தியானம்(அ)ஆழ்ந்து சிந்தித்தல்
இராஜ யோகத்தின் நுட்பமான குறிக்கோளுக்கு அழைத்துச் செல்லுவது தியானம். இராஜயோகத்தின் முந்தைய ஆறு பகுதிகளும் ஏழாவதாகிய தியானத்தை நமக்குள் ஏற்படுத்த உறுதுணை செய்யும். வெளியிலோ அல்லது உள்ளேயோ மனதை ஒரு பொருள்மீது நிறுத்தப் பிரத்தியாஹாரம், தாரணை மூலம் பயிற்சி அளித்தபின் அது இடைவிடாது தொடர்ந்து அப்பொருளை நோக்கி ஒரே வழியில் ஓடும் சக்தியைப் பெறுகிறது. இதை தியானம் எனலாம்.
நம் முன்னே இருக்கும் ஒருப்பொருளைப் பற்றிய நனவு உணர்வும், நம்மைப் பற்றிய நனவு உணர்வும் நாமும் அந்தப் பொருளும் அங்கே இருப்பதை அறியச் செய்கிறது. ஆனால் நமக்கு ஏற்படும் அனுபவத்தின் பெரும் பகுதியை நம்மால் அறியமுடிவதில்லை. உடலின் உள்ளே இயங்கும் பல உறுப்புகளைப் பற்றியும், மூளையின் பல பகுதிகளைப் பற்றியும் எவருமே நுணுக்கமாக அறிந்து கொள்ள முடிவதில்லை.
நாம் உணவு உட்கொள்ளும்போது அதை உணர்ந்தே உண்ணுகிறோம் ஆனால் நம்மை அறியாமலே அது ஜீரணமாகிறது. ஜீரணித்தது இரத்தமாகும்போது நம்மை அறியாமலே நிகழ்வு நடைபெறுகிறது. அந்த இரத்தின் மூலம் உடலின் பல உறுப்புகள் சக்தியைப் பெறுகின்றன. இந்த நிகழ்ச்சிகளெல்லாம் நமது நனவு உணர்வின்றி நடக்கின்றது. இதையெல்லாம். நாம்தான் செய்கின்றோம். நம் உடலில் பலர் இருந்து செயல் செய்ய முடியாது. உணவை உண்டு அதை ஜீரணிப்பது என்வேலை. உடலின் உறுப்புக்களுக்கு வலிமையைக் கொடுப்பது வேறு ஒருவர் என்று எப்படிக் கூறமுடியும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் உணர்வு நிலைக்கு கொண்டுவரலாம். தக்கப் பயிற்சிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். உடலின் ஒவ்வொரு உறுப்பையும் நாம் கட்டுப்படுத்தலாம்.
நம் நனவு உணர்வுக்குப் புலப்படாத செயல்களையும் நாம்தான் செய்கிறோம். ஆனால் அவை நம்மை அறியாமல் நிகழ்கின்றன. அவ்வளவுதான். முதலாவதாக நனவு உணர்வு நிலையில் எல்லாச் செயல்களையும் நான் செய்கிறேன் என்ற உணர்வோடு நிகழும் செயல்கள். அடுத்ததாக எல்லாச் செயல்களும் நான் செய்கிறேன் என்ற உணர்வு அற்ற நிலையில் நடக்கும் செயல்கள். எனவே நம்முள் உணர்வு அற்ற செயலென்றும், உணர்வுடன் கூடிய செயல் என்றும் இரண்டுவிதமான செயல்கள் நடைபெறுகின்றது. விலங்குகளிடம் ஏற்படும் உணர்வற்ற செயல்களை இயல்புணர்வு என்கின்றோம். மனிதர்களிடம் உணர்வோடு கூடிய செயலைத்தான் காண்கின்றோம்.
தியானத்தை முதலில் சாதாரண தூலப் பொருள்களில் ஆரம்பித்து மெள்ள, மெள்ள நுண்ணியதாகி இறுதியில் பொருளில்லாமல் பழகவேண்டும். உணர்சிகளின் புறக்காரணங்களில் ஆழ்ந்து தியானிப்பதில் மனதை ஈடுபடுத்த வேண்டும். அடுத்து நரம்புகளில் ஏற்படும் அசைவுமீதும் இறுதியாக மனத்தின் எதிர்ச்செயலின்மீது தியானம் செய்ய வேண்டும். புற உணர்ச்சியின் காரணங்களை மட்டும் அது அறியக்கூடிய நிலையில் மனம் நுண்ணிய பொருள்களையும், உடல்களையும், உருவங்களையும் காணும் திறன் பெறுகிறது. இந்த உள் நிகழும் செயலை மட்டும் அறியும் சக்தியைப் பெறும்போது தன்னிடமோ, பிறரிடமோ செயல்களாக மாறுவதற்கு முன்பே அவை எண்ண அலைகளாக இருக்கும் பொழுதே அவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெறுகிறது.
