கோபப் பூக்கள்!
ஆற்றின் இரு கரையிலும் ஆசிரமங்கள். ஓர் இளைஞன் அக்கரையில் உள்ளவரிடம் ஆசி வாங்க விரும்பினான். அவனைப் பார்த்த இக்கரையில் இருந்தவர் அக்கரைக்கு செல்லும் காரணத்தைக் கேட்டார். அந்த இளைஞன் அவரை என் குருவாக மதிக்கின்றேன் அதனால் அவரிடம் ஆசிபெறச் செல்கின்றேன் என்றான்.
உடனே இந்தக்குரு அந்தக் கரையில் இருப்பவன் ஒரு குருவே அல்ல. அவனுக்கு ஒன்றும் தெரியாது. என்னைப்போல் நீரில் நடக்க முடியாது. வானத்தில் பறக்க முடியாது. அங்கே போய் அவனிடம் நீ என்ன கற்றுக் கொள்ளப்போகிறாய் என சினத்துடன் கூறினார். நீ முட்டாளாக இருந்தால் அங்கே போ என்றார்.
அந்த இளைஞன் நீங்கள் சொல்வது எல்லாம் சரி. அவரால் சாதனைகள் ஏதும் செய்ய முடியாது. ஆனால் அவர் கோபப் படமாட்டார். அது உங்களால் செய்ய முடியாதது. எனவேதான் நான் அவரை குருவாக ஏற்றுள்ளேன் என்றான். குரு சிந்தனையிள் ஆழ்ந்தார். நீரில் நடப்பதைவிட, வானில் பறப்பதைவிட கோபப்படாமல் இருப்பதுதான் அதிசயம் எனக்கூறி அக்கரைக்குச் சென்றான்.
கோபம் என்பது என்ன! சினம் என்றால் என்ன! அது உன் இயலாமையின் அச்சத்தின் வெளிப்பாடு! அது ஏன் நீ கொள்ளல் வேண்டும்! அது நம்மை, நம் உடலை, உடலின் ஆன்மாவை எந்த அளவிற்கு வருத்துகின்றது எனத் தெரியுமா! கோபத்தை அடக்குவதும் தவறு, வெளிக்காட்டுவதும் தவறு. வேறு என்ன செய்ய வேண்டும். கோபப்படாமல் இருப்பதுதான் ஒரேவழி. அதற்கு பற்றற்று இருத்தல் சிறப்பு.
கோபம் ஏற்பட்டால் அதிலிருந்து உன்னை விடுவித்துக் கொள்ள முயல வேண்டும். கோபத்தை அடக்கி மன உறுதியை வளர்க்க வேண்டும். அந்த நிகழ்விலிருந்து விலகி இருத்தல் வேண்டும். இல்லையெனில் அந்த நிகழ்வு உங்களைத் தாக்கத் தொடங்கி உங்களை ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தால், நீங்கள் உங்கள் நிலை, சூழல் மறந்து அந்த நிகழ்வின் ஈடுபாட்டினால் செயல் வழிபட்டு, அதற்கு ஆட்படுகின்றீர்கள். தவறு செய்து திருத்துவதைவிட தவறு செய்யாமல் இருப்பது சிறப்பு.
இது உங்களின் மனதில் ஓர் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு, உடல் உறுப்புகளில் ஒர் தேவையற்ற கவலை, கிளர்ச்சியை உண்டு பண்ணி உடலின் தன்மை நிலையை நீங்கள் எப்போதும் இயல்பாக இருக்கும் நிம்மதி நிலையிலிருந்து மாற்றி வைக்கின்றது.
அப்போது உங்கள் எண்ணம் செயல் எல்லாம் மாறுபட்டிருக்கும். நீங்கள் அன்பு கொண்ட செயல் நினைவுகள் மீது கூட ஓர் வெறுப்பு, சலிப்பு தோன்றும். அதன் பாதிப்புகள் தாக்கம் நீங்கள் கொண்ட அன்பின் தன்மையை குறைக்க காரணமாகும். இந்த தூண்டுதல் உங்களது உடம்பில் உள்ள சக்தியின் ஒரு பகுதியை விரயமாக்குகின்றது.
