Print this page
சனிக்கிழமை, 11 November 2017 20:26

பிரதோஷம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!

பிரதோஷம்!
உதயகால பிரதோஷ வேளையில் சிருஷ்டியும், சந்தியா கால பிரதோஷத்தில் சம்ஹாரமும் நடக்கும் என்கின்றன வேதங்கள். அதாவது ஒவ்வொரு உயிரும் காலையில் விழித்து எழுவதை ஒரு சிருஷ்டிக்குச் சமம் என்றும், உறங்கச் செல்வதை பிரளயத்திற்குப்பின் வரும் ஒடுக்கத்திற்கு நிகராகவும் கருதப்படும்.
அதிகாலை 0430 மணி முதல் 0600வரையில் உள்ள காலத்தை பிரம்ம முகூர்த்தம் என்றும் அதுவே உதயகால பிரதோஷம் அல்லது உக்ஷத் காலம் எனப்படும். மாலை 0430 மணி முதல் 0600வரையில் உள்ள காலம் சந்தியா கால பிரதோஷம் ஆகும் இதையே நாம் பிரதோஷகாலம் எனப் பொதுவாகச் சொல்கின்றோம். 
பிரதோஷம் என்பதில் பிர என்பது அளவற்ற என்றும் தோஷம் என்றால் தீமைகள் என்றும் அர்த்தம். அதாவது அளவுகடந்த தீமைகள் தோன்றும் காலம். அப்படியென்றால் தோஷங்கள் தாக்கி தீமைகள் வரக்கூடும் என்பதால் அந்த வேளையில் ஏற்படும் தீமைகளை அழிந்து அவற்றிலிருந்து நம்மைக் காக்கும் இறைவனை அந்த நேரத்திலே வழிபடுதலே சிறப்பு என்பதாலேயே பிரதோஷ வழிபாடு முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டது.
தீமைகள் தோன்றும் அந்த பிரதோஷகாலத்தில் மற்ற தெய்வங்களை விட்டு ஏன் நந்திதேவரையும் சிவபெருமானையும் மட்டும் வழிபடவேண்டும்.
காஸ்யப முனியின் மனைவி அதிதி- இவரின் குழந்தைகள் இந்திரன் உள்பட தேவர்கள் மற்றும் பன்னிரண்டு ஆதித்தியர்கள். இன்னொரு மனைவி திதி- இவரின் குழந்தைகள் இரணியாட்சகன், இரணியகசிபு மற்றும் நிறைய அசுரர்கள். தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கும் அடிக்கடி கருத்து மோதல்கள் அடிதடித் தகராறுகள் நடந்து கொண்டேயிருந்தன. சகோதர்களான அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் தோன்றிய பிரச்சனைகளே அடிக்கடி அசுரர்- தேவர் யுத்தம் நடைபெறக் காரணமானது. அசுரர்களின் ஆதிக்கத்தால் முதலில் பாதிக்கப்படுபவன் இந்திரன். ஹிரண்யாட்சசன், ஹிரண்யகசிபு, முதல் இராவணன், இந்திரஜித் போன்ற அசுரர்களால் ஆக்கிரமகிக்கப்பட்டு சிறைப்பட்டு அல்லல்களுக்கு ஆளாகி பிரம்மா, விஷ்ணு, சிவனின் அனுக்கிரகத்தால் மீண்டும் போராடி தேவருலகத்தை அடைந்துள்ளான். 
தொடரும் பிரச்சனைகளுக்கு சுகுமமான முடிவிற்கு வர பிரம்மா கூறிய ஆலோசனையே பாற்கடல் கடையக் காரணம். எல்லோரும் உணவு ஏதும் உண்னாமல் உபவாசமிருந்து ஏகாதசி அன்று மந்தார மலையை மத்தாகக் கொண்டு வாசுகி நாகத்தை கயிறாக்கி பாற்கடலைக் கடைய திட்டம் தீட்டப்பட்டது திருமாலும் தேவந்திரனுக்காக இதற்கு ஒப்புக்கொண்டார். மந்தாரமலை சம நிலையில் இல்லாமல் கீழும் மேலும் சென்றுவர அதை ஒர் நிலையில் நிறுத்த திருமால் கூர்ம உருவெடுத்து கடலின் அடியில் சென்று மந்தாரமலையைத் தாங்கி ஓர் நிலையில் இருக்கச் செய்தார். பாற்கடல் கடைய ஆரம்பித்து நீண்ட நேரம் ஆகியும் ஒன்றும் வரவில்லை. 
