ஓம்நமசிவய!
வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால் வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.
இசையால் இறையருள் வசமாகும்!
நந்தி தேவர் மத்தளம் வாசிப்பதில் வல்லவர். அவரின் மத்தள ஓசைக்கு ஏற்ப சிவனாரின் நடனம் ஆனந்த தாண்டவமாக இருக்கும். அப்போது நான்முகன் தாளமிடுவார். நடராஜர் ஆடும்போது அவர் கரத்திலிருக்கும் உடுக்கை ஓசை உலகையே இயங்கச் செய்கின்றது. கயிலையை பெயர்தெடுக்க இலங்கேஸ்வரன் முயற்சித்தபோது தன் கால் விரலால் அழுத்தம் கொடுக்க கைகள் சிக்குண்டிருக்க நாரதர் மகதி யாழினால் சாமகாணம் வாசிக்க மயங்கிய ஈசன் தன் கால் விரலை அகற்ற விடுதலை பெற்றன இராவணனின் கைகள். கையிலைநாதரை நோக்கித் தவமிருந்த இலங்கேஸ்வரன் தன் தலைகளை அறுத்து யாகத்தில் போட்டு தன் உடலில் உள்ள நரம்புகளை கம்பிகளாக்கி மீட்டு நாதத்தை எழுப்பி இறையருள் பெற்றான். பொதுவாகவே இறைவன் இசை வடிவானவன். அந்த இசைக்கு அவன் மயங்குவதில் என்ன தவறு! அதனால் தான் அடியார்களும், நாயன்மார்களும் ஈசனை பாடல்கள் பாடி துதித்து மகிழ்வித்துள்ளனர்.
&&&&&