ஓம்நமசிவய!
அருள்வழி காட்டி ஆட்கொள் போற்றி!
தத்துவ நிலையைத் தருவாய் போற்றி!
வித்தக விநாயக விரை கழல் போற்றி!
பால்நிலா மருப்புக் கரத்தானே போற்றி!
பாசாங்குசப் படை தாங்குவாய் போற்றி!
கரிசினேற் இரண்டு கரத்தனே போற்றி!
சரப மூர்த்தி- சிம்மக்ன மூர்த்தி / நரசிம்ம சம்ஹாரர்!
இரணயகசிபு என்ற அசுரன் சிவபிரானை நோக்கித் தவமிருந்து, சுரர்கள், நரர்கள், யட்சகர்கள், தேவர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் மற்றும் பஞ்ச பூதங்களாலும் பகலிலும், இரவிலும், வானத்திலும், பூமியிலும், வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் எவ்வித ஆயுதங்களாலும் மரணமடையாத வரம் வேண்டிப்பெற்றான்.
இப்படி வரம் பெற்றதனால் செருக்குற்று தன்னைத் தவிர யாரையும் தெய்வமாக வணங்கக் கூடாது என்று மக்களை துன்புறுத்தினான். மறுத்த தன் மகன் பிரகலாதனை பலவாறாக துன்புறுத்தலானான். அவற்றில் தோல்விகண்டதால் அவன் வணங்கும் கடவுளைத் தனக்கு காட்ட கேட்க பிரகலாதன் அங்கிருந்த தூண் ஒன்றைக் காட்டி தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றான். சினம் கொண்ட இரணியகசிபு கதையால் தூணைத்தட்ட அத்தூணிலிருந்து கூரிய நகங்களுடன் அழல் உமிழும் விழிகளுடன் மனித விலங்காய் நரசிம்மர் வெளிவந்தார்.
இரவும் பகலும் அல்லாத அந்திப் பொழுதில் வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் இல்லாமல் வீட்டு வாயிற்படியில் வானமும் பூமியும் அல்லாத மடிமீது இருத்தி மனிதர்களும் விலங்குகளும், பறவைகளும் அல்லாத மனித மிருகவடிவில் எந்த விதமான ஆயுதங்களின்றி தன் கூரிய நகங்களால் இரணியகசிபுவின் வயிற்றைக் கிழித்து அவைனைக் கொன்றார். அதன் பின்னரும் அந்த உக்கிரம் தனியாமல் இருக்க உயிர்களுக்கு துன்பமானது.
இதை நான்முகன் சிவபிரானுக்குச் சொல்ல அவர் பல்வேரு வழிகளை கடைப் பிடித்தும் நரசிம்மரின் ஆவேசம் அடங்காததால் பறவை, விலங்கு, மனிதன் ஆகிய மூன்றின் கலவையாக சர்வ வல்லமை பொருந்திய சரபப்பறவை உருவம் கொண்டு நரசிம்மரை அடக்கினார்.
திருமேனி பொன் நிறமுடைய பறவை, மேல் நோக்கிய இரு இறக்கைகள், சிவந்த இரு கண்கள், எட்டு கால்கள், விலங்கினுடைய வால், மனித உடல், சிம்மத்தின் தலை, மகுடத்துடன் பத்து தந்தங்களையும், மடியில் நரசிம்மத்தின் உடலைத் தாங்கி காண்போருக்கு அச்சம் விளைவிக்கும் தோற்றத்தில் காட்சி. ஸ்ரீசரபரின் மூன்று கண்கள் சூரியன், சந்திரன், அக்னி. நாக்கு பாதவலை, இறக்கை காளி மற்றும் துர்க்கை, நகங்கள் இந்திரன், வயிறு காலாக்கினி, தொடை காலன் மிருத்யு, இதயத்தில் பைரவரும், தலையில் கங்கை, தொடையில் நரசிம்மரை கிடத்தியவாறு காட்சி.
தீ, நில நடுக்கம், மண்மாரி, இடி, புயல், மின்னல், ஆகிய சீற்றங்கள் பேராபத்துக்கள் நீங்கவும், பரிகாரம் செய்ய முடியாத துன்பம், மருத்துவர்களால் குணப்படுத்த முடியா நோய் நீங்கவும், பைத்தியம், விஷபயம், பூத –பிரேத- பைசாச உபாதைகள் நீங்கவும் ஸ்ரீ சரபரை வழிபடுதல் சிறப்பு.
மாயையும் தீவினைகள் நீங்கச் செய்பவர். இரண்யகசிபை கொன்ற நரசிம்மரின் ஆவேசம் அடங்க சர்வ வல்லமை பொருந்திய சரபப்பறவை வடிவம்-சரப மூர்த்தி- சிம்மக்ன மூர்த்தி / நரசிம்ம சம்ஹாரர்!. காட்சி: துக்காச்சி (குடந்தை) தாராசுரம், திருபுவனம், மாடம்பாக்கம் (சென்னை), பூவிருந்தவல்லி- வைத்திய நாதசுவாமி. சோழிங்கநல்லூர், சிதம்பரம், கபாலீசுவரர் (சென்னை), திருவண்னாமலை, மதுரை, குமரன்குன்றம் (சென்னை) சேலையூர்- கந்தாஸ்ரமம். ஆகிய கோவில்கள்.
#####