ஓம்நமசிவய!
பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.
#####
ஆகமத்தின் பெருமை!
57. கருமை நிறமுடைய அம்மையை ஓர் பக்கம் இருத்தியுள்ள சிவபெருமான் இருபத்தெட்டு ஆகமங்களை அருளியுளான். ஈசன் திருவடியை மறவாத அடியவர் அந்த ஆகமங்களை கேட்டு மகிழ்ந்தனர். அந்த ஆகமங்களை ஒப்பில்லாத ஐந்தாவது திருமுகத்தால் அருளியதே அரும் பொருள் கூறப்படுவதே ஆகும்.
58. இறைவன் ஆன்மாக்களின் மீது கொண்ட கருணையால் உரைத்தருளிய ஆகமங்கள் இருபதெட்டு கோடியே நூறாயிரம். அந்த ஆகமங்கள் வழி தேவர்கள் இறைவனின் பெருமையைக் கூறினர். யானும் அவ்வழியைப் பின்பற்றி பெருமைமிக்க இருபதெட்டு ஆகமங்களை வணங்குவேன்.
59. பதினெட்டு மொழிகளையும் அறிந்தவரே அறிஞர். அவர் ஆகமம் கூறும் பொருளை நன்கு உணர்ந்தவர். அந்த பண்டிதர் அறிந்த பதினெட்டு மொழிகளும் அண்டங்களுக்கு முதல்வனான சிவபெருமான் வெளிப்படுத்திய அறத்தையே கூறுவனவாகும்.
60. பெருமானால் அருளப்பட்ட சிவ ஆகமங்கள் விண்ணுலகத்தோர் எனப்படும் தேவர் உலகத்தினரின் பயன் பாட்டிற்கு வராதவை. எழுபது கோடியே நாலாயிரமான அவற்றை அவர்கள் அறிந்தாலும் அனுபவம் இல்லையானால் நீரின்மேல் எழுதப்பட்ட எழுத்தைப்போல் பயன்படாமல் மறைந்து போகுமே.
61. பரஞானம் அபரஞானம் இரண்டையும் மேன்மையுற தெரிவித்து உலகத்தை தாங்குபவனாய் சிவ தன்மையை தானே அருள் செய்பவனை அரனாய் தேவர்கள் அர்ச்சனை செய்து வழிபடும் பெருமான் ஆகமத்திலே உறைந்து நிற்பவன்.
62. பரம் பொருளான சிவனிடமிருந்து சக்தியும் சதாசிவமும் மனதிற்கு உகந்த மகேசன் உருத்திரர் தவம் செய்யும் திருமால், பிரம்மன் ஆகியோர் அவரவர் அறிவில் பொருந்திய ஒன்பது ஆகமங்களும் எங்கள் நந்தியாகிய எம்பெருமானிடமிருந்து பெற்றவையே!.
63. நந்தியம் பெருமானிடம் இருந்து பெற்றவை. காரணம், காமிகம், வீரம், சிந்தியம், வாதுளம், யாமளம், காலோத்தரம், சுப்பிரம் மகிடம் ஆகிய ஒன்பது ஆகமங்களாகும்,
64. சிவ பெருமான் அருளால் உணர்த்தப்பட்ட ஆகமங்கள் கோடிக்கணக்கில் சொல்லப்பட்டிருந்தாலும் இறைவன் கூறிய உண்மைப் பொருள்தனை உணர முற்பட்டு அப்பெருமான் அளித்த அறிவுதனை அறியாவிடில் அது நீரின்மேல் எழுதப்பட்டது போல் விரைவாக அழிந்துபடும்
65. மழைக்காலம் கோடைக்காலம் இரண்டிற்கும் இடைப்பட்ட குளிர்பனிக் காலத்தில் வடமொழியையும் தமிழையும் ஒரே காலத்தில் உபதேசித்து படைப்புக்கு முன்னரே சிவபெருமான் பராசக்திக்கு அருளியுள்ளான்.
66. ஜீவன்கள் பந்தத்தில் வீழும் முறைகளையும் அதனின்று நீக்கும் முறையையும் கண்மூடி உயிர் நீங்குகின்ற முறையையும் தமிழ், வட மொழி ஆகிய இரண்டிலும் உணர்த்தும் சிவபெருமானை உணர்தல் முடியுமோ முடியாது!
திருச்சிற்றம்பலம்
#####