Print this page
ஞாயிற்றுக்கிழமை, 01 April 2018 13:16

குமாரிலபட்டர்

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலை அறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்து எனை ஆண்ட
வித்தக விநாயகன் விரைகழல் சரணே!

&&&&&

குமாரிலபட்டர்

மீமாம்சக கொள்கை

பிரயாகையில் பிறந்த குமாரிலபட்டர் முருகனின் அவதாரம் என புராணங்களில் சொல்லப் பட்டுள்ளது. வேதத்தின் ஒரு பிரிவான கர்ம காண்ட்த்தை ஆதரிக்கும் கொள்கையை கடைபிடிப்பவர். ஒரு செயலைச் செய்தால் தானாகவே அதற்கான பலன்கள் கிடைக்கும். அதற்கு இறைவன் அவசியமில்லை என்பதும், இறைவன் இல்லை, இறைவன் இருப்பது உண்மையானால் நல்லவர்களும் கெட்டவர்களும் ஏன் என்பதே அவர் வாதம். இது ஜைனி முனிவர் உருவாக்கிய கர்ம மார்க்கம் மீமாம்சக கொள்கை ஆகும். பூ உலகில் மனிதர்கள் போல் மேல் லோகத்தில் தேவர்கள் இருப்பதாக நம்பிக்கை உள்ளவர்கள். யாகத்தால் பலன் உண்டு என நினைப்பவர்கள்.

குமாரிலபட்டர் காலத்தில் பிரயாகையில் பௌத்த மதம் செழித்தோங்கியது. அவர்கள் வைதிக மதத்தைக் கண்டணம் செய்து வந்தனர். மீமாம்சக கொள்கையை ஆதரிக்கும் குமாரிலபட்டர் பௌத்தர்களின் நிலையை மாற்றி தம் கொள்கைகளை அவர்கள் உணரவைக்க வேண்டும் என விரும்பினார். ஒரு மதத்தை கண்டிக்க வேண்டும் என்றால் அம்மதத்தைப் பற்றி முழுமையாக தெரிந்திருக்க வேண்டும் என்ற கருத்தில் பௌத்த சந்தியாசி ஆகி பௌத்த மடத்தில் சீடராக சேர்ந்தார்.

பொதுவாக பௌத்தர்கள் தங்கள் சாஸ்திரங்களை மற்றவர்களுக்குச் சொல்லித் தரமாட்டார்கள். குமாரிலபட்டர் தன் சொந்த மதக் கடமைகளை ரகசியமாகச் செய்து கொண்டு பௌத்தத்தைக் கசடறக் கற்றுத் தேர்ந்தார், பௌத்தர்கள் பாடம் சொல்லும்போது இந்து மதம் பற்றி குறைகூறி திட்டும்போது மனதை அடக்கிக் கொண்டு கண்ணீர் சிந்துவார், அப்படி சிந்தும்போது பலநாள் அகப்பட்டு எதாவது சொல்லி மழுப்பி விடுவார். ஆனால் இறுதியில் அவர் அந்தணர் என்று கண்டுபிடிக்கப்பட்டார்.

ஓர் அந்தணன் இப்படி பித்தலாட்டம் செய்து நம் சாஸ்திரங்களை கற்றுக் கொண்டு விட்டானே என்பதால் கோபங்கொண்ட சிலர் அவரை அந்த கட்டிடத்தின் மேல் மாடிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து தள்ளி விட்டனர். அப்போது அவர் ‘நான் நம்பும் வேதம் உண்மையாக இருக்குமானால் எனக்கு ஒரு துன்பமும் ஏற்படாமல் காப்பாற்றட்டும்’ என கூறியபடி கீழே விழுந்தார். அவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழுந்தும் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை ஆனால் ஒரு கல் பட்டு அவர் ஒரு கண் போய் விட்டது..

வேதத்தை எவ்வளவு முழுமையாக நம்பினேன் எனக்கு இந்த நிலைமையா என புலம்பினார். அப்போது ‘வேதத்தை நீ முழுமையாக நம்பவில்லை’, வேதம் உண்மையாக இருக்குமானால் அது என்னைக் காப்பாற்றட்டும்’ என்றுதான் கூறினாய். ‘வேதம் தான் உண்மை, அது என்னைக் காப்பாற்றட்டும்’ எனச் சொல்லவில்லை அப்படியானால் வேதத்தின் மீது உனக்கு சந்தேகம் இருக்கின்றது என்றுதானே அர்த்தம் என அசரீரி எழுந்தது. குமாரிலபட்டர் தன் தவறை உணர்ந்தார்.