பல நல்செயல்களால் சேர்த்துவைத்த அமைதி, நிம்மதி போன்ற தன்மைகள், கோபத்தினால் விரையமடைந்தபின், அவைகள் நம்மை வந்தடைய நாம் மீண்டும் கடினமாக செயல்பட வேண்டியுள்ளது. ஆகவே ஒவ்வொருவருக்கும் இந்த கோப உணர்ச்சி தேவையற்ற ஒன்று.
எதனால் இந்த நிகழ்வு என அமைதியுடன் நோக்குங்கள். பிரச்சனையின் மூலகாரணத்தைப் பற்றி ஆராய்ந்து, என்ன பயன் என்ற சலிப்பில்லாமல், அந்த செயல் காரணத்தை கூர்ந்து நோக்குங்கள். உண்மைக் காரணத்தை நீங்கள் உள்வாங்கிக் கொள்ளுங்கள். அந்தச்செயல் காரணத்தின் நிலைகளைப் புரிந்து கொண்டு, அதன் சூழ்நிலைகள் எவ்வாறு தோன்றின என நீங்கள் உணர்ந்து கொண்டால், அப்போது உங்கள் மனம் கோபத்தின் தன்மைக்கு போகாமல் நீங்களே தடுக்கலாம். அதனால் உங்கள் உணர்வு மிகுதியினால் உடம்பில் ஏற்படும் தாக்கமும் அதன் பாதிப்புகளும் குறையும்.
அந்த நிகழ்வின் உண்மை அடிப்படை காரணங்கள் தெளிவுடன் புரிந்து கொண்டால், நிகழ்வுக்கு காரணமானவர்களை நாம் இனம் கண்டு அதற்கு தக்க செயல்களைச் செய்து அவர்களுக்கு உதவியாகவும், நமக்கு பாதகமில்லாமலும் செயல்பட வழிவகுக்கும். இந்த நிலை ஏற்பட உங்கள் மனம் அமைதியுடன் சந்தோஷமாக இருக்கவேண்டும்.
அமைதியாயிருக்கும் மன உணர்வுகளைத் தூண்டி உங்களை கோபமடையச் செய்யும் நிகழ்வுகள் தோன்றினால் முதலில் நீங்கள் உங்களுக்குள் ஓர் தீர்மானத்தை நினைவில் கொள்ள வேண்டும். நான் கோபம் கொள்வதில்லை! எந்தக் காரணத்தினாலும் கோபம் கொள்வதில்லை! கோபத்தினால் எந்தவித பயனும் இல்லை! தீவிர சிந்தனைகள் செய்து நல்வழி காணமுடியாது! கோபத்தின் பதற்றத்தினால் பயனில்லை! என்று உங்கள் மனதிற்குள் கூறிக் கொள்ளுங்கள். மனஅமைதியைக் கைவிடவேண்டாம்! இந்த தூண்டுதலுக்கு காரணமானவர்கள் மீது வெறுப்பு காட்டவேண்டாம்.
மனதிற்குள் வெறுப்பை வைத்துக்கொண்டு இருக்காதீர்கள். வெறுப்பு குரோத உணர்ச்சியின் ஆரம்பம். அது பழிவாங்க நினைக்கும். உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களுக்கும் தங்கள் வாழ்வை சுவைத்து மகிழ உரிமை உண்டு. தான் படைத்ததை அழிக்க படைத்தவனுக்கூட உரிமையில்லை என்கிறது தர்ம சாஸ்திரம். அப்படியெனில் ஒருவரை பழிவாங்கி அழிக்கும் நோக்கில் செயல் இருக்கக் கூடாது. அது மறைவதுமில்லை. தொடரும் கொடுமை அது. முடிவில்லாத துயரம் தரும். உங்களை துச்சமாக நடத்துபவரிடம், நல்லெண்ணம் கொண்டு அவரோடு பேசி புரியவையுங்கள். அது ஓர் உன்னத செயலாகும். அவருக்கு புரியவைக்க முடியவில்லையானால் அவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். பொறுமையுடன் செயல்படுங்கள்.
தர்மரின் மாளிகையின் தரையில் நீர் இருப்பது பொன்ற நிலை தோன்ற துரியோதனன் தன் ஆடைகள் நனையாமலிருக்க தூக்கிபிடித்து சென்றான். இதைக் கண்ணுற்ற திரௌபதி சிரிக்கக் கண்ட துரியோதனன், தான் அவமானம் அடைந்ததாகக் கருதி, அவளை பழிவாங்கத் துடித்தான். அதன்முடிவு துச்சாதனன் துகிலுரிப்பு, மகாபாரதப் போர், துரியோதனின் அழிவு. எப்போதும் ஓர்வேகத்தில் வெறியில் தோன்றும் பழிவாங்குதல் எண்ணங்கள் நன்மை பயத்ததாக சரித்திரத்தில் கூறப்படவே இல்லை.
