போகர் சித்தர்
சீன தேசத்தில் துணிகள் வெளுத்து துவைக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்தவர் போகர். இவர் புலிப்பாணியின் குரு. போகர் திருமூலர் காலத்தைச் சேர்ந்தவர். பழனி தண்டாயுத பாணி சிலையை புலிப்பாணியின் உதவியுடன் நவபாஷானக் கட்டில் தயாரித்தார்.
இறந்தவர்களைப் பிறக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியை பெற மேரு மலையின் அருகிலிருக்கும் நவநாத சித்தர்களின் சமாதியை அடைந்தார். ஒன்பதிரின் தரிசனம் போகருக்கு கிட்டியது. அவர்களிடம் சஞ்சீவினி மந்திர வித்தையைக் கற்றுத்தர வேண்டினார். தகுதியுள்ள வர்களுக்கு காயகல்ப முறையைச் சொல்லிக்கொடு. அவர்களை நீண்டகாலம் வாழவை என போகருக்கு அதுவரை தெரியாத காயகல்ப முறைகளை சொல்லித் தந்தனர்.
ஒருநாள் கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்தார். ஒரு புற்றிலிருந்து ஒளிக்கற்றை வருவதைப் பார்த்து அருகில் சென்றபோது உள்ளே ஒருவர் தியானம் செய்வதை அறிந்து வெளியே அமர்ந்து இவரும் தியானத்தில் இருந்தார். இவர் தியானத்தால் அவரின்தியானம் கலைந்தது. புற்றிலிருந்து வெளியே வந்தர் போகா எதிரிலிருக்கும் மரத்தின் பழத்தை உண்டால் வாழ்நாள் முழுவதும் பசி எடுக்காது. நரை திரை மூப்பு வராது. தவம் செய்ய துணை செய்யும். என்று புலித்தோல் ஆசனம் ஒன்றைக் கொடுத்து இது உனக்குத் தவம் செய்ய பயன்படும் என்றார். அப்போது ஒர் பதுமை தோன்ற மேல்கொண்டு உனக்குத் தேவையானவைகளை இப்பதுமை சொல்லும் எனக் கூறிமறைந்தார். பழத்தைச் சாப்பிட்டார். பதுமை மூலிகை ரகசியங்கள், உயிரின் தோற்றம், அது உடல் எடுக்கும் விதம், அந்த உடலில் அது படும் துன்பம், ஆகியவைகளை தெளிவாக சொல்லக்கேட்ட போகர் ஆச்சரியத்தில் இருக்கும்போது அது மறைந்தது.
பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்தபோது உணவு சமைத்து உண்டபின் நீர் வேண்டி அருகில் உள்ள வீட்டிற்குச் சென்றார். ஒர் வீட்டுத் திண்ணையில் கூட்டமாக அந்தணர்கள் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் தாகத்திற்கு நீர் கேட்டார். யார் நீ, தூரப் போ, அருகில் வந்தால் துர் நாற்றம் வீசுகிறது என்றார்கள். போகர் அவர்களின் அறியாமையைக் கண்டார். அந்தப் பக்கம் வந்த பூனை ஒன்றை அழைத்து அதன் காதில் வேதத்தை ஓதினார். பூனை வேதம் ஓதியது. அதைகண்ட அந்தணர்கள் தங்கள் அறியாமையால் செய்த பிழையை மன்னிக்க வேண்டினர். அவர்கள் வறுமை நீங்க வழி கேட்டனர். போகர் அவர்கள் வீட்டிலிருந்த இரும்பை எல்லாம் ஆதிரசத்தால் தங்கமாக்கி கொடுத்தார்.
தாம் தயாரித்த இரச குளிகைகள்போல் நிறைய தயாரித்து தம் சீடர்களுக்கு வழங்க வேண்டுமென விரும்பினார். ரோமாபுரி சென்று தூய்மையான ரசம் கொண்டு வர நினைத்து குளிகை ஒன்றினை வாயில் போட்டுக்கொண்டு ரோமாபுரியில் தோன்றி அங்கு இருந்த இரசக் கிணற்றை தேடிப் பிடித்து தம்மிடம் இருந்த குடுவையில் நிரப்பிக் கொண்டார். விண்மார்க்கமாக பொதிகைமலை அடைந்தார்.
காக்கையின் கழுத்தில் ஓலை ஒன்றை கருவூராருக்கு அனுப்பி தஞ்சை பிரகதீசுவரர் ஆலய லிங்க பிரதிஷ்டை செய்ய பணித்தார். தட்சிணாமூர்த்தி உமைக்கு அருளிய ஞான விளக்கம் ஏழு லட்சத்தையும் ஏழு காண்டமாக்கி தமது மாணாக்கர்களுக்கு உபதேசம் செய்தார் போகர், மற்ற சித்தர்கள் இறைவன் உபதேசத்தை வெளியில் சொல்வது குற்றம் அதை அவர் உடனே நிறுத்த வேண்டும் என தட்சிணாமூர்த்தியுடம் சொன்னார்கள். தட்சிணாமூர்த்தி போகரை அழைத்து விசாரித்தார்.