பிரம்மா ஜாம்பவானை அழைத்து இவ்வளவு நேரம் கடைந்தும் பலன் ஒன்றுமில்லை. நீங்கள் சில ஒளஷதிகளை கடலில் கலக்குங்கள் என்றார். தயிரைக் கடைந்தால் அதனுள்ளிருந்து வெண்ணெய் வருவதும் அதைக் காய்ச்ச நெய் வருவதும் எல்லோருக்கும் தெரியும் அதைப் போலவே தொடர்ந்து பாற்கடலை கடைய அதிலிருந்து சிறிது நேரத்தில் வெள்ளையான ரசம் வர பிரம்மா அதை ஓர் கலசத்தில் பிடித்துவைத்தார். ஐராவதம் யாணை, மிகுந்த நாற்றத்துடன்-மதுரசம், குளுமையான-சந்திரன், மூத்ததேவி-ஜேஸ்டாதேவி, லட்சுமி, பின்னர் ரம்பை, மேனகா, கிருதாசி, ஸ்கேசி, மஞ்சுகேஷி, சித்திரலேகை ஆகிய நடன மாதர்கள், பின்னர் நிதிகள், தினமும் இரத்தினங்களை சிந்தும் இரண்டு திவ்ய புருஷர்கள் சங்க பத்ம நிதிகள் (குபேரனுக்கு நவநிதி அளிப்பவர்கள்) இருவரையும் லஷ்மியுடன் இருக்கச் செய்தார் பிரம்மா,
பின்னர் உச்சைசிரவஸ் என்ற வெள்ளைக்குதிரை, பின் கல்பதரு, காமதேனு, சூரியமணி, ஸ்யமந்தக மணி, கௌஸ்துப மணி, தேவதந்த சங்கு, புஷ்பக விமானம், நந்திகோஷ ரதம் தோன்றியது. வெளிப்பட்ட பொருள்கள் ஒவ்வொன்றும் தனக்கு என உரிமை கொண்டாடி ஒரே கூச்சல் குழப்பம். சிவன் வந்தார். இவற்றை பத்திரப்படுத்திவிட்டு எதற்காக ஆரம்பித்தீர்களோ அதற்காக மேலும் கடையுங்கள் இறுதியில் முடிவு செய்யலாம் எனச் சொல்லிச் சென்றார்..
கடையலைத் தொடர, மேலும் மேலும் கடைய வெப்பம் பரவியது. ஆலமாகிய நஞ்சு உற்பத்தியாகி கடலில் கருநிறம் சூழ்ந்து அனைவரும் அதன் பாதிப்பை உணரும் முன்பாக, கயிறாக உபயோகிகப்பட்ட பாம்பு வாசுகி உடல் உபாதை தாங்காமல் காலம் எனும் விஷம் கக்க மொத்தமாக ஆலகால விஷமாகி உயிர்களை அழிக்கத் தொடங்க உணர்ந்த தேவர்கள் கயிலைநாதரிடம் முறையிடச் செல்ல, காவலில் இருந்த நந்தி உயிர்கள் படும் அவஸ்தையைக் கண்டு ஈசனிடம் தெரிவிக்க அந்த ஆலகாலத்தைத் திரட்டி எடுத்த சுந்தரர் சிவனிடம் கொடுக்க அவர் உலக நலன் கருதி விழுங்க உமை அவர் கண்டத்தைப் பிடிக்க ஆலகால விஷத்தினால் சிவன் ஒரு நிமிடம் நிலைதடுமாறி பின் நீலகண்டனாக பரிமளித்தார். 
ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஓர் பெண்ணிருப்பாள்!
கணவனுடைய செயல்களுக்கு மனைவி உடந்தையாக இருந்து செயலாற்றினால்தான் அது வெற்றிகரமாக இருக்கும். என்ன புரியவில்லையா! சிவன் விஷத்தை விழுங்குகின்றார் என்று பதறி பார்வதி கணவரைக் காப்பாற்ற அதை தடுக்கின்றார் என்றுதான் நினைப்பீர்கள். உண்மை அதுவல்ல! 
அம்பிகை பரமேஸ்வரன் ஆலகாலத்தை விழுங்கினதை தடுக்க அவர் கண்டத்தைப் பிடிக்கவில்லை. அதாவது தன் கணவரின் நோக்கம் முழுமையாக நிறைவேற வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி தடுத்துள்ளார்! புரியவில்லையா! 
