ஓம்நமசிவய!
தவிர்தலுறாது இளங்கொடிபோல் வளர்மணி
நாசியைக் சித்திதார்த்தர் காக்க! காமருபூ
முகந்தன்னைக் குணேசர் நனி காக்க!
களம் கணேசர் காக்க!
கருடாந்திக மூர்த்தி!
திருமகளைத் தன் மார்பிலேகொண்ட திருமால், தண்டம், சுதரிசனம், சார்ங்கம், கதை, சங்கு ஆகிய ஐம்படைகளுடன் தன் ஊர்தியான கருடன் மேலேறி கயிலை அடைந்தார். நந்தி தேவரை பணிந்து அனுமதி பெற்று உள்ளே சென்று காளகண்டமும், சூரிய, சந்திர அக்னியாகிய முக்கண்களும், மான், மழு, அபயம், வரதம் கொண்டு விளங்கும் நான்கு தோள்களும், கங்கையும், கொன்றையும் திங்களும் அணிந்த செஞ்சடையும் பார்வதிதேவி பாகமுமாக சிவபெருமான் அமர்ந்திருப்பதை கண்டு தரிசனம் செய்து ஆனந்தத்தில் ஆழ்ந்திருந்தார்.
வெகுநேரமாய் திருமால் திரும்பி வராமையால் கருடன் தானும் உள்ளே செல்ல முற்பட்டான். நந்தி தடுக்க, என்னைத் தடுக்க நீயார்! நீயே பிச்சை எடுப்பவனின் வாகனமாய் இருக்கின்றாய், உன்னை நான் உயிரொழிப்பேன் எனக்கூறியதைக் கேட்ட நந்தி தேவர் பெருஞ்சினமுற்று தம் மூச்சுக் காற்றை உள்வாங்கி வெளியே செலுத்த அதனால் விரட்டப்பட்ட கருடன் பல காதங்கள் கடந்து விழுந்தான். உள்வாங்கும் மூச்சால் மீண்டும் கீழே விழுந்து துன்பமுற்றான். நந்தி தேவர் மூச்சினை உள்வாங்கி வெளியேவிட ஒவ்வொரு மூச்சினாலும் தொடர்ந்து துன்பப் பட்டான் கருடன். தான் இதிலிருந்து தப்ப திருமாலை அழைத்தான் கருடன்.
கருடன் நிலையறிந்த திருமால் சிவபெருமானிடம் கருடனுக்கு அருள் புரிய வேண்டினார். சிவன் திருமால் மூலம் கருடனை விடுவிக்கச் சொல்லியும் நந்தி தேவர் இறைவனை இகழ்ந்த இவனை மன்னிக்கமாட்டேன் எனக்கூறிவிட திருமால் மீண்டும் சிவனிடம் முறையிட சிவபெருமான் நந்தி தேவரை அழைத்து கருடனை விட்டுவிட ஆணையிட்டார். கருடன் நந்தி தேவர் பிடியிலிருந்து தப்பி தன் அகந்தை அழிய திருமாலுடன் திருபாற்கடல் சேர்ந்தான்.
சிவனைக் காணச் சென்ற திருமால் திரும்பி வராமையால் தானும் உள்ளெ புகமுற்பட நந்தி தடுக்க கருடன் சிவநிந்தனை செய்யததால் நந்தி தேவர் சீற்றத்திற்கு ஆளாகித் துன்புற உதவிக்கு திருமாலை அழைக்க திருமால் சிவனிடம் சொல்ல கருடனுக்கு அருள் புரிந்த சிவ வடிவம். கருடனுக்கு அருளிய மூர்த்தி.கருடாந்திக மூர்த்தி!
#####