ஓம்நமசிவய!
ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.
#####
நாரயணர் சபா!
விஷ்ணு!
நீக்கமற எங்கும் நிறைந்த விஷ்ணு- பரம் வியுகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்ற ஐந்து நிலைகளில் நின்று இருந்து கிடந்து நடந்து அருள் பாலிக்கின்றார். விஷ்ணு வின் அருளைப்பெற ஏகாதசியன்று விரதமிருந்து துவாதசியன்று வெண்பட்டாடை அணிந்து விஷ்ணுவை வெண்மலர்களால் பூஜிக்கவேண்டும்.
பரம்- திருமகள் (ஸ்ரீ) மண்மகள் (பூதேவி) ஆய்மகள் (நீளா) ஆகியோரோடு பரமபதத்தில் தன்னை விட்டு பிரியாத அனந்தன், கருடன், விஷ்வக்சேனர் போன்ற நித்தியர், பூவுலகை விட்டு நீங்கி தன்னை வந்தடைந்த புனிதரான முக்தர் ஆகியோருக்கு எப்போதும் இன்முகத்துடன் வாழ்வளிக்கும் ஆனந்த நிலை பரத்துவம் எனப்படும்.
வியூகம்- உலகில் அனைத்தையும் படைக்க தன் நாபிக் கமலப் பூவில் நான்முகனைப் படைத்து மற்ற தேவர்களின் குறைகளைக் கேட்டுக் களைய உதவும் வகையில் அனந்தன்மேல் பள்ளி கொண்டிருக்கும் கோலமே வியூகம்.
விபவம்- அறம் தலைத்து நிற்க (தர்ம ஸம்ஸ்தாபனம்) நல்லவர்களை காக்க (ஸாது பரித்ராணம்) அல்லவர்களை அழிக்க (துஷ்க்குத்விநாசம்) பூவுலகில் இராமர், கிருஷ்ணர் போன்ற அவதாரங்களை மேற்கொள்வது விபவம் எனப்படும்.
அந்தர்யாமி- கறந்த பாலில் நெய்போல், எள்ளுக்குள் எண்ணெய்யாக இருப்பதுபோல் கட்டை விரல் அளவில் உள்ளத்தே எழுந்தருளி யிருப்பது அந்தர்யாமி எனப்படும்.
அர்சை- அடியவர்கள் விருப்பும் பொன், வெள்ளி முதலிய உலோகங்களிலும், மரம், மண், கல், வரைச்சித்திரம் அனைத்திலும் தோன்றும் வடிவமே அர்ச்சாவதாரமாகும்.
விஷ்ணு ஆலயத்தைத் திறக்குமுன் மங்கள வாத்தியங்கள் முழங்க கதவுகள் திறக்கப்படவேண்டும்.
எந்தெந்த மாதங்களில், எந்த நாட்களில் மகாவிஷ்ணுவை எந்தவடிவில் பூஜித்து விரதம் இருக்கவேண்டும்.
சித்திரை- வளர்பிறை துவாதசி- வாமனனாகிய நாராயணனை பூஜைக்க வேண்டும்.
வைகாசி- வளர்பிறை துவாதசி- பரசுராம துவாதசி- பரசுராமவதார நாராயணனை பூஜிக்க வேண்டும்.
ஆனி- வளர்பிறை துவாதசி- ஸ்ரீராம துவாதசி- ராமவதார விஷ்ணுவை பூஜிக்க வேண்டும்.
ஆடி- வளர்பிறை துவாதசி- கிருஷ்ண துவாதசி- கிருஷ்ணனை பூஜிக்க வேண்டும்.
ஆவணி- வளர்பிறை துவாதசி- புத்த துவாதசி- ஆபத்திலிருந்து விடுபட நாராயணனை பூஜிக்க வேண்டும்.
புரட்டாசி- வளர்பிறை துவாதசி- கல்கி துவாதசி- கல்கி அவதார விஷ்ணுவை பூஜிக்க வேண்டும்.
புரட்டாசியில் சூரியன் கன்னிராசியில் பிரவேசிப்பதாலும் புதன் மிகவும் உச்சம் பெருவதாலும் அதன் அதிதேவதை திருமாலாகவும் இருப்பதால் மகாவிஷ்ணுக்கு உரிய மாதம். புதனின் நட்புகிரகம் சனி ஆயுட்காரகர் என்பதால் புரட்டாசி சனிக்கிழமை விரதம் சிறந்த பலனைத் தரும்.
