பாம்பாட்டி சித்தர்
கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பாம்பட்டியார் பிறந்தார். பாம்பை பிடிப்பது அவற்றின் விஷத்தை சேமித்து விற்பதுவே அவரின் தொழிலாக இருந்ததால் அவர் பாம்பாட்டி எனப்பட்டார். விஷமுறிவு மூலிகைகள் பற்றி அறிந்திருந்ததால் மூலிகை வைத்தியராக இருந்தார்.
ஒருநாள் மருதமலையில் நாக மாணிக்கத்துடன் ஒரு பெரிய பாம்பு இருப்பதைக் கேள்விப்பட்டு அதைப் பிடிக்கச் சென்றார். காட்டில் அதை தேடியபோது சிரிப்பொலி கேட்டுத் திரும்ப சட்டை முனி சித்தரைப் பார்த்தார். எதற்கு வந்தீர், எதை தேடுகின்றீர் என்றதற்கு தான் மாணிக்க பாம்பை தேடுவதாக கூறினார்.
உனக்குள்ளேயே நவரத்னபம்பை வைத்துக் கொண்டு வெளியே தேடுகின்றாயே எனச் சிரித்த சட்டைமுனி, இதை தேடுவதை விடுத்து உனக்குள் இருக்கும் ‘குண்டலினி’ பாம்பைத்தேடிப் பிடி. மனிதனுள் இறைவனைக்காணும் ரகசியம் இதுவே, தியானம் சித்தியாகும். என்றார். உண்மைகளை உணர்ந்த பாம்பாட்டி அவர்காலில் வீழ்ந்து வணங்கினார். தொடர்ந்து யோகம் செய்ய குண்டலினி சக்தி கைவந்தது. சித்துக்கள் சித்தியானது.
பல இடங்களையும் சுற்றிவந்தார். ஆங்காங்கே மக்களின் நோய்களைத் தீர்த்தார். ஒருநாள் அரசன் ஒருவன் இறந்திருப்பதை வான்வழியே வரும்போது பார்த்தார். அவன் உடலில் புகுந்தார். அனைவரும் மகிழ்வுற்றனர். அரசனின் செயல் முறைகள் மாறி இருப்பதை இராணி உணர்ந்தார். மக்களும் மன்னன் சித்தன்போல் பிதற்றுகின்றார் என்றனர். அரசியார் தன் சந்தேகத்தைப் போக்க மன்னனிடம் நிங்கள் யார் என்றார். மன்னன் உடலில் இருந்த சித்தரும் உண்மையைக் கூற அனைவரும் அவரை வணங்கினர்.
மன்னரான சித்தர் பல தத்துவப் பாடல்களைப் பாட அனைவரும் கவனமுடன் கேட்டனர். பின்னர் மன்னன் உடலிலிருந்து சித்தர் வெளியேரி தன் உடம்பில் புக, மன்னர் உடம்பு தரையில் வீழ, சித்தரின் ஆலோசனைப்படி ராணியார் ஆட்சி புரிந்தார்.
பாம்பாட்டியார் சித்தர் பாடல்கள், சித்த ஆரூடம், வைத்திய நூல்கள் முதலியனவற்றை எழுதியுள்ளார். மருதமலையில் சித்தியடைந்தார்.
பாம்பாட்டி சித்தர் தியானப்பூசைக்கு
“அடவிவாழ் பாம்பிகளை ஆட்டுவித்துபின் உடலில்வாழ் பாம்புதனை எழுப்புவித்து
கூடுவிட்டு கூடுபாய்ந்து ஞானமுத்து கொடுத்தவரே, குவலயத்தின் காவலரே
ஆதிசேஷனின் அருள் கண்டு ஆதி சிவன் மகன் வரம் கொண்டு
ஜாதி மதங்கள் பேதம் இன்றி காக்கும் சித்தரே, காக்க, காக்க.”
தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் பாம்பாட்டியார் திரு உருவப் படத்தை வைத்து தாமரை அல்லது வாழைத்தண்டு திரிபோட்டு குத்து விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து அல்லி, தாமரை, மகிழம்பூ, சம்பங்கி ஆகிய மலர்களால் அர்ச்சனைசெய்து கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.
ஆலகால விஷத்திலிருந்து காப்பவரே போற்றி
ஓம் வசி பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி
சனீஸ்வர பகவானின் நண்பரே போற்றி
சிவனின் ஆபரணமானவரே போற்றி
சர்ப்ப ரட்சகரே போற்றி
நந்தி தேவரின் நண்பரே போற்றி
நடு நிசியில் சஞ்சரிப்பவரே போற்றி
பசும்பாலில் பிரியம் உள்ளவரே போற்றி
பாற்கடலில் வாசம் செய்யும் பூஜ்ய சித்தரே போற்றி
முருகப் பெருமானின் பிரியரே போற்றி
மூன்று வண்ணங்கள் கொண்டவரே போற்றி
வாக்கில் சுத்தம் உடையவரே போற்றி
நிவேதனமாக சர்க்கரைப்போடாத பச்சைபால், வாழைப்பழம் இவற்றுடன் கருப்பு நிற வஸ்திரம் வைத்து சனிக்கிழமை வழிபடின் சிறப்பு,
தியானபூசைப்பலன்கள்
ராகு கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் ஜாதக ராகு தோஷங்கள் விலகி நன்மை பயக்கும். தாம்பத்திய ஒற்றுமை சிறப்படையும். மாயை அகன்று தெளிவு ஏற்படும். போதைப் பழக்க வழக்கங்கள் அகலும். வேலை வாய்ப்பு வெளிநாடு பிரயாணங்கள் உண்டாகும். ராகு பகவானால் ஏற்படும் களத்திர தோஷங்கள் நீங்கி திருமணம் நடைபெறும். வியாபாரம் பெருகும். பயம் அகன்று பலம் கூடும். நரம்பு சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.
“ஓம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் பெருமானே போற்றி”
******
சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்
அகத்தியர் / அகப்பேய்சித்தர் / இடைக்காட்டுச்சித்தர் / உரோமரிஷி / கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் / குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்