மீமாம்சக மதப் பிரச்சாரம் ஆரம்பித்தார். அந்தக் கருத்தை வலியுறுத்துபவர்களின் தலைவர் ஆனார். கர்ம மார்க்கமே பிரதானமானது என்பதை வலியுறுத்தினார். பௌத்த மதத்தினர் அனைவரையும் வாதத்திற்கு அழைத்து அவர்களை வென்றார். தான் வந்த வேலை முடிந்ததாய் நினைத்தார்.

குருத் துரோகம்

குருவை தெய்வமாக மதிக்கும் மதத்தில் பிறந்த தான் பௌத்தத்தை தன்னை சீடனாக நம்பி போதித்த குருமார்களை ஏமாற்றி விட்டோமோ என்ற மனவேதனை இருந்தது. அது குருத் துரோகம் என நம்பினார். கடவுள் இல்லை கர்மாவே பலன் தரும் என்று போதிக்கும் நான் இப்படி போலியாக நடந்து கொள்ளலாமா என வருந்தினார், புத்த விஹாரத்தின் ஏழாவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டபோது வேதத்தை சாட்சியாக வைத்து உயிர்பிச்சைக் கேட்டவர் தற்போது தன் உடலைத் தானே துன்புறுத்தி இறந்துபோகத் தலைப்பட்டு உமிக்காந்தல் தீயில் இறங்கினார்,

உமிக்காந்தல்

உமிக்காந்தல்-துஷாக்கினி தீ என்பது வடமொழியில் தூஷ-உமி. தன்னைச் சுற்றி நிறைய உமியைச் சேர்த்துக் கொண்டு கீழே தீயிட்டுக்கொள்வது. அந்த உமிக்காந்தல் அக்னி கொஞ்சம் கொஞ்சமாக சரீரத்தை வேகச் செய்யும், உயிரை வருத்திக் கொள்வதில் மிகவும் கொடுமையானது. உள்ளங்கால், விரல், முழங்கால், என உடலின் ஒவ்வொரு பகுதியாக வெந்து எரிந்து தீய்ந்து அழிந்து கருகி உயிர் போகும் பயங்கரமான தண்டனை.

மாறிய குமாரிலபட்டர்

அந்தத் தீ மெல்லப் பரவி அவர் கால்கள் கருகத் துவங்கியபோது பிரயாகை வந்திருந்த சங்கரர் பௌத்தரை வென்ற குமாரிலபட்டரைக் கண்டு கர்ம காண்டமே முக்கியம் எனும் மனிதரை வேதாந்தத்தின் பக்கம் திருப்பினால் ஞான காண்டத்தின் அவசியத்தை உலகுக்கு நன்றாக உணரவைக்கலாம் என்ற எண்ணத்தில் அவரைப் பார்க்க வந்தார், நிலைமை முற்றியிருக்கக் கண்ட சங்கரர் ஏன் இந்த முயற்சி எனக் கேட்க நான் செய்த பிழைக்கு தர்ம சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி சிரமான முறையில் மரணத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.

குமாரிலபட்டரின் வேண்டுகோளுக்கிணங்க அத்வைதிக முறைகளை அவருக்கு விளக்கினார். இறைவன் அணுக்கிரஹத்தால் மட்டுமே சுக பலன் நீடித்திருக்க முடியும், கர்ம காண்டத்தை மட்டும் அனுசரிப்பது போதாது அதன் நிரந்தர பலன் ஞானகாண்டத்தில் இருக்கின்றது அதுதான் வேதாந்தம் என விளக்கினார். உடலின் அடிப்பாகம் அக்னி கனலால் எரிய உள்ளம் சங்கரரின் அருட்கனலால் வெளிச்சமுற்றது, இருக்கும் ஓர் ஆத்மா அதைக் காரியத்தால் கட்டுப்படுத்த இயலாது, ஆத்மாவில் உறைவதே பிறப்பைக் கழிக்கும் பேரானந்தம் எனச் சங்கரர் கூறக் கேட்ட குமாரிலபட்டர் நெகிழ்ந்து போனார். உங்கள் கருத்தை மக்களுக்குச் செல்ல இயலாத நிலைக்கு ஆனேன் என வருந்தினார், உங்களை நான் குருவாக மனப்பூர்வமாக் ஏற்றுக் கொள்கின்றேன் என்றார்,

மாகிஷ்மதி நகரில் மீமாம்சக கொள்கை உடைய மண்டனமிஸ்ரர் என ஒருவர் என்னைவிட தீவிரமானவர் அவரை நீங்கள் வாதத்தில் வெல்லவேண்டும் என வேண்டுகோள் விடுத்து தன் ஆவியை அக்னிக்கு அர்ப்பணித்தார், சங்கரர் குமாரிலபட்டருக்காகப் பிரார்த்தனை செய்தார், மோட்சம் அருளினார்.

$$$$$

Read 5915 times Last modified on ஞாயிற்றுக்கிழமை, 08 April 2018 15:51
Login to post comments