றி!
ஊர்த்தவ கணபதியே போற்றி!
எண்கர விநாயகா போற்றி!
அர்த்தநாரீஸ்வரர்-உமைபங்கன்!
பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வணங்குவது என்று உறுதியான கொள்கையைக் கடைப்பிடிப்பவர். அம்முனிவர் தன்னை வணங்கவில்லை என்பதால் கோபம் கொண்ட உமை முனிவரின் உடலில் இருக்கும் சக்தியை-ஆற்றல் நீக்கிவிட பிருங்கியால் நேராக நிற்கக்கூட முடியவில்லை. வெறும் எழும்புக்கூடாகக் தோன்ற அவருக்கு மூன்றவது காலை அளித்து நிற்கும்படிச் செய்தார் சிவபெருமான். பிருங்கியை ஒடுக்க தான் செய்த முயற்சிகள் தோல்வியுற உமை சிவனை நினைத்து தவமிருந்து தன் வருத்தத்தையும் வேண்டுகோளையும் தெரிவிக்க, உமையின் வேண்டுகோளுக்கிணங்க தம் உடலில் பாதியை உமைக்கு அளித்து மங்கை பாங்கனார். ஆனால் அப்போதும் பிருங்கி வண்டு உருக்கொண்டு அர்த்தநாரீஸ்வரர் வடிவில் சிவபங்கை மட்டும் நடுவில் துளையிட்டுச் சுற்றி வந்தார். உமையின் விருப்பின்படி தன் உடலில் பாதி அளித்த கோலமே அர்த்தநாரீஸ்வரர் திருவடிவம்.
இந்து சமயம் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை கொடுத்துப் போற்றுகின்றது. அதனால்தான் இறைவனை ‘மாதொருபாகன்’ என்றும் ‘அம்மை அப்பன்’ என்றும் வட மொழியில் ‘அர்த்தநாரீஸ்வரன்’ (அர்த்தம்-அரை, நாரி-பெண்) என்றும் சொல்கின்றோம். ஆண் பெண் வேறுபாடின்றி இரு பாலருக்கும் ஒத்த உரிமையும் மேன்மையினையும் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வடிவம். மேலும் ஆணும் பெண்ணும் ஒருங்குடன் கூடி வாழ்தலே உயிரினங்கள் தோன்ற வாய்ப்பு என்ற தத்துவத்து தெரிவிக்கும் வடிவம். சிவசக்தி தம்பதியரிடையே ஒற்றுமையை ஓங்கச் செய்பவர்,
இத்திருவடிவம் வலப்பக்கம் சிவனின் சிறப்புக் கூறுகளான சடைமுடியும், பிறைச்சந்திரனும், செவியில் சர்ப்பக் குண்டலமும்/ மகரக் குழையும், நெற்றிக் கண்ணில் பாதியும், ஆண் மார்பும், திருநீறும், திருமேனியில் புலித்தோலாடையும், பாம்பு பூணூலும் கொண்டு வலக்காலை சிறிது வளைத்து நிற்கும் நிலையில் இருப்பார். இடப்பக்கம் உமை பெண்மைக்குரிய பொலிவினையும், தலையில் சுரண்ட மகுடமும், செவியில் வாலிகா எனப்படும் பெரிய குண்டலமும், நெற்றியில் திலகமும், கண்ணில் மைப்பூச்சும், கைகளில் வளையல்களும், பெண்மைப் பூரிப்பிற்கேற்ற கொங்கையும், கழுத்தில் மகளிர்க் கேற்ற அணிகலன்களும், காலில் சிலம்பும், மேனி கருமை அல்லது கிளிப்பச்சை வண்ணம் கொண்டு இருப்பர். வலக்கரத்தில் வரத முத்திரை. இடக்கரம் கிளி/ மலரை ஏந்திய வண்ணம் இருக்கும். காட்சி: மூலவராகத் திருச்செங்கோடு. வடிவங்கள்- பாதாமி, மாமல்லபுரம், கும்பகோணம், திருச்செங்காட்டாங்குடி, காஞ்சிபுரம், மதுரை, தாராசுரம்.
&&&&&
ஓம்நமசிவய!
ஏக தந்த விநாயகா போற்றி!
ஐங்கர விநாயகா போற்றி!
கண நாயகா போற்றி!
கணபதியே போற்றி!
உமாமகேசர்- உமேசர்!
மனக்குழப்பம் போக்கி / தடுத்து மணப்பேறு அளிப்பார். படைப்புத் தொழில் சிறப்பாக நடக்க உதவுதல். உமையோடு கூடி மகிழும் சிவன் உமாசகிதர், உமாமகேசுவரர் என அழைக்கப்படுவார். சிவனின் அருட் சக்தியே உமை. சிவம் வேறு சக்தி வேறில்லை. சிவன் அமைதி (Static) நிலை. சக்தி ஆற்றல் (Dynamic) நிலை. சிவனின் அருட்பண்பே சக்தி. உலகத்திலுள்ள அனைத்துப் பொருள்களிலும் சக்தியும் சிவனும் நீக்கமற நிறைந்துள்ளார்கள். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐவகைத் தொழில்களையும் இயற்ற சிவன் இடப்பக்கம் உமையோடு பொருந்திய வடிவம்.
நான்முகன் தன் படைப்புத் தொழிலுக்கு உதவிட சனகர், சனந்தர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நான்கு மக்களை பெற்றார். ஆனால் அப்புதல்வர் நால்வரும் பிரமனுக்கு உதவாமல் தவத்தை மேற்கொண்டதால் பிரம்மனால் தனது படைப்புத் தொழிலை சரியாகச் செய்ய முடியவில்லை. திருமாலைச் சந்தித்து விவரங்களைக் கூற, அவர் பிரமன் சனகாதி முனிவர்களை அழைத்துக் கொண்டு கயிலைக்குச் சென்றார். அங்கு சிவன் அனைவரையும் தன் நெற்றிக் கண்ணால் சுட்டெரித்து சாம்பலாக்கினார்.