மனதின் எதிர்ச் செயலை மட்டும் புரிந்தவனுக்கு எல்லா அறிவும் கிட்டும். அவன் தன் மனதின் அடித்தளத்தைக் காண்பான். அது அவனின் கட்டுப்பாட்டிற்கு வரும். பல சித்திகள் கைகூடும். அவன் தன்னை அறிவு வடிவான என்றுமே அழியாத எங்கும் நிறைந்துள்ள ஆன்மாவாக காண்பான். எதையும் விரும்பாது எதனுடனும் ஒட்டிக்கொள்ளாது இருக்கும் அவன் இயற்கையில் ஏற்படும் மாறுதல்களை அழகுடனும் தெய்வீக அமைப்பும் கொண்டதாக காண்பான். தியானத்தில் இதை நாம் புரிந்து கொள்ளலாம்.
ஒருவன் ஆழ்ந்த தியானம் பழகியதன் பலனாக தான் தியானிக்கும் பொருளின் வெளித் தோற்றத்தை புறக்கணித்து அதன் உள் பாகத்தில் மட்டும் அதனுடைய கருத்தை மட்டும் தியானிக்கும் பொழுது அதைச் சமாதி என்கிறோம். அதாவது முதலில் ஒரு பொருளின்மீது மனம் தியானம் செய்கிறது. பயிற்சியின் காரணமாகத் தொடர்ந்து நீண்ட நேரம் அப்பொருளையே தியானிக்கும் ஆற்றல் பெறுகின்றது. பின் தொடர்ந்து தியானம் பழகுவதனால் தியானம் செய்த பொருளின் உள்ளே ஊடுருவி அது காரியமாக இருப்பதற்குள்ள காரணத்தை மட்டும் காணக்கூடிய ஆற்றல் பெறுகின்றது. அப்போது அந்தமனத்திற்கு எல்லாம் வசமாகிறது.
கடவுளின் வடிவத்தில் பாதம் முதல் தலை முடிவரை நினைத்துப் பார்ப்பது
தினமும் படுக்குமுன் தான் செய்தவைகள் சரியா, தவறா என்றும் செய்ய வேண்டியவைகளைச் செய்து விட்டோமா என்றும் மனதில் நினைத்துப் பார்ப்பது
அடிக்கடி ஓம் என்ற நாதத்தில்தான் பிரபஞ்சப் பொருள்கள் படைக்கப் பெற்றுள்ளன என்றும் ஓம் என்று சொல்லும்போது பிரபஞ்சமே அதில் அடங்கி நம் மனதில் உள்ளது என உணர்தல்.
நான் பிரம்மமாய் இருக்கின்றேன் (அகம் ப்ரஹ்மாஸ்மி), நானே சிவனாய் இருக்கின்றேன் (ஸோஹம்) என்ற அளவில் எண்ணங்களை உயர்த்திக் கொள்ளல்,
மௌனம், குறைந்த உணவு உண்ணுதல், தனிமையில் இருப்பது, அதிகாலை விழிப்பு, குளிர்ந்த அல்லது மனதிற்குப் பிடித்த இடத்தில் இருப்பது,
கடின உழைப்பு, நிகழ்வுகளில் மனம் செலுத்துதல், பாசம், உறவு முதலியவற்றால் சூழப்படுதல் முதலியவற்றிலிருந்து விடுபடுதல்,
பகைமை, பொறாமை, களவு, பழிச் சொல்லல், இரக்கமில்லாமை ஆகிய எண்ணங்களை விட்டுப் பழகல்,
ஆகியன தியானத்திற்கு மிகுந்த உதவி புரிந்து உறுதுணையாக நிற்கும்.
அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து குறைந்தது 3 மணி நேரம் தியானம் செய்யவும். பின் மதியம், மாலை, படுக்கைக்குப் போகுமுன் என பழகவும். இப்படிப் பழகினால் 6 மாதங்களுக்குள் சமாதி யோகம் பயிலும் நிலைக்கு உயரலாம்.
