தேரையர் சித்தர்
ஔவையார் ஒரு ஊமை பிராமணனை அகத்தியரிடம் அழைத்துவர அகத்தியர் அச்சிறுவனை தன்னுடைய மாணாக்கனாக ஏற்றுக்கொண்டார். பாண்டிய மன்னன் கூன் பண்டியனின் முதுகை தாம் சரி செய்வதாகக் கூறி தன் சீடர்களிடம் சில மூலிகைகளைக் கொண்டுவரச் சொல்லி அவற்றை இடித்து சாறு பிழிந்து ஓர் பாத்திரத்தில் உற்றி கொதிக்க வைத்தார். அப்போது அரண்மனையிலிருந்து அழைப்பு வரவே ஊமைச் சிறுவனிடம் அடுப்பைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிச் சென்றார்.
கொதிக்கும் மூலிகைச் சாற்றின் ஆவிபட்டு ஆசிரமத்தின் மேல் கூரையிலிருந்த ஓர் வளைந்த மூங்கில் நிமிர்ந்ததைக் கண்ட சிறுவன் மூலிகைச் சாற்றை அடுப்பிலிருந்து இறக்க, அங்குவந்த அகத்தியரிடம் மூங்கில் நிமிர்ததைக் காட்டி தான் இறக்கி வைத்ததை சாடையில் கூற சிறுவனை பாராட்டினார் அகத்தியர். அந்த மூலிகைத் தைலத்தால் மன்னரின் முதுகு கூன் நிமிர்ந்தது.
காசி மன்னன் தலைவலியால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தபோது அகத்தியர் அங்கு வர அவரிடம் தன் வேதனையைக் கூறியவன் அதை நீக்க வேண்டினான். அகத்தியர் நீ தூங்கும்போது ஒரு தேரைக்குஞ்சு உன் மூக்கு வலியாக உள்ளே சென்று மூளைப்பகுதியை அடைந்ததுதான் காரணம். இருந்தாலும் கவலைப்படாதே அதை நான் சரிசெய்கிறேன் என்றார் அகத்தியர்.
மன்னனை மயக்க நிலையில் ஆழ்த்தி சிகிச்சை தொடங்கப்பட்டது. சில நொடிகளில் மன்னனின் கபாலம் திறக்கப்பட்டது. அங்கு தேரை இருந்தது. அதை எப்படி எடுப்பது என்று நினைத்தபோது சிறுவன் தண்ணீரை தேரையின் கண்ணில் படுமாறு வைக்க அது குதித்தோடியது. அகத்தியர் சந்தானகரணி எனும் மூலிகையினால் மன்னனின் மண்டை ஓட்டை மீண்டும் பழையபடி மூடினார். சிறுவனை கட்டித்தழுவி பாராட்டினார். இந்த நிகழ்வுக்குப்பின் சிறுவன் தேரையர் என்றழைக்கப்பட்டார்.
முன்பிறவியில் இராமதேவராக இருந்து தேரையர் ஆன சீடருக்கு தனக்குத் தெரிந்த சித்திகளையெல்லாம் போதித்தார். அவருடைய ஊமைத் தன்மையைப் போக்கினார். அப்போது தொல்காப்பியம் என்ற நூலை எழுதி தொல்காப்பியர் ஆனார். ஒருமுறை சித்தர் ஒருவருக்கு வயிற்றுவலி ஏற்பட அகத்தியர் மருந்து கொடுத்தார், சரியாகவில்லை. தேரையரை அழைத்து அவரைப்போய்ப் பார்த்து வைத்தியம் செய்யச் சொன்னார். தேரையர் சென்று பார்த்து ஒரு கடுக்காய் குச்சியை எடுத்து வாய் வழியாக உள்ளே செலுத்தி அதன் துளைவழி மருந்தை செலுத்தி வயிற்றுவலியை சரி செய்தார். அகத்தியர் கொடுத்த மருந்து வேலை செய்யாததற்கு காரணம் சித்தர் வாயின் பற்களில் உள்ள விஷத்தன்மையே என்பதை அறிந்து தேரையர் மருந்து கொடுத்தார் என்பதை அகத்தியர் உணர்ந்தார். தேரையரின் திறமையை வெளி உலகுக்குத் தெரியப்படுத்த அவரை அழைத்து விருப்பமான இடங்களுக்குச் சென்று மக்களுக்கு நன்மை செய்ய பணித்தார்.
அணமயம் என்ற காட்டுப்பகுதியில் தவம் செய்துவரும்போது அங்குள்ள அடியவர்களின் பிணியை நீக்கினார். அகத்தியருக்கு கண்பார்வை குறைந்து கொண்டு வந்தது. சீடர்களுக்கு தேரையரின் நினைவு வர அகத்தியரிடம் அனுமதி வாங்கிச் சென்றனர். அகத்தியர் புளியமரத்தடி நிழலில் உறங்கிச் செல்க என்றார். வெகு நாட்களுக்குப்பின் அணமயம் காட்டை அடைந்த சீடர்கள் தேரையரை சந்தித்தனர். விபரம் அறிந்தார். சீடர்கள் இரத்த வாந்தி எடுக்க தேரையர் அவர்களை வேப்பமரத்தடியில் தூங்கி செல்லுமாறும் தான் இரண்டு நாளில் வருவதாகவும் சொன்னார்.
