அகத்திய சித்தர்
தாரகன் முதலிய அரக்கர்கள் உலகில் மக்களைத் துன்புறுத்த அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்னி ஆகியோர் பூமிக்கு வந்தத்தை அறிந்த அரக்கர்கள் கடலுக்கடியில் ஒழிந்து கொண்டார்கள். இந்திரன் யோசனைப்படி அக்னி வாயுவும் கூடி பூமியில் அகத்தியராய் அவதரித்தார் என்றும் மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியர் தோன்றியமையால் கும்பயோனி, குடமுனி என்றார் என இருவித கருத்துக்கள் உள்ளன. அகத்தியர் சமுத்திர நீர் முழுவதும் குடித்துவிட இந்திரன் அசுரர்களை அழிக்க அகத்தியர் கடல் நீரை கடலுக்குள் விடுவித்தார்.
நீரின்மேல் பன்னிரண்டு ஆண்டுகள் படுத்தபடியே தவமிருந்து அரிய சக்திகளைப் பெற்றார். சிவபெருமானின் திருமணத்தின்போது அனைவரும் ஒருங்கே கைலையில் திரண்டதனால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அதைச் சமப்படுத்த அகத்தியர் சிவபெருமானால் தென் திசைக்கு அனுப்பப்பட்டார். வழியில் மேருமலைக்குச் செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்தது. இராமபிரானுக்கு சிவயோகத்தை அருளினார். சுவேதன் என்பவன் பிணந்திண்ண பெற்றிருந்த சாபத்தை போக்கினார். தான் வந்தபோது கவனியாமல் யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார். தன் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டையடைந்து அரசுமகள் உலோபையை மணந்து தென்புலத்தார் கடனை அடைத்தார்.
தென்திசைக்கு வந்து முருகன் அருள்பெற்று “அகத்தியம்” என்ற இலக்கண நூலை எழுதினார். இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரனால் ஏற்பாடு செய்த நடன நிகழ்ச்சியில் நடனமாடிய ஊர்வசி இந்திரன் மகன் சயந்தினடம் ஏற்பட்ட காதலால் தன்னிலை மறக்க கோபம் கொண்ட அகத்தியர் சயத்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்க சபித்தார்.
வாதாபி, வில்வளவன் என்ற அரக்கர் வேதியர் உருவம் கொண்டு வழியில் செல்லும் வேதியர் முனிவர்களை விருந்துக்கழைத்து வாதாபி என்ற அரக்கனை கறியாக சமைத்து உண்ணவைத்து வாதாபியை திரும்ப அழைக்க அவன் பெற்றிருந்த சக்தியால் அவன் உணவு உண்டவரின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வந்து விடுவான். இதுபற்றி முனிவர்கள் அகத்தியரிடம் கூற அவர் வில்வளவன் இருக்குமிடம் சென்றார். மற்ற முனிவர்போல் இவருக்கும் வாதாபியை கறியாக சமைத்து உணவு கொடுக்க அதைச் சாப்பிட்ட அகத்தியர் வில்வளவன் வாதாபியைக் கூப்பிடும்போது ‘வாதாபே ஜீர்ணபவ’ எனக்கூற வாதாபியின் சக்தி மறைந்து அவனும் மறைந்தான். உண்மை அறிந்த வில்வளவன் மன்னிப்பு கேட்டான்.
சிவபூஜை செய்ய கமண்டலத்தில் வைத்திருந்த கங்கை நீரை விநாயகர் ‘காக உருவில்’ கவிழ்த்துவிட அந்த நீரே காவிரி ஆனது. இசையில் சிறந்த இராவணனை தம் இசைத் திறத்தால் வென்றார். காவிரிப் பூம்பட்டிணத்தில் இந்திரவிழாவை ஆரம்பித்துவைத்தார். புதுச்சேரி அருகிலுள்ள ‘உழவர் கரையில்’ ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக்கழகத்தில் தமிழ் போதித்தார். அந்த பகுதி அகஸ்தீஸ்வரம் என அழைக்கப்படுகிறது. அங்கு ஓர் சிவாலயம் எழுப்பப்பட்டு இறைவன் அகத்தீஸ்வரமுடையார் என அழைக்கப்படுகிறார்.
