Print this page
வியாழக்கிழமை, 16 July 2020 12:32

வரையுரை மாட்சி.! அணைந் தோர் தன்மை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!

#####

வரையுரை மாட்சி.!

2954. ஆன்மா சிவ எல்லையைக் கடந்து சிவமான பின்பு எவருடன் சேர்வது. அங்ஙனம் அகண்டமாகிய அந்நிலையில் எவரைப் பற்றி நினைப்பது. கவர்ச்சியான பிரகிருதியின் இச்சையையே வென்றவர்க்கு வேறு இந்தப்ப் பிரகிருதியில் என்ன கவர்ச்சி இருக்க முடியும். நீங்களே உங்கள் அறிவால் தேர்ந்து கூறுங்கள்.

2955. சொல்லால் சொல்ல முடியாத அகண்ட சிவத்தை அளவு படுத்திக் கூறமுயலும் அறிவற்றவர்களே! அகண்டமாகிய பொருளை இப்படி இவ்வுருவம் இப்பண்பு என்று சொல்ல முடியுமோ. ஆனால் அலை ஓய்ந்த ஆழமான கடல் போன்ற தெளிவான உள்ளம் உடையவர்கள் ஒளிக்கதிர்களை அடைய் சிவபெருமான் மறைவின்றி வெளிப்பட்டு விளங்குவான்.

2956. மன நினைவே மாயையாம். இதுவே மயக்கத்தை அளிக்கும் மனத்தால் படைக்கப்பட்ட கற்பனை கெடுவதைத் தவிர வேறொன்றும் இல்லை. இதற்கு மேல் கெடுவதற்கு ஏதுமில்லை. வீணாய்ப் பேசிக் காலத்தைக் கழிக்க வேண்டாம். ஆன்மா தன் உண்மை வடிவத்தை ஆராய்ந்து அடங்கியிருப்பதே மேன்மையாகும்.

#####

அணைந் தோர் தன்மை!

2957. சிவ குருநாதனை ஞானத்தால் உறுதியுடன் பொருந்தித் தன் அன்பினுள் அணைத்துக் கொள்பவர்க்கு உயிர்களை கட்டுப்படுத்தியிருக்கும் மலம் இல்லை. அவற்றால் வரும் குற்றம் இல்லை. உயிர்ப்பற்று பொருட்பற்று இனப்பற்று என்பவை கிடையா. தாமதம் இராசத்ம் சாத்துவீகம் என்னும் குணங்களும் இல்லை. அதலால் சுயநலமும் இல்லை.

2958. நன்மையை மட்டும் அளிக்கும் சிவனைக் கண்டேன். அதனால் பிறவி நீங்கப் பெற்றேன். பாரங்க்களை விட்டு நின்றேன். சிவத்துடன் பொருந்தி நின்றேன். சிவத்துடன் பொருந்தியதால் இறந்தபின் இனி மீளவும் பிறத்தலை விரும்பேன்.

2959. ஆலையில் பிழியப்பட்ட சாறும் பாலும் வெல்லமும் சோலையில் உல்ல பொய்கை நீரும் போன்ற இனிய சிவானந்தம் என் சிவபூமியில் இருக்கின்றது. மயில் தோகை போன்ற ஒளியை தந்து கொண்டிருப்பவனாகிய ஒப்பில்லாத அழகையுடைய சத்தியால் அந்த நாட்டில் உள்ளவர்க்கு ஒரு குறைவும் இல்லை.

2960. எல்லாத் தத்துவங்களையும் கடந்து விளங்கும் சிறப்புடிய சிவன் வந்து என் சிந்தையில் இடம் கொண்டனன். ஆதலால் இனி மேல் எந்தத் தத்துவத்தாலும் என்னைக் கட்டுப்படுத்த முடியாது. அந்தச் சிவ பூமியில் இருப்பதே அல்லாமல் பிற தத்துவங்களுடன் கூடி அறிய வேண்டியது ஏதும் இல்லை.

2961. நான்முகனால் படைக்கப்பட்ட பிறவிப் பிணிப்பினின்று பிரிந்தேன். சிவகதி அடையும் நெறியை நான் தெரிந்து கொண்டேன். என் பழைய வினைகளை மனமான வாளால் அரிந்தேன். என் பரு நுண் காரண உடலான புரங்களைக் கெடுத்து என் குறிக்கோளை நோக்கி முன்னேறுகின்றேன்.

2962. இவ்வுலக இயக்கத்துக்குப் பேரொளிப் பிழம்பான ஒரு தெய்வம் உண்டு என்பதை அறிந்தீர். அஃது உலகத்தை உயிரைப் போன்று இயக்குதலையும் அறிந்தீர். இனி நமசிவய என்ற சிவக்கனி உயிர் கூட்டத்துக்கு நன்மை அளிப்பது என்பதையும் அறிந்தீர். அதனால் இந்தச் சுவையுள்ள கனியை உண்ட எனக்கு அதன் இனிமை நன்றாக விளங்கியது.