நோயின் தீவிரத்தை தாங்காத நோயாளியோ, அதை பார்க்க சகிக்காத அவரின் உறவினர்கள் துயரத்தாலோ, எது கூறினும், எந்த நிலையிலும் ஓர் மருத்துவர் தன் கடமையிலிருந்து நிலைபிறழாமல் பொறுமை காக்கவேண்டும். அவர்கள் கூற்று என்னவாயிருந்தால் என்ன! அதைக்கவனித்து மருத்துவர் தன்கவனத்தை இழக்கக்கூடாது. காயமடைந்தவர், நேயுற்றவர் குணமடைந்ததும், என்ன தீமைகள் அல்லது நன்மைகள் இந்த சமூகத்திற்குச் செய்யப் போகிறார்கள் என்ற விளைவு குறித்து கவலைபடாமல் தெடர்ந்து பணியாற்றுவதே அவரின் கடமையாகும். இந்த நிலையை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதே மனுதர்ம சாஸ்திரம் கூறும் ‘க்ஷமா’ என்பதாகும். அதாவது க்ஷமா என்றால் ஒரு செயல் நிகழ்வுக்கு கோபம் கொள்ளாமல் மன்னித்தல் அல்லது பொருத்துக் கொள்ளுதல் என்பதாகும்.
நீங்கள் பெரியவராக எல்லோருக்கும் நன்மை செய்ய விரும்பினால் இரண்டு வகை வலிமைகளை நீங்கள் அடைந்திருக்க வேண்டும் ஒன்று உடல்வலிமை! அது உங்களுள் உறையும் ஆத்மபலத்தின் வலிமை! நற்பண்பே அந்த உடல் வலிமைதனை தரும்! மற்றொன்று தார்மீக வலிமை! அதாவது மனதின், ஆன்மாவின் வலிமை! தார்மீக வலிமைகூடக்கூட கோபம், வெறுப்பு மற்றும் பழிவாங்கும் தன்மை இவைகளை நீங்கள் கட்டுப்படுத்த பழகிவிடுகின்றீர்கள்.
நம்முன்னால் நம் குடும்பத்தினரோ, உற்றார் உறவினரோ, நண்பர்களோ நம் அலுவலக அன்பர்களோ ஓர் செயலைசெய்தால் அதைக் கண்டு உணர்ச்சி வயப்பட்டு ஒன்று சிரிக்கின்றோம் அல்லது கோபப்பட்டு நம்மை இழக்கின்றோம். சில சமயங்களில் அழுகை ஏற்படுவதும் உண்டு. சிரிப்பதாலும், அழுவதாலும் தப்பு ஒன்றும் இல்லை. மேலும் ஆரோக்கியத்திற்கு உகந்தது.
கோபப்படும்போது உணர்ச்சி மேலீட்டால் நம் செயல் திறன் குன்றி விடுகின்றது. நாம் என்ன செய்கின்றோம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை அறியமுடியாத அளவிற்கு நம்மை இழந்து விடுகின்றோம். சினத்தின் உச்சத்தில் நாம் படப்படபுடன் செயலாற்ற முனைகிறோம். கோபம் தனிந்தபின் அதன் சாதக பாதக பலன்கள் நமக்கு தெரியவரும்போது ஏன் கோபம் கொண்டோமென்று வருத்தமடைகிறோம். இந்த சினத்தை, படபடப்பை ‘அக்ரோதம்’ என்று மனுதர்ம சாஸ்திரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. அதை நம்மிடமிருந்து நீக்குவதற்கு முயலவேண்டும்.