இறுதியில் அகத்தியர் எங்கு சமாதியடைந்தார் என்பது தெரியவில்லை.
அகத்தியர் வெண்பா, வைத்தியக் கொம்மி, வைத்திய ரத்னாகரம், வைத்தியக் கண்ணாடி, வைத்தியம் 1500, வைத்தியம் 4600, செந்தூரன் 300, மணி 4000, வைத்திய சிந்தாமணி, கர்ப்ப சூத்திரம், ஆயுள் வேத பாஷ்யம், வைத்திய நூல்கள் பெருந்திரட்டு, பஸ்மம் 200, நாடி சாஸ்திரம், பக்ஷணி, கரிசல் பஸ்யம் 200 ஆகிய மருத்துவ நூல்களையும், சிவசாலம், சக்தி சாலம், சண்முக சாலம், ஆறெழுத்தந்தாதி, காம வியாபகம், விதி நூண்மூவகை காண்டம், அகத்தியர் பூசாவிதி, அகத்தியர் சூத்திரம் 30 ஆகிய தத்துவ நூல்களையும் எழுதியுள்ளர். அகத்தியரின் சமரச நிலை ஞானம் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகளைப் பற்றியதாகும். அகத்தியம் என்ற ஐந்திலக்கணத்தில் 18 வகையான மனநோய்கள் பற்றியும் அதற்குரிய மருந்துகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
அகத்தியர் தியானப்பூசைக்கு
“ஐந்திலக்கணம்தந்த அகத்தியரே, சித்தவேட்கைகொண்ட சிவயோகியரே, கடலுண்ட காருண்யரே, கும்பமுனி குருவே சரணம் சரணம்.”
தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் அகத்தியர் திரு உருவப்படத்தை வைத்து இருமுக தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து மலர்களாலும் வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை ஆகிய பச்சிலைகளாலும் கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.
அகத்தியம் தந்த அருளே போற்றி
அசுரர்களை அழித்தவரே போற்றி
இசைஞான சோதியே போற்றி
இராமனுக்கு சிவயோகம் அருளிய போற்றி
இன்னல்கள் போக்கி இன்பம் தரும் பெருமானே போற்றி
உலோப முத்திரையின் பதியே போற்றி
காவிரி தந்த கருணையே போற்றி
கும்பத்திலுதித்த குறுமுனியே போற்றி
சித்த வைத்திய சிகரமே போற்றி
சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி
சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி
தென்திசை, வடதிசையை சமப்படுத்தியவரே போற்றி
தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி
விந்தியமலையின் அகந்தையைப் போக்கியவரே போற்றி போற்றி
நிவேதனமாக பஞ்சாமிர்தம், பழங்கள், சர்க்கரைப் பொங்கல், இளநீர் இவற்றுடன் பச்சை வஸ்திரம் அணிவித்து புதன் கிழமை வழிபடுவது சிறப்பு.
தியானபூசைப்பலன்கள்
புதன் கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் புதன் பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். இசை, கவிதையில் மேன்மை ஏற்படும். கல்வித்தடை நீங்கும். முன்வினை பாபங்கள் குறையும். பித்ரு சாபங்கள் நீங்கி ஆசி கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். சகலவிதமான நோய்கள் தீரும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பேரும் புகலும் தேடிவரும்.-குருஸ்ரீ பகோரா.
“ஓம் ஸ்ரீம் அகத்திய மாமுனியே போற்றி
******
சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்
அகத்தியர் / அகப்பேய்சித்தர் / இடைக்காட்டுச்சித்தர் / உரோமரிஷி / கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் / குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்