2963. ஒளியான சந்திரனையும் உமையாகிய குண்டலினியையும் அணிந்த சிவபெருமான் என்னிடம் வந்து ஆட்கொண்ட பேரொளிப் பிழம்பானவான். அங்ஙனம் முடிவும் முதலும் இல்லாத அரிய உண்மைப் பொருள என் உள்ளத்தில் பொருந்தி எனது மயக்கத்தைப் போக்கியருளினான்.

2964. பழமையான எங்கள் சிவன் திருமாலையும் நான்முகனையும் படைத்தான். அவர்களுடனே விளங்கியுள்ளான். இந்த வுண்மையை ஆராய்ந்து அறிபவர் எவரும் இல்லை. ஆனால் நான்முகன் திருமால் ஆகியவரின் செய்கையான உடல் அறத்தைக் கடந்து மேற் சென்று எண்ண்ம இல்லாத நிலையை அடைந்தால் பிரணவ வடிவமான சிவன் சீவர்களை ஆசனமாகக் கொண்டு திகழ்வான்.

2965. அம்மையும் அப்பனும் ஆக உள்ள சிவபெருமான் என்னிடம் அன்பு காட்டிப் பாதுகாக்கின்றான் அவ்வாறு அவன் செய்யாவிடில் என்னைப் பெற்ற தாயும் தந்தையும் என்னை அறிந்து எவ்வாறு பாதுகாக்க முடியும். எனவே தாய் தந்தையருடன் நானும் உடனாக இருந்து சத்தி சிவத்திடம் அன்பு கொண்டு வணங்கி நின்றேன்.

2966. சிவச் சேர்க்கையில் இருக்கும் என்னிடம் புவியைத் தன்னுள் கொண்ட கடலும் புவியைவிட உயர்ந்து நிற்கும் மலையின் உச்சியும் வான் மண்டலத் தலைவர்களான நான்முகன் திருமால் முதலியவருள் ஆதி சத்தியும் எட்டுத் திக்கில் உள்ளவரும் நான் பணிக்கும் பணியைக் கேட்டு நின்றனர். நான் இப்போது அவர் எல்லாரையும் கடந்து மேலானவனாய் விளங்குகின்றேன்.

2967. சிவத்துடன் பொருந்திய சீவர்களே எங்கும் நிறைந்த திசையுடன் தேவர் கூட்டமாயும் இருப்பர். அவ்வாறுள்ள அவர்களே மேருமலையாயும் எல்லாவற்றுக்கும் மேலே உள்ளதாயும் விளங்குவர். அவர்களே சீவ நிலையில் உடலாகவும் உயிராகவும் தத்துவமாகவும் விளங்குவர். சிவமே வடிவம் யாவற்றையும் கடந்து தலைவனாகவும் உள்ளது.

2968. உடல் பற்று நீங்கி வான் மயமானவன் என்ற உணர்வு வந்த போது இயமன் வரின் நான் ஞான வாளைக் கொண்டு அவனை வெல்வேன். சிவம் வருவானாயின் நான் எங்கும் நிறைந்த பொருளாக நிற்பது திண்ணம். பிறவியைத் தரும் பழைய வினைகளை முன்னமே அறுத்துவிட்டேன். தவத்தால் அடையப் பெறும் சிந்தைக்கு அஞ்ஞானமான இருளா வந்து எதிர் நிற்க முடியும்.

2969. எண்ணம் சிவமாய் ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களையும் வென்றவர் தூய சிவத்தின் ஆற்றலைப் பெற்று விளங்குவர். அவர்களைத் தளைப்படுத்தும் மலத்தில் கட்டுண்ணாது திகழ்வர். அந்த ஞானியர் சத்தம் எல்லாம் நுண்மை வாக்கு என்று உணர்ந்திருப்பவராதலால் வைகரி வாக்கால் செவி ஓசையால் வாதமும் பூசலும் பிதற்றலையும் செய்யும்.

2970. நினைத்தலும் மறப்பும் இல்லாது இடைவிடாமல் எண்ணியிருப்பவரது மனத்தில் வினை கூட்டங்களை ஒழிக்கும் சிவன் விளங்குவான். ஆனால் வினைகளைக் கடியும் சிவபொருமானைக் குறித்து விட்டு விட்டு எண்ணினால் அவன் நம்மைவிட்டு அகன்றவன் ஆவான்.

2971.. எங்கும் நீக்கம் இல்லாமல் நிறைந்த தலைவனைச் சிவபெருமானே என்று நான் அழைத்து வழிபட தவத்தில் விளங்கும் பொருமானான அவனும் இங்கு இருக்கின்றேன் என்று கூறியபடி என்னிடம் வந்து பொருந்தினான். பற்றுக்களைக் கெடுக்கும் தலைவனாயும் பின்பு அவற்றை நீக்குபவனாயும் உள்ள நித்தியப் பொருளான தலைவனை வணங்கி என் பிறவியைக் கடந்து நின்றேன்.

2972. மேன்மையுடைய ஆதியான தலைவனை நான் வணங்கி நின்றேன். அவனே பரம் பொருள் என்று துணிந்து நின்றேன். இனி அவனையன்றி மேலான தெய்வம் ஒன்று உண்டு என நான் நினைக்க மாட்டேன். என் உடம்பில் இடம் கொண்ட ஆதியான சிவனை நான் பொருந்தி நின்றேன். என் சிவபோகத்தை விட்டு அவனுடன் பொருந்தி அடங்கி நின்றபோது அப்பொருமானின் அகண்ட பரப்பை அறிந்தேன்.