பல ஆண்டுகள் தவம் செய்த யோகி ஆன்மீக கேள்விகளுக்கு பதிலலித்துக் கொண்டிருந்த போது ஒருவர் ஆன்மிகத்தை கேலிசெய்யும் விதமாகப் பேசவே மிகுந்த கோபமடைந்தார். சினம் தனிந்த போது தன் செயலுக்கு வருந்தினார். எத்தனை தவம் விரதம் இருந்தும் என்னபயன். என்னிடம் மாற்றம் இல்லையே என வருந்தினார். தனது தவம் பூரணத்துவம் அடையவில்லை, மனம் பக்குவம் பெறவில்லை, சினத்தை அடக்க அதற்கு தெரியவில்லை என்று அந்த ஆசிரமத்தைவிட்டு வெளியேறி, மீண்டும் மனதை ஒர் நிலைப்படுத்த தவம் மேற்கொள்ள சென்றார்.
நாமும் கோபம் அடையக்கூடது. பிறரையும் கோபம் அடையும்படி தூண்டக்கூடாது. நீங்கள் அடையும் கோபத்தின்மீது உங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டால் நீங்கள் அதை கட்டுப்படுத்த நினைக்கின்றீர்கள் என்று பொருள். சற்று நிதானமாக நாம் கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது, நம் ஆரோக்கியம்தான் குறைகின்றது, மற்றவர் முன்னிலையில் இவன் கோபக்காரன், அவசரக்காரன் என்ற நிலைப்பாட்டை ஏன் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்? என நினையுங்கள். கோபத்தை விடுத்து அந்த செயலின் தன்மையை அடிப்படையை கவனித்து கோபமின்றி சம்பந்தப்பட்டவர்களிடம் கூறினால் அவர்கள் அந்த தவறை புரிந்து உணர்வார்கள். அதனால் அந்த தவறு மீண்டும் நேராவண்ணம் அவர்கள் செயல்பட வாய்ப்புண்டு. இது அனைவருக்கும் நன்மைபயக்கும்.
உங்கள் நேயமான செயல் அவரையும் மற்றவர்களையும் ஆச்சரியம் கொள்ள வைக்கும். உங்கள் மேல் ஓர் அன்பு கலந்த சிநேகமயமான உணர்வுகள் மேம்பட்டு, எதிர்காலத்தில் பலவகைகளில் உதவியாகக் கிடைக்கும். இது உங்கள் வாழ்வின் சந்தோஷ நினைவாக அமையும். இது போன்ற பல செயல்களை நீங்கள் சந்தோஷ நிகழ்வாக மாற்றமுடியும் என்ற நம்பிக்கை ஏற்படும். தொடர்ச்சியான மகிழ்வைக்கொண்ட சந்தோஷம் வாழ்க்கையை சீராக்கி நல்வழிப்படுத்தும்.
கண்ணால் கண்டாலோ, காதால் கேட்டாலோ நீங்கள் அந்த நிகழ்வால் உணர்ச்சி வசப்படாமலிருக்க ‘மூக்கின்மேல் கோபம்’ என வழக்கிலிருக்கும் உங்கள் நாசியின் நுனியைப் பாருங்கள். அது உண்மைதான என நினையுங்கள்!
அண்டத்திலிருந்து வரும் அந்த சுத்த காற்றை நாசியினால் உள்ளே இழுத்து, வெளியேவிட்டு செல்லும் செயலை கவனித்து, ஒரே சீராக சிலமுறை செய்யுங்கள். உங்கள் செயல் சீரான சுவாசத்திற்கு வந்தால் உங்கள் மனம், உணர்வு எல்லாம் சீராகிவிடும். அந்த நிகழ்வின் தாக்கம் உங்களை ஒன்றும் செய்யாது.
நீங்கள் அந்த நிகழ்வின் செயலுக்குள் அமைதியாக உறுதியாக ஊர்ந்து உண்மையை உணர்ந்து செயல்பட முடியும். எனவே கோபம் கொள்ளும் நிகழ்வுகளின் போது உங்கள் மூச்சை சீராக வைத்துக்கொள்ளப் பழகுங்கள். அது நன்மை பயக்கும்.
சீரான மூச்சு, சீரான சிந்தனைகள், சீரான செயல்கள் எல்லாம் சந்தோஷத்தை நோக்கிய நம் பயணத்தின் தூரத்தைக் குறைக்கும் உபகரணங்கள்.
