ஓம்நமசிவய!
தெவிட்டாத ஞானத்தெளி அருள் போற்றி!
இன்புறு கருணையின் இனிதருள் போற்றி!
இருவினை தம்மை அறுப்பாய் போற்றி!
இருள் கடிந்தென்னை ஏந்துக போற்றி!
நலம் ஒரு நான்கும் தந்தருள் போற்றி!
மலம் ஒரு மூன்றின் மயக்கறு போற்றி!
சார்த்தூலஹர மூர்த்தி!
தவத்தில் சிறந்த தருகாவன முனிவர்கள் தவமே எல்லாவற்றிலும் சிறந்தது என்ற ஆணவத்தால் சிவத்தை மறந்தனர். அவரின் மனைவியர் கற்பில் சிறந்து விளங்கினாலும் கற்பே சிறந்தது என்று அவர்களும் சிவனை மறந்தனர். ஊழ்வினை காரணமாக இவ்வாறு மறந்த அவர்களின் கருத்தை மாற்ற இறைவன் திருவுளம் கொண்டு திருமாலை மோகினி உருவமெடுத்துவரச் செய்து பெருமான் அழகிற் சிறந்த ஆணுருக் கொண்டார். நிருவாண உருவுடன் சூலம், பிச்சைப் பாத்திரம், ஆகியவற்றுடன் மோகினி உடன்வர தாருகாவனம் அடைந்தார்.
மோகினியின் அழகைக் கண்ட தாருகாவன முனிவர்கள் மனவலிமை குன்றி அவள் பின் சென்றனர். சிவனின் நிருவாண வடிவம் கண்ட முனிவர்களின் மனைவியர் கற்பினை இழந்தனர். அவர்மீது ஆசைக்கொண்டு அவர்பின் சென்றனர். உண்மையறிந்த முனிவர்கள் அபிசார வேள்வி நடத்தி அதில் தோன்றிய புலி, மழு, மான் கன்று ஆகியவற்றை ஏவினர். புலியைக் கொன்று ஆடையாக அணிந்தார். புலி மாண்டு போனதைக் கண்ட முனிவர்கள் யானை, மான், பாம்புகள், விலங்குகள், பூதங்கள், மழு முதலியவற்றை ஏவ சிவன் விலங்குகளைக் கொன்றார், மழுவை படைக்கலமாக மாற்றினார், பூதங்களை சிவபூதகணங்களாக மாற்றினார், முயலகன் சிவனின் காலடியில் தள்ளப்பட இவற்றையெல்லாம் கண்ட முனிவர்கள் நிலை தடுமாற அவர்கள்பால் இரக்கம் கொண்டு அவர்களுக்கு ஞானத்தை அளித்து அவர்கள் உள்ளத்தில் உள்ள மாசினை அகற்றினார். மயக்கம் தெளிந்த முனிவர்கள் இறைவனை வணங்கினர்.
புலியைக் கொன்று அதன் தோலை உரித்து அணிந்த வடிவமே- சார்த்துலஹரமூர்த்தி
#####