ஈசன் ஆதியும் அந்தமும் இல்லாதவர். அதாவது அவருக்கு பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. பிறப்பும் இறப்பும் இல்லா அநாதியானவர். எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்த அந்த எண் குணத்தானை எல்லாம் வல்லவனை எல்லாமுமாய் இருப்பவனை அந்த ஆலகால நஞ்சு என்ன செய்யும் பக்தர்களே சற்று யோசியுங்கள்! பின் அவர் எந்த நோக்கத்திற்காக நஞ்சை விழுங்கினார். கீழே கடலில் கலந்தால் கடல்வாழ் உயிரினங்களும், காற்றில் கலந்தால் மற்ற உயிர்களுக்கும் உலகத்திற்கும் எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என விழுங்கினார். 
சரி அப்படியென்றால் பார்வதி ஏன் அதைத் தடுத்தார். அங்கும் ஓர் உண்மை ஒளிந்திருக்கின்றது. அதாவது சகல உலக உயிர்களும் ஈசனுடைய அம்சம். சர்வமும் அவருக்குள்ளே அடக்கம். அதனால் அவர் ஆடினால் உலகம் ஆடும். அவர் இயக்கம் சகலத்தின் இயக்கம். நீங்கள் அறிந்திருப்பீர்கள் உமை ஈசனின் கண்களை மூட உலகம் ஸ்பித்ததை. இப்படி எல்லாமும் ஆன இறைவனின் உடலுக்குள் நஞ்சு சென்றால் தோற்றமோ அழிவோ இல்லாத ஈசனுக்கு ஒன்றும் ஆகாது. அவருக்குள்ளே இருக்கின்ற மற்றெல்லாவற்றிற்கும் அழிவு ஏற்படக்கூடாது மேலும் எல்லாம் காப்பவன் ஈசன் அவனது செயல்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மனைவியான பார்வதி தன் கடமையாக ஈசனின் கண்டத்தைப் பிடித்து கணவன் நோக்கத்திற்கு உதவி செய்தாள். இதைக்கொண்டே ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஓர் பெண்ணிருப்பாள் என்பது வழக்கமானது.
கடைசியில் எதிர்பார்த்த அமுதம் திரண்டது 
அமுதம் பெற்றதும் ஈசனைக் காண அனைவரும் சென்றனர். ஆலகாலம் தன் ஆரோக்கியத்தை பாதிக்கவில்லை, பாதிக்காது என்பதை உணர்த்த ஈசன் ஆனந்த தாண்டவம் நிகழ்த்தினார். மக்கள் உயிர் இன்னலை அடைந்தபோது நெஞ்சு பதறி தன்னிடம் வந்து தகவல் சொல்லிய நந்தியை பெருமைப் படுத்த எண்ணம் கொண்டு தன் ஆடலை நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையில் ஆட அந்த அற்புதமான ஆட்டத்தால் உலகம் ஆனந்தமடைந்தது. எல்லா உயிர்களும் அவரிடம் ஒன்றி இருந்ததால் பிரதோஷங்கள் எதுவும் எந்த உயிரையும் தீண்டாமல் விலகின. எல்லா உயிர்களையும் சிவபெருமான் தம்மிடம் ஒன்றியிருக்கச் செய்த காலமே பிரதோஷகாலம்.
அன்றைய தினம் சனிக்கிழமை திரயோதசி என்பதால் தினமும் பிரதோஷவேளை வந்தாலும், திரயோதசி தினத்தன்று வரும் பிரதோஷவேளையே சிறப்பானதாகும். மேலும் பிரதோஷம் ஐந்து வகைப்படும்.
தின பிரதோஷம்-தினமும் மாலை 0430-0600 வரை 
பட்சப் பிரதோஷம்-பௌர்ணமிக்கு முன்பாக சுக்லபட்ச பிரதோஷம்
மாதப் பிரதோஷம்- கிருஷ்ணபட்ச திரதோதசி தின மாலை வேளை.
மகா பிரதோஷம்-மாதம் தோறும் வரும் கிருஷ்ணபட்ச திரயோதசி தினம் 
சனிக்கிழமையாயிருந்தால். பிரளயப் பிரதோஷம்-உலக உயிர்கள் அனைத்தும் தன்னுள் ஒடுங்கியிருக்க ஈசன் ஊழித்தாண்டவம் ஆடும் காலம். 
பௌர்ணமிக்குபின் வரும் கிருஷ்ணபட்ச திரயோதசி திதி, அமாவாசைக்குபின் வரும் சுக்லபட்ச திரயோதசி திதி ஆகிய இரண்டுமே மாதம் இருமுறை வரும் பிரதோஷ வழிபாட்டிற்குரிய நாட்கள்.

&&&&&

Read 8435 times Last modified on சனிக்கிழமை, 27 April 2019 20:06
Login to post comments