ஓம்நமசிவய!
அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்
உயர்வானவன்!
ஒரு மரம் ஒரு வித்திலிருந்து முளைவிட்டு தோன்றுகின்றது. மரத்தை நாம் காண்பதற்கு முன்பாக அது வித்தாக ரூபாருபமாக வித்து வடிவத்தில் இருந்தது. வித்தில்லாமல் எந்தப் பயிர்வகைகளும் இல்லை. சக்தியை உள்ளடக்கி நின்ற சிவம் வித்தாய் விளங்கும். விதைத்த வித்து முளைத்தெழும்போது சக்தி சிவத்தை வளர்க்கும். கடைசியில் வளர்ந்தபின் சக்தி அடங்கும் இடம் சிவம் என்ற வித்தேயாகும். அம்மரமே வித்தாக தோன்றுவதற்கு முன் எவ்வித ரூபமில்லாமல் இருக்கின்றது. ஒரு விதை இவ்வாறு அரூபமாயிருந்து ரூபாருபமாகிய ரூபத்தை பெறுகின்றது.
இது போன்றே ஒரு குட்டியும் ஒரு பிள்ளையும் ஒரு பிண்டத்தில் தோன்றும். பிண்டமும் எவ்வித ரூபமற்ற ஒன்றிலிருந்து உண்டாகும். இவ்வாறு எல்லாவற்றையும் நோக்குங்கால் இப்பூவுலகில் அண்ட சராசரங்கள் எல்லாம் உருவங்கள் பெறுமாறு இயக்கும் இறைவனும் இவ்வகையிலே திருவுருவம் கொண்டிருந்திருக்க வேண்டும் என்பது புலனாகும். அருவுருவான இறைவனே தன்னை உணர்த்த பல திரு வுருவங்கள் மேற்கொண்டுள்ளான்.
சங்கரன்= சம்+ கரன், சம்- மங்களம் / ஆனந்தம். சிவம் / சம்பு என்றாலும் மங்களம். தன்னிடம் இருக்கும் மங்களத்தை பிறருக்கு அளிப்பவர் சிவம். ஆனால் சிவபெருமான் சம்ஹார மூர்த்தி என்பதால் அவரால் எப்படி மங்களத்தை தரமுடியும் என கேள்விகள் எழலாம். உலகத்து உயிர்களுக்கு மரணம் என்பது துக்கம். உயிர்க்கு ஞானம் ஏற்பட்டால் பிறவியிலிருந்து விடுதலை செய்வது மங்களகரமான செயல்தானே. அதை அருள்பவன் சிவசங்கரனே ஆகும். எல்லாவற்றிற்கும் ஆரம்பம் முடிவு இருக்கும். அதுபோல் பிறப்பு என்றிருந்தால் இறப்பு என்பது கட்டாயமானது. சிவத்திடம் மனதை வைத்து ஞானம் பெற்றால் மறு ஜென்மம் கிடையாது. அதாவது இனி பிறப்பில்லா நிலை ஏற்படும். வேதங்களில் சிவனே எல்லா கடவுள்களுக்கும் மேலான பரமேஸ்வரன் எனச் சொல்லப்பட்டிருக்கின்றது.
விஸ்தீரண அளவில் பூமியைவிட நீர்பரப்பு அதிகம். ஒளி நீரைப் போன்றல்லாமல் எங்கும் வியாபித்துள்ளதால் நீரைவிட உயர்ந்ததாகின்றது. வாயு இல்லாத இடமே இல்லையாதலால் ஒளியைவிடக் காற்றும், காற்றை தன்னுள் அடக்கிய ஆகாயமே அதவிட உயர்ந்ததாகவும், ஆகாயத்தைக் கடந்து செல்லும் வலிமை பெற்ற மனமே உயர்ந்தது என்றானாலும் மனம் லயிக்கும் விஷயங்களில் உள்ள தத்துவத்தை புரிந்து கொள்ளும் வலிமை கொண்ட அறிவு உயர்ந்தது என்ற நிலையில் காலம் காட்டும் வழியில் அறிவு செல்ல வேண்டியிருப்பதால் அறிவுக்கு மேம்பட்டது காலம், இந்த காலத்தை வெல்லும் பிரபஞ்சமே தன்னுள் எல்லாவற்றையும் அடக்கி வைத்திருப்பதால் அதுவே உயர்ந்தது. அந்த பிரபஞ்சத்தை இயக்கும் வல்லமை பெற்ற ஈசுவரனே எல்லாவற்றையும் விட உயர்வானவன்.
முதல், நடு, முடிவு என்ற மூன்று நிலைகளும் அற்றதனால் ஆதிமத்யாந்தம் எனப்படுபவன்.
&&&&&