ஓம்நமசிவய!
முத்து கணபதியே போற்றி!
முழுமுதற் கோமானே போற்றி!
மூலப் பொருளே போற்றி!
மூஷிக வாகனா போற்றி!
சோமாஸ்கந்தர்!
உமை கந்தன் உடனாகிய சோமாஸ்கந்தர் வடிவம் நற்புத்திரப் பேறு மற்றும் சந்தான விருத்தி தரவல்லது. சிவ(சைவவழிபாடு), சக்தி(சாக்த வழிபாடு), முருக(கௌமார வழிபாடு) ஆகிய மூன்றும் சேர்ந்த வடிவம். இறைவனை இல்லறத்தானாக, இனிய கணவனாக, பாசம் மிக்கத் தந்தையாக தனயனுடன் ஒரே இருக்கையில் ஒருங்கிணைந்து காட்டும் திருவடிவம். சத்து, சித்து, ஆனந்தம் என்றால் சச்சிதானந்தம் என்பர். உண்மையாகிய சிவனும் அறிவாகிய சக்தியும் சேர்ந்தால் கிடைப்பது ஸ்கந்தன் என்ற இன்பம். அதாவது உண்மையும் அறிவாகிய நன்மையும் சேர்ந்தால் கிடைப்பது இன்பம் என்ற தத்துவத்தைச் சொல்லும் வடிவம்.
சுகாசன மூர்த்தி போன்றே சிவன் அமர்ந்து தேவியின் பக்கம் முகம் சிறிது சாய்ந்திருக்க அதே ஆசனத்தில் உமை வலப்பாதம் மடங்கியவாறும் இடப்பாதம் கீழே தொங்கவிட்டு இடக்கையில் வரதமுத்திரையும், வலக்கையில் குவளை மலரையும் வைத்திருப்பார். இருவருக்குமிடையே கந்தப் பெருமான் தேவியின் கழுத்தளவு உயரம் நின்றிருப்பார். அவரது இடக்கையில் கனியும் வலக்கையில் சுட்டும் குறிப்பும் வைத்திருப்பார்.
திருமால் இம்மூர்த்தியைத் தன் மார்பிலே வைத்து பல்லாயிரம் ஆண்டுகள் வழிபட்டு வந்துள்ளார். இந்திரன் அவுணர்களின் துன்பத்திலிருந்து மீள திருமாலிடம் இம்மூர்த்தியைப் பெற்று இந்திரலோகத்தில் வைத்து பூசித்து வந்தான். அசுரர்களை முசுகுந்த சக்ரவர்த்தியின் உதவியோடு வென்றான். இம்மூர்த்தியைக் கண்ணுற்ற முசுகுந்த சக்ரவர்த்தி விரும்பிக் கேட்க இது விஷ்ணுவுடையது அவர் சம்மதமில்லாமல் நான் தரமுடியாது என இந்திரன் சொல்ல முசுகுந்த சக்ரவர்த்தி திருமாலிடம் கேட்டு அவர் சம்மதத்தைப் பெற்றான். இந்திரனுக்கு இம்மூர்த்தத்தை விட்டு பிரிய மனமில்லாததால் இதைபோன்றே ஆறு வடிவங்களைச் தேவ சிற்பி கொண்டு செய்து முசுகுந்தரிடம் காட்டி இதில் இது வேண்டுமோ அதை எடுத்துக் கொள் என்றான். இறையருளால் சரியான மூர்த்தத்தை கண்டு அதை எடுக்க இந்திரன் மற்ற ஆறு திரு வடிவங்களையும் அவரிடமே கொடுத்து பூவுலகில் நிறுவிப் பூசனை செய் என்றார்.
முசுகுந்தன் திருமால், இந்திரன் பூசித்த சோமாஸ்கந்த மூர்த்தியை திருவாரூரில் நிறுவி மற்ற ஆறு மூர்த்திகளையும் திருநாகைக் காரோணம், திருநள்ளாறு, திருக்காறாயில், திருவாய்மூர், திருமறைக்காடு, திருக்கோளிலி ஆகிய தலங்களில் நிறுவி வழிபாட்டிற்கு ஏற்பாடுகள் செய்தான். சோமாஸ்கந்த மூர்த்தியே இத்தலங்களில் தியாகராசர் என்ற பெயருடன் விளங்குகின்றார். இத்தலங்கள் சப்த விடத்தலங்கள் எனப்படும். இத்தலங்களில் சிவபெருமானின் பெயரும் அவர் ஆடிய நடனமும் வேறு வேறானவை.
திருவாரூர்- வீதி விடங்கர் அசபா நடனம்
திருநாகைக்காரோணம்- சுந்தர விடங்கர் பாராவார தரங்க நடனம்
திருநள்ளாறு- நக விடங்கர் உன்மத்த நடனம்
திருக்காறாயில்- ஆதி விடங்கர் குக்குட நடனம்
திருவாய்மூர்- நீல விடங்கர் கமல நடனம்
திருமறைக்காடு- புவனி விடங்கர் அம்ச நடனம்
திருக்கோளிலி- அவனி விடங்கர் பிரமா நடனம்
விடங்கர் என்றால் திருவீதியில் உலா வரும் திருமேனியாகும். டங்கம் என்றால் உளி என்று பொருள். விடங்கம் என்றால் உளி கொண்டு செதுக்கப்படாமல் தானே தோன்றியது எனப் பொருள் படும்.
துறவறத்தைவிட இல்லறத்திலிருந்தே வீடுபேறு அடையலாம் என விளக்கும் இந்த சோமாஸ்கந்த மூர்த்தம் மனையறம், மக்கட்பேறு என்ற இரு உயரிய கருத்துக்களைக் கொண்டது. சோமாஸ்கந்தரை வழிபடுவோர் கணவனும் மனைவியுமாய் இல்லறத்தில் இனையில்லா இன்பம் துய்த்து நல்ல மகப்பேறும் குல வளர்ச்சியும் பெற்று இம்மையில் சிறந்து வாழ்ந்து மறுமையில் வீடுபேறும் அடைவர். சோமாஸ்கந்தர் வடிவக் கோயில்கள்: திருக்கருகாவூர், வைத்தீஸ்வரகோவில், சிக்கல், காஞ்சிபுரம், திருக்கள்ளில் ஆகியன.
#####