Print this page
சனிக்கிழமை, 11 November 2017 09:28

நீராடல்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!

நீராடல்! 
ஆலய குளம்- வருண தடாகம் 
குளங்கள், கோவில் கிணறுகள் ஆகியன் நிர்மானிப்பதற்கு முன் கணேசர் முதலான தேவ பூஜைகள் செய்ய வேண்டும்.
குளத்தை வெட்டினால் மட்டும் போதாது. வருண ஆராதனை செய்து நீர் புனிதமாகவேண்டும்.

ஆலயக் குளங்கள் வருண சாந்நித்யத்தைப் பெற்றிருக்க வேண்டும். அதற்காக வருணனின் திருவுருவை அமைப்பது வழக்கம். கலசத்தில் வருணனை ஆவாஹணம் செய்து பூஜிக்க வேண்டும். வேத முறைகளின்படி அந்தணர்களைக் கொண்டு ஹோம குண்டங்கள் அமைத்து ஹோமங்கள் செய்து புனித கலசங்களில் புனித நீரை ஆவாஹனம் செய்ய வேண்டும். 

கிழக்கு கடல் நீர், தென்கிழக்கு கங்கை நீர், 
தெற்கு மழை நீர், தென்மேற்கு ஊற்று நீர், 
மேற்கு திசை ஆற்று நீர், வடமேற்கு நதி நீர், 
வடக்குதிசை காய்கனிகளைப் பிழிந்த அமுத நீர், வடகிழக்கு புனித நீர் 
ஆகியவற்றுடன் பஞ்சகவ்யத்தை மந்திரம் சொல்லி கலந்து கலசங்களில் நிரப்பி விதிப்படி பூஜை முடித்து ஆராதனை செய்து மந்திர உச்சாடனம் செய்து கொண்டே நீரைக் கிழக்கிலிருந்து தொடங்கி வருணபகவானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். வருணன் விஷ்ணுவின் அம்சம். பதினாறு வகை உபகாரங்கள் செய்து அச்சிலையை எடுத்துப்போய் தடாகத்தின் நடுவே பூமியில் புதைக்க வேண்டும்.

இப்படிப்பட்ட குளமே பலர் புனித நீராட உதவும். ஒரு நல்ல முகூர்த்த நாளில் உரிய பூஜைகள் செய்து சுத்தம் செய்து மக்கள் உபயோகத்திற்கு பயன்படும்படி செய்ய வேண்டும். இது தானத்திலே சிறந்த தானம். குளம் வெட்டுபவர்களுக்கு பல அசுவமேத யாகம் செய்த பலன். குளத்தைச் சுற்றி நந்தவனம், மண்டபங்கள் அமைக்கப் படவேண்டும். கரையைச் சுற்றி சால், கடம்பு, பலாசம்-பலாமரம், சந்தனம், தேவதாரு, வில்வம் மா, வேம்பு, ரத்த சந்தனம்-குங்குலியம் போன்ற மரங்களை முறைப்படி பூஜை செய்து நல்ல நேரத்தில் நடவேண்டும்.

மனித உடல் மிகவும் அழுக்கானது. தோல் துவாரங்களிலிருந்து உடல் கழிவுகள் வெளியேறி தோலின் மேல் பகுதியில் தங்கியிருக்கும். உடலின் ஒன்பது துவாரங்களிலும் ஒன்பது விதமான மலங்கள் இருக்கும். இந்த மல சுத்திக்காக விடியற்காலம் ஸ்நானம் செய்து உடலை தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும் என நியமிக்கப்பட்டுள்ளது. புணரக் கூடாத உறவுகளுடன் புணர்ந்த பாபமும், தானம் வாங்குவதால் விளையும் பாபமும், ரகசியச் செயல்களால் விளையும் பாபமும் ஸ்நானம் செய்வதால் நீங்கி விடும். குளிக்காமல் அழுக்கு, பாவச் சுமைகளுடன் செய்யும் அன்றாட கர்மங்கள் யாவும் பயனற்றதாக மாறிவிடும்.