புரட்டாசி தேய்பிறை ஏகாதசி- வாமன ஏகாதசி எனப்படும். இந்நாளில் மாகாவிஷ்ணு சயனத் திருக்கோலத்தை மாற்றுவதால் பரிவர்த்தன ஏகாதசி எனப்படும். மகாபலியை வாமன அவதாரம் எடுத்து அழித்தது இந்த ஏகாதசி நாளில். எனவே ஜெயந்தி ஏகாதசி என்றும் கூறுவதுண்டு.
புரட்டாசி வளர்பிறை ஏகாதசி அஜா ஏகாதசி எனப்படும். பழைய வினைகள், முன் வினைப்பயன் காரணமாக ஏற்படும் துன்பங்கள் நீங்கும்.
மண்பாண்டங்களில் திருப்பதி ஏழுமலையானுக்கு நிவேதனம்!
திருப்பதியில் வாழ்ந்த குயவன் பீமன் மனம் எப்போதும் கோவிலில் இருக்க ஆசைப்பட்டாலும் குடும்ப சூழ்நிலையால் அவ்வாறு இருக்க முடியவில்லை. தினமும் காலை மாலை இருநேரங்களிலும் கோவிலுக்குச் சென்று எல்லாம் நீயே வேங்கடவா எனச்சொல்லி வணங்கி வந்திடுவான். இருப்பினும் சனிக்கிழமை தோறும் தவறாமல் விரதம் இருந்து வந்தான்.
மன்னர் தொண்டைமான் திருப்பதி ஆலயத்தைப் பெரிது படுத்தி புனரமைப்புச் செய்து சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் செய்ய ஏற்பாடு செய்தார். தங்கத்தால் ஆன அழகான பூமாலை செய்து அணிவித்து அழகு பார்த்து மகிழ்ந்தார்.
ஒரு புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை விரதம் இருந்தும் கோவிலுக்குப் போக முடியாத சூழல் ஏற்பட பீமன் மிகவும் வருந்தினான். பெருமாளை இங்கு வரவழைத்து விட்டால் என்ன என்ற எண்ணம் தோன்ற மண்ணால் சிலை செய்து மண்ணால் பூமாலை செய்து அணிவித்து அழகு பார்த்து திருப்தி அடைந்தான்.
அடுத்தநாள் காலை தொண்டைமான் பெருமாளைப் பார்த்தபோது தங்க மாலையுடன் மண் மாலையும் இருக்க தான் என்ன அபசாரம் செய்தோமோ என வருந்தி உண்ணா நோன்பு மேற்கொண்டான். மூன்று நாடகள் கழிந்தபின் அவன் கனவில் பெருமாள் பீமனைப் பற்றிச் சொல்ல மன்னன் பீமனைக் கண்டு பொன்னும் பொருளும் கொடுக்க அதை மறுத்த பீமன் அதைக் கொண்டு மேலும் தர்மகாரியங்கள் செய்யுங்கள் என்றான். இதனால் தொண்டைமானின் கர்வம் அழிந்தது. குயவன் பீமனின் பெயர் நிலைக்கும் வண்ணம் இன்றும் மண்பாண்டங்களில் திருப்பதி ஏழுமலையானுக்கு நிவேதனம் செய்யப்படுகின்றது.
புரட்டாசியில் சூரியன் கன்னிராசியில் நுழைந்ததும் பித்ரு லோகத்தில் வசிக்கும் முன்னோர்கள் யமன் அனுமதியுடன் பூமிக்கு வந்து தங்கள் உறவினர்கள் தங்களை நினைக்கின்றார்களா என்பதை அறிய ஆவலுடன் வருகின்றனர். அந்தக் காலம் புரட்டாசி வளர்பிறை பிரதமையிலிருந்து வரும் 15 நாட்கள் மாளயபட்சம் எனப்படும். அப்போது அவர்களுக்கு நீர்க்கடன் செய்து அவர்கள் தாகத்தை தணிக்கவேண்டும்.
