Print this page
சனிக்கிழமை, 09 September 2017 10:23

இரத்தபிக்ஷாப் பிரதான மூர்த்தி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

விக்கினவர்த்தனர் மேற்கென்னுந் திக்கதனிற் காக்க!
வாயுவிற் கசகன்னர் காக்க!
திகழ்வு தீசி தக்க நிதிபன் காக்க!
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க!


இரத்தபிக்ஷாப் பிரதான மூர்த்தி!

 

சிவபெருமானை இகழ்ந்த பிரமனது நடுத்தலையைக் நகநுனியால் கிள்ளி எடுத்தார் பைரவர். பிரம்மனைப் போல மற்றவர்களும் ஆணவம் கொள்ளக்கூடாது என்பதால் அனைவரிடமும் இரத்தம் ஏற்கும்படிச் சிவபெருமான் ஆணையிட்டார். அதன்படி இறைவனால் அனுக்கிரகிக்கப்பட்ட காலவேகன், கனன்முகன், சோமகன், ஆலகாலன், அதிபலன் ஆகிய கணத்தலைவர்களுடன் சிறந்த தவசிகள் வசிக்கும் வனங்களை அடைந்து தன் சூலப்படையால் அவர்களைக் குத்தி இரத்தத்தைக் காபாலத்தில் ஏற்றார். அவ்வாறு இரத்தம் கொடுத்தோரில் உயிர் துறந்தோரை உடனே எழுப்பி அவர்களது அகந்தையை அழித்து அருள் புரிந்தார்.
உலகம் முழுவதும் சுற்றி பின் மாயவன் இருக்கும் வைகுந்தம் வந்தார். திருமாலின் சாயலிலே தண்டு, கோதண்டம், சங்கு, சக்கரம், கொண்டு இருக்கும் திருமாலின் முதற் காவலன் விஷ்வக்சேனன் பைரவரின் பெருமையை அறியாமல் தடுக்க பைரவர் அவனைச் சூலத்தில் குத்தி தன் தோள்மீது சாய்த்தார். பூமகள், நிலமகள் இருபுறமிருக்க ஆதிசேஷன் பாம்புப் படுக்கையில் இருந்த திருமால் முன் சென்றார் பைரவர். படுக்கையிலிருந்து எழுந்து பைரவரை வணங்கிய திருமால் எம்பெருமான் இங்கு எழுந்தருளியிருப்பது யாது காரணம் எனக் கேட்க பலிக்கு வந்தோம் உமது இரத்தத்தை உடனே தருக எனச் சொல்ல திருமால் தானே முன்வந்து தமது நெற்றியில் உள்ள நரம்பை பிளந்து பெருகிய இரத்தை கபாலத்தில் சொரியும்படி விட்டார்.
இரத்தம் அதிகமாக வெளியேறியதால் திருமால் மயக்கமானார். திருமகளும் நிலமகளும் கலங்கி பைரவரை வணங்கினர். பைரவர் திருமாலை மயக்கத்திலிருந்து எழுப்பினார். திருமால் கேட்டுக் கொண்டதன் பேரில் விஷ்வக்சேனனை தன் சூலத்திலிருந்து விடுவித்தார். பின் தேவர்கள், முனிவர்கள் அகந்தை களைந்து அண்டங்கள் தோறும் சென்றார்.
சர்வ சங்கார காலமாகிய யுகங்கள் தோறும் வேதமே நாயாக அதன் மீது உலாவருவார். ஆணவம்தான் நம்முடைய எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கும். ஆணவம் காரணமாகவே நாம் மற்றவர்களை அவமதிக்கின்ரோம். தெய்வத்தை நிந்தை செய்கின்றோம். சகோதர மக்களுக்குத் தீமைகள் செய்கின்றோம். அதனால்தான் கர்ம வினை எனும் சங்கிலியால் கட்டப்படுகின்றோம். இதனை நீக்கவே சிவபெருமான் பைரவர் வடிவம் கொண்டு எல்ல இடங்களிலும் இரத்தப் பலி கொண்டார் என்பதாகும்.
தேவர்களின் அகந்தையை அழிக்க இரத்தப் பிச்சை எற்கத் தோன்றிய வடிவம் இரத்த பிட்சாப் பிரதான மூர்த்தி. நிகழ்வு நிகழ்ந்த தலம்: காசி.

#####

Read 6200 times Last modified on புதன்கிழமை, 15 November 2017 04:59
Login to post comments