அப்போது அங்கே தனித்திருந்த பரம்பொருள் தன் வாமபாகத்திலுள்ள திருத்தோளைப் பார்க்க அங்கிருந்து அவரது சக்தி உமாதேவியாக வெளிப்பட்டாள். அவளைத் தன் இடப்பாகத்தில் இருத்திக் கொண்டு இருவருமாக திருமால், நான்முகன், நான்கு முனிவர்கள் ஆகியோரை உயிர்ப்பிக்கச் செய்தனர்.
யாம் முன்பு தனித்து இருந்ததன் காரணமாகப் படைப்புத் தொழில் சரியாக நடைபெறவில்லை. தற்போது சக்தியுடன் இணைந்து நின்றோம். இனிமேல் படைப்புத் தொழில் தடையின்றி நடைபெறும் என்று அருள் புரிய நான்முகன் தனியாக படைப்புத் தொழிலாற்றும் திறமையைப் பெற்றார்.
தன் கருணையை அம்பிகையாக்கி தன் இடப்பக்கத்திலே கொண்டு அபய வரதத்துடன் கூடிய தோற்றம் (அமர்ந்து / நின்றவண்ணம்) உமேச மூர்த்தியாகும். படைத்தல் தொழில் சீராக அமைய சிவனின் இடத்தோளிலிருந்து உமையை வெளிப்படுத்தி அருள் புரியும் திருக்கோலம்.
உமாமகேசர் ஒருமுகம் முக்கண்கள், நான்கு கைகளுடன் சுகாசனத்தில் அமர்ந்திருப்பார். பின்கைகளில் மானும் மழுவும், முன் வலக்கை காக்கும் கையாகவும் இடக்கை அருளும் கையாகவும் இருப்பார். உமை ஒருமுகம் இரு கைகளுடன் வலக்கையில் தாமரை மலருடன் அமர்ந்திருப்பார்.
புரட்டாசி பௌர்ணமி அன்று உமாமகேசுவர விரதம் கடைபிடிக்க வேண்டும். சித்திரை /மார்கழி வளர்பிறை அட்டமி, சதுர்த்தசி, பௌர்ணமி தொடங்கி ஐந்து நாட்கள் நோன்பாகவும் கொண்டாடலாம். காட்சி: திருவுடைமருதூர் மற்றும் தமிழகத்தின் பலகோவில்களில்
#####
ஓம்நமசிவய!
கரிமுக விநாயகா போற்றி!
கருணை விநாயகா போற்றி!
கணேசா போற்றி!
கண்டா கணபதி போற்றி!
கங்காளர்!
சிவாலயம் ஒன்றில் எரிந்து கொண்டிருந்த திருவிளக்கின் சுடர் மங்குகையில் உமையிடம் சிவபெருமான் இந்த விளக்கின் திரியை தூண்டுவோர் மூவுலகங்களயும் ஆட்சி செய்வார் என்றார். அச்சமயம் அந்த விளக்கில் உள்ள நெய்யை எலி ஒன்று குடிக்க திரி தூண்டப்பெற்றது. உமை, நீங்கள் சொல்லிய வண்ணம் அந்த எலிக்கே அருள் புரிய வேண்டினார். அந்த எலியே மாவலி என்ற பெயரில் அசுர குலத்தில் தோன்றி மூவுலகம் முழுவதும் வசப்படுத்தி ஆட்சி செய்தது. அதனால் அசுரர் கை ஓங்கி தேவர்கள் இன்னலுற்று திருமாலிடம் முறையிட்டனர்.
காசியபரின் மனைவி திதி திருமாலின் பக்தை. அவள் தனக்கு திருமாலே மகனாக வரவேண்டும் என வேண்டினாள். மாவலி அசுர அரசன் ஆயினும் சிறந்த கொடையாளியாய் ஆட்சியை சிறப்புடன் நடத்தி வந்தான். மாவலியை சூழ்சியால்தான் வீழ்த்த முடியும் என்பதால் திருமால் வாமனனாக திதிக்கு மகனாகப் பிறந்தார்.
மாவலி அரசவைக்கு வந்த வாமனரை வரவேற்று, இரதம், யானை, குதிரை, பொன், வெள்ளி, நவரத்தினங்கள் எல்லாம் பரிசாக அளிக்க முன்வர வாமனர் அரசே எனக்கு அதெல்லாம் வேண்டாம் மூன்றடி மண்தான் வேண்டும் என்றார். சிறுவனாக இருந்து இவையெல்லாம் வேண்டாம் என்று சொன்னதும் அருகிலிருந்த அசுர குரு சுக்ராச்சாரியருக்கு வாமனரைப் பற்றி சந்தேகம் வந்து அரசரிடம் எச்சரிக்கை விடுக்க, மாலவனே என்பால் மறையவனாகி மூன்றடி யாசித்தானென்று அரும்புகழிருக்கும், அதனால் வரும் துன்பம் பெரிதன்று எனக்கூறி வாமனர் கேட்ட மூன்றடி மண் கொடுக்க சம்மதித்தான்.
அச்சுதன், உடன் திரிவிக்ரம உருக் கொண்டு மூன்று உலகங்களையும் ஈரடியால் அளந்து மீதி ஓர் அடியை எங்கே எனக்கேட்க தன் சிரசை காண்பித்த மாவலியை பாதாளத்தில் அழுத்தினார். அதன் பிறகும் ஆவேசம் அடங்காமல் உக்கிரம் குறையாத நிலையில் இருக்க தேவர்கள் சிவனிடம் வேண்டுகோள்விடுக்க, சிவன் தன் வஜ்ரதண்டத்தினால் வாமனரின் மார்பிலே அடித்து அவருடைய முதுகெழும்பை தண்டாக தன் கரத்திலே தாங்கினார்,
சிவன் நின்ற நிலையில் இடது கால் ஊன்றியவாறு வலதுகால் சற்று வளைந்தும் உருவம் நகர்வதுபோல் வெண்மையான தோற்றத்துடன் மேலே சிவப்பு நிற ஆடையணிந்து இடையில் புலித்தோலாடை அணிந்து சடைமுடியில் இடப்பாகத்தில் எருக்கம் பூவும், வலப்பாகத்தில் பிறைச்சந்திரனும் கொண்டு சிரித்த முகம், மகிழ்ச்சியான தோற்றம், முத்துப் போன்ற பற்களுடன் காதுகளில் மகர மீன் குண்டலங்கள் மார்பிலே பூணூலுடன் வலது கரத்தில் கடகக் குறிப்பும், இடது கரத்தில் கங்காள தண்டமும் தன்னைச் சுற்றி பூத கணங்களுடன் இருப்பார். உலகம் முழுவதும் வசப்படுத்தும் வைராக்கியத்தை அளிப்பார்
மாவலியை பாதாளத்தில் அழுத்தியும் ஆவேசம் குன்றாமல் இருந்த வாமனரை தன் தண்டத்தால் அடித்து அவர் முதுகெழும்பை தன் கையில் வைத்திருக்கும் திருக்கோலமே-கங்காளார். காட்சி: சுசீந்திரம், திருச்செங்காட்டாங்குடி, சிதம்பரம், திருநெல்வேலி- நெல்லையப்பர் ஆகிய கோவில் கோபுரங்களில் சுதைச் சிற்பமாக. குடந்தை நாகேசுவரசுவாமி கோவிலில்-பிரளய காலருத்ரர், விரிஞ்சபுரம் மார்க்கபந்தீசுவரர் கோவிலில் தனிச்சன்னதி.