நாம் ஏன் கோபம் கொள்கின்றோம்? ஓர் செயலை செய்யும்போது தவறு ஏற்பட்டால், செயலில் வெற்றி எதிபார்த்து தோல்வி கண்டால், நம் தவறை நாமே உணர்ந்தால், மற்றவர் நம் தவறைச் சொன்னால், நம் விரோதிகள் என நினைத்துக் கொண்டிருப்பவர்கள் நம் தவரை சுட்டிக் காட்டினால், நம்மைவிட சிறியவர்கள் நம்மிடம் குறை கண்டால் வருகின்றது. நமக்கு பிடிக்காத நிகழ்வுகள் நடைபெற்றாலும் நமக்குள் ஓர்வித எரிச்சல் உணர்வு தோன்றி அது கோபமாக மாறிவிடும். சரியான தூக்கமின்மையும் ஒர் காரணமாகும்.
சரியான நிம்மதியில்லா தூக்கமின்மையும் கோபம் ஏற்படக் காரணமாகின்றது. ஆகவே ஓவ்வொரு ஆன்மா உடலுக்கும் நிம்மதி வேண்டும். அதற்கு போதிய ஒய்வு தூக்கம் வேண்டும். அப்போதுதான் உடலும் மனமும் தன் இருக்கத்திலிருந்து தளர்ந்து பக்குவமான நிலைக்கு வந்தடையும். போதிய ஓய்வும், தூக்கம் பெற்ற உடம்பும், மனமும்தான் நன்றாக செயலாற்ற முடியும்.
முன்பு சொன்னதுபோல் இந்த கோபம் ஓர் இயலாமை! ஆற்றாமை! செயல்கள் நம்மால் முடிந்தால் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. முடியவில்லை என்றால் அதை ஏற்றுக்கொள்ளும் தன்மை வேண்டும். நம் உடலை, மனதை, உணர்வுகளைப் பக்குவப்படுத்தி வைத்துக் கொள்ளப் பழகவேண்டும். இயலாமை, ஆற்றாமை பயத்தினால்கூட வரலாம். ஆக பயமும் கோபம்வர ஒரு காரணமாகும். ஆனால் பயத்தினால் நம் உடலுக்குள் ஓர் கலக்கம் ஏற்படும் அது அவயவயங்களின் செயல் தன்மையை பாதிக்கும். ஜீரணத்தின் தன்மைதனை குறைக்கும். நாளடைவில் உடலில் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பாகும். அடிக்கடி உணர்வின் வயப்பட்டு கோபம் வரலாம். எனவே எதற்கும் பயம் கொள்வதைத் தவிர்க்கவும்.
தவறு, தோல்வி, ஆற்றாமை ஆகியவைகளின் தன்மை புரிந்து உள்வாங்கிக் கொண்டால் அதன் தாக்கம் நம் உணர்வைப் பாதிக்காது. உணர்ச்சிகள் பொங்கி வராது. அமைதி காக்கும். தன்மை புரிந்து உள்வாங்கினால் அது ஓர் பாடமாக, ஓர் முன் உதாரணமாக, நாம் அடுத்து செய்யும் செயலுக்கு, தொய்வில்லாத வழிவகுக்க உதவி புரியும்.
அப்போது நமக்கு தோல்வி இல்லை. ஆற்றாமை என்பதும் இல்லை, வெற்றி மட்டும் உண்டு. வெற்றி வழி நிம்மதி, புன்னகை, சந்தோஷம் தோன்றி வாழ்வில் என்றும் சந்தோஷம் ஏற்படும்.
ஒருவர் கோபம் கொண்டவுடன் அவரின் உணர்வுகள் உணர்ச்சி மிகுதியால் விரைவாக செயல்படுவதால் செயலில் ஏற்படும் குறைகள் தெரிவதில்லை. ஆனால் தவறு பின்னால் கண்டு பிடிக்கப்பட்டபோது வருத்தம் ஏற்படுகின்றது. இந்த வருத்தம் மனதிற்கும், உடலுக்கும் சோர்வைத்தான் தரும். மனம் நிம்மதியின்றி செயல்படும். அதனால் நல்ல செயல்கள் திட்டமிட்டு செயல்பட முடியாத நிலை ஏற்படும்.
தவறுகள் நிறைந்த குழப்பமான செயல் பாடுகளில் எப்படி ஓர் வெற்றியையும் அதன் மூலம் சந்தோஷத்தையும் எதிர்பார்க்க முடியும். எனவே கோபம் வேண்டாம். குழப்பத்தில் சிந்திக்க வேண்டாம். குழப்பமிருந்தாலும், கோபம் வந்தாலும் உங்கள் உடலுக்கு உங்கள் மனம்தான் எஜமான்.
