ஓம்நமசிவய!
முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!
முக்குணத்தோன்! நிர்குணத்தோன்! எண்குணத்தான்!
அரி-பெருமாளிடம் சத்வ குணமும், அயன்-பிரம்மாவிடம் சத்வ, ராஜச குணங்களும், அரன்-சிவனிடம் சத்வ, ராஜச, தாமஸ ஆகிய குணங்களும் உள்ளன.. மூன்று குணங்கள் உள்ளதால் சிவனை முக்குணத்தோன் என்று சொல்லலாம், சகுன பிரம்மம்-உருவமாகப் பார்க்கமுடிகின்ற தெய்வீகம் நிர்குண பிரம்மம்- உருவமாகப் பார்க்க முடியாத தெய்வீகம். ஆதலால் சகுன பிரம்மம்/ நிர்குண பிரம்மம் இரண்டில் சிவனை நிர்குணத்தோன் என்றும் சொல்வார்கள். அது மட்டுமல்ல சிவனாரை
நித்தியர்- என்றும் உள்ளவர்,
சருவ வியாபகர்- எங்கும் நிறைந்தவர்,
அநாதிமல முத்தர்- இயல்பாகவே பாசங்களின்று நீங்கினவர்,
சருவஞ்ஞர்- எல்லாம் அறிபவர்,
சருவ கர்த்தா- எல்லாம் செய்பவர்,
நித்தியானந்தர்- என்றும் ஆனந்தமயமானவர்,
சுவதந்திரர்- தன்வயமுள்ளவர் என்பார்.
நிர்குண பிரம்மானது காலம், பிரதேசம், வர்த்தமானம் வாஸ்து இவைகளைத் தாண்டிய நிலையில் உருவம் எடுத்த பின்னர் அவதாரங்கள் நிகழும். அவதாரங்கள் காலத்திற்கு கட்டுப்பட்டவை. வரம்புக்குள் குறுகியிருக்கும் மனத்திற்கு நிர்க்குணம் ஆனந்தமளிக்காது. அப்படி தவறிப் போகும் ஆனந்தத்தை அளிக்கவே உருவ வர்ணனைகள் தோன்றியது. பிரம்மம் வரம்பற்றது. மனதாலும் உடலாலும் சொற்களினாலுமெழும் விவாதங்கள் எட்டமுடியாத உருவம் அடையக் கூடியது. பிரம்மம் எல்லாவற்றிலும் இருப்பதால் எல்லாவற்றிலும் என்பதில் உருவமும் அடங்கும். பிரமத்தின் எந்த பாவமும் பாகமும் பிரம்மமே. அதனால் பிரமத்தை எந்த உருவத்தில் வழிபட்டாலும் மனதிற்கு இனிமையான வழியில் இறையின் சாயுஜ்ய நிலையை அடைவது எளிது.
இதெல்லாம் சரி! இத்தனைக் கடவுள் உருவங்கள் ஏன்!
ஒரே ஓரு ஆன்மாவின் உடல் அன்னைக்கும் தந்தைக்கும் பிள்ளையாகவும், பிள்ளைக்குத் தந்தையாகவும், பேரன் பேத்திகளுக்கு பாட்டனாகவும், அண்ணன், அக்காவிற்கு தம்பியாகவும், தம்பி, தங்கைக்கு அண்ணாகவும், மாமியார், மாமனாருக்கு மருமகனாகவும், மனைவிக்கு கணவனாகவும், உற்றாருக்கு உறவினராகவும் நண்பனுக்கு நண்பனாகவும் இருக்கும்போது எல்லாம் உடையவன் எல்லா உலகங்களையும் உருவாக்கி நிர்வகிக்கும் இறைவன் ஒருவனுக்கு எத்தனை எத்தனை உருவங்கள் இருப்பதில் தவறு ஏதுமில்லை.
ராஜசிக, சாத்விக, தாமசிக புராணங்கள்
புராணங்கள் 18. இவையே மகாபுராணங்கள் எனப்படும் புராணங்களில். புனிதமானதாகச் சொல்லப்படும் எல்ல புராணங்களும் மேலே சொன்ன மூன்று வகையிலேயே சொல்லப்பட்டுள்ளது. படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவை உயர்த்தி சிருஷ்டி பற்றி பெரிய அளவில் கூறுபவை- ராஜசிக புராணங்கள். விஷ்ணு வின் அவதாரங்களைப் புகழ்பவை சாத்விக புராணங்கள். சமயச் சடங்குகளை விவரித்து சிவபெருமானின் புகழை சொல்பவை தாமசிக புராணங்கள் எனப்படும்.
ஒரு உயிருக்கு ஆனந்தம் வேண்டுமென்றால் உடலின் இருக்கும் சத்தும் சித்தும் சேர்ந்தால்தான் ஆனந்தம் ஏற்படும். சத்- சிவனையும் சித்-சக்தியையும் குறிக்கும் சிவனும் சக்தியும் சேர்ந்தால் அதுவே ஆனந்தம். ஆனந்தம் சாதாரணமாக நீடித்து நிலைக்காது. அது அழியாமல் இருக்க சத் தேவைப்படும். சாஸ்வதம்-நிரந்தரம் என்றாலும் அறிவுடன் கூடியிராவிடில் அது பயன்படாது. அதனாலேயே சத் சேர்க்கப் பட்டுள்ளது. ஆத்மா சச்சிதானந்தத்தோடு இருப்பதால் ஆனந்தம் ஏற்படும். அப்படி ஆனந்தத்தை தரும் சத்- சிவனை என்றும் எப்போதும் நினைந்து போற்றுவோம்.
எண்குணத்தான்!
எண்குணத்தான் என்று சிவனைச் சொல்வதுமுண்டு. 1.முக்கண்ணன், 2.அம்பலத்தாடுபவன், 3.நீலகண்டன், 4.சுடலைகாத்தான், 5.அருகன், 6.நெற்றிக்கண்ணன், 7.நீறுபூசியோன், 8.மாறியாடும் பெருமான் என எட்டு நிலைகளைக் கொண்டிருப்பவன்..
அதனால் அவருக்கு ருத்திரன், பவன், சிவன், பசுபதி, ஈசன், பீமன், உக்கிரன், மகாதேவன் என்று எட்டு பெயர்களை பிரம்மன் வைத்தான்.
சகல சராச்சரங்களுக்கும் ஆத்ம சொரூபனாகிய சூரியனில் ருத்திரனாக,
சிருஷ்டி ரகசியத்தை அறிந்தவனாக சிருஷ்டி அனைத்தும் நிற்கும் நீரில் பவனாக,
உயிர்கள் வசிப்பதற்கு ஆதாரமாகிய பூமியில் சிவனாக,
அனைவரின் உடலிலுள்ள ஜடராக்கினி வடிவான தீயில் பசுபதியாக,
உயிர் உடலில் பிராண, அபான, விதான, உதான, சமான வடிவில் காற்றில் ஈசனாக,
உடலின் துவாரங்களில் பரவி வின்னில் பீமனாக,
யாக தீட்சை கொண்டு வேதியர் உடலில் உக்கிரனாக,
ஔடதங்களுக்கு அதிபதியாகி உயிர்களுக்கு தாதாவாக சந்திரனில் மகாதேவனாக
வசிக்கும் சிவனுக்குகந்த நாட்களில் புராணங்களில் வாழ்வு முறைக்கு எடுத்துக் காட்டாக உள்ள நிகழ்வுகளைப் நினைவு கூர்ந்து அனைவரும் பெருமானை வழிபடுங்கள்!
&&&&&