#####
ஓம்நமசிவய!
கமல விநாயகா போற்றி!
கஜ கன்ன விநாயகா போற்றி!
குருந்தாள் விநாயகா போற்றி!
கூத்தாடும் பிள்ளையே போற்றி!
சக்ரதானர்-சக்ரதானஸ்வரூப மூர்த்தி!
உலகத்தை ஒரே செங்கோல் ஆட்சியாக நடத்திவந்த குபன் என்ற அரசன் சார்பாக திருமால் ததீசி என்ற முனிவரை எதிர்த்துப் போர் புரியும்போது தன் சக்ராயுதத்தை அம்முனிவர் மேல் ஏவ அச்சக்கராயுதம் அம்முனிவரை ஒன்றும் செய்யாமல் வாய் மடிந்து திருமாலிடம் திரும்பி வந்ததைக் கண்ட அச்சுதன் தன்னைப் போலவே ஒரு மாயை திருமால் வடிவை ஏற்படுத்தியதைக் கண்ட முனிவர் தன் காற்பெருவிரலை அசைத்து என்னற்ற திருமால்களை உருவாக்க, ததீசி முனிவர் தவவலிமை மிக்கவர் அவரை தன்னால் வெல்ல முடியாது என்பதை உணர்ந்ததும் திருமால் ததீசி முனிவரை வணங்கி விடை பெற்றார்.
உலகம் முழுவதும் அழிந்து ஊழிக்காலம் அகன்றபின் சிவபெருமான் மீண்டும் உலகைப் படைத்து பிரம்மன், திருமால் ஆகிய இருவருக்கும் படைத்தல், காத்தல் தொழில்களை வழங்கினார். திருமால், தேவர்களை அசுரர்களிடமிருந்து காக்க வலிமை மிக்க ஆயுதம் வழங்க வேண்டினார். சிவபெருமான் சூரிய சந்திரர்களின் தேஜஸ்லிருந்து மயன் விஸ்வகர்மாவை ஒர் சக்கரம் மற்றும் வலிமை மிக்க கதை ஆயுதம் தயாரிக்கச் சொல்லி அதை திருமாலிடம் வழங்கினார். உமாதேவியர் தமது திருமுகத்தினால் ஒரு சங்கும் திருவிழிகளினால் ஒரு தாமரை மலரையும் உருவாக்கி அவற்றைத் தாங்குவதற்கு மேலும் இரண்டு கைகளையும் அளித்தார்.
இந்த சக்கரமே வாய் மடிந்து விட்டதனால் இதைவிட வலிமை மிகுந்த சக்கரம் பெற விரும்பிய திருமாலிடம் தேவர்கள் சலந்தரன் என்ற அசுரனை சிவன் நிலத்தில் வரைந்த சக்கராயுதத்தினால் கொன்றார். சுதர்சனம் என்ற அந்த சக்ராயுதப்படையை சிவனிடம் கேட்டுப் பெறுக என்றனர்.
இமயமலைச் சாரலில் லிங்கம் அமைத்து சிவ வழிபாடு செய்து வந்தார் திருமால். திருமாலின் பக்தியை உலகிற்கு வெளிப்படுத்த விருப்பம் கொண்ட பெருமான் ஒருநாள் திருமால் பூஜை செய்து வரும் 1000 தாமரை மலர்களில் ஒன்றை மறைத்தார். ஒவ்வொரு திருப்பெயராக உச்சரித்து ஒரு மலரால் அர்சித்து வந்தார். கடைசி திருப்பெயருக்கு மலரில்லாமையால் வருத்தம் கொண்டார். என்ன செய்வது என்று புரியாமல் தன் கண் மலரையே அர்ச்சினைக்கு உபயோகிக்க முடிவெடுத்து தன் கண்ணை அகழ்ந்தெடுத்து அர்ச்சனையை முடித்தார்.
திருமாலின் பக்தியைக் கண்ட சிவபெருமான் காட்சி கொடுத்து கமலை கேள்வ உன் பூசைக்கு மனம் களித்தோம். உனது கண்ணை உனக்கு அளித்தோம். கமலக் கண்ணன் (தாமரைக் கண்ணன்) என்ற பெயரை அடைவாய் என்றார். மேலும் திருமால் விரும்பிய சுதரிசன சக்ராயுதத்தை அளித்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நிறுத்துவாய் என ஆசி அருளினார்.
நான்கு கரங்களுடன், சடாமகுடத்துடன் சாந்த மூர்த்தியாய் தன் வலக்காலை மடக்கி, இடக்காலைத் தொங்கவிட்டு அமர்ந்திருக்க இருகரங்களில் மானும் டங்கமும் (உளி) முன் வலக்கரத்தில் சக்கரம், இடப்பக்கம் உமை அமர்ந்திருக்க வலப்புறம் நான்முகன், எதிரில் சிவனை வழிபடும் நிலையில் திருமால்.
