ஓம்நமசிவய!
மதிப்பவர் மனத்துறு மணியே போற்றி!
நெடும்பொறிற் சரணம் அடைந்தோம் போற்றி!
நெஞ்சத்து ஒடுங்கும் நீரினாய் போற்றி!
ஆரண நுண்பொருள் ஆனாய் போற்றி!
ஆட்கொண்டருளும் அரனே போற்றி!
பக்தர் சித்தத்தை அறியுமானாய் போற்றி!
புஜங்கலளித மூர்த்தி!
பயன்களை உயிர்களுக்கு கொடுத்து அருளும் இன்பக்காத்தல்- என்ற இறைவனது ஐந்து தொழில்களில் காத்தல் என்பது இருவகைப்படும். இன்பக்காத்தல், துன்பக்காத்தல் எனப்படும். உயிர்கள் செய்த தன்வினைக்கு ஏற்ப இன்பப் பயன்களைக் கொடுத்து அவ்வுயிர்களுக்கு அருளுதல் அறக்கருணையாகிய இன்பக்காத்தல் எனப்படும். இன்பக்காத்தல் தொழிலைக் குறிக்கும் நடனம் புஜங்கலளித நடனம் எனப்படும். ஆன்மாவைக் குறிக்கும் குறியீட்டுப் பொருளான பாம்பினைக் கையில் ஏந்தி அதனை மகிழ்வுறச்செய்யும் வகையில் ஆடும் நடனமே புஜங்கலளித நடனமாகும்.
காசிப முனிவரின் மனைவியருள். கத்துரு, வினதை இருவருக்கும் தங்களுள் யார் சிறந்த அழகி எனப் போட்டி வர இருவரும் கணவரிடம் சென்று கேட்க காசிபர் கத்ருவே அழகில் சிறந்தவள் எனக்கூறிவிட்டதால் இருவரின் நிபந்தனைப்படி தோற்ற வினதை கத்ருவிற்கு அடிமையாக இருத்தல் வேண்டும். வினதை தன் இளய மகன் கருடனிடம் இதுபற்றிக்கூற அவன் தன் பெரியம்மாவிடம் இந்த அடிமைத் தளையிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் எனக்கேட்க கத்துரு தேவலோகத்திலுள்ள அமிர்தம் கொண்டுவந்தால் விடுவிக்கின்றேன் எனக்கூறினாள்.
கருடன் தேவலோகத்தில் அமிர்த கலசத்தை காவல் புரிந்தவர்களுடன் போரிட்டு வென்று அமுத கலசத்தை கைப்பற்ற திருமால் அவனை எதிர்த்தார். இருவருக்கும் நடந்த சண்டையில் திருமாலால் கருடனை வெற்றி கொள்ள முடியவில்லை. அப்போது கருடனின் வீரத்தைப் பாராட்டிய திருமால் உனக்கு வேண்டும் வரம் கேள் எனக்கூற கருடன் சிரிப்புடன் நீ யார் எனக்கு வரம் தருவதற்கு நான் உனக்கு வரம் தருகின்றேன் கேள் என ஆணவத்துடன் கூற சரியான சந்தர்ப்பம் என்று திருமால், பாம்புகளுக்கு அமுது ஊட்டலாகாது. நீ எனக்கு வாகனமாக வேண்டும் என்று இரு வரம் கேட்க உண்மையைப் புரிந்த கருடன் அகந்தை அழிந்து பாம்புகளுக்கு எதிரியாகவும் திருமாலுக்கு வாகனமாகவும் மாறினான். அமுத கலசத்தை கொண்டுவந்து தன் தாயை விடுவித்து அமிர்தத்தை தர்ப்பைமேல் ஊற்றினான்.
திருமாலின் வாகனமான கருடனைக் கண்டு பாம்புகள் அஞ்சின. அவைகள் ஒரு லிங்கத்தை நிறுவி வழிபாடு செய்தன. காட்சி கொடுத்த சிவனிடம் தங்களிடம் அருள் பெற்றதாலும், திருமாலின் வாகனமானதாலும், மாற்றான் தாய் மகனானதாலும் கருடன் எங்களை கொல்வதால் அவனால் எங்களுக்கு இறவா வரம் அளிக்க வேண்டின. அவைகளுக்கு அருள் புரிந்து அவைகளைத் தனது மேனியில் ஆபரணங்களாக அணிந்துகொண்ட வடிவமே புஜங்கலளித மூர்த்தி. புஜங்கம்- பாம்பு, லளிதம்- அழகு செய்தல். நிகழ்வு நடந்த தலம்-திருப்புத்தூர்.
#####