ஓம்நமசிவய!
சுந்திர விநாயகா போற்றி!
சுமுக விநாயகா போற்றி!
சுமங்கல விநாயகா போற்றி!
செல்வ விநாயகா போற்றி!
பிட்சாடனர்- பலிதிரி / பலிகொள் செல்வர்/ கபாலி!
தவத்தில் சிறந்த தாருகாவன முனிவர்கள் தவமே எல்லாவற்றிலும் சிறந்தது என்ற ஆணவத்தால் சிவத்தை மறந்தனர். அவரின் மனைவியர் கற்பில் சிறந்து விளங்கினாலும் கற்பே சிறந்தது என்று அவர்களும் சிவனை மறந்தனர். ஊழ்வினை காரணமாக இவ்வாறு மறந்த அவர்களின் கருத்தை மாற்ற இறைவன் திருவுளம் கொண்டு திருமாலை மோகினி உருவமெடுத்துவரச் செய்து பெருமான் அழகிற் சிறந்த ஆணுருக் கொண்டார். நிருவாண உருவுடன் சூலம், பிச்சைப் பாத்திரம், ஆகியவற்றுடன் மோகினி உடன்வர தாருகாவனம் அடைந்தார்.
மோகினியின் அழகைக் கண்ட தாருகாவன முனிவர்கள் மனவலிமை குன்றி அவள் பின் சென்றனர். சிவனின் நிருவாண வடிவம் கண்ட முனிவர்களின் மனைவியர் கற்பினை இழந்தனர். அவர்மீது ஆசைக்கொண்டு அவர்பின் சென்றனர்.
பிச்சை உகக்கும் பொம்மான் இடக்காலை ஊன்றி வலக்காலை வளைத்து நடந்து செல்லும் குறிப்பை உணர்த்தி நான்கு கைகளில் முன்வலது கையிலுள்ள அருகம் புல்லால் மானை ஈர்த்தும், பின் வலக்கை உடுக்கை ஏந்தி காதுவரை நீண்டும், பின் இடக்கையில் பாம்புடன் திரிசூலம் ஏந்தியும் முன் இடக்கையில் பிரம்ம கபாலமாகிய பிச்சைப் பாத்திரம் கொப்பூழ்வரை உயர்ந்திருக்க, ஆடையேதுமின்ரி இடையில் பாம்பை அரையாக அணிந்து விலங்குவார், தலையில் சடாபாரம், நெற்றியில் படமும் முக்கண்ணும் உடைய நீலகண்டராக காண்பார். வலக்காலில் வீரக்கழல், திருவடிகளில் பதுகையாக வேதங்கள், வலப்பக்கம் ஒரு மானும் இடப்பக்கம் ஒரு குறட்பூதமும் காணப்படும்.
சம்சாரப் பற்றினைப் போக்குபவர். உயிர்களின் உய்திக்கு தன்பால் பக்தி கொண்ட அடியவர்களின் வினைப் பயனாகிய தீ வினைகளை- பாதகங்களை உண்ணுஞ் சோறாகப் பெறுபவர் என்ற தத்துவக் கோலம். தருகாவனத்து முனிவர்கள் அவரின் பத்தினிகளின் செருக்கை அடக்க கொண்ட வடிவம் பிட்சாடனர்.
காட்சி: காஞ்சி, திருச்செங்காட்டங்குடி, திருவெண்காடு, குடந்தை,வழுவூர், பந்த நல்லூர் ஆகியத் தலங்கள்.
#####