உலகம் வியக்கும் பெரும் போகம் அளிப்பவர். மாலுக்கு சக்கரம் அளித்த கோலம். தன்னை பூதூவி வழிபட்ட திருமாலுக்கு சுதரிசனம் எனும் சக்ராயுதத்தை கொடுத்த வடிவம் சக்ரதானஸ்வரூப மூர்த்தி. நிகழ்வு நடந்த தலம்: திருமாற்பேறு. மற்றும் திவீழிமிழலை
#####
ஓம்நமசிவய!
கௌரி மைந்தா போற்றி!
சக்தி விநாயகா போற்றி!
சங்கரன் மைந்தா போற்றி!
சங்கரி மைந்தா போற்றி!
கஜாந்திகர்-கஜாந்திக மூர்த்தி!
சூரபன்மனுடைய தொல்லை தாங்காமல் இந்திரன் தன் மனைவி இந்திராணியுடன் சீர்காழியில் தங்கியிருக்க, அங்குவந்த தேவர்கள் அசுரனின் தொல்லை அதிகமாக இருப்பதைச் சொல்ல இந்திராணியை அரிகரபுத்திரனின் பாதுகாப்பில் வைத்துவிட்டு தேவர்களுடன் கயிலை சென்று நந்தி தேவரிடம் அனுமதி கேட்க சிவனார் சனகாதி முனிவர்களுக்கு ஞான உபதேசம் செய்து கொண்டிருந்தமையால் நந்திதேவர் அனுமதி மறுக்க இந்திரன் கயிலையில் பலகாலம் தங்கியிருக்க நேர்ந்தது.
சூரபன்மனுடைய தங்கை அசமுகி, துன்முகி இருவரும் பூவுலகில் இருந்த இந்திராணிப் பார்த்து தன் தமையனுடன் வாழும்படி கேட்க அதை இந்திராணி மறுத்ததனால் அவளைப் பலவந்தமாக இழுத்துச் செல்ல முயன்றனர். அரிகரபுத்திரன் அவர்களைத் தடுக்க தங்களிடமிருந்த சூலத்தை அவன்மேல் ஏவிவிட்டு இந்திராணியை தூக்கிக்கொண்டு வான்வழி செல்ல அரிகரபுத்திரன் அசமுகி இடுப்பைப் பற்றி அவளின் கரத்தை வெட்டி இந்திராணியை விடுத்தாள். பின் நீயும் இந்திராணியை தொட்டாய் அல்லவா எனக்கூறி துன்முகியின் கைகளையும் வெட்டினான்.
கைகள் வெட்டப்பட்ட நிலையில் இருவரும் தன் சகோதரனிடம் சென்றுகூற சூரபன்மனின் மகன் பானுகோபன் தான் சென்று அவர்களைச் சிறைசெய்து வருவதாகக் கூற அவனை ஆசீர்வதித்து அனுப்பினான் சூரபன்மன். எங்கு தேடியும் இந்திரன் இந்திராணியைக் காணாததால் தேவலோகம் செல்ல அங்கு இந்திரன் மகன் சயந்தனைக் கண்டு அவனுடன் போர் புரிய பானுகோபனின் அம்பு பட்டு சயந்தன் மயக்கமடைய, ஐராவதம் பானுகோபனை அழிக்க எதிர்த்து வந்தது. தாக்குதலில் ஐராவதத்தின் கொம்புகள் உடைந்ததால் அதன் வலிமை குன்றியது. சயந்தனையும் தேவர்களையும் பானுகோபன் சிறைபிடித்து தன் தந்தைமுன் நிறுத்தினான்.
தன் கொம்புகளை இழந்த ஐராவதம் மண்ணுலகில் திருவெண்காடு தலத்தில் சுவேதாரண்யேசுரரை நினைத்து சூரிய, சோம, அக்னி தீர்த்தங்களில் மூன்று வேளை நீராடி இறைவனைத் தொழுதது. சிவபெருமான் காட்சி கொடுத்து நின் கொம்புகள் பளையபடி ஆகுக என்றும் அமரர் துயர் ஒழிந்தபின் அமராவதியை அடைந்து இந்திரனுக்கே ஊர்தியாய் இரு என அருள்புரிந்தார். முருகன் சூரபன்மனால் தேவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை அகற்றி தேவர்களைச் சிறையிலிருந்து விடுவித்த பின்னர் ஐராவதம் விண்ணுலகு சென்றது.
சூரபன்மன் மகன் பனுகோபனுடன் போரில் தன் தந்தங்களையும் வலிமையையும் இழந்த ஐராவதத்திற்கு அருள் புரிந்த வடிவம் கஜாந்திக மூர்த்தி.
#####
ஓம்நமசிவய!
சங்குபாணி விநாயகா போற்றி!
சதுர் முக கணபதியே போற்றி!
சந்தான விநாயகா போற்றி!
சித்தி விநாயகா போற்றி!
சண்டேசானுக்ரஹர்!
திருப்பனந்தாள் அருகில் மண்ணியற்றங்கரையில் உள்ள சேய்ஞாலூர் எச்சதத்தன் மகன் விசாரசருமர். முந்தைய பிறவியின் அறிவு தொடர்ச்சியாக விசாரசருமருக்கு வேத சிவாகமங்களின் உணர்வு சிந்தையில் தோன்றி வளர பசுக்களை மேய்க்கும் இடையன் அவைகளை அடிக்கக் கண்டு அவனை விலக்கி தாமே பசுக்களை மேய்த்து உரிமையாளரிடம் சேர்பித்து வந்தார். மண்னியற்றங்கரையில் சிவலிங்கம் நிறுவி பசுக்கள் தாமே பொழிந்து தரும் பாலைக் கொண்டு இலிங்கத்தை அர்ச்சனை செய்து வந்தார். மலர்கள் சூட்டி மகிழ்ந்தார். பாலை மணலில் கொட்டி வீனாக்குகின்றான் என தந்தையிடம் புகார் சென்றது. ஊர்ச்சபையில் தன் மகன் செயலுக்காக மன்னிப்பு வேண்டி இனி இவ்வாறு நிகழா வண்ணம் பார்த்துக் கொள்வதாக உறுதி செய்தார்.