யோகம் செய்வதற்குரிய தூண்டுதல் மிகுந்த இடங்களில் அல்லது அந்த இடத்தின் சுவர்ப் படங்களின் முன்னால் அமர்ந்து செய்யலாம். பிரபஞ்ச மாதிரிப்படம், சூரியக் குடும்பங்களின் வட்டப்பாதைகள் ஆகியனவற்றை அடிகடி கற்பனை செய்து கொள்ளவேண்டும். இந்த நதிக்கரைகள், புண்ணியத் தலங்கள் மற்றும் அகன்ற பரிமாணங்களும் பார்க்கப்பட்டு மனத்தால் கற்பனை செய்யப் படும்போது ஆங்கே பல்லாயிரம் ஆண்டுகளாக நீக்கமற நிறைந்துள்ள யோகிகளின் எண்ண அசைவுகள் நம்மை வந்தடையும். ஞானிகள் அதிர்வு அலைகள் நிறைந்த இடம் நாம் வசிக்கும் பூமிதான்.
முத்தியும் சித்தியும் பெற்ற நிகழ்வுகளைப் பற்றி படித்தும் கேட்டும் ஒவ்வொன்றாக ஒவ்வொரு நாளும் நினைத்து தியானித்தால் சிறப்பு பெறுவீர்.
ஓர் இடத்தை இருப்பிடமாககொண்டு மனதை அங்கு இருக்கும்படிச் செய்தால் மனதில் ஒருவித அலைகள் உண்டாகின்றன. மற்ற அலைகள் இதை கலைப்பதில்லை. விழுங்குவதுமில்லை. படிப்படியாக இவை முன்னனிக்குவர மற்றவை பின் வாங்கும். நல்ல அலைகள் எல்லாம் ஒன்றாகி ஓர் அலை மட்டும் சித்தத்தில் எஞ்சும். அந்த அலையே தியானமாகும்.
மனதை ஒரு பொருளின்மீது 12 நொடிக்கு நிறுத்தினால் அது தாரணை என்றும், அதுபோன்ற 12 தாரணைகள் ஒரு தியானம் என்றும் கணக்கிடப்படுகிறது.
ஓம், காயத்ரி மந்திரங்களை உடம்பில் செலுத்தி மனத்திலும் உச்சரித்து நினைத்தல் சிறப்பு. “எந்த பரமாத்மா நமது புத்தி சக்திகளைத் தூண்டுகிறாரோ, அனைத்தையும் படைக்கும் அந்த பகவானின் சிறப்பான ஒளிமிகுந்த ஜோதி சொரூபத்தை தியானிக்கின்றேன்”
ஆகாசம் பிரபஞ்சம் முழுவதும் இருக்க இடம் கொடுத்தது என்று அடிக்கடி உச்சரிப்போடு நினைத்து பழகினால் ஆகாச பூதம் வசமாகும். அண்டத்தில் உள்ள எதையும் நினைத்து தியானம் செய்யலாம்.
1.உங்கள் மூக்கின் நுனியைப் பாருங்கள். இது மனதை ஒருமுகப் படுத்த உதவும். தலைக்குமேல் சில அங்குல உயரத்தில் ஒரு தாமரை இருப்பதாக நினைக்கவும். நற்குணங்களை அதன் மையமாகவும், ஞானத்தை அதன் காம்பாகவும் நினையுங்கள். எட்டு இதழ்கள் அஷ்டமா சித்திகளைக் குறிக்கும். பூவின் கோசரங்களும், சூலகமும் தியாகத்தைக் குறிக்கும். தாமரையின் நடுவில் பொன்னொளி வீசுபவராய், சர்வ வல்லமை உள்ளவராய், தொடுவதற்கு அரியவராய், ஓங்காரத்தில் திளைத்து இருப்பவராய், மனம், வாக்குக்கு எட்டாதவராய் ஒளியால் சூழப்பட்ட அனைதிற்கும் ஈசனாய் இருப்பவரைத் தியானம் செய்யுங்கள்.
2.இதயத்தில் ஓர் சுடர் எரிவதாகவும் அச்சுடரை ஆன்மாவின் ஆன்மாவிகிய கட்வுளாகவும் நினைத்தும் தியானம் செய்யலாம்.
3.மனம் ஓர் இருட்டு குகை எனப் பாவனை செய்க
மெல்ல மெல்ல ஒரு நட்சத்திரம் போல் ஓர் ஒளி தெரிவதாக நினை
அது ஓர் சிவப்பு விளக்காக ஒளிர்விட்டு பிரகாசிப்பதாக நினை
அது கடவுளின் ஒளி என்று தியானம் செய்யவும்
பிறகு படிப்படியாகக் குறைந்து மனக் குகையில் மறைந்து விட்டதாக நினை.
