பாவம்-தீவினை!
வலி, மனவலி என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்படி புரிந்தால் அதன் வேதனைதனை உணர்ந்தால் நாம் மற்றவருக்கு வலி ஏற்படும்படி செய்யமாட்டோம். இது நல்ல உள்ளத்தின் பண்பு. அந்த மனம் பிறருக்கு தீங்குநேர எந்த பாவச்செயலும் செய்யவிழையாது. குழந்தைகள் விளையாடும்போது ஒன்று மற்றொன்றை அடித்துவிட அதனால் பாதிக்கப்பட்ட குழந்தை அழ ஆரம்பிக்கின்றது, அடித்த குழந்தைக்கு அக்குழந்தை ஏன் அழுகின்றது என்பது புரிவதில்லை. தன் செயலின் தாக்கத்தால்தான் அழுகின்றது எனத்தெரிவதுமில்லை.
இதைப்பார்த்துக் கொண்டிருந்த பெற்றோர்கள் ஏன் அடித்தாய்! வலியில் அது அழுகின்றதல்லவா! என்றபோது, வலி என்றால் என்ன என்று கேட்ட குழந்தைக்கு, அது புரிந்து கொள்ளும் பொருட்டு ஓர் அடி கொடுக்க, அது வலியின் தன்மைதனை புரிந்து கொண்டது. அடித்தால் வலிக்கும், இனிமேல் யாரையும் அடிக்காது. அடிக்கவும் முயற்சிக்காது. “தீப்பாலதான் பிறர்கண் செய்யற்க நோய்ப்பால் தன்னை அடையவேண்டாதான்”- தான் ஒருபோதும் துன்பத்தால் வருந்தக்கூடாது என்று நினைப்பவன் தானும் பிறர்க்கு தீமை செய்ய நினைத்தல் கூடாது என்கிறது வள்ளுவம்.
தவறு செய்யாத உயிரினங்களைத் துன்புறுத்தி, அந்ததுன்பத்தை பார்த்து அனுதாபப்படாமல், களிப்படைதல் என்பது அறியாமல் செய்த தவறு என்றாலும், பிற உயிர்களுக்கு துன்பம் நேர காரணமாயிருந்த பாவம் உங்களை வந்தடையும். தெரியாமல் தொட்டாலும் நெருப்பு சுடும். பாவகர்ம பலன் அனுபவிக்காமல் குறையாது. மாண்டவ்யர் என்ற முனிவர் தான் செய்யாத திருட்டுக்குற்றம் சாற்றப்பட்டு கழுவில் ஏற்றப்பட்டார். அது பற்றி தர்மதேவதை கூறியது என்னவென்றால் சிறுவயதில் குழந்தையாயிருந்தபோது பட்சிகளையும், வண்டுகளையும் இம்சை செய்ததின் கர்மபலன் இது என்பதாகும்.
வழிப்போக்கர்களை கொள்ளையடித்து வாழ்ந்து கொண்டிருந்தான் ஒருவன். அவன் ஒரு நாள் ஞானி ஒருவரை சந்திக்க நேரிட்டது. அவர் அவனிடம் பிறரைக் கொள்ளையடித்தல் கொடூரமான செயல் என்றார். குடுப்பத்தை பராமரிக்க வேறு வழி இல்லாததால், இது எனது கடமை, என் குடுப்பத்தைக் காப்பாற்றுவது என வாதிட்டான். களவாடுவது பாவம், நீ களவாடிய செல்வத்தை அனுபவித்த உன் குடுப்பத்தாரைவிட அந்த பாவம் உனக்குத்தான் அதிகம். அவர்களுக்காக அந்த பாவத்தையும் சேர்ந்து நீ சுமக்க வேண்டும் என்றார். அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
வீட்டிற்கு சென்று தன் குடும்பத்தாரிடம் தன் கொள்ளையில் அவர்கள் வாழ்வதால் அந்த பாவங்களிலும் அவர்களுக்கும் பங்கு உண்டு எனக் கூறினான். குடும்பத்தினர் அனைவரும் எங்களைக் காப்பாற்றுவது உன் கடமை. அதற்காக நீ திருடுவதால் ஏற்படும் பாவங்களை நாங்கள் பங்கு போட்டு ஏற்கமாட்டோம் என்றனர். கடமையானாலும் தான் செய்யும் செயல்களின் பாவங்கள் தனக்கு என அறிந்தவன் மனம் திருந்தினான். அப்படி மாறியவரே இராமகாவியம் எழுதிய வால்மீகி முனிவர்.
