ஓம்நமசிவய!
பிரசன்ன விநாயகா போற்றி!
பிரணவப் பொருளே போற்றி!
பிள்ளையாரே போற்றி!
பிறையெயிற்றோனே போற்றி
தட்சிணா மூர்த்தி-ஆலமர்செல்வர்/ தென்முகக் கடவுள்!
பிரம்மன் தன்னுடைய படைக்கும் தொழிலுக்கு உதவிசெய்ய சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகியோரை தோற்றுவித்தார். அவர்கள் பிரம்மனுக்கு உதவி செய்யாமல் சிவனை நோக்கி தவம் செய்தனர். மகிழ்ந்த சிவனிடம் தங்களுக்கு மெய்ப் பொருளை உபதேசித்து ஞானம் பெற அருள்புரியக் கேட்க சிவனார் ஞான குருவாக- தட்சிணாமூர்த்தியாக கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து குருவாகி அவர்கள் நால்வருக்கும் சொல்லாமல் சொல்லும் உபதேசம் உபதேசிக்கத் தொடங்கினார்.
சிவபெருமானின் யோக, போக, வேதத் திருவடிவங்களில் தென்முகக் கடவுள் யோக வடிவம். தட்சிணம் என்றால் தெற்கு, ஞானம், சாமர்த்தியம் எனப்படும். தெற்கு அழிவைக் குறிப்பது. வடக்கு அழியாத அமுத வாழ்வைக் குறிப்பது. ஆன்மா வடக்கு நோக்கி வழிபட ஏதுவாக இறைவன் தெற்கு நோக்கி அமர்ந்து அருள் புரிகின்றான். ஆனந்த வடிவமான ஆடல் வல்லானும் அமைதி வடிவான தென்முகக் கடவுளும் தெற்கு நோக்கியே அருள் புரிகின்றனர். நிழல் மரங்களில் ஆல் தலையானது. ஆலின் கீழ் இலிங்கம் நிறுவப்பட்டமையால் ஆலமர் கடவுள் / ஆலமர் செல்வர் என்றானார்.
தட்சினாமூர்த்தி ஆச்சாரியர்களுக்கெல்லாம் பரமாசாரியர். பொருளுக்கேற்ப கற்பிக்கும் முறை அமையும். மனதுக்கும் வாக்குக்கும் எட்டாத பரம் பொருளை மனதிற்கு கட்டுப்பட்ட வாக்கால் காட்ட முடியாது. அனுபூதி வடிவில் உள்ளத்திற்குச் சொல்லாமல் விளக்கம் தர இயலாது. எந்த செயலுமற்ற மௌனத்தைக் கடைபிடித்து ஆனந்தத்தை அனுபூதியாகத் தம் உணர்வினால் வெளிப்படுத்தி சலனமற்றுத் தம்மிடம் கலந்துள்ள சீடர்களின் உள்ளத்தில் அவ்வானந்தம் முழுவதும் பரவச் செய்து பேரின்ப நிலையை உணர்த்தும் பரம்பொருளின் வடிவமே தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தி வடிவம். அறியச் சக்தி பெற்றவர் மட்டுமே அறியுமாறு போதித்த வடிவம். சிவத்திடம் சக்தி அடங்கிய வடிவம். ஞானமே வடிவான அருட்சக்தி நிறைந்து விளங்கும் சச்சிதானந்த வடிவம் தட்சிணாமூர்த்தி வடிவம். பேரானந்தத்தை வெளிப்படுத்தாமல் உள்ளடக்கிக் கொள்ள திறமை வேண்டும். அந்த திறமை சாமர்த்தியம் மிக்கவர் தட்சிணா மூர்த்தி.
