ஓம்நமசிவய!
உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்டபாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.
சிவமயம்!
எல்லா தேவதைகளும் ஒரே பரமாத்மாதான். சிவனும் விஷ்ணுவும் ஒன்றே. சிவனையும் விஷ்னுவையும் பிரித்து வழிபட்டாலும் ஒற்றுமையுடன் இருப்பதுதான் (UNITY IN DIVERSITY) நம் மதத்தின் சிறப்பு. சிவன், விஷ்ணு என்று இரு மூர்த்திகளை வழிபடும்போது சாராம்சத்தில் அவை ஒன்றே என்ற உணர்ச்சி இருந்தாலும் ஒவ்வொரு மூர்த்தியையும் ஒரு தத்துவ ரூபமாக வைத்து பக்தி செய்வதால் ஒரு ஞானம் கிடைக்கிறது.
சிவனை எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஏகவஸ்துவான ஞானமாக பாவித்தால், அந்த ஏகவஸ்துவை நானவிதமாக அதாவது பலவகையாகக் காட்டி ஜகத்தை நடத்தும் சக்தியாக விஷ்ணுவைக் காணலாம். அதாவது சிவத்தை பரப்பிரம்மாகவும் விஷ்ணுவைப் பராசக்தியாகவும் வைத்துக் கொள்ளலாம். அம்பிகையும் விஷ்ணும் சகோதரர்கள் என்று சொல்லப்பட்டாலும் அவர்கள் இரண்டும் ஒன்றே என்பதுதான் பரம ஞானிகளின் அனுபவம்.
சங்கர நாரயண வடிவத்தில் வலப்பக்கம் பரமேஸ்வரனும் இடப்பக்கம் விஷ்ணு இருப்பது அனைவரும் அறிந்ததே! அதேபோல் அர்த்தநாரீஸ்வர வடிவத்தில் வலப்பக்கம் பரமேஸ்வரனும் இடப்பக்கம் சக்தி இருப்பது அனைவரும் அறிந்ததே! இருக்கின்ற ஒன்றே ஒன்றை இல்லாத பலவாகக் காட்டுகிற சக்தியே அம்பாள் அல்லது விஷ்ணு என்று கருதவேண்டும்.
‘விச்வம் விஷ்ணு’ ‘ஸ்ர்வம் விஷ்னு மயம் ஜகத்’ என்று சொல்லப்படுவதிலிருந்து உலக பரிபாலனம் விஷ்ணுவிற்குரியது என்கின்றோம். உலகத்தில் ஆனந்தங்களை உணர்ச்சிகளை எல்லாம் தெய்வமாக்குகின்ற பக்தி மார்க்கம் விஷ்ணு சம்பந்தமாக தோன்றும். ஆனால் இந்த பிரபஞ்சத்தை விட்டு இதற்கு ஆதாரமான சாந்தத்தில் திளைக்கும்போது சிவசம்பந்தம் அதிகம் தோன்றும். சிவ ஞானம், சிவ யோகம் என்று சொல்கின்றபடி விஷ்ணு ஞானம், விஷ்ணு யோகம் என்றெல்லாம் சொல்லப்படவில்லை.
மேலே சொன்னபடி பலவாக இருக்கின்ற உலகனைத்யும் விஷ்ணுவாக இருக்கின்றபடியால் ஸர்வம் விஷ்ணு மயம் என்று சொல்லியுள்ளனர். பலவாக காண்பது இல்லாமல் போனால் ஸர்வம் இல்லாமல் போய்விடும். அப்போது ஏகம்தான் இருக்கும். ஏகம் இருக்கும்போது சர்வம் என்ற வார்த்தைக்கு இடமில்லை! அங்கே அந்த ஏகத்தை அனுபவிக்கின்றவனைத் தவிர ஜகம் என்கிற ஒன்றும் தனியாக இல்லை. ஜகம் என்கிற ஒன்றும் இல்லாமல் போனால் எஞ்சி இருப்பது சிவம் ஒன்றே. இதனால்தான் சிவமயம் என்று சொல்லப்படுகின்றது.
ஏழு நிறங்களில் (VIBGYOR) வெளுப்பும் கறுப்பும் இல்லை. உண்மையில் வெண்மை சிவனையும் கரிய நிறம் திருமாலைக் குறிக்கும் இந்த இரண்டு வர்ணங்களும் பிரபஞ்சத்தின் வர்ணங்களில் –லௌகிதத்தில் சேராதது. எதை எரித்தாலும் எரியும் வஸ்து கறுப்பு ஆகும். ஆனால் எரிபட்டவஸ்து நிறம் மாறினாலும் ரூபம் அப்படியே இருக்கும் முழுக்க முழுக்க எரிந்துபோய் உருவம் இழப்பதற்கு முந்தைய நிலை இதுவாகும். ஒரு பேப்பரையோ அல்லது துணியையோ எரித்து அணைத்து விட்டால் அது முதலில் கறுப்பாகத் தெரியும் பேப்பரில் உள்ள எழுத்துகளும்கூட கறுப்பாகத் தெரியும். துணியின் மடிப்புகள் அப்படியே இருக்கும். முழுக்க எரிந்தால் கருமை மாறி வெண்மையாகும்.
இது ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ என்பதாகும் இந்த நிலையில் ஜகத் இருப்பது போல் இருந்தாலும் இந்திரிய சேஷ்டைகள் எரிந்ததும் உணர்ச்சி ஆனந்தம் இருப்பதுபோல் தோன்றினாலும் லௌகிதமாக இல்லாமல் தெய்வீகமான பக்தி ரூபத்தில் இருக்கின்றது. எனவே யோகத்திலும் ஞானத்திலும் மேலும் ஆன்மாவைப் புடம் போட்டால் அதுவும் நீற்றுப் போய் பஸ்பமாகிவிடும். அதாவது வெண்மையாகும்.
எரிகின்ற வஸ்துகள் எல்லாம் முதலில் கறுப்பானாலும் கடைசிவரை எரிந்தால் எல்லாமே நீற்றுப்போய் வெள்ளை வெளேரென்று ஆகிவிடும். இந்த நிலைதான் சிவமயம் எனப்படும்.
நீங்கள் இன்னும் முழுமையாக உங்களை உங்கள் மனதின் எண்ண விருத்திகளை நீற்றுப் போகச் செய்து வெண்மையான சிவமயமாக மேலும் மேலும் உங்கள் ஆன்மாவை புடம் போடுங்கள்.
&&&&&