ஓம்நமசிவய!
கரிமுக விநாயகா போற்றி!
கருணை விநாயகா போற்றி!
கணேசா போற்றி!
கண்டா கணபதி போற்றி!
கங்காளர்!
சிவாலயம் ஒன்றில் எரிந்து கொண்டிருந்த திருவிளக்கின் சுடர் மங்குகையில் உமையிடம் சிவபெருமான் இந்த விளக்கின் திரியை தூண்டுவோர் மூவுலகங்களயும் ஆட்சி செய்வார் என்றார். அச்சமயம் அந்த விளக்கில் உள்ள நெய்யை எலி ஒன்று குடிக்க திரி தூண்டப்பெற்றது. உமை, நீங்கள் சொல்லிய வண்ணம் அந்த எலிக்கே அருள் புரிய வேண்டினார். அந்த எலியே மாவலி என்ற பெயரில் அசுர குலத்தில் தோன்றி மூவுலகம் முழுவதும் வசப்படுத்தி ஆட்சி செய்தது. அதனால் அசுரர் கை ஓங்கி தேவர்கள் இன்னலுற்று திருமாலிடம் முறையிட்டனர்.
காசியபரின் மனைவி திதி திருமாலின் பக்தை. அவள் தனக்கு திருமாலே மகனாக வரவேண்டும் என வேண்டினாள். மாவலி அசுர அரசன் ஆயினும் சிறந்த கொடையாளியாய் ஆட்சியை சிறப்புடன் நடத்தி வந்தான். மாவலியை சூழ்சியால்தான் வீழ்த்த முடியும் என்பதால் திருமால் வாமனனாக திதிக்கு மகனாகப் பிறந்தார்.
மாவலி அரசவைக்கு வந்த வாமனரை வரவேற்று, இரதம், யானை, குதிரை, பொன், வெள்ளி, நவரத்தினங்கள் எல்லாம் பரிசாக அளிக்க முன்வர வாமனர் அரசே எனக்கு அதெல்லாம் வேண்டாம் மூன்றடி மண்தான் வேண்டும் என்றார். சிறுவனாக இருந்து இவையெல்லாம் வேண்டாம் என்று சொன்னதும் அருகிலிருந்த அசுர குரு சுக்ராச்சாரியருக்கு வாமனரைப் பற்றி சந்தேகம் வந்து அரசரிடம் எச்சரிக்கை விடுக்க, மாலவனே என்பால் மறையவனாகி மூன்றடி யாசித்தானென்று அரும்புகழிருக்கும், அதனால் வரும் துன்பம் பெரிதன்று எனக்கூறி வாமனர் கேட்ட மூன்றடி மண் கொடுக்க சம்மதித்தான்.
அச்சுதன், உடன் திரிவிக்ரம உருக் கொண்டு மூன்று உலகங்களையும் ஈரடியால் அளந்து மீதி ஓர் அடியை எங்கே எனக்கேட்க தன் சிரசை காண்பித்த மாவலியை பாதாளத்தில் அழுத்தினார். அதன் பிறகும் ஆவேசம் அடங்காமல் உக்கிரம் குறையாத நிலையில் இருக்க தேவர்கள் சிவனிடம் வேண்டுகோள்விடுக்க, சிவன் தன் வஜ்ரதண்டத்தினால் வாமனரின் மார்பிலே அடித்து அவருடைய முதுகெழும்பை தண்டாக தன் கரத்திலே தாங்கினார்,
சிவன் நின்ற நிலையில் இடது கால் ஊன்றியவாறு வலதுகால் சற்று வளைந்தும் உருவம் நகர்வதுபோல் வெண்மையான தோற்றத்துடன் மேலே சிவப்பு நிற ஆடையணிந்து இடையில் புலித்தோலாடை அணிந்து சடைமுடியில் இடப்பாகத்தில் எருக்கம் பூவும், வலப்பாகத்தில் பிறைச்சந்திரனும் கொண்டு சிரித்த முகம், மகிழ்ச்சியான தோற்றம், முத்துப் போன்ற பற்களுடன் காதுகளில் மகர மீன் குண்டலங்கள் மார்பிலே பூணூலுடன் வலது கரத்தில் கடகக் குறிப்பும், இடது கரத்தில் கங்காள தண்டமும் தன்னைச் சுற்றி பூத கணங்களுடன் இருப்பார். உலகம் முழுவதும் வசப்படுத்தும் வைராக்கியத்தை அளிப்பார்
மாவலியை பாதாளத்தில் அழுத்தியும் ஆவேசம் குன்றாமல் இருந்த வாமனரை தன் தண்டத்தால் அடித்து அவர் முதுகெழும்பை தன் கையில் வைத்திருக்கும் திருக்கோலமே-கங்காளார். காட்சி: சுசீந்திரம், திருச்செங்காட்டாங்குடி, சிதம்பரம், திருநெல்வேலி- நெல்லையப்பர் ஆகிய கோவில் கோபுரங்களில் சுதைச் சிற்பமாக. குடந்தை நாகேசுவரசுவாமி கோவிலில்-பிரளய காலருத்ரர், விரிஞ்சபுரம் மார்க்கபந்தீசுவரர் கோவிலில் தனிச்சன்னதி.
#####