ஓம்நமசிவய!
யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!
#####
வாரசரம்!
790. திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் இடைநாடி வழியாக மூச்சு இயங்க வேண்டும். செவ்வாய், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வலநாடியில் இயங்க வேண்டும். வளர்பிறை வியழனில் இடைகலையிலும் தேய்பிறை வியாழனில் வல் நாடியிலும் இயங்க வேண்டும்.
791. திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் மூச்சு பயிற்சியின் காரணமாக வலக்கை மூக்கைவிட்டு இடைகலையில் ஓடினால் சிறந்த உடம்பிற்கு அழிவு இல்லை. இது வள்ளலான சிவன் கூறியது.
792. செவ்வாய், சனி, ஞாயிறு கிழமை மற்றும் தேய்பிறை வியாழக்கிழமை ஆகிய நாட்களில் மூச்சை வலப்பக்கம் அறியும் யோகி இறைவன் ஆவான். இந்நாட்களில் மூச்சுமாறி இயங்கும் தன்மையை அறிந்து வலப்பக்கத்தில் ஓடும்படி செய்பவருக்கு ஆனந்தம் உண்டாகும்.
793. சந்திரகலை, சூரியகலை இரண்டும் இடைகலை, பிங்கலையில் மாறிமாறி இயங்கும். அப்போது இடைகலை வழியாய் ஏறி பிங்கலை வழியாய் இறங்கியும் பிங்கலை வழி ஏறி இடைகலை வழி இறங்கியும் மூச்சானது நடு நாடியில் ஊர்ந்து போகும். அதனால் மூச்சில் சிவம் இருப்பதை அறிவீர்.
794. பிராணன் வலப்பக்கம் தோன்றி இடப்பக்கம் மாறி ஓடும்போது ஒரு பக்கம் கனமாகவும் மறுபக்கம் இலேசாகவும் மெலிந்து ஓடும். பிராணன் அகன்றும் தணிந்தும் ஓடுதல் நீங்கி ஒரு நாடியிலே மிகுதியாக ஓடினால் தோன்றிய இராசியை விடுத்து மிகுதியாய் ஓடும் நாடியைக் கொண்டு சந்திரன் என்றோ சூரியன் என்றோ அறியவும்.
795. சரியாக சுழுமுனையில் பொருந்தி நிற்காமல் இடம் அல்லது வலம் ஓடும் வாயுவில் பொருந்தி நாடிகள் ஒத்து இயங்கும் புருவ நடுவில் இனிமைதரும் குண்டலினியைச் சேர்த்தால் நடு நாடியின் உச்சியில் தீப ஒளி அமையும் என நந்தியெம்பெருமான் அருளினார்.
796. ஆராயத்தக்க பொருளான சிவன் கண்மலர்களுக்கு மேல் உள்ளான். அப்பெருமனை நினைத்து சுவாசக் கலையைச் மாறச் செய்யின் பதினாறு கலைகளையுடைய சந்திரன் விளங்கும். அக்கலை வலிமையுடன் மனத்தை அழிக்கின்ற ஆதரமான ஆயுளும் நாளும் தியான காலமான முகூர்த்த காலமாய் அமையும்.
#####
வார சூலம்!
797. வார நாட்களில் சூலம் வரும் திசைப் பற்றி சொன்னால் திங்கட் கிழமையும் சனிக் கிழமையும் கிழக்கே சூலம். செவ்வாய் கிழமையும் புதன் கிழமையும் வடக்கு சூலம். ஞாயிற்றுக் கிழமையும் வெள்ளிக் கிழமையும் மேற்கு சூலம்.
798. வியாழக் கிழமை சூல திசை தெற்கு சூலம் இடப்பக்கமாகவும் பின்பக்கமாகவும் அமைந்திடல் பயணம் நன்மை. வலப்பக்கமும் முன்பக்கமும் இருக்கச் சென்றால் பயணத்தில் மேலும் மேலும் தீமை விளையும்.
#####