மாளயபட்ச நாட்கள் அனைத்துமே நீத்தார் வழிபாட்டிற்குரியது என்றாலும் மாளயபட்ச அஷ்டமி- மத்யாஷ்டமி, பரணி நடசத்திரத்தன்று மகாபரணி, திரயோதசி திதி கஜச்சாயை என்ற மூன்று நாட்கள் மற்றும் மகாளாய அம்மாவசை பிதுர்க்கடன் செய்ய மிகவும் சிறப்பான நாட்கள்.
ஐப்பசி- வளர்பிறை துவாதசி- பத்மநாப துவாதசி- பத்மநாபசுவாமியைப் பூஜிக்க வேண்டும்.
கார்த்திகை- வளர்பிறை துவாதசி- விஷ்ணு ப்ரீதிக்கான வழிபாடு. பதித பாவன தரணி துவாதசி. வராகம் பூமியை ரட்சித்த நாள். கிருஷ்ணன அல்லது பலராமரை பூஜித்திட வேண்டும்.
மார்கழி- வளர்பிறை துவாதசி- மச்ச துவாதசி- நாராயணனை பூஜிக்க வேண்டும்.
தை- வளர்பிறை துவாதசி- கூர்ம துவாதசி- விஷ்ணுவை பூஜிக்க வேண்டும்.
மாசி- வளர்பிறை துவாதசி- சர்வ பாப விமோசனம். வராக மூர்த்தியை பூஜிக்க வேண்டும்.
பங்குனி- வளர்பிறை துவாதசி- நரசிம்ம துவாதசி- நரசிம்மரை பூஜிக்க வேண்டும்.
விஷ்ணுவால் வெறுக்கப்படும் காரியங்கள்.
தூய்மையற்ற பொருள்களை உண்னுதல்
நீராடமல் சாளக்கிராமங்களைத் தொட்டவர்கள்
மாயானத்திலிருந்து வந்து பூஜை செய்பவர்கள்
அழுக்கான தூய்மையற்ற ஆடைகள் அணிந்து பூஜை செய்வது
மற்றவர்கலின் ஆடைகளை அணிந்து பூஜை செய்வது
கோபத்துடனும் வெறுப்புடனும் பூஜை செய்தல் கூடாது.
மாமிசங்களை உண்டபின் பூஜை செய்யக் கூடாது
நெய்வேத்தியம் செய்யாத பொருட்களை மற்றவர்களுக்கு தரக்கூடாது.
மது உட்கொண்டு பூஜை செய்யக்கூடாது
மாமிசம் விற்பதோ உண்னுவதோ கூடாது.
அவதாரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்திற்கு அதிபதி,
அசுர தேவர் யுத்தத்தில் ஏராளமான அசுரர்கள் அழிந்துபோக தோற்ற அசுரர்கள் குலகுருவான சுக்கிராச்சாரியர் வீட்டில் தஞ்சமடைந்தனர். அசுரர்களைக் காக்க மந்திர தந்திரங்களை கற்க சிவபெருமானைக் கைலாயத்தில் சந்தித்தார். பெருமான் இதுவரை யாருமே செய்யாத ஒரு விரதத்தை தலைகீழாக நின்று ஓராயிரம் ஆண்டுகள் தவம்செய்தால் மந்திர உபதேசம் கிடைக்கும் என்றார். தவமிருக்க சுக்கிராச்சாரியர் கானகம் சென்றார். சுக்கிரன் வீட்டில் இல்லாததால் தவித்த அசுரர்களை சுக்கிராச்சாரியாரின் தாயும் பிருகு முனிவரின் மனைவியிடம் தஞ்சம்புக, அப்பெண்மணி என் கற்பின் மகிமையால் உங்களைக் காப்பாற்றுகின்றேன் என்று அபயம் அளித்து அடைக்கலம் தந்தாள். தேவர் குரு பிரகஸ்பதியின் ஆலோசனைப்படி தேவேந்திரன் அசுரர்கள்மீது போர் தொடுக்க பிருகுவின் மனைவி தேவேந்திரனை செயலிழக்கச் செய்து விட்டாள். விஷ்ணு சக்ராயுதத்தை அனுப்ப அது தஞ்சம் கொடுத்த முனிவரின் மனைவி சுகிர்தி முதல் அனைவரையும் கொன்றது.
