ஓம்நமசிவய!
புகர்முகக் களிற்றுப் புண்ணிய போற்றி!
அகலிடம் நிறைய அமர்ந்தோய் போற்றி!
செல்வம் அருள்க தேவா போற்றி!
நல்லன எமக்கருள் நாயக போற்றி!
ஆக்கமும் ஊக்கமும் அருள்வாய் போற்றி
காக்க எங்களை உன் கழலிணை போற்றி! போற்றியே!
இலிங்கோத்பவர்!
பேரொளியாய் ஒளிப்பிழம்பாய் விளங்கும் ஜோதியிலிருந்து அனைத்து உலகிற்கும் ஆதாரமானதும் வேதங்கள் பூஜித்து கொண்டாடும் ஜோதிலிங்கத்தே தோன்றிய வடிவம் லிங்கம்,
பிரமனும் விஷ்ணுவும் சந்தித்தனர். நான்முகனுக்கும் திருமாலுக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. அண்டங்களைப் படைப்பவர் என்பதால் பிரம்மா கர்வம் கொண்டிருந்தார். அதைச் சோதித்துப் பார்க்க எண்ணிய விஷ்ணு பிரம்மனின் வாய்வழியாக உடம்பிற்குள் போய் உலகங்களைக் கண்டு வெளியில் வந்தார். அனைத்தையும் கண்டீரா என அகங்காரத்துடன் கேட்டார் பிரம்மன். இப்போழுது அனைத்து உலகங்களையும் படைப்பவன் நான் என ஒப்புக் கொள்கின்றீர்களா எனக் கேட்டார். பிரம்மதேவரே அனைத்தையும் கண்டேன் என்று சொல்ல முடியாது. ஏனெனில் ஆதியும் அந்தமும் காணப்படவில்லையே என்றார். அப்படியானல் உங்களிடம் ஆதியும் அந்தமும் உள்ளதா எனக் கேட்டு விஷ்ணுவின் வாய்வழி உள்சென்ற பிரம்மன் விஷ்ணு வாயை மூடியதால் வெளியில் வரமுடியாமல் உடம்பைச் சுருக்கி விஷ்ணுவியின் நாபி வழி வெளியே வந்து தாமரையில் அமர்ந்தார். விஷ்ணுவின் நாபியிலிருந்து தோன்றியதால் விஷ்ணுவின் புத்திரனாக பிரம்மா கருதப்பட்டார்.
இருவரும் சிவனைக் கண்டனர். சிவனைத் தங்களுக்குச் சம்மாக ஏற்கலாமா என்று பிரம்மா விஷ்ணுவிடம் கேட்க, சிவன் நம் இருவரையும்விட பலம் பொருந்தியவர் என்று விஷ்ணு சொன்னார். வேதங்கள் உயிர்பெற்றெழுந்து திருமால், பிரம்மா இருவரையும் விட சிவனே உயர்ந்தவர் என்பதை தக்க ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியதை விஷ்ணு ஒப்புகொள்ள பிரம்மன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்போது இருவருக்குமிடையில் பேரொளிப் பிழம்பாய் சோதித்தம்பம் எழுந்தது. அத்தம்பத்தின் அடிமுடி அறிந்தவரே பெரியவர் என விண்ணிருந்து அசரீரி ஒலித்தது. நான்முகன் அன்னப்பறவை வடிவம் கொண்டு மேலே பறந்து சென்று முடியைக் கண்டு வருவது என்றும் திருமால் வராக வடிவம் கொண்டு அடியை கண்டு வருவது என்று இருவரும் ஓர் உடன் பாட்டிற்கு வந்தனர்,.
பலகாலம் இருவரும் முயற்சித்தும் பலனில்லை. மேலே சென்று கொண்டிருந்த பிரமன் மேலிருந்து கீழ்நோக்கி வந்து கொண்டிருந்த தாழம்பூவை நீ எங்கிருந்து வருகின்றாய்? எனக் கேட்க அது நான் சோதித் தம்பத்தின் உச்சியிலிருந்து பலகாலமாய் வந்து கொண்டிருக்கின்றேன் என்றது. தான் முடியைக் கண்டதற்கு தாழம்பூ சாட்சி சொல்ல வேண்டும் என நான்முகன் வேண்ட தாழம்பூ ஒப்புக் கொள்ள இருவரும் கீழே வந்தனர்.
தன் முயற்சியில் தோல்வியுற்று நிலத்தை அடைந்த திருமாலிடம் நான்முகன் சோதித்தம்பத்தின் முடியைத் தான் கண்டதாகக் கூற தாழம்பூ அதற்கு சான்று அளித்தது. முத்தொழில் புரியும் மூவரில் ஒருவனாக நான்முகன் இருப்பினும் பொய் சொன்னமையால் அவனுக்கு உலகில் எங்கும் தனியாக கோவில் இல்லாமல் போனது.. பொய்ச்சான்று பகர்ந்ததால் தாழம்பூவும் சிவ பூசையிலிருந்து நீக்கப்பட்டது.
நான்முகன் அறிவு வடிவானவன். திருமால் செல்வத்தின் நாயகன். அறிவினாலும் செல்வத்தினாலும் இறைவனைக் காணமுடியாது என்பதை உணர்த்தும் தத்துமே இந்த நிகழ்வு.
இந்த நிகழ்வு நடந்த தலம் திருவண்ணாமலை இறைவன் இங்கு தீயாக சோதிப் பிளம்பாக வெளிப்பட்டமையால் திருவண்ணாமலை ஐம்பூதத்தலங்களுள் அக்னி(தீ)த் தலமாக வணங்கப்பெறுகின்றது. காட்சி: பொதுவாக எல்லா சிவத்தலங்களிலும் கருவறைக்குப் பின்னாலுள்ள தேவக்கோட்டத்தில் காணலாம்.
#####