மறுநாள் தன் மகன் என்ன செய்கிறான் எனப் பார்க்க யாருக்கும் தெரியாமல் குராமரத்தில் ஏறி ஒளிந்திருந்தார் எச்சதத்தன். வழக்கம்போல் விசாரசருமர் குடத்தினைக் கொண்டு பசு மடியில் வைக்க அவைகள் தாமே கறந்த பாலைக் கொண்டுவந்து லிங்கத்திற்கு திருமுழுக்காட்டுச் செய்து மலர்களால் அர்ச்சனை செய்து கொண்டிருந்தார். இதைக் கண்ட எச்சதத்தன் கோபமுற்று அருகே சென்று வசைபாடி விசாரசருமர் முதுகில் அடித்தார். சிவ வழிபாட்டில் ஒன்றியிருந்ததால் நடந்த எதுவும் விசாரசருமருக்குத் தெரியவில்லை. மேலும் அதிக கோபமுற்ற எச்சதத்தன் பால் வைத்திருந்த குடத்தை எத்தினான். பால் சிந்தியதைக் கண்டு சிவ பூசைக்கு நிந்தனை செய்பவர்களை தண்டிக்க அருகில் கிடந்த கோலை எடுத்து வீசினான். சிவ அருளால் கோல் மழுவாக மாறி எச்சதத்தன் கால்களை வெட்டியது. அப்போதும் வழிபாட்டிலேயே கவனமாக இருந்ததால் நடந்ததை கவனிக்கவில்லை.
சிவன் விடைமீது உமையுடன் தோன்றி நம் பொருட்டால் ஈன்ற தந்தையை மழுவினால் எறிந்தாய், இனி நாம் அடுத்த தந்தையாம் என்று அருளி உச்சி மோந்து மகிழ்ந்தார். அவரை தன் தொண்டர்கள் தலைவனாக்கி எமக்கு நிவேதனம் செய்யும் பொருள்கள் யாவும் நினக்கே உரியது. நினக்குச் சண்டீசன் என்ற பதவி தந்தோம் என அருளினார். சிவனடியார்கள் அனைவருக்கும் தலைமையானவர். தொண்டர் நாயகம் எனப்படுவார். தன் மாலையை அவருக்கு சூட்டி மகிழ்ந்தார். எச்சதத்தன் சிவபதம் அடைந்தான். சிவன் கோவில்களில் வரவு செலவுகள் சண்டேசுவரர் பெயரில் எழுதுவது பண்டைய வழக்கம். இது அறங்களைச் செய்யும் போது நான் செய்தேன் என்னும் தன் சிறப்பு இன்றி இறைவனது திருவருளே அறத்தைச் செய்வித்தது என எண்ணிச் செய்தல் வேண்டும் என்பதை வலியுறுத்தும் தத்துவம்.
சிவன் சடாமகுடத்தால் அலங்கரிகப்பட்டு உமையுடன் அமர்ந்து, முகம் சற்றே இடது புறம் திரும்பி, வலக்கரம் அருட் குறிப்புடன், இடக்கரம் சண்டேசர் தலைமீது ஆசீர்வதிக்கும் நிலையில் வலக்காலைத் தொங்கவிட்டுக் கொண்டு இடக்காலை படுக்கவைத்து பூணூல் அணிந்தவராய் இருப்பார், சண்டேசர் தன்னிரு கரங்களையும் குவித்து வணங்கியவராய் இருக்கையில் அமர்ந்திருப்பர். கிருதயுகத்தில் உருத்திர சண்டேசுவரர், திரேதாயுகத்தில் பிரசண்டர், துவாபராயுகத்தில் வீரசண்டர், கலியுகத்தில் தலனிசண்டர் என அழைக்கப்படுவார்.
சிவாலய தெய்வங்களில் தென்முகக் கடவுள், ஆடல் வல்லான், சண்டேசுவரர் ஆகியோர் தெற்கு நோக்கி காட்சியளிப்பார்கள். சண்டேசுவரர் எப்போதும் தியானத்தில் இருப்பார். சிவவழிபாட்டின்போது சிவனுக்கு அணிவித்து பெறும் பூமாலை, பரிவட்டம் முதலிய பொருட்களை சண்டேசர் சந்நிதியில் சேர்த்து சிவதரிசனப் பலனைத் தரவேண்டும் என பிராத்தனை செய்து அங்கு விபூதி பெற்று அணிய வேண்டும் என்பதே முறை. இடையறாத தியானத்தில் இருக்கும் சண்டேசருக்கு நமது வருகையை தெரிவிக்கவே அவரது சந்நிதியில் நின்று மெள்ளத் தட்டுதல் வேண்டும். அவரது சன்னதியை முழுமையாக வலம் வராமல் வலப்புறமாக சென்று தரிசித்து வந்த வழியே அரைவட்டமாக திரும்ப வேண்டும். சிவ புண்னிய பலனை பக்தர்களுக்கு அளிக்கும் அதிகாரம் கொண்டவர் சண்டேசுவரர். முதலில் விநாயகரையும் இறுதியில் சண்டேசுவரரையும் வழிபடுதல் வேண்டும் அப்போதுதான் சிவ வழிபாடு முழுமை பெறும். பஞ்சமூர்த்திகள் புறப்பாடு என்பது- விநாயகர், முருகன், சிவன், அம்பிகை, சண்டேசுவரர் என்பதாகும். சண்டேசர் மானிடராய் பிறந்து இந்நிலைக்கு உயர்ந்தவர்.
ஈன்ற தந்தையை நம் பொருட்டால் மழுவினால் எறிந்தாய், இனி உனக்கு அடுத்த தந்தை நாம் என அருளிய வடிவம்- சண்டேசானுக்ரஹர். காட்சி: கங்கை கொண்ட சோழபுரம்.
#####
ஓம்நமசிவய!
சித்தி புத்தி விநாயகா போற்றி!
சிந்தாமணி விநாயகா போற்றி!
சிந்தூர விநாயகா போற்றி!
சிவசக்தி விநாயகா போற்றி!
ஏகபாதர்- ஏகபாத மூர்த்தி!