தவம் முடிந்து வந்து விபரம் அறிந்த பிருகு முனிவர் கோபம் கொண்டு பஞ்சாட்சாரம் ஓதி அமிர்த சஞ்சீவி மந்திரத்தால் தன் மனைவியை எழுப்பிவிட்டு விஷ்ணுவிடம் போர்தொடுத்து, பெண் கொலை செய்த விஷ்ணுவே, நீ பூலோகத்தில் இழிவான யோனியில் ஓயாமல் பிறந்து, இறந்து, பிறந்து, இறந்து வாழ்வாய் எனச் சாபமிட்டார், ஒவ்வொரு ஜன்மத்திலும் மலமூத்திர சம்பந்தமுள்ள கர்ப்ப வாசத்திலே நீ பிறவி எடுக்க வேண்டும் என்றார். போரில் எதிரி என்று ஆனபின் கொல்வது குற்றமல்ல என்ற நிலையிருப்பினும் விஷ்ணு பிருகு முனிவரின் சாபத்தை சிவன் யோசனைப்படி மக்களின் நன்மைக்காக பயன்படுத்த திட்டமிட்டார்.
வாசுதேவகிக்கு சுதர்சனம் என்ற மகனாகப் பிறந்தார். பிறந்தவுடன் குழந்தை சிவ மந்திரம் சொல்லியது அக்குழந்தை. அக்னீஸ்வரர் கோவில் சென்றது. வாசுதேவர் என்ன சொல்லியும் திருமால் புகழ் பாடாமல் சிவன் புகழைப் பாடியது. ஒருவர் தன் புகழைப் பாடுவது தற்பெருமையாகும். சாபத்தினால் பிறந்த திருமால் எப்படித் தன் புகழ் பாடுவார். சுதர்சனம் திருநீறு பூசவதைக் கண்ட வாசுதேவர் கோபங்கொண்டு அவனை வீட்டைவிட்டு வெளியே அனுப்பினார். வேறு எதுவும் தெரியாத நிலையில் சிவன்கோவில் சென்று தங்கினார். நள்ளிரவில் தட்சிணாமூர்த்தி வடிவில் அக்னீஸ்வரர் தோன்றி ஹரதத்தர் எனப் பட்டம் அளித்து ஞான உபதேசம் செய்தார். கஞ்சனூர்- (தன் புகழ் பாடுவது தற்பெருமை, போரில் கொன்றால் பாவமில்லை, எந்த செயலையும் பொது நலனுக்கு உபயோகமாக்குதல் என்ற இந்த மூன்று விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன)
சிவன் ஆலோசனைப்படி உலக உயிர்களின் நலன் கருதி தான் அடைந்த சாபங்களின் மூலமாகப் பூலோகத்தில் அவதாரங்களை எடுந்து அதை மக்களின் நல்வழிக்காக செயல்படுத்த முடிவெடுத்தார் விஷ்ணு. இந்த அவதாரங்களில் மானிட உருவம் தரித்தது வாமனர், ராமர், மற்றும் கிருஷ்ணர். இதில் வாமனர், கிருஷ்ணர் அவதாரங்களில் கடவுளின் தன்மையை வெளிப்படுத்தியுள்ளார். ராமாவதாரத்தில் அடுத்தது என்ன நடக்கும் என்பதை அறியாதவராய் எளிய மானிட வாழ்வு வாழ்ந்ததால் இராமாவதாரம் சிறப்பு பெற்றது.
சாக்ஷுஷு மன்வந்திரத்தின் முதலாவது சதுர்யுகக் கிருதத்தில் தருமர் என்பவருக்கு நரநாராயணர்களாக விஷ்ணு பிறந்துள்ளார்.
பின்னர் வைவஸ்வத மன்வந்திரத்தில் முதல் சதுர்யுக கிருதயுகத்தில் அத்திரி முனிவரின் பத்தினி அனுசூயை மும்மூர்த்திகளும் புத்திரர்களாக வர விரும்பியதால் நாராயணர் தத்தாத்திரேயராகப் பிறந்தார்.
அவதாரங்கள்
1. மச்ச அவதாரம்!
2. கூர்ம அவதாரம்!
3. வராகஅவதாரம்!
4. நரசிம்ம அவதாரம்!
5. வாமனஅவதாரம்!
6. பரசுராம அவதாரம்!
7. ராம அவதாரம்!
8. கிருஷ்ண அவதாரம்!
9. பலராம அவதாரம்!
10. கல்கி அவதாரம்!
#####