1.இமயம்
என்பது கொல்லாமை, வாய்மை, களவு புரியாமை, நெறிதவறாமை, எந்தவொரு நன்கொடையும் பெற்றுக்கொள்ளாமை ஆகியவற்றை உள்ளடக்கியது. இவைகள் சித்த சுத்தியை உண்டாக்கும். மனம் வாக்கு காயங்களால் உயிரினங்களுக்கு துன்பம் விளைவிக்காமல் இருத்தல் அஹிம்சை. அஹிம்சை மேலான தர்மம். மனிதனுக்கு அதிக ஆனந்தம் உண்டாக்கும். உள்ளதை உள்ளபடிக் கூறுதல் சத்யம். இதனால் அனைத்தையும் அடையலாம். பிறர் பொருளைக் கவராது இருத்தல் அஸ்தேயம். மனம், வாக்கு, காயங்களினால் தூயவனாய் இருப்பது பிரம்மச்சரியம். கொடிய வறுமை பெற்றுத் துன்புற்றாலும், பிறர் பொருளைத் தானமாகப் பெறாது இருத்தல் அபரிக் கிரகம். பிறர் பொருளைத் தானமாகப் பெருகின்ற ஒருவன் இதயம் அசுத்தமாகி, தன் சுதந்திரம் இழந்து, தானம் கொடுத்தவனுக்கு கட்டுப்பட்டவன் ஆகிவிடுவான்.
இதை பதஞ்சலி தன் நூலில் அஹிம்சை, சத்யம், திருடாமை, பிரம்மச்சாரியம், இரக்கம், ஜபம், பொறுமை, உறுதி, மித உணவு, சுத்தம் என்ற பத்தும் மீறுவது பஞ்சமாபாதகம் என்றார்.
கொல்லாமை, இன்னாசெய்யாமை, அருளுடைமை, அன்புடைமை, வாய்மை, இனியவைக்கூறல், வெஃகாமை, பிறன்மனை விழையாமை, துறவு, மெய்யுணர்தல், நிலையாமை, கூடா ஒழுக்கம், கல்லாமை, அடக்கம் உடமை, ஈகை ஆகியவைகள் இமயத்தின் சிறப்புகளாக திருக்குறளில் கூறப்பட்டுள்ளது.
அகிம்சை, வாய்மை, சினமின்மை, தியாகம், சாந்தி, குயுக்தியாகப் பேசாமை, உயிர் இரக்கம், கடும் பற்றுள்ளம் இல்லாமை (லோபம் இல்லாமை), வள்ளல் குணம், பணிவு, திடமான மனம் ஆகியவை இமயத்தின் தன்மைகளாக கீதையில் கூறப்பட்டுள்ளது.
தத்துவங்களை அறிந்து இறை எனும் பொதுவான சக்தியை வழிபடுவதும், சாதி, மதம், ஏற்றம், தாழ்வு முதலான பேதங்களின்றி எல்லோரையும் சமமாகக் கருத வேண்டும் என்பதையும் இமயம் எனக் கூறலாம்,
“இராஜயோகம்” தன்னகத்தே கீழ்க்கானும் எட்டு படிகளைக் கொண்டுள்ளது.
1. இமயம்
2. நியமம்
3. ஆசனம்(அ)இருக்கை
4. பிரணாயாமம்(அ)பிராணணைக்கட்டுப்படுத்தல்
5. பிரத்தியாஹாரம்(அ)புலன் ஒடுக்கம்
6. தாரணை
7. தியானம்(அ)ஆழ்ந்து சிந்தித்தல்
8. சமாதி(அ)மெய்மறந்த உயர் நினைவு நிலை
******