கோபத்தில் இருப்பவனுக்கு தாம் கோபத்தில் இது செய்ததால்தான் இந்த தவறு என ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. எந்த பைத்தியம்தான் தான் பைத்தியம் என ஒத்துக் கொண்டிருக்கின்றது. தங்களின் திறமையான பேச்சால் தான் செய்தது சரி என்று சொன்னாலும், அவரின் கோபத்தின் விளைவை புரியவையுங்கள். தன்னால் நடந்தது எனப் புரிந்துகொண்டலே அந்த செயல் நிகழ்வு, கோபத்தின் தன்மை, அதன் தாக்கம் புரிந்துவிடும்.
எந்த காரியங்கள் நடைபெற்றாலும், அதன் பாதிப்புகள் நம்மை வந்தடைந்தபோது அதன் காரண காரியங்களை நாம் யோசித்து கண்டு கொள்ள முடியவில்லை என்றால், அதனால் கோபம் கொள்வதைத் தவிர்த்து நிகழ்வுக்கு காரணம் விதி என முடிவு கட்டுங்கள். பழி விதியின் மீதிருப்பதால், உங்கள் தாக்கங்கள் கோபமாக மாற வாய்ப்பு குறைந்துவிடும். ஒருவரின் செயலால் வஞ்சம் தீர்த்துக் கொள்ள முயன்றார்கள் என எண்ணி அவர்மீது கோபம் கொள்ளாமல், விதியின் விளையாட்டு என்ற முடிவால் கோபத்தின் அஸ்திவாரம் தகர்க்கப்பட்டு விடும். ஒன்றிற்காக ஒன்றின்மீது கோபம் கொண்டால் நிம்மதி இழப்பீர்.
உங்கள் மனதிற்கு உங்கள் எண்ணங்கள்தான் வழிகாட்டி. சற்று நேரம் உங்கள் செயல் பாட்டை நிறுத்தி பொறுமையுடன் இருங்கள். அமைதி காத்திடுங்கள். செயலின் நிகழ்வை அறிந்தபின் அதன் தன்மையைப் பொறுத்து, சிறிது காலம், சில மணித்துளிகள், சில நிமிடங்கள் செல்லட்டும் என அமைதியாயிருங்கள்.
பாதிப்பான குழப்பத்திலிருந்த மனம் தெளிவடையட்டும். அதற்கு கண்களை மூடியபடி எண்களை 1,2,3,4......என எண்ணுங்கள். அல்லது உங்களுக்கு பிடித்தமான இறையின் பெயர்களைத் திரும்பத் திரும்ப மனதிற்குள் கூறிக்கொண்டிருங்கள் அல்லது உங்களுக்கு பிடித்த மகிழ்வுதரக்கூடிய இனிய பழைய நினைவுகளை மனத்திறையில் கொண்டுவந்து மகிழ்வுறப் பாருங்கள்.
மனம் அமைதியடையும். பிறகு சிந்தியுங்கள். நடந்த நிகழ்வின் தாக்கமின்றி அதில் கவனம் செலுத்தி காரணத்தை ஆராயும் மனநிலைப் பக்குவம் உங்களை வந்தடைந்திருக்கும். பின் விவேகத்துடன் சிந்தித்து செயல்பட்டால் சந்தோஷம் காணலாம்.
ஓர் கூர்மையான கத்தியினை குழந்தையிடம் காண்பித்தால் அது அதன் தன்மை புரியாது அதை பிடிக்க முயலும். ஆனால் நாம் அந்த குழந்தையின் நிலை கடந்து அந்த கத்தியின் கூர்மை பற்றிய தன்மை அறிவோம். அதை எப்படிக் கையாழ்வது என உணர்ந்துள்ளோம்.
இதே போன்றுதான் வாழ்வின் எல்ல நிலைகளிலும் ஏற்படும் பிரச்சனைகளின் தன்மைகளை புரிந்து செயல்பட்டால் இனிமை, என்றும் இனிமை, பின்னும் இனிமை. தோல்வியில்லை! இங்கு ஆற்றாமை, இயலாமையில்லை! கோப உணர்வுகள் இல்லை! களிப்பான இன்ப உணர்வுகள் சந்தோஷத்தை தரும் உணர்வுகள் மட்டுமே!
