ஓம்நமசிவய!
அடியார் உள்ளக் கோயிலாய் போற்றி!
அறக் கருணை புரி அழகா போற்றி!
பொருள் நான்கினையும் தருவாய் போற்றி!
புகுந்தென் உள்ளம் பிரியாய் போற்றி!
மண்ணின் ஐங்குணம் ஆனாய் போற்றி!
நீரிடை நான்காய் நின்றாய் போற்றி!
சண்டதாண்டவ மூர்த்தி-காளிகாதாண்டவ மூர்த்தி!
நிசும்பன், சும்பன் அசுரர்களின் துன்பங்களைத் தாங்கமுடியாமல் தேவர்கள் பார்வதியை நோக்கித் தவமிருக்க, பார்வதி இறைவன் அனுமதியுடன் அசுரர்களை அழிக்கப் புறப்பட்டார். அம்பிகையின் அழகைக் கேள்வியுற்ற நிசும்பன் தன்னை மணக்க தூதனுப்ப, என்னைப் போரில் வெல்பவரையே நான் மணக்க இயலும் என்று செய்தியை அனுப்ப, போர் நிகழ்ந்தது. சண்டன், முண்டன், நிசும்பன், சும்பன் அனைவரையும் அன்னை மாய்த்தாள். அப்போது போர் புரிந்த ரத்தபீசனன் உடலிருந்து எத்தனைச் சொட்டு இரத்தம் சிந்துகிறதோ அந்த அளவுக்குப் பல ரத்த பீசர்கள் உருவாகி போரிட்டனர். அவன் அழிந்தாலன்றி போர் முடிவுறாது என்பதை அறிந்த அன்னை சிவன் உதவியுடன் காளியைத் தோற்றுவித்தார்.
காளி ரத்தபீசனின் இரத்தம் பூமியில் விழுந்து உயிர் பெறுமுன்னரே அதைக் குடித்துவிட அன்னை அவனை வெட்டிச் சாய்த்தார். மகிழ்ந்த அம்பிகை காளிக்கு சண்டி எனப் பெயரிட்டு இறைவனுடன் நடனம் ஆடும் பேரினையும் அளித்தாள். அம்பிகை வரம் அளித்ததாலும் ரத்தபீசனின் இரத்தத்தைக் குடித்ததாலும் காளிக்கு ஆணவம் ஏற்பட்டு சினம் கொண்டு காண்போரை நடுங்க வைத்தாள். இச்செய்தி கேட்ட சிவன் காளியின் ஆணவப்போக்கினை அகற்ற காளி இருக்கும் திருவாலங்காட்டினை அடைந்தார்.
சிவனின் படைகளுடன் மோதிய காளியின் படைகள் அழிந்தன. காளி அவரை நடனப் போட்டிக்கு அழைத்தார். இருவரும் தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது இறைவனுடைய திருச்செவியிலிருந்த குண்டலமானது நடன வேகத்தில் விழ அதை நடனமாடியபடியே காலினால் எடுத்து காதிலே அணிந்தார் இறைவன். இந்தகைய ஆட்டத்தை காளியினால் ஆடமுடியவில்லை. அதனால் தோல்வி அடைந்தாள்.
சிவனின் ஐந்தாவது செயலாகிய அருளல் செயலை குறிக்கும் வடிவம். மிகவேகமாகச் சுழன்று ஆடியதால் சண்ட தாண்டவம் எனப்பட்டது. ஒரு காலை தலைவரையில் மேலே தூக்கி ஆடுவதாகையால் ஊர்த்துவ தாண்டவம், வீடு பேற்றினைத் தருவதாகிய அனுக்கிரகத்தின் பொருட்டுச் செய்ததாகையால் அனுக்கிரக தாண்டவம் எனப்பட்டது. காளியின் செருக்கை அடக்க மிக வேகமாக விரைவான கதியில் ஆடிய நடனம். நிகழ்வு நடைபெற்றத் தலம்: திருவாலங்காடு.
#####