இதைப்போன்றே இறையும், நம் செயல்களினால் மற்றவர்கள் பாதிக்கின்றார்கள் என்பதை நாம் புரிந்து கொள்வதற்காக நமக்கும் துன்பங்கள் வந்து சேரும்படி செய்கிறார். அது நமக்கு ஓர் பாடம். அனுபவம். அதை படித்து பெற்றுக்கொண்ட அனுபவத்தால் அதைப்போன்று வேறு ஒருவருக்கு நாம் செய்ய நினையாமலிருத்தலே நம்மை பாவத்திலிருந்து விலக்கிவைக்கும். மீறி செயல்பட்டால் ஓர்நாள் பாதகமாகிவிடும். பாவம் நம்மையும் நம்சந்ததியும் சூழ்ந்து தொடரும் வினைகளை ஏற்படுத்தும். துன்பங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். மறந்துகூட பிற உயிர்க்கு தீங்கு நினையாமல் நல்லன செய்ய பழகவேண்டும்.
தீச்செயல்கள் தீங்கினை விளைவிக்கும் தன்மையுடையதலால், அதை தீயினும் கொடியது என்று நினைவுகொள்ளல் வேண்டும். தீவினைபற்றி தெரிந்த நல்ல எண்ணம் கொண்ட நல்லோர்கள் அதை செய்ய அஞ்சுவார்கள். தீய எண்ணம் கொண்டோர் அதன் தன்மை உணராமல் பாவம் செய்கின்றனர். பிறருக்கு கேடுதரும் தீயச்செயல்களை, தமக்கு வருத்தத்தை ஏற்படுத்திய கொடியவர்களுக்கும் செய்யாமலிருத்தலே ஒருவனின் அறிவு சார்ந்த சிறந்த செயலாகும். அவன் எல்லோரிலும் சிறந்தவன் ஆகின்றான்.
எவ்வளவு பகையிருந்தாலும் அதிலிருந்து நம் தப்பித்து வாழ வழியுண்டு. தீய வினைகளினால் ஏற்படும் பகையிலிருந்து நாம் தப்பிக்க முடியாது. நிச்சயம் அதன் தாக்கத்தை நாம் அனுபவிக்க வேண்டிவரும். எல்லோரும் அவர்தம் வாழ்க்கையை விரும்பி வாழ வேண்டும். அப்படி வாழ்பவர்கள் தீயசெயல்கள் எவ்வளவு சிறியதாகினும் செய்யாமல், பாவம் அது என விட்டு விட முயற்சிக்க வேண்டும்.
தெரியாமல் தவறான வழியில் சென்றுவிட்டாலும், தீயசெயல்களை செய்யாமலிருந்தால் அவன் கேடு இல்லா நல்ல செயல்களை செய்பவன் ஆகின்றான். நம் நலத்திற்கு நம் செயல்களே காரணம் என உணர்வது அவசியம். இதை நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்தால் என்றும் துன்பமில்லை இன்பமட்டுமே!
நாம் செய்யும் செயல்தான் வினை என்றால் அதுவே பின்பு விதியாகின்றது. நம் செயலுக்கேற்ற விளைவுகள் வினையாக வந்து சேரும் என்பதால், தீய செயல்கள் செய்யாமல், நற்செயல்களை செய்தால் நல்ல வாழ்வு வாழலாம் என்பது விதி. பிறகு ஏன் நாம் அந்த விதிக்குப் பயப்படவேண்டும். நல்ல செயல்வினை விதிகளுடன் எத்தனை பிறவிகள் எடுத்தாலும், அப்பிறவிகளிலும் நம் நற்செயல்களின் பலன் தொடரும் என்பது அனைத்து பிறவியிலும் ஆனந்தமே தரும்.