அகண்ட ஜோதியாய் புலன்களுக்கு எட்டாதவராய் அனைத்து உயிர்களும் ஒடுங்கக்கூடிய இடமாக இருப்பவர். கருத்துக்களுக்கு எட்டாதவர். மாறுதல் இல்லாதவர். கருணையின் பிறப்பிடமாய் திகழ்பவர். எல்லா ஆன்மாக்களும் ஆணவ மலத்தில் அழுந்திருப்பதனால் ஆன்மாவின் அற்புதத்தை அறியும் பொருட்டு மீண்டும் மீண்டும் அவற்றைப் படைத்தும், காத்தும், சங்கரித்தும், மறைத்தும், அருள் புரிந்தும் செய்து உலக உயிர்களை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்து இயங்க வைக்கின்றார். சதா உறங்குபவனுக்கு உலகத்தைப் பற்றி ஏதும் தெரியாது. உலகத்து மக்களின் மீது வைத்த கருணையால் ஆன்மாக்களை விழிப்படையச் செய்கின்றார். பேரூழிக் காலத்தில் அனைத்து உயிரினங்களும் பெருமானிடம் ஒடுங்க அவர் மட்டும் அழியாமல் இருப்பார். தனித்து நிற்கக்கூடிய வல்லமை பெற்றவர்.
பின் வலக்கரத்தில் சூலம், இடக்கரத்தில் மழு, முன்வலக்கையில் காக்கும் குறிப்பு, இடக்கை அருளும் குறிப்பும் கொண்டு புலித்தோல் உடுத்தி, சடையில் சந்திரன், கங்கை அணிந்து இருப்பார்.
மனம், ஞான நிஷ்டையை விரும்ப அருள்வார். வேதங்கள் நான்கையும் புரிந்து கொள்ளும் அறிவினை அளிப்பார். அனைத்து சங்கார காலத்திலும் அனைவரும் இலயமடையவும்-இறக்கவும், எல்லா உலகங்களும் அவர் திருவடியில் கீழ் நிற்பதாலும், ஏகபாத மூர்த்தி, காட்சி- மதுரை, தப்புளாம் புலியூர் (திருவாரூர்), திருவானைக்கா, திருவெற்றியூர்
#####
More...
பிட்சாடனர்- பலிதிரி / பலிகொள் செல்வர்/ கபாலி!
Written by குருஸ்ரீ பகோராஓம்நமசிவய!
சுந்திர விநாயகா போற்றி!
சுமுக விநாயகா போற்றி!
சுமங்கல விநாயகா போற்றி!
செல்வ விநாயகா போற்றி!
பிட்சாடனர்- பலிதிரி / பலிகொள் செல்வர்/ கபாலி!
தவத்தில் சிறந்த தாருகாவன முனிவர்கள் தவமே எல்லாவற்றிலும் சிறந்தது என்ற ஆணவத்தால் சிவத்தை மறந்தனர். அவரின் மனைவியர் கற்பில் சிறந்து விளங்கினாலும் கற்பே சிறந்தது என்று அவர்களும் சிவனை மறந்தனர். ஊழ்வினை காரணமாக இவ்வாறு மறந்த அவர்களின் கருத்தை மாற்ற இறைவன் திருவுளம் கொண்டு திருமாலை மோகினி உருவமெடுத்துவரச் செய்து பெருமான் அழகிற் சிறந்த ஆணுருக் கொண்டார். நிருவாண உருவுடன் சூலம், பிச்சைப் பாத்திரம், ஆகியவற்றுடன் மோகினி உடன்வர தாருகாவனம் அடைந்தார்.
மோகினியின் அழகைக் கண்ட தாருகாவன முனிவர்கள் மனவலிமை குன்றி அவள் பின் சென்றனர். சிவனின் நிருவாண வடிவம் கண்ட முனிவர்களின் மனைவியர் கற்பினை இழந்தனர். அவர்மீது ஆசைக்கொண்டு அவர்பின் சென்றனர்.
பிச்சை உகக்கும் பொம்மான் இடக்காலை ஊன்றி வலக்காலை வளைத்து நடந்து செல்லும் குறிப்பை உணர்த்தி நான்கு கைகளில் முன்வலது கையிலுள்ள அருகம் புல்லால் மானை ஈர்த்தும், பின் வலக்கை உடுக்கை ஏந்தி காதுவரை நீண்டும், பின் இடக்கையில் பாம்புடன் திரிசூலம் ஏந்தியும் முன் இடக்கையில் பிரம்ம கபாலமாகிய பிச்சைப் பாத்திரம் கொப்பூழ்வரை உயர்ந்திருக்க, ஆடையேதுமின்ரி இடையில் பாம்பை அரையாக அணிந்து விலங்குவார், தலையில் சடாபாரம், நெற்றியில் படமும் முக்கண்ணும் உடைய நீலகண்டராக காண்பார். வலக்காலில் வீரக்கழல், திருவடிகளில் பதுகையாக வேதங்கள், வலப்பக்கம் ஒரு மானும் இடப்பக்கம் ஒரு குறட்பூதமும் காணப்படும்.
சம்சாரப் பற்றினைப் போக்குபவர். உயிர்களின் உய்திக்கு தன்பால் பக்தி கொண்ட அடியவர்களின் வினைப் பயனாகிய தீ வினைகளை- பாதகங்களை உண்ணுஞ் சோறாகப் பெறுபவர் என்ற தத்துவக் கோலம். தருகாவனத்து முனிவர்கள் அவரின் பத்தினிகளின் செருக்கை அடக்க கொண்ட வடிவம் பிட்சாடனர்.
காட்சி: காஞ்சி, திருச்செங்காட்டங்குடி, திருவெண்காடு, குடந்தை,வழுவூர், பந்த நல்லூர் ஆகியத் தலங்கள்.
#####
ஓம்நமசிவய!
ஞான விநாயகா போற்றி!
தந்திமுக விநாயகா போற்றி!
தத்துவ விநாயகா போற்றி!
தருண கணபதியே போற்றி!
காமாந்தகர், காமதகனமூர்த்தி!
தக்கனின் யாகத்தை வீரபத்திரர் அழித்தபின் கயிலையில் இறைவனைத் தொழுத அம்பிகை தக்கனின் மகளாக இருந்த உடலையும் பெயரையும் விரும்பவில்லை அவை நீங்க அருள் புரியக் கேட்டாள். இமவான் என்ற மலையரசன் விருப்பிற்கேற்ப அவர் மகளாகப் பிறக்க அருள் புரிந்தார். இமவான் அக்குழந்தையை பார்வதி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான்.