போகரே, நீர் பூனைக்கு நான்கு வேதங்களையும் உபதேசித்து ஓதச் செய்துள்ளீர், சிங்கத்திற்கு ஞானம் கொடுத்து அரசனாக்கினீர், மேறுமலைக்குச் சென்று தாதுக்களை தங்கமாக மாற்றினீர், ரோமாபுரி சென்று ஆதி ரசம் கொண்டு வந்தீர். உமாதேவிகு கூறிய தீட்சை விதி, யோக மார்க்கம் எல்லாவற்றையும் ஏழு காண்டமாக உருவாக்கியுள்ளீர். நீர் செய்த அந்த நூலைச் சொல்வீராக எனக் கேட்டு போகரின் நூலாழத்தையும் பொருள் சிறப்பையும் உணர்ந்து மகிழ்ந்தார் போற்றினார்.
பழனியில் கடும் தவம் செய்து முருகப் பெருமானைக் கண்டார். அவரிடமிருந்து அவரை மூலவராக வடிவமைத்து விக்கிரமாகச் செய்து, அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும், காரிய சித்தி உபாயத்தையும் கேட்டு அறிந்தார். போகர் கனவில் முருகப் பெருமான் சொன்னபடி நவபாஷாணத்தில் சிலை செய்து பிரதிஷ்டை செய்தார். சிலையில் ஊறிவந்த பஞ்சாமிர்தத்தையே உணவாகக் கொண்டார். அது போகருக்கு உள்ளொளியை பெருக்கியது.
போகர் காண்டம் 12000, சப்தகாண்டம் 7000, நிகண்டு 1700, வைத்தியம் 1000, சரக்கு வைப்பு 800, ஜெனன சாகரம் 550, கற்பம் 360, உபதேசம் 150, இரணவிகடம் 100, ஞானசாராம்சம் 100, கற்ப சூத்திரம் 54, வைத்திய சூத்திரம் 77, மூப்பு சூத்திரம் 51, ஞான சூத்திரம் 37, அட்டாங்க யோகம் 24, பூஜாவிதி 20 ஆகிய நூல்கள் எழுதியுள்ளார். பழனியில் சமாதியடைந்தார். போகர் பூசித்த புவனேஸ்வரியம்மன் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் உள்ளது.
போகருக்கு புலிபாணி சித்தர், காக புசுண்டர் உள்பட 63 சீடர்கள் இருந்தனர்.
போகர் சித்தர் தியானப்பூசைக்கு
“சிவிகை ஏந்தி, சிரம் தாழ்த்தும் சித்தர் பெருமக்களுக்கு
மூலிகை மேனியாய் பேரருள் புரியும் போகர் பெருமானே
சிவபாலனுக்கு ஜீவன் தந்த சித்த ஒளியே
நவபாஷாணத்து நாயகனே உங்கள் நல்லருள் காக்க காக்க.”
தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் போகர் திரு உருவப் படத்தை வைத்து தாமரை அல்லது வாழைத்தண்டு திரிபோட்டு குத்து விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து ஜாதிப்பூ, சாமந்திப்பூ, சம்பங்கிப்பூ, கதிர்பச்சை மற்றும் செவ்வரளி ஆகிய மலர்களால் அர்ச்சனைசெய்து கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.
ஆம், ஊம் பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி
உலகத்தைக் காப்பவரே போற்றி
கிரிவலத்தில் நம்பிக்கை உடையவரே போற்றி
சித்த வைத்தியத்தின் தலைவரே போற்றி
சூட்சுமமாக சஞ்சரிப்பவரே போற்றி
நாக தேவைகளால் பூசிக்கப்படுபவரே போற்றி
நவபாஷாணம் அறிந்தவரே போற்றி
பசும்பால் பிரியரே போற்றி
பிரணவ ஸ்வரூபமாக இருப்பவரே போற்றி
மகா முனிவர்களால் பூசிக்கப்படுபவரே போற்றி
முருகப்பெருமானை தரிசித்தவரே போற்றி
வனத்தில் சஞ்சாரம் செய்பவரே போற்றி
நிவேதனமாக பால், பழம் வைத்து இவற்றுடன் சிவப்பு வண்ண வஸ்திரம் வைத்து செவ்வாய்க்கிழமை வழிபடின் சிறப்பு,
தியானபூசைப்பலன்கள்
செவ்வாய் கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் ஜாதக செவ்வாய் தோஷங்கள் விலகி நன்மை பயக்கும். நிலத்தகராறு, சொத்து தகராறு, வழக்குகள் தீரும். சொந்த மனை வீடு கிட்டும். வியாபாரிகளுக்கு தடை நீங்கி வெற்றி கிட்டும். திருமணத்தடை நீங்கி திருமணம் நடக்கும். இரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும். அரசியல் வெற்றி கிடைக்கும்.
“ஓம் ஆம் ஓம் ஸ்ரீ மகாபோகர் சித்தர் சுவாமியே போற்றி”
******
சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்
அகத்தியர் / அகப்பேய்சித்தர் / இடைக்காட்டுச்சித்தர் / உரோமரிஷி / கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் / குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்