தினசரிக் கடமைகளில் ஒன்றான குளியல் –நித்தியம் எனப்படும்.
தீட்டுகளால் ஏற்படும் அசுத்தியைப் போக்க நீராடுவது நைமித்திகம்.
விழாக்களுக்காக நீராடுவது காமியம்.
சிரார்த்தம், தர்ப்பணம் ஆகியவற்றிற்காக நீராடுவது கிரியாங்கம்.
உடல் சுத்திக்காக நீராடுவது மலாபகர்ஷ்ணம்.
புண்ணிய நதிகளில் நீராடுவது க்ரியா ஸ்நானம்.

நீராடுமுன் சிறுநீர் கழிக்க அதற்கென்றிருக்கும் இடத்தில் சிறுநீர் கழித்துவிட்டு வந்து நீராடல் வேண்டும். நீராடும்போது எல்லா உறுப்புகளும் நீரில் நனைய குளிக்கவேண்டும்.

நதிகளில் நீராடினால் நீரில் உடல் அமுங்கி மறையும்வரை நீராடல் சிறப்பு. ஆற்றுக்குப் போனோம் இரண்டு முங்கு முங்கி எழுந்தால் போதும் என்றவாறு குளியல் இருக்கக் கூடாது. பொதுவாக சூரிய உதயத்திற்குமுன் அருணோதய வேளையில் நதிகளில், தீர்த்தங்களில் குளிப்பது சிறப்பு. நீராடும்போது பிரவாகங்களுக்கு எதிராகவும், குளங்களில் நீராடும்போது சூரியன் இருக்கும் திசை நோக்கி நின்று நீராடல் வேண்டும். நீராடி முடிந்ததும் நீரைக் கைகளில் நிரப்பிக் கொண்டு என் உடலிலுள்ள அழுக்குகளை இந்நீரில் கழுவி தோஷம் செய்திருக்கின்றேன். அந்த தோஷங்கள் அனைத்தும் நீங்க வேண்டும் எனச் சொல்லி கையில் உள்ள நீரை விட்டுக் கரை ஏறவும்.

புண்ணிய நதிகளில் நீராடும்போது தியானம் செய்தல் கூடுதல் நலன். நதிகளிலும் குளங்களிலும் நீராடிய பின் அந்தக் கரையினிலேயே கிழக்கு நோக்கி அமர்ந்து ஆசமனம், பிராணாயாமம் செய்து தியானம், ஜபம் செய்யலாம். முறைப்படி கர நியாசம், அங்க நியாச முறைகளால் இறைவனை ஆராதித்து வணங்கி பின் முத்திரைகளைக் காட்டி உபசாரம் செய்ய வேண்டும்.

மழை நீரில் நீராடும்போது இரண்டு கைகளை உயரத்தூக்கி மழைவரும் திசை நோக்கி மழைச்சாரல் மேனியில் படும் வண்ணம் கண்களை மூடியபடி இருக்கும்போது மழைச்சாரல் ஸ்பரிசம் மேனியில் படுவது தேகத்திற்கு சில சக்திகளைத் தரவல்லது. இந்த மழை ஸ்நானத்தை ‘அக்னைக’ ஸ்நானம் என்கிறது சாஸ்திரம்.

உடம்மை மண்ணைக் கொண்டு தூய்மை செய்வது ‘மலஸ்நானம்’ எனப்படும். இதற்குப்பின் நீரில் நீராடவேண்டும். இது ‘விதிஸ்நானம்’ எனப்படும். கோதூளி கொண்டு ஸ்நானம் செய்வது மிகப்புனிதமாதாகும். இது ‘மகேந்திரஸ்நானம்’ எனப்படும். 

குளம், குட்டை, ஆறுகளில் சிறுநீர் மலம் கழித்தல் தவறு, ஆடையில்லாமல் நீர் நிலைகளில் நீராடாதே. இது வேதம் சொல்வது. நீர் வாழ் இனங்கள் நச்சுப் பிராணிகள் நமது உடல் உறுப்புகளை தீண்ட வாய்ப்புண்டு. அது அந்த உயிர்க்கு ஊறு விளைவிக்கும்.

ஊனக் கண்களினால் ஊனத்தை பார்க்கும் நாம் அறிவுக் கண்ணால் ஞானத்தைப் பார்க்க வேண்டும்.

&&&&&

Read 7697 times Last modified on ஞாயிற்றுக்கிழமை, 08 July 2018 11:11
Login to post comments