ஓம்நமசிவய!
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!
#####
சிவலிங்கம்!
1773. ஒலிக்கும் கடலால் சூழப்பட்ட உலகம், நீர், வீசும் காற்று, காற்றினிறு தோன்றும் தீ என்னும் இந்த நான்கும் தத்தம் நிலையும் முறையே மாறாமல், ஒழுங்கு பெற நிலைத்திருப்பதற்குரிய வானமும் ஆகப் பரந்து விரிந்து விளங்குபவன் சிவன். அவனை ஒரு குறியில் வைத்து வணங்கும் முறையை யான் அறியேன்.
1774. எவ்விடத்தும் பரவி விளங்கும் இறைவனை ஓர் எல்லைக்குட்படுத்தி வணங்கும் ஓரு முறை உண்டு. பொங்கி வருகின்ற உணர்வான நீரையுடைய சுவதிட்டானமான மலரை ஏத்தி அவனது திருப்பெயரை நினைந்து உணர்பவர்களுக்கு சிவன் எங்கும் துளை செய்து கொண்டு போகமாட்டான்.
1775. எம் இறைவனை உலக முதல்வனாய் நான் கண்டேன். நான் அப்பெருமானின் திருவடிகளை நன்மை தருவன என்று அறிந்து தொழ ஐம்பொறிகளின் வழி அறிவு செல்லாமல் அவற்றைக் கடந்து சிவத்துடன் பொருந்தி இன்பம் அடைய அப்போது ஆதிப்பிரானான சிவன் தனது திருவருள் சத்தியைப் பதிப்பிப்பான்.
1776. நான்முகன், திருமால், உருத்திரன், மகேசன், பலத்தை அளிக்கும் சதாசிவன், பரநாதம், நன்மையைத் தருகின்ற சத்தி சிவன் என்ற வடிவமாய் பயன்களைத் தருகின்ற இலிங்கமே மேலான சிவமாகும்.
1777. மூலாதாரத்தினின்று நடு நாடி வழியாய் போகின்ற செவ்வொளியுடன் கூடி ஆவி எழுகின்றவரை உடலில் உள்ள ஆதார கலைகளிலும் உடலை விட்டு நீங்கிய நிராதாரக் கலைகளிலும் பொருந்துவதும் நீங்குவதுமாய் உள்ளத்தை நிறுத்திப் பழகுவதில் மேன்மையான சிவசக்தியானது உண்டாகும்.
#####