குகையாக நினைக்கும்போது கண்களை மூடவும். ஒளித்தெரியும் போது மெல்ல திறக்கவும். மீண்டும் கண்களை மூடவும் செய்து தொடரவும்.
பின் அந்த உள்ஜோதியில் உடல் அடங்கி பெரிய ஜோதியில் ஐக்கியம் ஆவதாக நினைக்கவும். உறவுகள், சொத்துக்கள், உடல், பொருள் ஆவி எல்லாம் கடவுளில் ஐக்கியமாகி விட்டதாகவும் இனி அவற்றிற்கும் நமக்கும் எந்த தொடர்புமில்லை என உணர்க. நம் ஆன்மாவைத் தவிர நமக்கு உரியது எதுவும் இல்லை என உணரவும்.
புத்தியில் கலக்கம் இல்லாது, மனத்தில் புற அசைவுகள் இல்லாது பொறி புலன்களின் செயல்கள் இல்லாமல் தியானிப்பது முழுமையான தியானமாகும். ஆத்மா தனித்து நிற்கிறது. பாலில்- நெய்யையும், எள்ளில்- எண்ணெய்யையும், பிரிப்பதுபோல் தியானப்பயிற்சியால் ஆத்மாவில் உள்ள தெய்வம் தெரியவரும்.
தூக்கம் – கனவு – விழிப்பு ஆகிய 3 நிலைகளிலும் உடம்பே ஈடுபடுகிறது. ஆத்மா தனித்தே நிற்கிறது. ஆத்மா உடலில் மனம், பிராணன், பொறி, புலன்கள் ஆகியன தனியாக இயங்குகின்றன. ஐந்து கோசங்களாகிய அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் ஆகியன ஐக்கிய நிலையில் இருந்தாலும் ஆத்மாவுடன் இனைப்பு இல்லை.
ஓங்காரத் தியனம்-
பிரபஞ்சத்தின் முழு அடையாளமே ‘ஓம்’ ஒலியும் அதிலுள்ள பொருள்களும் ஆகும். ‘ஓம்’ என்றால் அ – உ – ம் – நாதம் – விந்து என்ற ஐந்தையும் குறிப்பது. இறைவனின் ஐந்து தொழில்களையும் குறிக்கும். ஓம் – ன் விரிவு, பரப்பு பிரபஞ்ச முழுவதிலுள்ள பொருள்கள். மனதில் ஓங்காரத்தை சொல்லும்போது அதன் அதிர்வு உடலின் ஒவ்வொரு அணுவிலும் எதிர் ஒலி ஏற்படுத்தும். இதை ஆத்மா உணருகிறது. எனவே இதை ஆத்ம ஒலி எனலாம்.
முன்பே ஆத்மாவும் பிரம்மமும் இணைகின்றது எனச் சொன்னோம். ஆகவே இப்போது ஆத்மா, பிரம்மம், ஓம் எல்லாம் ஒன்றாகிறது. அ- விழிப்பு நிலையாகவும், உ- கனவுநிலையாகவும், ம்- உறக்க நிலையாகவும் செயல் படுவதால் உடலின் உயிரோடு ‘ஓம்’ –ன் தொடர்பு புரியும். சச்சிதானந்த பிரம்மம் எனும் நிலையை ஆன்மாவிற்கு ‘ஓம்’ தியானத்தின் மூலம் கிடைக்கும். (சத்-எப்போதும் உள்ளது, சித்- ஞானமயமாயிருப்பது, ஆனந்தம் – ஆனந்தாமாயிருப்பது). இந்த ஒலி எங்கும் வியாபித்துள்ளது. இயற்கையின் அசைவில், காற்றின் அசைவில், நீரின் ஓட்டம் ஆகியவற்றில் இலகுவாக கேட்கலாம்.
“இராஜயோகம்” தன்னகத்தே கீழ்க்கானும் எட்டு படிகளைக் கொண்டுள்ளது.
1. இமயம்
2. நியமம்
3. ஆசனம்(அ)இருக்கை
4. பிரணாயாமம்(அ)பிராணணைக்கட்டுப்படுத்தல்
5. பிரத்தியாஹாரம்(அ)புலன் ஒடுக்கம்
6. தாரணை
7. தியானம்(அ)ஆழ்ந்து சிந்தித்தல்
8. சமாதி(அ)மெய்மறந்த உயர் நினைவு நிலை
******