ஓம்நமசிவய!
அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!
#####
சொரூப உதயம்!
2835. சிறந்த குருவான் சிவன் தத்துவங்களை விட்ட ஆன்மாவில் பொருந்துவான். பொருந்தி அஃது உரம் பெற்று எங்கும் நீக்கம் இல்லாமல் நிறைந்து விளங்குவான். அப்படி ஆன்ம சொருபத்தில் நிலைபெற்ற சிவன் அரிய துரிய நிலையில் பொருந்தி விளங்கினான்.
2836. நிலைகுலையச் செய்கின்ற இயல்புடைய ஐம்பூதகளாகிய நிலம் நீர், அலைத்தலைச் செய்யும் காற்று தீ வான் என்னும் யாவும் அவற்றைக் கடந்தும் மண்முதல் விண்வரை உயர்ந்து நின்றும் விளங்கும் சிவனை ஓர் எல்லைக்கு உள்ளாக்கி வணங்குவதை ஆறியேன்.
2837. அங்ஙனம் விளங்கும் சோதியை நான்முகன் திருமால் முதலிய தேவர்களும் மற்றவரும் இறைவா என்று வணங்கி வழிபடுவர். எம் ஒப்பில்லாத உலகத் தலைவனான எம் இறைவன் அவரவரிடம் உள்ள சோதியில் பொருந்தி இயக்கி இருந்தான். அவரவர்களைக் கடந்தும் சமஷ்டி நிலையில் புவனங்களுக்குத் தலைவனாகவும் விளங்கினான்.
2838. சமயங்கள் வரையறை செய்துள்ள நெறி முறைகளை அறிய முடியாதபடி தடையாக நிற்கும் பொறுமைக் குணத்தை அழிக்கும் காமம், குரோதம், உலோபம், மோகம், மதம் மாற்சரியம் மண்ணாசை பொன்னாசை ஆகிய எட்டும் அவற்றால் உண்டாகும் தீமைகளும் உண்ர்ந்து சிவத்துடன் பொருந்தி நின்றவர் தேவர்களுக்குத் தலைவராய் விளங்குவர்.
2839. நான்முகன் திருமால் உருத்திரன் ஆகிய மூவகை தெய்வத்தில் ஒருவனான உருத்திர மூர்த்தி அவற்றொடு ஒருவராய் அவற்றில் வேறாய் இருந்து இயக்குவன். அதைப்போல் சிவன் சிவ முத்துரியத்தில் சீவர்களைச் செம்மையடையச் செய்யும் நெறியில் சிவனும் ஆவான் என்று வேதாகமங்கள் உரைக்கும்.
2840. சிவமானது அருவமாய் இருந்து சகல வடிவங்களையும் கூடியிருக்கும் தனக்கு ஒரு மூலம் இன்றித் தான் எல்லாவற்றுக்கும் மூலமாகும். அருள் நிலையையும் கடந்து விளங்கும் மாயப்பிரான் அவனே குருவாய் வந்து சீவனில் வெளிப்பட்டு அருள் செய்தாலன்றி யாராலும் கூட முடியாது.
2841. சிவத்தின் திருவருளை இடிவிடாது சிந்தித்திருப்பவர்க்கு அவரது உள்ளம் இருள் கெட்டு ஒளியாய் மாறும். அத்தகையோர் மரணத்தையும் வெல்வர். அன்னார் தேவவுடல் பெற்று விளங்குவர். இங்ஙனமாகவும் உண்மையை உண்ர்ந்து பயனடைவர் உலகில் யார் இருக்கின்றார்கள்.
2842. பரஞ்சோதியான பேரொளிப் பிழம்மைப் பற்றாக கொள்ள அது காரணமாக அப்பரஞ்சோதி என்னுள் பொருந்த இருந்தேன். அதன் பின்பு அதனுள் நான் அடங்கியிருந்தேன். அப்பேரொளியானது தன்னைப் பற்றிய உண்மையை நாதம் மூலமாக வெளிப்படுத்தி அருள்வதைப் பார்த்தேன்.
2843 இயற்கை இயல்பு வடிவம் குணம் தொன்மை என்பவை பொருந்தி அரிய நீலமலர் விளங்குவதுபோல் ஆதி சத்தி இச்ச சத்தி ஞான சத்தி கிரியா சத்தி என்னும் நான்கும் கலந்து நிற்கும். சிவ வடிவான குரு சீவனுக்கு இன்பம் தருபவனாய் விளங்குவான்.
2844. சிவ சொருபத்தைக் கண்டு பேச்சற்று மோன நிலையில் ஆனந்த வடிவமான சீவன் அகண்ட சத்தியைக் கண்டபோது அதன் இச்சை ஞானம் கிரியை ஆகியவை அகண்டமாய் அ கரம் பொருந்த உ கர ம கரமாய்க் க்ண்டத்தில் ஆக அர்த்த மாத்திரைப் பிரணவத்தில் ஒளியாகப் படர்ந்து விளங்கும்.
2845. தலையின் கீழ் உள்ள கழுத்துப் பகுதியில் நினைவை நிறுத்தித் தவம் செய்து இதயப்பகுதியில் செயற்படும் கிரியா சத்தித் தலைவனை நான் ஊன் போதிந்த உடல் இயல்பைக் கடந்து சந்திர மண்டலத்தில் விளங்கும் ஒளியில் கண்டு கொண்டேன்.
2846. மனத்தில் உள்ள சிவன் எப்படி ஒளிர்ந்து உயிர்களை ஆட்கொள்கின்றான் என்பதை அறிந்தேன். நான் அவனை புகலிடமாய்ப் போய் அடையும் போது நெறி இது என்பதையும் அறிந்தேன். வேறு ஒரு பாதுகாவல் தேவையில்லை. இனி நான் போய் அடையும் இடமும் வேறு இல்லை. நாம் அனைவரும் போய் அடையும் முதல்வனும் நான் எனச் சொல்வதில் பிழை இல்லை.
#####