நமது நண்பரோ, உறவினரோ, மாற்றுக் கருத்துக் கொண்டவரோ எவராயிருந்தாலும் அவர் செய்த செயல் சரியில்லாமலிருந்தால், அதனால் நல்ல முடிகள் ஏற்படாமலிருந்தால், அவர் நமக்கு பிடிக்காத வகையில் செயல் பட்டிருந்தால் அவர்மீதும், அவர் செயல் மீதும் நமக்குள் ஓர் விருப்பற்ற உணர்ச்சி ஏற்படுகின்றது.
அதே நபர் மீண்டும் வேறு ஓர் செயலை செய்யும்போது இதேபோன்று முடிவுகள் ஏற்பட்டால் நாம் கோபம் கொள்கின்றோம். இவன் இப்படித்தான்! எனக்கு அப்பவே தெரியும் என கூறமுற்படுகின்றோம். கோபம் அடைகின்றோம். அவரின் செயல் மிக மிகச் சிறியதாகக் கூட இருக்கும். அதனால் அதிகமான பாதிப்பு ஏற்படாது. இருப்பினும் நாம் கோபம் கொள்கின்றோம். ஏனெனில் அவர்மீது நாம் ஓர் நிலைப்பாட்டை முன்பே மனதில் பதிந்து வைத்துள்ளோம். அதன் விளைவு அவர் செயலின் முடிவு தோல்வி தந்தால் அது எவ்வளவு சின்ன விஷயமாக இருந்தாலும் நாம் அவர் மீது கோபம் கொள்கின்றோம்.
இது போன்ற கோபங்களைத் தவிர்க்க, அவர் முதலில் செய்த செயலின் முடிவால் அவரைப்பற்றி நம் மனதில் கொண்ட நமது முதல் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். தெரியாமலும் செய்திருக்கலாம். தெரிந்து செய்தாலும் அடுத்தமுறை சரி செய்து கொள்வார். இல்லை என்றாலும் அவருக்கு அதை புரியவைத்து உதவிகள் செய்யலாம் என எண்ண வேண்டும். இந்த எண்ண அலைகளை நம் நினைவில் வைத்துக் கொண்டால், அவர் மீண்டும் அந்த தவறு செய்தால் கூட நாம் நமது மனதைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் நாம் கோபம் கொள்ளமாட்டோம். அவர் செயல் சிறக்கசெய்ய வழி வகுக்கலாம். அல்லது அமைதியாகவும் இருக்கலாம். நாம் கோபம் கொள்ளாமலிருப்பதால் நம் சக்திதனை விரையம் செய்யாமல் நாம் ஆரோக்கியமாக சந்தோஷத்துடன் இருக்க உதவும்.
கோபம் கொண்டு உணர்ச்சி மயத்தில் கடின வார்த்தைகளைப் கொட்டியபின் உணர்ந்து, இனிமேல் உணர்வு வயப்பட்டு கோபம் கொள்ளக்கூடாது என கட்டுப்படுத்திக் கொள்ளும் போது நம் உள்ளே ஓர் நம்பிக்கை சந்தோஷம் எழும். எல்லா விஷ ஜந்துக்களும் தங்கள் கோபத்தை வெளிக்காட்டும் விதமாகவே அதன் விஷத்தை வெளியிடுகின்றது. மனித ஆன்மாக்களுக்குள் கோபத்தினால் தோன்றும் விஷ எண்ணங்கள் எதிரியை அழிக்கப் பயன்படுகின்றதோ இல்லையோ உங்கள் நலவாழ்விற்கு அது எதிரியாகும். அது உங்கள் வாழ்விற்கு தேவையில்லா ஒன்று.
ஒருவன் கோபத்தால் நம்மைத் தீய வார்த்தைகளால் திட்டினால், அதை உங்கள் மனம் ஏற்று கொண்டால், உங்கள் முகத்தில் அதன் பிரதிபலிப்பு தெரியும். அழுத்தமான உளைச்சல் ஏற்படும். உங்கள் நடையுடை பாவனைகள், நீங்கள் மீண்டும் அமைதியடைந்து இயல் சூழலுக்கு வரும் வரை மாறி இருக்கும். அதைப் பொருட்படுத்தாமல் புன்னகையுடன் இருந்தீர்களானால் அந்த தீச்சொற்களை நீங்கள் ஏற்கத் தயாரகவில்லை என்பதால் அது எங்கிருந்து வந்ததோ அவருக்கே போய்ச்சேரும். எனவே இன்முக புன்சிரிப்பு உங்களுக்கு நன்மைதனை பயக்கும்.
