சுந்தரானந்தர் சித்தர்
அகமுடையார் குலத்தில் ஆவணி ரேவதி நட்சத்திரத்தில் சுந்தரானந்தர் பிறந்தார். இவரின் குரு சட்டைமுனி. யோகத்தில் பல ஆண்டுகள் இருந்து ஆற்றல் பெற்றார். அகத்தியர் வழிப்பட்ட லிங்கத்தை சதுரகிரியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
சுந்தரானந்தர் மதுரை நகரின் வீதிகளில் ஆணைப் பெண்ணாக்கியும், பெண்ணை ஆணாக்கியும், ஊனமுற்றவர்களை குணப்படுத்தியும், திடிரென மறைந்தும் பல சித்துக்கள் செய்ததை மக்கள் மன்னனிடம் தெரிவிக்க சித்தரை அரண்மனைக்கு அழைத்துவர ஆள் அனுப்ப, சுந்தரானந்தர் அரசன் தன்னை வந்து பார்க்கும்படி சொல்லி விட்டார்.
சித்தரைப் பார்க்க அரசர் வந்தார். அப்போது ஒருவன் கையில் கரும்புடன் நிற்க சித்தருடன் பேசிக்கொண்டிருந்த அரசன், சித்தரே இவன் கையில் இருக்கும் கரும்பை அந்தக் கல்யானை உண்ணும்படியாகச் செய்யுங்கள் என்றார். சித்தர் கரும்பை வாங்கி கல்யானையிடம் கொடுத்து கண்சிமிட்டினார். யானை கரும்பை பெற்று உண்டது. மீண்டும் கல் யானையாக மாறியது. அதைக் கண்ட அனைவரும் அதிசயப்பட்டனர். அன்பும் பக்தியும் பெருக்கெடுத்தோட சித்தரின் காலில் விழுந்து வணங்கினர்.
கோவிலில் உள்ளே சென்று மறைந்தார். மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் சமாதி இருக்கின்றது.
சுத்தரானந்தர் வைத்திய திரட்டு, காவியம், விஷநிஷவாணி, வக்கிய சூத்திரம், கேசரி, சுத்த ஆனம், தீட்சா விதி, அதிசய காரணம், சிவயோக ஞானம், மூப்பு, தாண்டகம் ஆகிய நூல்களை எழுதினார்.
சுந்தரானந்தர் சித்தர் தியானப்பூசைக்கு
“சித்து விளையாட்டில் சிறந்தவரே சிவனுடன்
கலந்தவரே ஆயசித்தி அனைத்தும் அறிந்தவரே
அபயம் அளிக்கும் அருளாளரே மதுரையம்பதி
வாழ் மகத்துவமே உன்பாதம் சரணம்”
தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் சுந்தரானந்தர் திரு உருவப் படத்தை வைத்து தாமரை அல்லது வாழைத்தண்டு திரிபோட்டு குத்து விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து வில்வத்தால் கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.
அபயமளிப்பவரே போற்றி
அவதார புருஷரே போற்றி
இந்திரனுக்கருளியவரே போற்றி
ஜடாமுடிப்பிரியரே போற்றி
ஒளி பொருந்தியவரே போற்றி
ஓம் கம் நம் பீஜாட்சரத்தை உடையவரே போற்றி
சகல சித்திகளை உடையவரே போற்றி
சுகங்களைத் தரும் சிவயோகியே போற்றி
சூட்சமாக சஞ்சாரிப்பவரே போற்றி
தடைகளை நீக்குபவரே போற்றி
தாய்போல் காப்பவரே போற்றி
தைரியத்தை கொடுப்பவரே போற்றி
நிவேதனமாக கடலை, வெண்பொங்கல் இவற்றுடன் மஞ்சள் அல்லது காவி வஸ்திரம் வைத்து வியாழக்கிழமை வழிபடின் சிறப்பு,
தியானபூசைப்பலன்கள்
வியாழக் கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் ஜாதக குரு தோஷங்கள் விலகி நன்மை பயக்கும். புத்ர பாக்யம் உண்டாகும். புகை பிடித்தல், குடிப்பழக்கம் அகலும். சித்த பிரமை வியாதி குணமாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். வேலை வாய்ப்புகள் பெருகும். கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும். வயிறு குடல் நோய்கள் தீரும். வறுமை அகன்று வளமான வாழ்வாகும்.
“ஓம் ஸ்ரீ சுந்தரானந்தர் சுவாமியே போற்றி”
******
சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்
அகத்தியர் / அகப்பேய்சித்தர் / இடைக்காட்டுச்சித்தர் / உரோமரிஷி / கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் / குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்