ஓம்நமசிவய!
பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.
#####
காளி!
நிர்குண பிரம்மானது காலம், பிரதேசம், வர்த்தமானம் வாஸ்து இவைகளைத் தாண்டிய நிலையில் உருவம் எடுத்த பின்னர் அவதாரங்கள் நிகழும். அவதாரங்கள் காலத்திற்கு கட்டுப்பட்டவை. காலம் என்ற சொல்லே காளியாகும். காலம் தோன்றிய பிறகே மற்ற அவதாரங்கள் எழுவதால் காளி என்ற காலமே தாந்திரத்தின் முதல் வித்தை.
சிவனின் கண்களை விளையாட்டாக உமை தன் கரங்களால் பொத்த உலகத்தில் இருள் சூழ்ந்து தரும நெறி அழிந்து ஜீவராசிகளிடம் பாவம் பெருகி அது கருமை நிறமாகமாறி உமாதேவியின் சரீரத்தில் பரவி படிந்துவிட்டது. அதைக் கண்டு உமை வருந்த பெருமான் காளி என்றழைத்தார். கருமை நிறம் நீங்க உமை பத்ரிகாஸ்ரமத்தில் தோன்றி தவமிருந்தாள். காசியில் விரித்தாடிய பஞ்சபேயை விரட்டி அன்னபூரணி எனப் பெயர் பெற்றாள். தனது உக்ர சக்தியால் சுண்டன், முண்டன், மகிஷன், சும்பன், நிசும்பன், குரூரன், ரத்தபீஜன், தாம்ரலோசன் என்ற அரக்கர்களை வதம் செய்து காஞ்சி வந்தடைந்து மீண்டும் தவமிருந்தாள். தன் கருமை நிறத்தை கழற்றி வீச அது ஒரு தேவியாக கௌசகீ எனப்பெயர் பெற்றது. தனது கருமை நிறம் நீங்கி பொன்நிறமடைந்ததால். கௌரி எனப்பட்டாள். காஞ்சியில் மணல் லிங்கம் வழிபட்டு ஈசனை மணந்தாள்.
விஷ்ணுவின் கிருஷ்ணாவதாரத்திற்கு உகந்த அரிய சக்தியை அபரிதமாக வழங்கியவள் காளி. இவள் வடக்கு திசையில் தோன்றியவள்.
#####