2973. என் உள்ளத்தில் சிவன் உள்ளான் என்பதை உணர்ந்து அவனுடைய திருவடிகளைப் பொருந்தி முன்னிட்டு விளங்கும்படி பிறவியும் அதற்குரிய காரணங்களும் கெடும். தனக்கு என ஒரு மனம் இல்லாதவன். நான்முகன் எழுதிய எழுத்தை கெடுத்து நான் தத்துவங்களோடு போராடும் நிலையை எனக்குக் கொடுத்தருளினான்.

2974. சிவபெருமான் என் உள்ளத்தில் பொருந்தி என் மாறுபாட்டை போக்கினான். அப்பெருமான் நோயற்ற உடலைத் தந்து நரை திரை இல்லாமல் கால எல்லையைக் கடந்து வாழுமாறு செய்தனன். அதனால் என் மாறுபாடு நீங்கப் பெற்று என்னுடன் தொடர்ந்து வந்த துன்பத்தைக் கெடுத்தேன். அப்போது சிவம் பிரகாசத்துடன் விளங்கியது.

2975. சிவபெருமான் தன் ஒளிமயமான தேவர் கூட்டத்துடன் என் உள்ளத்தில் நிலை பெற்றான். நிலைப் பெறப் பிறவிக்குக் காரணமான பாசமாகிய இருளைப் போக்கி என்னை ஆட்கொண்ட முதல்வன் ஆவான். அவன் என் உள்ளத்தில் எழுந்தருளி ஆட்கொண்ட ,முறை இதுவாகும்.

2976. கருமபைப்போன்ற காமமும் தேனைப் போன்ற அதன் சுவையும் பொருந்தியுள்ள உடம்பில் அரும்புகின்ற மணமாகிய சிவானந்தத்தை நடி உடல் இயல்பைக் கடந்து உணர்வு மேலே சென்ற பின்பு உயிர்களுக்குக் கரும்பு போன்ற காமமும் திகட்டித் தேன் போன்ற அதன் சுவையும் புளித்துப் போகும்படி இன்பம் தருபாவனாய் உள்ளான்.

2977. முன்னைய பிறவிகளில் சரியை கிரியை முதலிய நெறிகளில் சார்ந்து அந்த நெறிகளினின்றும் மீட்டு என்னிடம் வள்ளலான சிவம் கருணை காட்டி அன்பு செய்த திறத்தைப் பாடி நான் செய்பவை எல்லாம் சிவன் என்னிடமிருந்து செய்விக்கின்றான் என்று உணர்வதால் பின் உண்டாகும் வினையில்லாது பிறவியை ஒழித்தேன்.

2978. உலக நிலையிலிருந்து மீண்டவரின் மூலாதாரத்தில் உள்ள தீ பொங்கி எழ சகசிரதளம் என்ற விளாக்கினில் உணர்வாகிய நெய் சேர்ந்ததும் சாந்தி விருந்தி பெருகி உலகங்களுக்கெல்லாம் தலைவியான சத்தி வந்து பொருந்தினாள். உயிர் அறிவு கெட்டுச் சிவ அனுபவம் கிட்டியது.

2979. ஆறு ஆதாரங்கள் வழியாய் உயிர்ச் சத்தி பாய்ந்து நிரம்பும் சகசிரதளம் என்னும் குளம் ஒன்று உள்ளது. அங்ஙனம் கீழ் இருக்கும் சத்திகளை மேல் ஏற்றும் சிவகதியின் தன்மை மிக நுட்பமானது. சிவகதியின் முடிவில் கதிரவன், திங்கள் என்பனவற்றையே தனங்களாக உடைய சத்தியுடன் உடலைக் க்டந்து மேலான சிவம் விளங்கும்.

2980. இறைவன் அருளிய உதவியை எண்ணி அன்பு கொண்டு அழுவேன். அவன் புகழ் மயமான தோத்திரத்தைப் பாடுவேன். என் எலும்பு உருக இரவு பகல் எனப் பாராமல் எப்போதும் வழிபடுவேன். எனது பொன்மணி போன்ற இறைவனும் ஈசனுமாகிய பொருமானை என்னிடம் பொருந்துமாறு ஞான சாதனை செய்து எனக்கு உரியவன் ஆக்கிக் கொள்வேன்.

2981. உள்மனமானது உலக முகமாக விரிந்து துன்பத்தை அடைந்து அடங்குவதே உண்மையான தவமாகும். அங்ஙனம் மனம் விரிந்து அடங்கப் பெற்றவர்க்குப் பிராணன் அடங்கும். கும்பகம் பொருந்தும். நிலைபெற்ற உயிரிடமாக பிரிந்து உள்ளம் ஒடுங்கி நின்றது. அப்போது பேச்சில்லாத பேரானந்த முத்தி உண்டாகும்.

#####

Read 1679 times
Login to post comments