கயிலையில் அம்பிகையைப் பிரிந்த சிவன் மோன மூர்த்தியாகி யோகியாக தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு அறம் பொருள் இன்பம் வீடு பற்றிச் சொல்லாமல் சொல்லும் ஞான குருவாக எழுந்தருளியிருந்தார். அந்தக் கணம் தேவர்களுக்கும் மக்களுக்கும் பலயுகங்களாயின. பெருமான் உமையைப் பிரிந்து இருந்ததால் உயிர்கள் ஆண்பெண் உறவின்றி தவித்தன. உலக வளர்ச்சி தடைப்பட்டது.
இந்நிலையில் சூரபதுமன், சிங்கமுகன், தாரகன் முதலிய அசுரர்கள் தேவர்களைத் துன்புறுத்த அவர்கள் பிரமனுடன் கலந்தாலோசிக்க சிவன் பார்வதியை மணந்து ஒரு குமரனை அளிக்க சிவனின் தவநிலை கலைய வேண்டும் என முடிவெடுத்தனர்.
காமநினைவை உண்டாக்கும் தமரைப் பூ, உடலின் நிறத்தைப் பசலையாகும் மாம்பூ, வேறு உணர்வை நீக்கும் அசோகப் பூ, மயங்கச் செய்யும் முல்லைப் பூ, விரகதாபத்தால் ஆளைக் கொல்லும் நீலோற்பலப் பூ என்ற ஐந்து மலர் கனைகளை கரும்பு வில்லுடன் தென்றல் தேர்கொண்ட மன்மதனை சிவனின் தவநிலையைக் கலைத்து காமப்பற்றை விளைவிக்க இந்திரன், நான்முகன், திருமால் தேவர்கள் ஆகியோர் முடிவடுத்து மன்மதனை அனுப்பினர். நந்திதேவர் அனுமதிக்க மேற்புறம் சென்று இறைவன் மீது ஐந்து மலர்க் கனைகளையும் எய்தினான்.
மலர்கனைகள் மேனியில் பட்டதும் சிவன் நெற்றிக்கண்ணைத் திறக்க அத்தீயில் காமன் எரிந்து சாம்பலானான். அவன் மனைவி இரதிதேவி சிவனிடம் தனக்கு மாங்கல்ய பிச்சை அளிக்க வேண்டியதால் மன்மதனை அருவமாய் தன் தொழில் செய்ய அருள் புரிந்தார். மன்மதன் (மாரன்) - அனங்கன் தன் மனைவிக்கு மட்டும் உருவுடன் தோற்றமளிப்பான். உயிர்பெற்று எழுந்த மன்மதன் பலதலங்களில் லிங்கம் நிறுவி வழிபட்டான். (வில்லியனூர் காமேச்வரம், பூவாளூர் மன்மதேச்வரம், குத்தாலம் மன்மதேச்வரம், காஞ்சி காமேச்வரம் எனப்படும்)
காமனை எரித்ததால் காமதகன மூர்த்தி எனப்பட்டார். யோக தட்சிணா மூர்த்தி வடிவத்துடன் காமனின் வடிவமும் சேர்ந்து காணப்படும். சிவனுக்கு மூன்று கண்களும் நான்கு கைகளும், சடைமகுடம், கையில் நாகம், அக்கமாலை, கடகக் குறிப்பு, சூசிக் குறிப்பு ஆகியவற்றுடன் இருப்பர். சிவனின் உருவில் காமன் அரை பங்காக இருப்பர். பொன்மஞ்சள் நிற காமனுடன் இரதி, தேவபாகா, வசந்தா ஆகியோருடன் கையில் கரும்பு வில்லும் ஐவகை கனைகளும் இருக்கும்.
மெய்ஞானம் தோன்றச் செய்து திருவடியைச் சாரும் பக்குவம் உண்டாக்குவார். உலக நலனுக்காக தேவர்கள் வேண்டுதலுக்காக சிவன்மேல் காமகணை தொடுத்த மன்மதனை எரித்த வடிவம்*காமதகனமூர்த்தி. காட்சி: காஞ்சி-ஏகாம்பரேஸ்வர்ர், கங்கை கண்ட சோழபுரம்,
#####
காலசம்ஹாரர்-காலனைக் காய்ந்த பொம்மான்-காலாரி!
Written by குருஸ்ரீ பகோராஓம்நமசிவய!
திரிமுக விநாயகா போற்றி!
துங்கக் கரிமுகனே போற்றி!
துண்டி விநாயகா போற்றி!
துன்முக விநாயகா போற்றி!
காலசம்ஹாரர்-காலனைக் காய்ந்த பொம்மான்-காலாரி!
இறப்பு பற்றிய எண்ணமே மனிதனை தத்துவ நெறிக்கு அழைத்துச் செல்லும். தோற்றம் உண்டேல் மரணம் உண்டு என்பது வெள்ளிடைமலை. காலகால மூர்த்தி காலனிடமிருந்து நம்மைக் காப்பவர்.
மணல்மேடு என்ற ஊரில் கவுசிக முனிவரின் மகன் மிருகண்டு முனிவர் தம் மனைவியருடன் வாழ்ந்து வந்தார். மகப்பேறு வேண்டி சிவபெருமானை நோக்கித் தவம் புரிய குறைந்த அறிவும் நீண்ட ஆயுளும் கொண்ட மகன் வேண்டுமா அல்லது நல்லறிவும் நற்குணங்களும் கொண்ட பதினாறு வயதுவரை வாழும் மகன் வேண்டுமா என இறைவன் கேட்க நிறைந்த அறிவுள்ள மகனே வேண்டும் எனக் கேட்க மார்க்கண்டேயன் பிறந்தான். தனக்கு பதினாறு வயது நிரம்பும் அளவில் தன் ஆயுளைப் பற்றிய குறையை அறிகின்றான்.