திரும்பவந்த சீடர்கள் உடல் நலத்துடன் இருப்பதை அறிந்த அகத்தியர் இது தேரையரின் வைத்தியம் என்பதை உணர்ந்தார். தேரையர் வந்தார். அகத்தியரின் கண்ணை பரிசோதனை செய்து வைத்தியம் பார்த்து சரி செய்தார். பார்வை தெளிவடைந்த அகத்தியர் தேரையா நீ தாடி மீசையுடனிருந்தால் எனக்கு அடையாளம் தெரியாமல் போய்விடுமா என்றவரை வீழ்ந்து வணங்கினார்.
ஒருநாள் அகத்தியர் தேரையரிடம் ‘கண்வெடிச்சான் மூலிகை’ வேண்டும் என்றார். அந்த மூலிகையைப் பறித்ததும் அதிலிருந்து கிளம்பும் புகையால் பறிந்தவர் கண் பார்வை போய்விடும். ஆனால் தேரையர் தயங்காமல் அதைக்கொண்டு வருகிறேன் என்று கிளம்பினார். காட்டில் அந்த மூலிகையைக் கண்டார். அதைப் பறிக்காமல் அதன் அருகில் அமர்ந்து தேவியைத் தியானம் செய்ய தேவி தோன்றி, தேரையா இந்தா மூலிகை என்றார். அகத்தியரிடம் மூலிகையைத் தர அவர் மிக மகிழ்ந்து தேரையா அனைத்து சோதனைகளிலும் நீ தேறினாய். நீ அறிந்த மூலிகைகள் பற்றி நூல் எழுது எனச் சொன்னார்.
தேரையர் பதார்த்த குணசிந்தாமணி, நீர்க்குறிநூல், நோய்க்குறிநூல், தைல வர்க்க சுருக்கம், வைத்தியமகா வெண்பா, மணிவெண்பா, மருந்துப் பதம், குலைபாடம் ஆகிய நூல்களை எழுதினார். நீண்ட நாள் மருத்துவ சேவையில் ஈடுபட்டு தோரணமலையில் தவம் செய்து ஜீவசமாதி அடைந்தார்.
தேரையர் சித்தர் தியானப்பூசைக்கு
“மாய மயக்கம் நீக்கி காய
கல்பம் தேடி மீலிகை கொணர்ந்து
முதுகுக்கூன் நிமிர்த்திய அகத்தியர்
சீடரே உன்பாதம் சரணம்.”
தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் தேரையர் திரு உருவப் படத்தை வைத்து தாமரை அல்லது வாழைத்தண்டு திரிபோட்டு ஐந்துமுக விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து மூலிகைகளால் அர்ச்சனைசெய்து கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.
அகத்தியர் மெச்சிய சீடரே போற்றி
குறிப்பறிந்து குறை தீர்க்கும் குணசீலரே போற்றி
சஞ்சலங்கள் தீர்க்கும் சாந்த சொரூபவரே போற்றி
சகல பாபங்களைப் போக்குபவறே போற்றி
சித்த சுத்தி உடையவரே போற்றி
சிவனை பூஜிப்பவரே போற்றி
துக்கத்தைப் போக்குபவரே போற்றி
கண் ஒளிதந்த கருணையே போற்றி
வெள்ளை வஸ்திரம் தரிப்பவரே போற்றி
நோய் தீர்க்கும் மருந்தே போற்றி
தேரையை அகற்றிய தேரையரையே போற்றி
ஞானம் அளித்து துக்கம் போக்கும் சித்தியே போற்றி
நிவேதனமாக மிளகுபொங்கல், பால்பாயாசம், தேங்காய்சாதம் இவற்றுடன் வெள்ளை அல்லது ரோஜாவண்ண வஸ்திரம் வைத்து ஞாயிற்றுக்கிழமை வழிபடின் சிறப்பு,
தியானபூசைப்பலன்கள்
சூரிய கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் ஜாதக சூரிய தோஷங்கள் விலகி நன்மை பயக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்படையும். பெண்களின் வயிற்றுவலி, இடுப்புவலி குணமடையும். தீராத தலைவலி குணமாகும். உடலில் ஏற்படும் அலர்ஜி எல்லாம் சரியாகும். வீண்பழி அவமரியாதை நீங்கு புகழ் தோன்றும். வக்கு பலிதம் ஏற்படும், ராசியோகம் உண்டாகும். சரியான முடிவெடுக்கும் ஆற்றல் ஏற்படும்.
“ஓம் ஸ்ரீ தேரையர் சித்தர் சுவாமியே போற்றி”
******
சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்
அகத்தியர் / அகப்பேய்சித்தர் / இடைக்காட்டுச்சித்தர் / உரோமரிஷி / கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் / குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்