ஒருவன் கோபவசத்தால் செய்யும் செயல்களால் பொருள் நாசம், பிறரின் ஆதரவு கிடைக்காமை, மனக்கொதிப்பு, அவமானம், பகை, உடல் சோர்வு ஆகியன அடைகின்றான். புலன்களின் தன்மையும் கெட்டு உறவினர்களையும் இழக்கின்றான். கோபத்தால் தன் வளர்ச்சிக்கு உதவியவர்களையே விலகும்படி தூண்டுகின்றான்.
அதேசமயம் கோபம் கொள்ளவேண்டிய சமயத்தில், கோபம் கொள்ளாமல் எல்லா சமயங்களிலும் பொறுமையைக் கடைபிடிப்பவனிடம் அனைவரும் அவமதிப்பு காட்டுவர். அற்ப எண்ண சிந்தனைகளையுடையவர்கள் பொறுமையாளனை ஏமாற்றி அவனின் பொருள்களை அபகரிக்க விருப்புடன் செயல்படுவர். அவனின் கீழ் செயல்படும் ஆன்மாக்கள் அவர்கள் இஷ்டப்படி நடக்க முயல்வர். எனவே கோபம் கொள்ளாமல் அந்த நேரத்தில் கண்டிப்பு கலந்த பொறுமையுடன் செயலாற்றுதல் சிறப்பு.
ஒரு மனநல டாக்டரிடம் வந்தவன் தனக்கு மனோ வியாதி இருப்பதாக எல்லோரும் கூறுகின்றனர் என்றான். பார்த்தால் தெரியவில்லை. எதை வைத்து நீ அப்படி கூறுகிறய் என்றார். நோயாளி, பார்த்தால் தெரியாது டாக்டர், பழகினால்தான் தெரியும் என்றான். சரி, கவலைப்படாதே, நான் உன்னை குணப்படுத்தி விடுகிறேன் என்று நம்பிக்கையூட்டும் வண்ணம் பேசினார். உனக்கு என்ன பிரச்சனை என்றார்.
எனக்கு திடீர் என்று கோபம் வருகின்றது. அப்படி வந்தகோபம் சும்மா போவதில்லை என்றான். டாக்டர், எல்லோருக்கும் தான் கோபம் வருகின்றது. சிறிது நேரத்தில் போய்விடும் என்றார். அவன் ஆமாம் சார், அந்தகோபம் ஒரு காதோடு போகின்றது. என்றான். டாக்டருக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் சொல்வதைக் கவனித்துக் கொண்டிருந்தார். யார் எனக்கு கோபத்தை உண்டு பண்ணுகின்றார்களோ அவர்களது காதை நான் கடித்து விடுகிறேன் என்றான். டாக்டர் அது தவறு என்று உனக்குத் தெரியவில்லையா என்றார். அவன் கடித்தபின்புதான் அது எனக்குப் புரிகின்றது என்றான்.
அதுசரி இதற்கு முன் யாரைக் கடித்தாய், ஏன் கடித்தாய் என்றார். ஒருமனநல டாக்டர் என்னைக் குணப்படுத்த பணம் கேட்டார். எனக்கு கோபம் வந்தது அவர் காதைக் கடித்து துப்பிவிட்டுதான் இங்கே வந்திருக்கின்றேன் என்றான். இதைக் கேட்டபின் அந்த டாக்டர் தன்காதைக் காப்பாற்றிக்கொள்ள மருத்துவ மணையிலிருந்து ஓடினார்.
கோபங்கள் ஒருவரது மனநிலையை, செயல்களை முற்றிலும் மாற்றும் தன்மை கொண்டது. தன்னைவிட வலியவர்களிடத்திலோ, மெலியவர்களிடத்திலோ சினம் ஏற்பட்டாலும், அதைவிடத் அந்த ஆன்மாவிற்குத் தீமைகள் வேறில்லை.
கோபம் உண்டாக்கக்கூடிய நிகழ்வுகளை தளையறுந்த ஓர் படகாக நினைவு கொள்ளுங்கள். உன்னிலையறிவீர். உன்னதம் பெறுவீர்-குருஸ்ரீ பகோரா.