பெற்றோர் அனுமதியுடன் திருக்கடவூருக்கு வந்து அமிர்தகடேசரை வழிபட்டு வர, குறித்த பதினாறு வயது நிரம்பியதும் உயிரைக் கவர காலன் வர மார்க்கண்டேயன் அச்சம் கொண்டு திருமேனியைக் கட்டிப்பிடிக்க லிங்கத்துடன் பாசக்கயிறை வீசிய காலனை தனது இடது காலால் எட்டி உதைத்து மார்க்கண்டேயன் என்றும் பதினாறாக வாழ அருள் புரிந்தார்.
மூன்று திருக்கண்களுடன் நான்கு கரங்கலுடன் கூரிய பற்களுடன் திகழ்வார். வலபக்க ஒரு கரத்தில் சூலம் காதுவரை உயர்ந்தும், மற்றொரு கரத்தில் பரசு / அருட் குறிப்பும், இடப்பக்க முன் கரத்தில் சூசி குறிப்புடன், பின்கரம் விசுமய முத்திரையுடன்- வியப்பினை உணர்த்தும் குறிப்புடன் இருக்கும். வலது கால் தாமரையிலும், இடது கால் எமனுடைய தலையிலும் இருக்கும்.
துன்பங்கள் அனைத்தையும் துடைத்து அபயம் அருளுபவர், மார்கண்டேயனுக்காக காலனை காலால் உதைத்த வடிவம்-காலசம்ஹாரர்-காலனைக் காய்ந்த பொம்மான்-காலாரி!. வீரட்டம் புரிந்த நிகச்சியான இது நிகழ்ந்த இடம் திருக்கடவூர் தலமாகும். காட்சி: பட்டீசுவரம், திருச்செங்காட்டாங்குடி. மற்றும் கங்கை கொண்ட சோழபுரம்.
#####
ஓம்நமசிவய!
தும்பிக்கை நாதா போற்றி!
துளைக்கர விநாயகா போற்றி!
தேசிய விநாயகா போற்றி!
தொப்பக் கணபதியே போற்றி!
சலந்தராரி-சலந்திரவத மூர்த்தி!
இறை அருள் இருந்தால்தான் இன்பமாக வாழலாம். அகந்தை தலை தூக்கினால் அல்லல்கள் ஏற்படும். இறையருளால்தான் இடர் நீங்கப் பெறும். இந்திரன் தானே பெரியவன் என்ற ஆணவத்தோடு கயிலை சென்றான். இந்திரன் ஆணவத்துடன் வருவதை அறிந்த சிவன் தானே வயிற்காப்போனாய் நின்றார். இந்திரன் கேட்ட கேள்விக்கு பதில் ஏதும் அளிக்காமல் இருக்க கோபங்கொண்டு தன் வஜ்ராயுதத்தால் அக்காவலனை அடிக்க வஜ்ராயுதம் பொடிப் பொடியானது கண்டு அதிர்ச்சியடைந்தவன் முன் சிவன் தோன்ற தன்னை மன்னிக்க வேண்டினான். அவனை மன்னித்து தன்னிடம் தோன்றிய கோபக் கனலைக் கடலில் எறிந்தார்.
கடலில் விழுந்த கோபக் கனல் ஒரு குழந்தையாக மாறி நீரால் வளர்க்கப் பட்டமையால் அதற்கு சலந்திரன் என பிரம்மன் பெயரிட்டார். வாலிபப் பருவம் அடைந்தபின் அசுரத் தச்சன் மாயனால் சாலந்தரம் என்ற நகரை உருவாக்கி காலநேமி என்பவரின் மகள் பிருந்தையை மணம் செய்துகொண்டு வாழ்ந்தான். தேவர்கள் அனைவரையும் போரிட்டு வென்றான். திருமால் பல காலம் போரிட்டு அவனை வெல்ல முடியாமல் அவனைப் பாராட்டியதைக் கண்ட இந்திரன் மிகவும் பயந்து கயிலையில் தங்கியிருந்தான். இதை அறிந்த சலந்திரன் கயிலைக்குப் புறப்பட்டான்.
தேவேந்திரன் சிவபெருமானை சரன் அடைந்தான். பெருமான் ஒரு வயோதிகர் உருவெடுத்து ஊன்றிய தடியுடன் கையில் கமண்டலமும் கொண்டு தேவேந்திரனை பின்வரச் சொல்லி தான் முன் நடந்தார். வழியில் சலந்தரனைக் கண்டவர் நீ யார் எனக்கேட்டார். நான் கடல் அரசனின் மகன். என்பெயர் சலந்திரன், நான் சிவபெருமானிடம் போர் புரியச் செல்கின்றேன் என்றான். பெரியவர் சிவனுடன் சண்டை செய்தால் நொடிப்பொழுதில் மரணமடைவாய் .உடனே இங்கிருந்து போய்விடு என்றார். ஒரு நொடிப்பொழுது தங்கியிருந்து என் ஆற்றலைக் காணுங்கள் என்றான் சலந்திரன்.
நான் உன் வல்லமையைக் காணத்தான் வந்தேன். என்று கூறி தன் காலால் ஒரு சக்கரத்தை வரைந்து இந்த வளையத்தை உன் தலைமேல் தூக்கிவைக்க முடியுமா? எனக் கேட்டார். என்ன முயற்சி செய்தும் சலந்திரனால் முடியவில்லை. தன் முழு ஆற்றலையும் உபயோகப்படுத்தி அந்த சக்கரத்தை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி தலைமேல் வைத்ததும் அது அவனை இரு கூறாக்கியது. அசுரப்படையை தீயினால் சாம்பலாக்கினார்.
பின் இரு கரங்களில் மழு, மான், முன் வலக்கரத்தில் சக்கரம், இடக்கரத்தில் கத்தரி முத்திரையுடன் இருப்பார். கோபக்கனலை அழித்து மனம் அமைதிபெறச் செய்வார். தன் கோபக்கனலில் உருவான சலந்திரன் தேவர்களுக்கு தீரா துயர் விளைவித்ததால் தன் பாதத்தினால் நிலத்தில் சக்கரம்கீறி அதனைக் கொண்டு சலந்திரனை அழித்த வடிவம்*சலந்தராரி-சலந்திரவத மூர்த்தி!. நிகழ்வு நிகழ்ந்த தலம்: திருவிற்குடி
#####
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.