ஓர் ஆத்மா எத்தனை ஆண்டுகள் உடலுடன் உறவு கொண்டது என கணக்கிடக் கூடாது. எத்தனை நல்ல காரியங்களை உடலுடன் சேர்ந்து செய்தது என மதிப்பிட வேண்டும். உலக நிகழ்வுகள் இறையருளின் இசைவுப்படி நடைபெறுகிறது. அதில் எது எது அந்த ஆன்மாவிற்கு பயன்பட்டது. அதைப் பயன்படுத்தி அந்த ஆன்மா உடலுடன் சேர்ந்து எத்தனை நல்ல செயல்கள் தீவினையகற்றி பாவமில்லாமல் செய்தது என்பதே முக்கியம்.
நல்லெண்ணம், நற்செயல்கள் செய்பவர்கள் அன்பு, ஈகை, உண்மை, நேர்மை, கருணை, போற்றுதல் ஆகிய குணநலன்கள் கொண்டவர்களாக இருப்பர். தீய எண்ணம், தீச்செயல் செய்ய விழைபவர்கள் பொறாமை, கோபம், வெறுப்பு, ஏமாற்று, சுயநலம், பேராசை, பொய்மை, தூற்றுதல் ஆகிய குணநலன்களை கொண்டிருப்பர்.
உங்களைச் சார்ந்த யாரும் உங்கள் பாவங்கள், தீவினைகளில் பங்கு ஏற்க விரும்பமாட்டார்கள். உங்கள் பொருட்களை அடைவதற்கு விருப்பம் உள்ள சுயநல அன்புடன் கூடியவர்கள்கூட, நீங்கள் செய்த பாவத்தில் பங்கேற்க விரும்புவதில்லை. எனவே விழிப்புணர்வு கொண்டு பாவங்களும் தீவினைகளும் செய்யாதிருக்க முயலுங்கள்.
ஓர் வியாபாரி வெளியூர் சென்று திரும்ப நேரம் ஆகிவிட்டது. எப்படியும் ஊர் போய்ச் சேர்ந்துவிடலாம் என்று நடந்தவருக்கு திடீரென்று பெய்த மழை தடையை ஏற்படுத்த அந்த கிராமத்தில் இருந்த ஓர் குடிசை வீட்டின் கதவைத் தட்டி மழைக்கு ஒதுங்க இடம் கோரினார். இடம் தரப்பட்டது. அது உணவு வேளையாததால், மழையில் நனைந்து குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தவருக்கு உணவு தரப்பட்டது. அப்போது அந்த குடிசைவாசி உணவு தந்த இறைவனுக்கு நன்றி கூறினார்.
வியாபாரியோ நான் உங்களுக்குத் தான் நன்றி கூறுவேன் ஏனெனில் எனக்கு கடவுளிடம் நம்பிக்கை கிடையாது என்றான். அன்புடனிருந்த குடிசைவாசி இதைகேட்டதும் கோபங்கொண்டு கொடுத்த உணவை பிடுங்கி அந்தவியாபாரியை வெளியில் அனுப்பிவிட்டார். அது அந்த குடிசைவாசியின் மனதை உறுத்திக் கொண்டிருந்தது.
அன்று இரவில் அந்தக் குடிசைவாசிக்கு ஓர் கனவு வந்தது. அதில் ஓர் சந்யாசி, இவ்வளவு காலமும் கடவுளை இல்லை என்று சொன்னவனுக்கு பட்டினி என்று இல்லாமல் உணவு கிடைக்க இறைவன் அருள் புரிந்திருக்கின்றான். ஆனால் நீ இன்று அந்த இறைவனைக் காரணம் காண்பித்து பட்டினி போட்டாய், பாவத்தை தேடிக்கொண்டாய் என்றார். திடுக்கிட்டு முழித்த குடிசைவாசி தன் தவறை உணர்ந்தான்.
கொடுத்த உணவை திரும்ப பெற்றதற்காக வருந்தினான். கடவுள் இல்லை என்றால் அது அவன் கர்மம். பலன்களை அவன் அனுபவித்துப் போகட்டும். அதற்கு நாம் ஏன் பாவம் செய்ய வேண்டும் என தன் எண்ணங்களைத் திருத்திக் கொண்டான்-குருஸ்ரீ பகோரா.