திருமேனி பளிங்கு போன்ற தூய்மையை உணர்த்தும் வெண்ணிறம். அறியாமையைக் குறிக்கும் முயலகனை மிதித்திருக்கும் வலது பாதம் அனைத்து தீமைகளையும் அடக்கி ஆளும் வலிமை. உயிர்களை உய்விக்க சிவஞானபோதமாகிய ஞானங்கள் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக் கொண்டு திகழும் சிவ ஞான போதமாகிய திருக்கரத்திலுள்ள நூல், 36 / 96 தத்துவங்களை உணர்த்த திருக்கரத்தில் உள்ள உருத்திராக்க மாலையினால் திருவைந்தெழுத்தை உருவேற்றி தியானைத்தலே ஞானம் பெறும் வழி, அனைத்து உயிர்களுக்கும் பேரின்பம் அளிக்கும் இடக்கையில் உள்ள ஆற்றல்மிக்க அமிர்த கலசம். ஞானத்தின் அடையாளமான சின் முத்திரை- பெருவிரலின் அடிப்பாகத்தைச் சுட்டு விரல் தொடவும் ஏனைய மூன்று விரல்களும் விலகி நிற்கும் ஞானத்தின் அடையாளம், தீய சக்திகளை அடக்கியாளும் பேராற்றல் உணர்த்தும் புலித்தோலின் மீது அமர்தல், ஞானமும் வீடும் எய்த விரும்புவோர் புலனடக்கம் உடையவராய் ஐம்பொறிகளைக் கட்டுப் படுத்துவதே துறவியின் சிறப்பு என்பதை உணர்த்தும் நெற்றிக்கண், மாயை மற்றும் அதன் காரியமாகிய உலகத்தை உணர்த்தும் ஆலமரமும் அதன் நிழலும், பக்தர்கள் வடக்கு நோக்கி தியானிக்க வேண்டுமென்பதற்காக தென்முகம், குண்டலினி சக்தியை குறிக்கும் பாம்பை அணிந்திருப்பது, தருமத்தை குறிக்கும் வெள்விடை, அனைத்து உயிர்களுக்கும் தந்தை என்ற பசுபதி நிலைபாட்டை விளக்க சூழ்ந்திருக்கும் விலங்கினங்கள்.
தட்சிணாமூர்த்தியை வியாக்கிண தட்சிணாமூர்த்தி, வீணாதர தட்சிணாமூர்த்தி, ஞான தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணா மூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி என பலவகையாக சிறப்பாகக் குறிப்பர். ஆலமரத்தடியில் புலித்தோல் அல்லது வெள்ளைத் தாமரையில் அமர்ந்து, வலது கால் கீழே தொங்கிய நிலை, இடது கால் மடிந்தவாறும் நான்கு கைகளில் முன்னுள்ள ஒரு கையில் உருத்திராக்க மாலை, மற்றொருகையில் தீ அல்லது பாம்பு, உடல் வளைவின்றி நிமிர்ந்த நிலை, சடை மகுடம், அதில் எருக்கம்பூ, பாம்பு, சிறுமணி, கபாலம், பிறைச்சந்திரன், கங்கை அணிய, இடக்காதில் அங்க பத்திரமும் வலக்காதில் குண்டலமும், கழுத்தில் உருத்திராக்க மாலையுடன், வெண்ணிற மேனி கொண்டவர். பார்வை பாதம் நோக்கி இருக்கும்.
தன்பால் அன்பும் உலகத்தின்பால் உவப்பும் உண்டாக்குவார். ஞான யோக நெறியை சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய சனகாதி முனிவர்களுக்கு கற்பிக்கும் பாங்குடன் உலக மக்களுக்கு கற்பித்தருளும் வடிவம்-தட்சிணா மூர்த்தி-ஆலமர்செல்வர்/ தென்முகக் கடவுள்!. காட்சி சிறப்பு: திரு இரும்பூளை (ஆலங்குடி), பட்டமங்கலம்(திருப்புத்தூர்), திருச்சி மலைக்கோட்டை, திருவொற்றியூர்( சென்னை), வள்ளலார் கோவில் (மயிலாடுதுறை), திருவானைகா, திருநாவலூர், திரு முண்டீசுவரம், இலம்பையங்கோட்டூர், தியாகசமுத்திரம், திருநெடுங்களம், திருவிடைசுழி, திருவையாறு, திருப்புனவாயில், சிதம்பரம், காஞ்சி கயிலாசநாதர், அறப்பளீசுவரர் (கொல்லிமலை)
#####