Print this page
வெள்ளிக்கிழமை, 08 September 2017 19:22

திரிபாத திரிமூர்த்தி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

வளர் சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க!
வாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்தர
தேகம் மதோத்கடர்தாம் அமர்ந்து காக்க!
விளரற நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க!


திரிபாத திரிமூர்த்தி!

 

பேருழிக் காலம் தோன்றும்போது பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரும் ஆயுள் முடிந்து சிவனிடம் அடங்குவர். பலகோடி பிரமாக்கள், உருத்திரர், திருமால் ஆகியோர் தோற்றுவிக்கப்பட்டு அந்தந்த பணியிலிருப்பர் என்பது மூல தத்துவமாகும். இந்த மூவரும் பேரூழிக்காலத்தில் ஒடுங்குதல்கள் என்பது நித்தியம், நைமித்தியம், பிராகிருதம், ஆத்தியந்தகம் என நான்கு வகைப்படும்.

நித்தியம் என்பது உயிரினங்கள் அவர்களுக்கு குறிக்கப்பட்ட ஆயுளின் இறுதியில் பெருமானிடம் ஒடுங்குவதாகும். இது வெளிப்படையானது.

நைமித்தியம் என்பது பிரம்மாவின் பகல் கூடிய உலகம் சஞ்சலத்தால் மறைவது. இது பிரளயத்தின் முடிவில் சூரியன் நூறு தேவ வருடம் மட்டும் சுவர்க்க, மத்ய, பாதாள லோகம் அனைத்திலும் அழர்கதிர் பரப்பி, கடலால் சூழப்பட்ட பூமியும், அதைச் சூழ்ந்துள்ள பெரும் புறக்கடலும், வறண்டு பொரிந்து போகும்படி அக்கினி தேவனுடன் பொறிகளைச் சிந்திக் கொல்லும் தொழிலைச் செய்யும் யமனைப்போல் காலத்தோடு கலந்து பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், சனலோகம், மகாலோகம், தபோலோகம், சத்தியலோகம், அதலம், விதலம், சுதலம், நிதலம், தராதலம், இராசாதலம், மகாதலம், பாதாளலோகம் முடிவு வரை உள்ள அண்ட சராசரம் அனைத்தையும் எரிப்பார். பின்னர் நூறு வருடம் மேகக் கூட்டங்கள் குழுமி நீர் சொரிந்து மின்னைலை வெட்டி, இடி இடித்து சூரியனின் ஒளி முதலியவற்றை தம்மிடத்தில் ஒடுக்கி பெருமழை சொரியும். இத்தகைய நைமிக பிரளய காலத்தில் பிரமன் யோக நித்திரை செய்வார், இந்த பிரளயத்துடன் கூடிய கற்பத்தை வராக கற்பம் என்பர்.

பிராகிருதம் என்பது பிரம்ம தேவனது ஆயுள் காலம் முடிந்து உலகம் அனைத்தும் பிரகிருதியில் ஒடுங்குவது.
பரமாணு இரண்டு கொண்டது அணு.
அணு மூன்று கொண்டது திரிசரேணு
திரிசரேணு மூன்று கொண்டது துடி
துடி மூன்று கொண்டது வேதை
வேதை மூன்று கொண்டது இலவம்
இலவம் மூன்று கொண்டது நிமிடம்
நிமிடம் மூன்று கொண்டது கணம்
கணம் ஐந்து கொண்டது காட்டை
காட்டை பதினைந்து கொண்டது இலகு
இலகு பதினைந்து கொண்டது கன்னல் / கடிகை
கன்னல் / கடிகை இரண்டு கொண்டது முகூர்த்தம
முகூர்த்தம் பதினைந்து கொண்டது பொழுது
பொழுது இரண்டு கொண்டது நாள்
நாள் பதினைந்து கொண்டது பட்சம்
பட்சம் இரண்டு கொண்டது திங்கள்
திங்கள் இரண்டு கொண்டது பருவம்
பருவம் மூன்று கொண்டது அயனம்
அயனம் இரண்டு கொண்டது ஆண்டு
ஆண்டு நூறு கொண்டது மனிதனின் ஆயுள் காலம்.
மனித ஆயுள் முப்பது கொண்டது தென்புறத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நாள்
மாதம்/திங்கள் பன்னிரண்டு கொண்டது தேவர்களுக்கு ஒரு நாள்
அத்தகைய நாட்கள் கூடிய ஆண்டுகள் பன்னீராயிரம் கழிந்தால் அது தேவர்களுக்கு ஊழிக்காலம்.
நான்குவகை ஊழிக்காலம் ஆயிரம் சென்றால் அது பிரமனுக்கு ஒரு பகல். இந்த காலத்தே சுவாயம்பு, சுவாரோசிஷன். உத்தமன், தாமசன், இரைவதன், சாக்குசன், வைவச்சுதன், சூரியசாவர்ணி, தட்சாவர்ணி, பிரமசாவர்ணி, தருமசாவர்ணி, உருத்திரசாவர்ணி, ரௌச்சியன், பௌத்தியன் என்ற பதினான்கு மனுக்களும் அரி, விபசித்து, சுசாந்தி, சிவிவிபு, மனோசவன், புரந்தரன், மாவலி, அற்புதன், சாந்தி, விருடன், இருதராமன், திவற்பதி, சுசி என்னும் இந்திரர்களும் நீங்குவர். அப்போது பிரம்மன் படைப்புத் தொழில் நீங்கி துஞ்சுவான். இது பிராகிருதப் பிரளயம் எனப்படும்.
இத்தகைய பிரமன் ஒரு கோடி பேர் இறந்தால் அது திருமாலுக்கு ஒரு பகல். திருமாலின் கால அளவு கழிந்ததும் திருமாலும் மறைவார். பிரமன், திருமால், உருத்திரர் ஆகியோர் அந்தந்த கால நிலைகளின்படி தொழில் புரிந்து சர்வேசுவரனிடம் இலயமடைவர். அப்போது சிவன் தன்நெற்றிக்கண்ணால் பிரமாண்டங்களை எரிப்பார். அவ்வாறு எரித்த அங்கங்களை தன்னிடத்தில் ஒடுக்கிக் கொள்வார்.

ஆத்தியந்தகம் என்பது உயிரினங்கள் அனைத்தும் தங்களுடைய விரிந்த அறிவினால் முக்தி அடைவது.
இவ்வாறு நான்கு வகைகளில் ஒடுக்கம் செயலாக்கம் பெறுகின்றது.

இறைவனோடு ஒடுங்கும் காலத்தில் பிரமன், திருமால் ஆகியோரின் ஒற்றைக் கால்களும் இறைவனின் ஒற்றைக்காலும் சேர்ந்து மூன்று கால்களும் இருப்பதால் திரிபாத திரிமூர்த்தி. பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரும் ஒடுங்கும் நேரத்தில் சிவபெருமான் கொண்ட வடிவம்- திரிபாத திரிமூர்த்தி வடிவம். மேலும் உலகை மீண்டும் படைக்க திருவுள்ளம் கொண்ட பெருமான் தம் இதயத்திலிருந்து ருத்திரனையும் தம் வலப் பக்கமிருந்து பிரமனையும் இடப் பக்கமிருந்து திருமாலையும் தோற்றுவிக்கும் நிலையில் உள்ள வடிவமும் திரிபாத திரிமூர்த்தி வடிவமாகும்.காட்சி: திருவொற்றியூர், திருவானைக்கா, தப்புளாம் புலியூர் (திருவாரூர்)

#####

Read 5330 times Last modified on புதன்கிழமை, 15 November 2017 04:50
Login to post comments